Wednesday, July 18, 2018

அரசனும் தெய்வமுமாகிய

எண்தடச் சாலை குறித்து விமர்சனம், எதிர் கருத்து தெரிவித்தால் கைது செய்யும் திரு எடப்பாடியாரின் மனதை புண்படுத்தி நாம் சிறை செல்ல விரும்பவில்லை. ஆகவே எண்தடச் சாலை பொது மக்கள் சொர்க்கத்தில் சேர்க்கும் சாலை, இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் வீட்டில் செல்வம் கொளிக்கும், தீராத வியாதிகள் தீரும், மணமாகதவர்கள் விரைவில் மணமாவார்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரைவில் குழந்தை வரம் பெறுவார்கள், தீராத சொத்துப் பிரச்சினைகள் தீரும். பழனியில் இருக்கும் சாமியின் மறு உருவமே நம் பழநிச்சாமி, அவர் தமிழக மக்களின் நலனைத் தவிர வேறெந்த எண்ணமும் ஒரு கனமும் கொண்டிருந்ததில்லை. மத்தியில் ஆளும் திரு. மோடி அவர்களின் அருளாலும், திரு பழநிச் சாமியின் அருளாலும் தமிழகம் முன்பை விட சுபிட்சமாக இருக்கிறது.

எண்தடச் சாலைக்கெதிராக சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் குரல்கள், மலைகளை வெட்டி கனிமங்களை கொள்ளையடிக்கும் திட்டம் என்ற கருத்துக்களைத் தாண்டி அந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக நிலங்களைக் கையகப்படுத்திவருவது செய்தியாகிறது.
எண்தடச் சாலை என்று சொன்னாலே கைது செய்து சிறையில் அடைக்கும் காவல் துறை இந்தக் கைதுகள் மூலம் ஒரு உலக சாதனையைச் செய்யவிருக்கிறது.

18/07/2018 - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மற்றும் கட்சியினர், விவசாய சங்கத்தினர் 22 பேர்  மக்களைச் சந்தித்து கருத்துக் கேட்டதற்காகக் கைது

17/07/2018 - CPI - ML உறுப்பினர்கள் எட்டுவழிச் சாலை வேண்டாம் என புத்தகம் வெளியிட்டதனால் கைது.

12/07/2018 - சேலத்தில், பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 11 பேரை காவலாளர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

07/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 14 பேர் அரூரில் கைது செய்யப்பட்டார்கள்.

04/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது.

03/07/2018 - 8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் பூமாங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 27), விஜயலட்சுமி (32), கவுசல்யா (20), சந்திரா (30), தாரகேஸ்வரி (38), லட்சுமி (30), செல்வி (32), கோகிலா (32) ஆகிய 8 பெண்கள் மற்றும் விவசாயிகள் சின்னப்பன் (50), ராமசாமி (45), காமராஜ் (39), வரதராஜ் (35), குணசேகரன் (55), கிருஷ்ணராஜ் (20), ரமேஷ் (34), ஆறுமுகம் (72) ஆகிய 16 பேரை போலீசார் கைது செய்து, மல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

27/06/2018 - 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுடன் கலந்து கொண்டு போராடியதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு கைது.

26/06/2018 - சேலம் டு சென்னை, எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட 5 மாவட்ட விவசாயிகள், தம் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் படம்பிடித்த கேரள செய்தியாளர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

19/06/2018 - இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வளர்மதி எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்கு கைது.

18/06/2018 - இயற்கை ஆர்வலர் பியூஸ் மானஸ் எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தமைக்கு கைது.

இரவு 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நில அளவை செய்யப்பட்டது. தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு நில அளவை செய்ய அனுமதிக்காமல்  எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் 11 பேர் கைது செய்து வீராணம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

17/06/2018 - நடிகர் மன்சூர் அலிகான் எட்டுவழிச் சாலைக்கெதிராகக் கருத்துத் தெரிவித்தமைக்காக் கைது.

09/06/2018 - எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அளவைக் கல் நடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் கூட்டத்தை முன் நின்று நடத்தியதாக கூறி குப்பனூரை சேர்ந்த முத்துக்குமார், நாராயணன், ராஜாகவுண்டர், கந்தசாமி, ரவிச்சந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேரை அதிகாலை வீடு புகுந்து அம்மாபேட்டை போலீசார் இழுத்து சென்றனர்.

பூலாவாரி சித்தேரியை சேர்ந்த ரவி என்பவரை கொண்டாலம் பட்டி போலீசார் வீடு புகுந்து இழுத்து சென்றனர்.

இப்படி திட்டம் அறிவித்த நாளிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அவர்களுக்கு புது வாழ்வளித்து அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி அதில் எட்டு வழிச் சாலை போட்டு, சாலை போடுவதற்கு ஒப்பந்தக் காரர்களிடம் கமிசன் பெற்று, பின்  அந்தச் சாலையை தனியாருக்குக் கொடுத்து அவர்கள் சுங்கம் வசூலித்து வளம்பெறவும், அந்தச் சுங்க டெண்டர் மற்றும் மாதவருமானத்தில் பங்கு பெற்று தாங்கள் வளம்பெறவும், சாலை போடும் போது தகர்க்கப்படும் மலைகளின் கனிமங்களை விற்று வளம்பெறவும் வழிவகை செய்யும் சுவாமியை மக்கள் மனதார பாராட்டி இரு கரம் கூப்பி வணங்க வேண்டும். வணங்குவதோடு மட்டுமல்லாமல், வருடா வருடம் பழநிச் சாமிக்கு மாலையணிந்து பாதயாத்திரை செல்லவேண்டும்.
"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழிக்கு அரசனும், தெய்வுமுமாகி உயிர்கொடுத்த பழநிச்சாமி "பல்"லாண்டு வாழ்க...வாழ்க..

Sunday, July 15, 2018

சோமேசுவரர் மலையும் சின்ன பிராட்லி அருவியும்

அதிகமாக ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை என்றாலே கொண்டாடும் மனசு.. இரண்டு மாதம் மனைவி அளித்துச் சென்ற விடுமுறையைக் கொண்டாடாமல் விட்டுவிடுமா என்ன?.. இந்த வாரம்... அடுத்த வாரம் என்று தள்ளிப் போன பயணம் நேற்று உறுதியாகவிட்டது.. நண்பர்களுடன் மூவருமாக காலை 9 மணிக்கெல்லாம் பயணம் தொடங்கியது. வழக்கமாக ஜூலையில் கொளுத்தும் வெய்யில் நேற்று குழுமை காட்டியது. மூன்று மணி நேர பயணத்தில் மேகமலைகளில் உள்ள சோமேசுவரர் ஆலையத்தை மதியம் 1 மணிக்குச் சென்றடைந்தோம்.

மலை மீது இருக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்வது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே வழிகாட்டிகள் வைத்திருந்தாலும் கவனத்துடனேயே கோவிலை அடைந்தோம். கோவிலை அடைந்த நேரம் சிவலிங்கத்திற்கு உச்சிக்கால பூசை செய்து கொண்டிருந்தார் பூசாரி. பெருங்கூட்டமில்லையென்றாலும் வார இறுதியில் குறிப்பாக சனிக்கிழமை வரும் வழமையான ஆசுவில் பக்தர்கள் கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பூசாரி தேவ பாசையில் பாடல் பாடி நம்மையும் திரும்பப் பாடச் செய்தார். பூசை நடந்து கொண்டிருக்கும் போதே பக்தர் ஒருவர் மயக்கமடந்தார். சனிக்கிழமை பட்டினி இருந்து வழிபாடு செய்ய வந்திருப்பார் போலும். தேங்காய்த் தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளியவைத்தனர் பூசாரி குடும்பத்தினர். பூசாரி வழிபாட்டின் இடையே மயக்கமானவருக்கு உதவி செய்ய தன் மகனை பணித்துக் கொண்டே பூசையைத் தொடர்ந்தார். பூசை முடியும் தருவாயில் கோவிலை ஒட்டியுள்ள உணவகத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற அறிவிப்பைச் செய்தார். அதைக்கேட்டதும் "சிவனை நேரில் பார்க்கும் பரவசம்" உண்டாகியது. ஒரு வழியாக சிவ தரிசனம் முடித்து வெளியே வந்து உணவகத்தைக் கண்டு பிடித்து முதலாளாக இல்லாவிடிலும் முதல் பத்து நபர்களுள் சிலராக நாங்கள் இருந்தோம். பன்னிரண்டு டாலருக்கு புளிச்சோறு, சாம்பார், சோறு, டார்ட்டிலா, உருளைக்கிழங்கு மசாலா, பொங்கல், தயிர் மற்றும் தேனீர் எனக்கொடுத்து சிவனைக் கண்ட நிறைவைக் கொடுத்தனர்.


வெளியே வந்து புகைப்படக் கருவிகளைக் கொண்டு கண்ணில் பட்ட இயற்கை அழகை கருவி வசப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்து சேர வேண்டிய இடத்தைப் பற்றிய குறிப்புகளை இணையத்திலிருந்து நண்பர் அரவிந்த் படித்துக் கொண்டே வந்தார். காட்டு வழிப்பாதையில் சென்று சின்ன பிராட்லி அருவியை அடைவதைப் பற்றிய குறிப்பைக் கேட்கும் போதே சாகச உணர்வு ஏற்பட்டது.


வழிகாட்டும் கருவி துணைகொண்டு அருவி இருக்கும் இடத்திற்கு வந்தால் அங்கு சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக அறிவுப்புப் பலகையும் சாலைத் தடுப்புகளும் வைத்திருந்தார்கள். ஓ.. அருவிக்குச் செல்லமுடியாது போல என்று திரும்ப எண்ணுகையில் நான்கு யுவதிகள் மறிக்கப்படிருந்த சாலையிலிருந்து வெளியே வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்தனர். நண்பர் அரவிந்த் அவர்களிடம் அருவியைப் பற்றிக்கேட்டார். அவர்கள் அருவியை அடைய அந்தச் சாலை வழி சிறிது தூரம் சென்றதாகவும் அங்கு சாலைப்பணிகள் நடந்ததால் தங்களால் அதற்கு மேலே செல்ல முடியவில்லை என்று திரும்பிவிட்டதாகவும் சொன்னார்கள். சரி.. அருவியைப் பார்க்க முடியாது போல என்று சொல்லிக்கொண்டு வண்டியை நகர்த்த முனைந்த போது நண்பர் மணி, நாமும் போய் ஏதாவது வழியைக் கண்டுபிடித்து அருவியைக் காணலாம் என்று ஆர்வத்தைத் தூண்டினார்.


அவரின் சொல்லில் உற்சாகமடைந்த அனைவரும் மறிக்கப்பட்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம். அழகிய வளைவுகள் கொண்ட அந்தச் சாலையில் சற்றேரக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்த பின் சாலைப்பணிகள் நடக்கும் இடத்தை அடைந்தோம். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறம் காட்டுக் கொடிகள் மரங்களின் மீது படர்ந்து ஒரு போர்வையைப் போலக் காட்சியளித்தது. சில இடங்களில் அது குகைகள் போலவும் சிலைகள் போலவும் காட்சியளித்தது. மேலும் செல்லும் வழி இறக்கமாக இருந்ததால் சலிப்படையவில்லை. அங்கே நின்றிருந்த வாகனமொன்றில் இருந்த பொறியாளர் ஒருவரிடம் அருவி பற்றி விசாரித்தததில், அருவிக்கு இன்னொரு வழி இருப்பதாகவும் அது நாங்கள் வண்டி நிறுத்தியிருந்த இடத்தின் அருகில் காட்டுக்குள் ஒரு ஒத்தையடிப்பாதையின் வழியாகச் செல்லலாம் என்றார்.
மீண்டும் வண்டி நின்றிருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இந்த முறை சாலை ஏற்றமானதாக இருந்தது. களைப்பைக் கலைக்க பகடிகள் பேசி ஒருவழியாக வண்டி நின்றிருந்த இடத்திற்கு வந்த போது சிவன் கோவில் உண்டி வியர்வையாக வழிந்து சட்டையை நனைத்திருந்தது. பிறகு சாலையின் ஓரத்தில் பிரியும் ஒத்தையடிப்பாதையைத் தேடினோம்.
கடைசியில் அது வண்டி நிறுத்தியிருந்த மரத்தடியில் தொடங்கியது. வழியைக் காட்ட அங்கு இரண்டு சாலைப் பணிகளில் பயண்படுத்தும் கூம்புகளைக் கூட வைத்திருந்தனர். வழக்கமான வழிகாட்டிகள் இல்லாததால் எதிரே இருந்த வழியை விட்டுவிட்டு அதைத்தேடி இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து கண்டுபிடித்தது எதையோ நமக்குச் சொன்னது.




அருவிக்கான பாதை தெரிந்தவுடன் அருவியில் குளிக்கத் தேவையான ஆடைகளை மாற்றிக்கொண்டு காட்டு வழியில் பயணத்தைத் தொடர்ந்தோம். இது சாலைப் பணிகள் தொடங்கிய பின் உருவாக்கப்பட்ட பாதை என்பதால் மனிதர்கள் கால் நடையில் உருவான சிறு பாதையாக இருந்தது. வழியில் கிடந்த மரக் கிளைகளை கைத்தடியாக மாற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆங்காங்கே விழுந்திருந்த மரங்களைத் தாண்டித்தான் நடக்க வேண்டியிருந்தது. ஒரு சில இரங்களில் மண்சரிவுகூட ஏற்பட்டிருந்தது. பாதை சீராக இல்லை. ஒரு இடத்தில் 15 அடிகள் செங்குத்தாக சரிவில் இறங்க வேண்டியிருந்தது. இன்னொரு இடத்தில் வழி முடிந்து ஓடையொன்றை அடைந்தோம். அந்த ஓடையின் பாதையில் சிறிது தூரம் நடந்த பின் மீண்டும் கால்தடம் உருவாக்கிய பாதை தென்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வழியாக அருவியைச் சென்றடந்தோம். வழியெங்கும் அருவியின் சலசலப்புக் கேட்டுக் கொண்டே இருந்தது.
அருவிக்கு அருகில் பல காட்டுப் பாதைகள் பிரியும் சந்திப்பு ஒன்று வந்ததது. வந்த வழியை அடையாளப் படுத்த நண்பர்கள் கிளைகளை மரத்தின் மீது சாய்த்து வைப்பதும், தரையில் குறியீடுகளை எழுதுவதுமாக சில செயல்களைச் செய்தனர். திரும்பி வரும்போது இந்த அடையாளங்கள் வந்த வழியைக் கண்டுபிடிக்க மிக்க உதவியாக இருந்தது.
அருவியைச் சென்றடைந்த போது அங்கு சில இளைஞர்களும் ஒரு யுவதியும் நணபர்களாக அருவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கக் கையசைத்து "ஹாய்.." சொல்லிவிட்டு அருவியை படமெடுக்கக் களத்தில் இறங்கினோம். சிறிது நேரத்தில் அவர்கள் தனிமை பாழ் பட்டதை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அருவியில் கால், தலை நனைத்து, அருவி கொண்டு வந்து சேர்த்த புனலில் ஆடிக் குதித்து ஆசை தீரப் படங்கள் எடுத்துக் கொண்டாடினோம். நண்பர் மணியின் புகைப்படக்கருவியில் எங்களை பதிந்து கொள்ள பல வகைகளில் நயனங்கள் செய்தோம். அந்தப் புகைப்படங்களை இன்று பார்க்கையில் அவ்வளவு எழிலாக இருந்தது.

ஒருவழியாக அங்கு எங்கள் கொண்டாட்டத்தை முடித்து மீண்டும் காட்டு வழிப் பயணத்தை நகைச்சுவையுடன் காணொளிப் பதிவு செய்து வாகனத்தை அடைந்தோம். ஆடைகளை மாற்றிக் கொண்டு அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தோம் மிக அழகிய அனுபவங்களோடு.