Monday, May 18, 2009

அகதி

மார்தட்டி கொள்வோம்
எங்கள் குலதெய்வம் நீ யென்று!
யார் சொல்லியும் உண்மையாகுமோ
ஆதவன் இல்லையென்று!

நாளை அவர் போல் புகழ்கொள்வாயென்று
உன் பேர் சொல்லி
வளர்த்தாள் அன்னை என்னை அன்று!

வீரம் கொண்ட வரலாறு எமதென்று
நாவினில் வாள் சுழற்றும்
கோமகன்கள் வாழும் காலமொன்றில்

கங்கைகொண்டான், கடாரம் வென்றான்
அவன் மீண்டும் வந்து நின்றான் எம்முன்
யாழ்தீபம் தரித்த அனல் பிழம்பென்று!

வேல்தாங்கி நிற்க்குமிந்த
அக்கினிக் குன்றுள்ளவரை
எதிரிக்கு தெரியும்
வெற்றி என்பது கனவென்று!

அவனைக் கொன்று விட்டால் யார்கேட்பார்
இந்த நாதியற்ற மக்களை தீண்டிணாலென்று
கொக்கரிக்கும் குருடர் கூட்டம் தெரிந்து கொள்ளும்
"விடுதலை தேசம்" எமதென்று!

அவர்கள் ரத்தம் கொண்டு
வெற்றித் திலகமிடும் நாள் சொல்லும்
எமது வீரம் எதுவென்று!

வெறி கொண்ட யானை வென்று
அதன்மேல் எம்மன்னன் ஊர்வலம் வரும்ப்போது
புத்தனும் இவன்மேல் ஆசைகொள்வான்
வெற்றி வீரன் இவனென்று!

அதுவரை சொல்லமாட்டோம்
உலகிற்கு நாம் தமிழனென்று,
மறக்கமாட்டோம்
"அகதி" என்பதே எமது இனமென்று!

- "அகதி" திரு

Sunday, May 17, 2009

முடிவின் தொடக்கம்

எல்லோராலும் எதிர்பார்த்ததாக தேர்தல் முடிவுகள் இல்லாவிடினும், கொடுத்தவர் எதிர்பார்த்த முடிவுவாகவே இருக்கிறது. எத்தனை ஊடகங்கள், எத்தனை ஆர்வளர்கள், எத்தனை பரப்புரைகள்?... எல்லாம் மண்ணாய் போனது பணத்தாலே. ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை பணம் மட்டும் வென்று விட்டது என்று சொல்லி இந்த தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட முடியாது. அது ஆளுங்கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகள் பெற்ற தோல்விக்கு நிச்சயம் அது மட்டும் காரணமல்ல.
சந்தர்பவாத அரசியல், அரசியல் வியாபரமயமாகிப்போனமை, கொள்கை இல்லாக் கூட்டணி மற்றும் தலைவர்களின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவை மறுக்க முடியாத காரணிகள்.

பணம் கொடுத்து வாக்குப் பெற்று வெற்றிகளை குவிக்க முடியும் என்று தமிழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை காட்டி நின்றும், எதிர்காலத்தில் சன நாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதைக்கொண்டு பின்னப்பட்ட அரசியலமைப்பும் அதை தாங்கி நிற்கின்ற அடிப்படை கோட்பாடுகளும் அதன் நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.

அதே நேரம் பணத்துக்கு வாக்களிக்கும் வாக்காளன் தான் அதைச் செய்யாமல் தவிர்த்த வாக்காளனுடைய தலைவிதியையும் தீர்மானிப்பவன் என்றால் அதற்க்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்பை, சிறுபான்மை சிந்தித்து வாக்களிப்பவர்களின் கோபம், அதன் விழைவால் உருவாகப்போகும் அணுகுமுறையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம் எங்களுக்கு ஒரு விடிவு தாருங்கள்" என்று அழுத ஓரு இனத்தின் அங்கத்திற்க்கு இன்னொரு அங்கம் செவிசாய்க்காத போது, நிச்சயம் அவர்கள் உதாசினப் படுத்தப் பட்டார்கள் அல்லது அவர்களின் குரல் இன்னும் இந்த பாமர மக்களிடம் போய்ச்சேர வில்லையோ என்ற கருத்தோட்டங்களை ஏற்படுத்துகிறது. இதில் உண்மை இரண்டாவது காரணமாக இருக்குமானால், அது சரி செய்யப்படலாம். ஆனால் அது முதல் காரணமாக இருப்பின் அந்த இனம் அதன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது உறுதி.

அவர்ளுக்கான விடிவை அவர்களே தேடிக்கொள்வார்கள், அல்லது காலம் அவர்களுக்கு அதை கொடுக்கும். அந்த நேரத்தில், அழிவின் தொடக்கத்தை அந்த இனத்தின் இன்னொரு அங்கம் அடைந்திருக்கும். கலாச்சாரம், பண்பு, மொழி என அனைத்திலும் கலப்பை ஏற்படுத்தி தன் இனத்தை தானே அழித்து மாயையான தேசிய கோட்பாடுகளை தலைமேல் தூக்கிவைத்து தன் அடையாளத்தை இழந்து நிற்க்கும் இன்றைய தமிழக தமிழர்களின் நிலைக்கு அவர்களின் தலைவிதியைவிட தலைவர்களே முதல் காரணம்.

காகம் கூட தன் உறவு இறந்தால் கூடி அழும், ஆனால் இந்த இனம் மட்டும் தன் அங்கத்தையே தின்று பசிதீர்க்கும் குணம் கொண்டது என்பது மறுக்க முடியாத சோகம்.

Monday, May 11, 2009

கல்கியின் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலை மின் நகலில் பெற

http://ponniyinselvan.in/pages/downloads.html

Thursday, May 7, 2009

யார் பெரியாரின் பேரன்?









"பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்று சீமான் சொல்கிறாறே?" என்று ஈ வெ கி ச இளங்கோவனிடம் நிறுபர்கள் கேட்ட கேள்விக்கு இறையாண்மை மிக்க நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் அளித்த பதில் என்ன தெரியுமா?

"பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கலாம்" என்று எக்காளமாய் பதில் சொல்கிறார்.

அடிமைத் தனத்தை உடைத்தெரிந்த சுயமரியாதையை சொல்லிக்கொடுத்த பகுத்தறிவு பகலவனின் வாரிசு நிச்சயம் இளங்கோவனாக இருக்க வாய்ப்பில்லை. இளங்கோவன் பெரியாரின் தலைமுறை என்று சொல்வது வேண்டுமானால் பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கும்.



இவருக்கு முத்து குமார் யார் என்று தெரியாது. இலங்கை மக்கள் துயருக்கு காங்கிரஸ் கட்சி தான் விடியலை கொடுத்துள்ளது என்று சொல்லும் இந்த மூடரையா நாம் தேர்ந்தெடுத்தோம் என்னும்போது வெட்கம் தலைகுனிய வைக்கிறது.

சோனியாவை அன்னை என்று கூறும் இவர், யார் செய்த இளவயது தவறு என்று சோனியாவிடம் கேட்டுச் சொல்வாரா?

Tuesday, May 5, 2009

உரசல்

நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவனுடைய பேச்சில் பிடிப்பில்லாமல் இருப்பதை அறிந்து அவனிடம் என்னவென்று வினவினேன். அவனுடைய மனைவிமேல் அவனுக்கு அளவுகடந்த வெறுப்பு உண்டாகி விட்டதென்றும் அதனால் அவர்களிடையே விரிசல் விழுந்ததாகவும் சொன்னான். எனக்கு இதைக்கேட்டதும் அதிர்ச்சி!. ஏனென்றால் அவனுடைய திருமணம் காதல் திருமணம். அதுவும் நான்கு வருட கல்லூரி காதல். எனக்கு தெரிந்து இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது. திருமணத்திற்க்கு முன் அவளை பற்றி பேசும்போது சிறிது கூட விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியிருந்த அவன் எதனால் இப்படி பேசிகிறான் என்று புரியாமலும், இது அவனுடைய இல்வாழ்க்கை தொடர்புடையதும் ஆதலால், சிறிது தயக்கத்துடனேயே வினவினேன். பொதுவாக மனதிலுள்ள பாரம் மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் குறைந்துவிடுமென்பார்கள். என்னைப்பொறுத்தவரை அது யாரிடம் சொல்கிறோம் என்பதை பொறுத்து. சிலரிடம் மனதில் உள்ள பாரத்தை சொன்னால் அடுத்த நாள் அது இருமடங்காகி விடும்.

அவன் மனைவி பற்றி அவன் சொல்கையில், "இப்போதெல்லாம் அவள் அவளுடைய வீட்டு உறவுகளைப்பற்றியே அதிகம் கவலை படுகிறாள். சின்ன சின்ன பிணக்கு என்றாலும் விழுந்து விழுந்து உதவி செய்கிறாள் என்றான்".

"சரி அது நல்லதுதானே" என்றேன்.

"மேலோட்டமாய் பார்க்கும்போது அது நல்லதுதான். ஆனால் அதிகமுறை அதுவே எங்களுக்குள் சண்டைக்கு காரணமாகிறது" என்றான்.

"புரியவில்லையே?".. என்றேன்

"அவள் செய்கிற உதவி என்னைப் பாதிக்காத வரையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனல் சிலநேரங்களில் எனக்குப் பிடிக்காததை அல்லது அந்த உதவியினால் எனக்கு வரும் பாதிப்புகளை அறியாமல் அல்லது அறிந்தோ அவள் செய்யும் போது எனக்கு கோபம் வருகிறது. அதனால் வாய்ச்சண்டையில் தொடங்கி இரண்டு மூன்று நாள் பேசாமல் இருந்திருக்கிறோம்" என்றான்.

"இதுபோலத்தான் சென்ற மாதம் அவளுடையா அம்மாவுக்கு கால் வலி என்று சொல்லி மருத்துவ மனையில் சேர்த்து ஒருவாரம் பார்த்தோம். அதற்க்கு மட்டுமே பதினைந்தாயிரம் செலவு செய்தேன். அதற்க்குப் பிறகு கடைகளுக்கும் மற்றபிற இடங்களுக்கும் எளிதில் செல்ல மார்கெட்டுக்குப் பின் புறம் உள்ள என்னுடைய இன்னொருவீட்டை அவர்களுக்கு தந்துவிடலாம் என்றாள். என்னால் சரி என்று சொல்லவும் முடியவில்லை, முடியாது என்று சொல்லவும் முடியவில்லை. அதில் வரும் நாலாயிரம் வாடகையை தான் என் பெற்றோருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

சரிடா இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் சிக்கல் தான். காலப்போக்கில் சரியாகிவிடும். இந்த சிக்கலில் உனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி உன் மனைவியிடம் சொன்னாயா? என்று கேட்டேன்.

இல்லைடா.. இதைப்பத்தி எப்படி அவகிட்ட சொல்லறதுன்னு...... என்றான்

இதிலென்ன இருக்கு.. அப்புறம் நீ என்ன நினைக்கிறேன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்? என்றேன்

எனக்கென்னமோ பிரச்சினைக்கு காரணம் உங்க ரெண்டு பேருகிட்டையும் சரியான புரிதல் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்.

"என் கணவர் என்னை நேசிப்பது போலவே என் பெற்றோரிடமும் அன்பாக இருப்பார் " என்ற எதிர்பார்ப்பு உன் மனைவியிடம் இருந்துச்சுன்னா?

அவனிடம் பதிலில்லை...

"எந்த ஒரு மனிதனையோ அல்லது அவன் செயலையோ எப்போதும் நல்லது அல்லது தீயது என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனென்றால் அவை மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், சூழ்நிலைக்கு தகுந்தாற்ப்போல் அவற்றின் பொருள் மாறுபடும்" என்பதற்க்கு இவர்கள் சரியான உதாரணம்.

பொதுவாக காதலிக்கும் போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. மனதுக்கு பிடித்த பிறகுதான் காதல் பிறக்கிறது, அதனால் அங்கு மூளைக்கு வேலையில்லை. கல்யாணத்திற்க்கு பிறகுதான் மூளை வேலை செய்கிறது. ஆனால் மூளையின் அறிவை இதையத்தின் அன்பு வெல்லும் என்பது பொதுவாக அறியப்படாத உண்மையாகவே இருக்கிறது.

காதல் என்பது உடலைதாண்டி வளரும்போதே அதன் உன்னதம் புரியப்படுகிறது.