Wednesday, December 23, 2015

தமிழக அரசியலில் இன்றைய தேவை யார்?


இன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் தேர்தலைச்  சந்திக்க இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இரு கழகங்களின் ஆட்சியைப் பார்த்துவிட்ட மக்கள்குறிப்பாக இளம் தலைமுறையினர் அரசியல் மாற்றத்தையும் அதன் விளைவாக நிர்வாக சீர்திருத்தம்மக்களின் உரிமைகளுக்கு மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கின்றனர். எப்படி, பொருளாதார தாராளமயமாக்கல் இந்திய அரசியலில் தத்துவங்களை புறந்தள்ளி தனிமனித முன்னேற்றத்தை முன்னிறுத்தியதோஅதே போல அந்த பெரும் மாற்றத்தைக் கைக்கொள்ளும் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய சமூகம் முகம் கொடுத்திருக்கும் சிக்கல்கள் இது வரை ஆட்சி செய்த கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனியார் மயமான கல்விஇன்று ஒவ்வொரு பெற்றோரையும் கடன்காரர்களாகவும்அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் முக்கியக் காரணியாகவும் இருக்கிறது. எப்படி பிறப்பின் மூலம் சாதிப் படிநிலை ஒரு காலத்தில் ஒருவரின் தலைவிதியைத் தீர்மானித்ததோஅதே போல பிறப்பின் மூலம் வசதி படைத்தவர் ஒரு தரத்திலும்வசதி படைத்திராதவர் ஒரு தரத்திலும் கல்வி பெறும் சூழல் நிலவுகிறது. கல்வி ஒருவருடைய வாழ்கைத் தரத்தை உயர்த்தும் என்ற அடிப்படையையே இந்த நிலை கேள்விக்குள்ளாக்குகிறது.

வெறும் எண்களால் நிறுவப்படும் பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையை இந்த பூமிப்பந்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் செய்துவிடும் பொருளாதாரச் சார்பு கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏரிகள்குளங்கள்ஆறுகளை அழித்து ஆலைகள்குடியிருப்புகள் அமைக்க இப்போது எந்த தடையுமில்லை. இது எப்படி பிராய்லர் கோழிகளை முப்பது நாளில் மருந்துகள் கொண்டு எடையேற்றி கறியாக்குகிறோமோ அதைப்போல. இந்த முன்னேற்றம் நீண்ட காலத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது. இன்னொரு புறம் சாமனியன் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்தே ஆகவேண்டிய நிலை. எந்த ஒரு பத்திரப் பதிவும் லஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை. இன்றைய நிலையில் லஞ்சம் வாங்குவதையோ லஞ்சம் கொடுப்பதையோ யாரும் குற்றமாகவோகேவலமாக பார்ப்பதில்லை. சமுதாயத்தின் மனசாட்சியின் அறத்திற்கான அளவுகள் மாறிவிட்டது. ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சிக்காரர் மக்களின் காலில் விழுந்த காலம் போய்கரண்சியில் அடித்து ஓட்டு வாங்கும் நிலை நிலவுகிறது. தேர்தல் முடிந்தால் தெருவில் சாக்கடை அடைத்து விட்டாலும்சாலை பழுதானாலும் அந்த அரசியல் கட்சிக்காரரிடம் ஏதும் கேட்க முடியாது. அவருக்கு எதுவெல்லாம் லாபம் தருமோ அந்த அரசுப் பணீகளையே செய்வார். இங்கு காசுக்கு ஓட்டுப்போட்டவனின் உரிமையும் விலைக்கு வாங்கப்படும் சூழல்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் போலமனிதனிடம் புதிய வியாதிகளும் ஆண்டு தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்கள் ஏதோ ஒரு மருந்தைத் தயாரித்துவிட்டு அதற்கான நோயைக் கண்டு பிடிக்கிறார்களோ என்று கூடத் தோன்றுவதுண்டு. தனியார் மருத்துவமனைகளின் பெருக்கம் அரசு மருத்துவ மனைகளின் எண்ணிக்கைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் அனுமதித்தோம். ஆனால் இன்று அவையும் ஒரு நோய்போல் பரவி இன்று சாவை முன்னிறுத்திமருத்துவனைப் படியேறும் ஒவ்வொருவரிடமும் கொள்ளையடிக்கின்றன. தனிமனித மருத்துவச் செலவுகள் தனி ஒரு வரவு செலவு திட்டத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தரமான மருத்துவமும்(சுகதாரமும்) கல்வியும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டு அது உறுதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மருத்துவம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அமெரிக்காவில் மருத்துவம் தனியார் வசம் இருந்தாலும்எந்த ஒரு மனிதருக்கும் பணமில்லை என்ற காரணத்தால் மருத்துவம் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. இந்திய அளவில் மருத்துவத்துறையில் மாற்றம் வேண்டும் என்ற போதிலும்மாநில அளவில் அதற்கான முன்மாதிரிகளைச் செய்யலாம்.

சரி... இபோது நமக்குள்ள வாய்ப்புகள் என்னதிமுகஅதிமுக ஆகியவற்றின் ஆட்சியை பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ஆட்சி முறையில் வித்தியாசமில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இவர்களின் ஆட்சியில் ஓட்டுக்கு காசுஇலவசங்கள்டாஸ்மாக் என்று ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கப்பட்டுவிட்டது.. இந்த முறையும் இவர்களைத் தேர்ந்தெடுத்தால்பெரிய மாற்றத்தை எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக எப்படியும் இருவரில் ஒருவர் என்று முடிவுசெய்து இப்போதுபோல் ஊழலைத் தொடர்ந்து தைரியமாகச் செய்வர். அடுத்து நமக்குள்ள தேர்வுமக்கள் நலக் கூட்டணிபாமகநாம் தமிழர்ஆம் ஆத்மிகாங்கிரஸ்பாரதிய ஜனதா.

பாரதிய ஜனதாவும்காங்கிரஸும்ஆம் ஆத்மியும் தேசியத்தலைமையின் கீழ் இயங்குபவை. ஏனைய மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தின் உரிமைகள்சிக்கல்கள் வேறானவை. இங்கு மொழியிலுருந்துஉணவு வரை ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒரு போதும் இங்கு வெளி மாநிலத் தலைமை எடுபடாது.

பாமக வின் அரசியல் அதிரடியாய் இருந்தாலும் கடந்த கால சாதி ரீதியான அரசியல் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை இன்னும் பெறவில்லை. மேலும் பாமக எல்லா மாவட்டங்களிலும் வலுவாக இல்லை. அதனால்வட மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினாலும் பாமகவின் ஆட்சியமைக்கும் முயற்சி வெற்றி பெறாது.

அடுத்து நாம் தமிழர் கட்சி. ஆரம்பம் முதலே தமிழர்கள் குறித்த அக்கறையுடன் அரசியல் செய்வதுபல தரப்பட்ட மக்களை துணை இயக்கங்கள் மூலம் அரவணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தினாலும்அவர்கள் அறிவிக்காமலே, இன வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுபோல் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதற்கான சரியான பதிலையும் செயல் பாடுகளையும் தலமை வெளிப்படுத்தும் போது தமிழகத்தில் பெரும் சக்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்துவிஜயகாந்தின் தேமுதிக. அது அதிமுகதிமுக விற்கு மாற்றாக உருவெடுத்தது. ஒருகட்டத்தில் திமுக வை ஒழிக்க அதிமுக வுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்ததும்இப்போது அதிமுக வை ஒழிக்க யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்திலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி வைத்துள்ள விஜய காந்தினால் தனியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்அவர் கட்சிக்கு விழும் ஓட்டு எதிராளியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்திருக்கிறது. 

கடைசியாக மக்கள் நலக் கூட்டணி. வைகோதிருமாவளவன்இடது சாரிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி பல்வேறு பரிமாணங்களில் ஆட்சியமைக்கும் நம்பிக்கையளிக்கிறது. வைகோ சிறந்த தலைவரானாலும் அவர் தமிழக அரசியலில் வெற்றி பெற முடியாததற்குக் காரணம் அவர் தமிழக அரசியல் சூழலை உள்வாங்க வில்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் தமிழக நலனில் வைகோவின் போராட்டங்களும்அரசியலும் மிகப் பெரும்பங்காற்றியது வரலாறு. அதிகாரத்தில் இல்லாதபோதும் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் முன்னின்று அரசியல் போராட்டங்களும்சட்டப் போராட்டங்களும் செய்தது யாவரும் அறிந்தது. அவருடன் இணைந்துள்ள திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதைத் தாண்டிஅனைத்து மக்களுக்குமான அரசியல் வாதியாக பரிமளிப்பது மிகப்பெரிய பலம். கூடங்குளம்ஈழப் பிரச்சினையில் கருத்தால் வேறுபட்டிருந்தாலும்அடிப்படையில் தமிழக நலன்களில் இடது சாரிகளின் போராட்டங்களும் முன்னெடுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தனியார் மயமாக்களுக்கு எதிரான அரசியல்தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்கு இடது சாரிகள் பெயர்போனவர்கள். இம்மூவர் கூட்டணி பல்வேறு தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. ஆனால் கூட்டுத்தலைமை என்பது தமிழகத்தைப் பொறுத்த அளவில் புதிய முயற்சி. அந்த முயற்சி பரிசோதிக்கப்படும் அதே நேரத்தில் சிறந்த நிர்வாகத்திறமையும்வெளிப்படையான அணுகுமுறையும் கொண்ட முதன்மை-அமைச்சர் தமிழகத்தின் இன்றைய தேவை. அந்த வகையில் நமக்கும் நேர்மைக்கு பெயர்போன சகாயம் ஐஏஸ் சரியான தேர்வாக இருக்கிறார்.

இதுநாள் வரைஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். அவரே ஒன்றிற்கும் மேலான துறைகளுக்கு அமைச்சராகவும் தன்னிச்சையாக முடிவெடுப்பவராகம் இருந்திருக்கிறார். ஒருவகையில் அதிகாரம் ஒரிடத்தில் குவிந்து அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதில் பெரும் சிக்கல்களைக் கொடுத்துள்ளது.


ஆனால் சகாயம் போன்ற ஒருவர் முதல்வராக இருக்கும்போதுஅரசியல் தலையீடுகள்சமரசங்கள் இல்லாத முதன்மை-அமைச்சராகச் செயல்பட முடியும். வைகோதிருமாகம்யூனிஸ்டுகள்தேமுதிக போன்றவை அமைச்சரவையை பகிர்ந்து கொண்டுசகாயம் அவர்களை சாரதியாக்கி தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அரசு நிர்வாகத்தில் அரசியல் வாதிகள் தலையீட்டை இது போன்ற முறையில் தடுத்திட முடியும். கொள்கைகளையும், மக்கள் பிரச்சினைகளையும் ஆட்சி இயந்திரத்தின் கவனத்திற்கு நமது அரசியல் தலைவர்கள் கொண்டு செல்லவும்அவற்றிற்கு அரசு இயந்திரத்தின் மூலம் தீர்வு காண்பது, சகாயம் அவர்களின் திறமையின் மூலம் சாத்தியமே. இது போன்றதொரு சூழலில்கட்சிக்காரர்களுக்கு காண்ராக்ட்காண்ராக்டில் கமிசன்நிறைவேற்றப்படாத திட்டங்களுக்கு செலவுக்கணக்கு போன்ற பல்வேறு ஊழல் முறைகளை அரசியல் தலையீடு இல்லாமல் அழித்துவிடலாம். இந்த ஆட்சியில் தேமுதிக வாகும் பங்கெடுத்து அரசை வழிநடத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் நிச்சயம் பெரும் மாற்றத்தையும்முன்னேற்றத்தையும் அடைந்திட முடியும்.

Tuesday, December 15, 2015

அதிமுக வெறுப்பு திமுக விற்கு விழும் லைக்கா?...

டாஸ்மாக் மற்றும் வெள்ள பாதிப்பு, தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அதிமுக அரசின் இயலாமை பல்லிளிக்கும் இந்த நேரத்தில் திமுக கூடாரம் உற்சாகத்தில் இருப்பது போலும் மக்கள் அடுத்த மாற்றாக திமுக வைத்தான் தேர்ந்தடுப்பர் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான திமுக ஆதரவு பிரச்சாரம் மட்டுமில்லாமல், மக்களை திசை திருப்பும் உக்தியும் கூட.

கடந்த தேர்தலில் திமுக துறத்தியடிக்கப்பட்டதற்கான காரணங்கள் அப்படியேதானிருக்கிறது.

  1. 2G அலைக்கற்றை ஊழல்
  2. ஈழத்தமிழர் விடயத்தில் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றியது.
  3. மாவட்டச் செயலாளர்கள் முதல் ஊராட்சித் தலைவர்கள் வரை ஊரான் சொத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுக் கொண்ட அராஜகம். அதைத் தடுக்க 'அம்மா' கொண்டுவந்த நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பின் 'ஏதோ' சமரசத்திற்குப் பின் செயல்படவில்லை.
  4. டாஸ்மாக் குழாயாய் மேலும் திறந்து விட்டு சமுதாயத்தை சீரழித்தது
  5. தாது மணல், கிராணைட் கொள்ளை
  6. நதி நீர் உரிமைகளில் சமரசமடைந்தது.


இன்னும் ஏராளம்...

அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது முற்றிலும் திமுக வெறுப்பினாலன்றி வேறு காரணங்கள் ஏதுமில்லை. மேற்ச்சொன்ன ஓரிரு காரணங்களைத் தவிர்த்து அதிமுக வின் ஆட்சிக்கும் திமுக ஆட்சியின் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்.

இந்த சூழலில் திமுக வின் ஆட்சிக் கனவு மக்களின் மறதியை நம்பியே இருக்கிறது. அவ்வப்போது முகநூல் பதிவுகள் பழைய கதையை நினைவு படுத்தி மக்களை உசார் படுத்தி அந்த கனவை கலைத்து விடுகிறது.

தமிழக அரசியல் சூழலையும், மக்களுக்கு மாற்று ஒன்றை உருவாக்க மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியயை வைகோ, திருமா மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த கூட்டணியின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களின் தொடர் பிரச்சாரம், டாஸ்மாக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் எடுத்த நிலை, வெள்ள நிவாரணப்பணிகளில் தலைவர்கள் என்ற மமதையெல்லாம் இல்லாமல் வீதியில் இறங்கி சேற்றை அள்ளுவது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளிடமிருந்தும் விடிவு வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு இவர்களின் அரசியல் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்து மக்களின் எண்ணவோட்டத்தை திசை திருப்புவதில் கலைஞர் வல்லவராயிற்றே. மதிமுக வில் முக்கியமானவர்கள் விலகி திமுக வில் இணைவது ஏதோ வைகோ மேலுள்ள வெறுப்பினாலும், அவர் அதிமுக வெற்றிபெற கூட்டணி அமைத்திருப்பதனாலும், அவர்கள் திமுக வில் இணைவது இயற்கையானது என்பதுபோலவும் பரப்புரை செய்யப்படுகிறது.

உண்மை என்ன என்பது கடந்த ஆறு மாத நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.

செப் 17 ல் வைகோ மக்கள் நலக் கூட்டணிக்கான அத்திவாரத்தை அமைத்தபின், திமுக கொஞ்சம் ஜெர்க்காகி தாமரைக்கண்ணன் போன்ற நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்தது.

இப்போது விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது போன்ற அறிகுறி தெரிந்தவுடன், ஜோயல்... இந்த ஜோயலுக்கு வைகோ மக்கள் நலக்கூட்டணி அமைத்தபோதும், வைகோ திமுக, அதிமுக வுடன் கூட்டணி அமைக்கமாட்டேன் என்று அறித்த ஆறு மாதத்திற்கு முன் கட்சி மாறாமல், இன்று அதிமுக வெறுப்பு மக்கள் நலக் கூட்டியக்கத்தின் மேல் விழும் அறிகுறி தெரிந்த பின் கட்சிமாறியது இயற்கையானதா?

கருணாநிதியின் அரசியல், இத்துபோன பழி பாவங்கள் சேர்ந்த அரசியல். அது இப்படித்தானிருக்கும். எப்போதெல்லாம் தனக்கு பாதிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஜோயல் போன்ற யாராவது மாற்றுக் கட்சியிலிருந்து கருணாநிதிக்கு சால்வை சாத்தும் நிகழ்வுகள் நடக்கும். அதற்கான முன்னேற்ப்பாடுகள் பல நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டிருக்கும்.

வெள்ள நிவாரணத்தில் இவ்வளவு செலவிட்டோம், அவ்வளவு செலவிட்டோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லி கொண்டிருக்கும் அதிமுக விற்கு, திமுக விடம் எந்த கேள்விகளும் இல்லை. ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இருந்தால், இது போன்ற ஊழல்களை ஆய்ந்து ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்றல்லவா அறிக்கை வந்திருக்க வேண்டும். ஆனால், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் திமுக விற்கு, இப்போதிருக்கும் வாய்ப்பெல்லாம் அறிவாலையம் பக்கம் போகும் ஸ்கூல் பசங்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து திமுக விற்கு வந்து விட்டனர் என்று ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவதுதான்.

இன்றைய இளைஞர்கள் ஊழலற்ற, மக்கள் நலன் காக்கும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்கள். அதானால் திமுக வைப் பற்றி திமுக காரர்களே கவலைப் பட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்கள்.