Sunday, January 3, 2016

நம் வாழ்க்கை நம் விரலில்...

“நமக்கெதற்கு அரசியல்... அது ஒரு சாக்கடை.. இவர்களுக்கு வேற வேலையில்லை...” இப்படி நிறைய இளம் தலைமுறையினர் எண்ணுகின்றனர். அவர்களின் நிலையில் அது சரியானதே. அதற்குக் காரணம் நம்மை ஆண்ட, நமக்கு அறிமுகமான அரசியல்வாதிகளின் நடவடிக்கை, அது நமக்கு அரசியல் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அந்தச் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. படித்த இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது வரை நடந்த தேர்தல்களில் வாக்களிப்பவர்கள் சதவீதம் 60-70%. ஏறக்குறைய 40% மக்கள் வாக்களிப்பதில்லை. பதிவான 60% ஓட்டுக்கள் 4 அல்லது 5 கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் பிரித்துக் கொள்கின்றனர். 25% முதல் 35% ஓட்டு வாங்குபர் எதிராளியைத் தோற்கடித்து வெற்றி பெறுகின்றார். அவர் வெற்றிபெற்ற ஓட்டுக்கள் பெரும்பாலும் கட்சியின் அடிப்படையில் காலங்காலமாக ஓட்டுப் போடுபவர்களின் ஓட்டுக்கள். அதிக பட்சமாக 5% - 10% கட்சி சாராத நடுநிலையாளர்கள், புதிய வாக்களார்களின் வாக்குகள் மூலம் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. நமது ஜனநாயக நாட்டில் 25% ஓட்டு வாங்குபவர் ஏனைய 75% மக்களுக்கான முடிவுகளை எடுக்கிறார். இந்த நிலையால் நம்மை ஆளும், ஆண்ட கட்சிகள் தங்களுக்குள் ஒரு எழுதப்படாத உடன்படிக்கை மூலம், மக்களின் வரிப்பணத்தைத் தவறாக செலவளித்து, ஊழல் செய்து பெரும் பணக்காரர்களாகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நம் அடுத்த தலைமுறையான, மகன், பேரன்கள் இந்த நிலத்தில் வாழத் தேவையான நீர், காற்று, நிலம், காடுகள், மலைகள் இன்னும் பல இயற்கை வளங்களை சூரையாடி அழித்து லாபம் பார்க்கின்றனர்.
நாம் வாங்கும் சோப்பு, சீப்பு முதல் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்டுகின்றோம். பெட்ரோல், டீசலுக்கு அதன் விலையை விட அதிகமாக வரி கட்டுகிறோம். டெலிபோன் பில்லில் ஒரு பகுதி, சொத்து வரியில் ஒருபகுதி கல்வி வரி கட்டுகிறோம். வாகனத்தை சாலையில் பயன்படுத்த சாலை வரி கட்டுகின்றோம். வருமானத்தில் 20 முதல் 30 சதவீதம் வரி கட்டுகின்றோம். மின்சாரக் கட்டணத்தில் வரி கட்டுகின்றோம்.
இப்படி ஒவ்வொரு அன்றாடத் தேவைகளுக்கும் வரி கட்டுகின்றோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் (மாதம் 8500 ரூபாய்) குடும்பச் செலவு செய்கிறவர் வரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அரசுக்கு அளிக்கிறார். இந்த வரி கல்வி, மருத்துவம், சாலை வசதி, குடி நீர் வசதி போன்றவற்றிற்காகவும், அரசு அலுவலர்களின் சம்பளமாகவும் செலவு செய்யப்படுகிறது. இந்த வரிச் செலவினங்களை நாம் முழுமையாகப் பயன் படுத்திக்கொள்கிறோமா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
கல்வி, மருத்துவத்திற்கு வரிகட்டினாலும் அந்த சேவைகள் அரசைவிட தனியாரிடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தச் செலவுகளை நாமே செய்து கொள்கிறோம். இந்தச் செலவுகள் தனிமனிதனின் ஆண்டு வருமானத்தில் பெரும் பங்காகச் செலவு செய்யப்படுகிறது. திருட்டிலிருந்து, பாதுகாப்பு வரை காவல் நிலையங்களை நம்பியிருக்கிறோம். ஆனால் காவல் நிலையங்கள் பெரும்பாலும் மக்கள் எளிதில் அணுகி உதவி பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பது நிதர்சனம்.
போடாத சாலையை போட்டது போல் கணக்குக் காட்டுவது, போட்ட சாலை 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க மதிப்பிடப்பட்டிருந்தால் அவை இரண்டு ஆண்டுக்குள் பழுதாகி மீண்டும் சாலை போடவேண்டிய நிலை. ஒவ்வொரு முறை சாலை போடும்போதும் அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் கமிசன் பெருகிறார்கள். ஆக, ஒவ்வொருமுறை அரசு பணம் செலவழிக்கப்படும் போதும் அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் லாபம் அடைவதால், செலவு செய்யத் தேவையான காரணங்களை செயற்கையாக உருவாக்குகிறார்கள். புதிய மின் உற்பத்தி நிலையங்களை அரசு உருவாக்குவதை தவிர்த்து அல்லது தாமதப்படுத்தி, மின்சாரத்தை அதிகவிலைக்கு தனியாரிடம் கொள்முதல் செய்து அதை நமக்கு வினியோகிப்பதன் காரணம் இதுதான்.
எங்கெல்லாம் தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் கமிசன், லஞ்சம் தாண்டவமாடுகிறது. டாஸ்மாக் கொள்முதலிலும் விற்பனையிலும் லாபம் பெருபவர்கள் அரசியல் வாதிகள், பலனடைபவர்கள் அதிகாரிகள். இதில் எந்த கட்டுப்பாடும், கேள்வியும், தண்டணையும் இல்லை. இது உங்கள் உழைப்பை ஒருவகையில் சுரண்டுவதற்கு ஒப்பானதாகும். ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் அரிசி, கரும்பின் விலைகளில் அரசியல் வாதிக்கும், அதிகாரிக்கும் கமிசன் கிடைப்பதில்லை. அதனால் அங்கு கொள்முதல் விலை அதிகரிப்படுவதில்லை.  விவசாயி நட்டத்துடன் கடன்காரனாகத் தற்கொலை செய்து கொள்கிறான்.
அரசின் எல்லா அமைப்புகளும் நேர்மையாக இருந்தால் செலவுகள் குறைந்து, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகமாகும். வாழ்க்கை முறை எளிதாகவும், வளமானதாகவும் இருக்கும். 60 ஆண்டுகள் தொடர்ந்து கடுமையாக உழைத்து ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்காது. 40 அல்லது 50 வயதிலேயே ஓய்வு பெற்று நிம்மதியாகக் காலம் கழிக்கலாம். உணவு, சாலை, சுற்றுச் சூழல் சரியாக இருந்தால் நோய்கள், விபத்துக்கள், மருத்துவச் செலவு குறையும்.

இவையெல்லாம் நாம் போடும் ஓட்டின் அடிப்படையிலேயே இருக்கிறது. நீங்கள் அலட்சியம் செய்யும் உங்கள் ஓட்டு, நாளை உங்களை கடன்காரர்களாகவும், நோயாளிகளாகவும் வைக்கப்போகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். நாளை மருத்துவமனையிலும், அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெற வரிசையில் நிற்பதைத் தவிற்க, ஒரு நாள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு நல்ல வேட்பாளார்களைத் தேர்ந்தெடுத்து நல்ல அரசை அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். நம் வாழ்க்கை நம் விரலில், ஓட்டுப்போடாத 40% இளைஞர்களும், மக்களும் ஓட்டுப்போட்டால் 25% ஓட்டு வாங்கி வெற்றிபெரும் ஊழல்வாதிகளை அப்புறப்படுத்திவிடலாம். சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வருவார். பெரும் கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் படித்த திறமையுள்ள இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்ய் தேர்தலில் போட்டி போடுவார்கள். நாடு வளம் பெரும். நாமும் வளம் பெறலாம்.