Friday, January 27, 2017

பன்னீர் வாயில் மிச்சரா?

போராட்டத்தில் கலவரம் நடந்ததற்கு பன்னீர் செல்வத்தின் மீது பழியைப்போட்டு ஒதுங்கிக் கொள்ளலாம், அல்லது கீழ்வரும் கேள்விகளைக்கொண்டு நிகழ்வுகளை பகுத்தறியலாம்?
1. கலவரம் நடந்து பொதுமக்கள் தக்கப்பட்டால், தான் எடுத்த முயற்சிக்கு பலனில்லாமல், மக்கள் மத்தியில் கெட்ட பெயரெடுப்போம் என்று மோடியை சமாளித்த ப்ன்னீருக்குத் தெரியாதா?
2. போராட்டத்தின் இறுதியில் கலவரம் நடந்தால் யாருக்குப் பயன்?

   2அ முதல்வராகத் துடிக்கும் சசிகலா கும்பல்? தேர்தலில் கோட்டைவிட்ட ஸ்டாலின்        தரப்பு? ஆளுநர் வழியே மத்திய அரசின் ஆட்சியை அடைய எண்ணும் பாஜக?
   
 2ஆ. கலவரம் நடந்த பகுதிகள் குப்பம், பாதிக்கப்பட்டது ஏழைகள். சரி. கடந்தகால தேர்தல் முடிவுகளை எடுத்து கலவரம் நடந்த பகுதிகளில் எந்தக் கட்சி தொடர்ந்து அதிக ஓட்டுக்களை வாங்கியுள்ளது? அவர்களைத் தூண்டிவிட்டது யார்?

 2இ முதல்வரை ஆபாசமாக திட்டியும், அட்டைகள் வைத்தும் போராடியது மாணவர்கள்தானா? அல்லது இனையத்தில் ஆபாசமாம எழுதும் நிலைய வித்துவான்களுக்கு கூலி கொடுக்கும் எஜமானர்களின் வேலையா?

  2ஈ. பன்னீர் மக்களிடம் நல்ல பெயர் எடுத்து முதல்வர் பதவியில் நீடிப்பதாலும், அதன்மூலம் அதிமுகவில் ஆளுமை கொண்ட தலைமையாக மாறுவது யாருக்கெல்லாம் ஆபத்து? யாருடைய கனவுகளெல்லாம் பாழாய்ப்போகும்?

3. மற்ற மாநிலங்களுடன் இனக்கப்போக்கையும், மத்திய அரசுடன் இனக்கப்போக்கையும் கடைபிடுத்து தமிழக உரிமைகள் காக்கப்படவேண்டும், திட்டங்கள், நிதி தமிழகத்திற்கு தேவையான அளவு கிடைத்திட வேண்டும் என்று ஜெயலலிதாவை விமர்சித்தவர்கள், பன்னீரின் பாராட்டத்தக்க நடவடிக்கைகளை பாராட்டாமல், வாய்ப்பு கிடைத்தவுடன் மூடி நிறவ எண்ண என்ன காரணம்?

இது போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால், மாணவர் போராட்டத்தின் வெற்றியும், அதற்குப் பின்னால் உள்ள பன்னீரின் வெற்றியும் தெரியும்.
பன்னீர் வாயில் மிச்சரா என்பது தெரியாது, பன்னீரின் ஆளுமையைக் கண்டுகொள்ளவில்லையென்றால் நம் தலையில் மண் என்பது மட்டும் உறுதி.

Saturday, January 21, 2017

வெற்றி முரசு கொட்டு..

இளைஞர்களின் போராட்டம் வெற்றியடைய

உடனடியாக ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை அமைக்க வேண்டும்.

அரசு மற்றும் அரசுப் பிரதிநிதிகளுன் இவர்களே பேச வேண்டும்.

தமிழகம் முழுதும் உள்ள போராட்டக்காரர்களை ஒருங்கிணைக்க ஒரு குழுவும், அவர்கள் தொடர்ந்து அனைத்து மாவட்டக் குழுக்களுடன் நேரடித்தொடர்பில் நகர்வுகளை திட்டமிடவேண்டும். இது போராட்டம் திசை திருப்பப்படுவதிலிருந்தும், தவறான வழிகாட்டுதலில் இருந்தும் காக்கும்.

நோக்கம் : ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கம்.

அதை அடையும் முறையை கண்டுபிடியுங்கள். சட்டத்தை  பாராளுமன்றமும், பிரதமருமே கொண்டுவர முடியும். அதைச் செய்ய அவர்களுக்கு அழுத்தம் தரக்கூடிய அற வழியைத் கண்டுபிடியுங்கள். உதவிக்கு அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள், முடிவுகளை நீங்களே எடுங்கள்.

வெறும் அடையாளப் போராட்டமாக ஒரு நாள் கூடி மறு நாள் கலைவதில் சிக்கலுக்கு தீர்வு கிடைக்காது. தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டம் இதுதான்.

Thursday, January 19, 2017

இது வெறும் சல்லிக்கட்டுக்கான போராட்டமா?

... இல்லை..

எனது மொழி, கலாச்சாரம் எதிலும் தலையிட அயலவருக்கு உரிமையில்லை என்று சொல்ல நடக்கும் போராட்டம்.

எங்களுக்குள் சாதியுமில்லை, மதமுமில்லை என்று உறக்கச்சொல்ல நடக்கும் போராட்டம்.

GST, NEET என்று மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசிற்கு, நாங்கள் தன்னாட்சி உரிமை கொண்டவர்கள், உங்கள் சட்டங்கள் எங்களுக்கு வளைந்து கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்று அடித்துச் சொல்லும் போராட்டம்.

கட்சிகள் தேவையில்லை, நடிகர்கள் தேவையில்லை, ஏன் தலைவனென்று எவரும் தேவையில்லை, நாங்களே எங்களுக்கு வழிகாட்டி என்று சொல்லும் போராட்டம்.

ஆணும் பெண்ணும் சரி நிகர் என்று சொல்லும் போரட்டம்.

அடித்தால் திருப்பி அடிப்போம் என்று சொல்லும் போராட்டம்.

இனியும் எங்களை அடக்க வேண்டாம் என்று எச்சரிக்கும் போராட்டம்.

அகிம்சையென்றால் என்னவென்று இந்தியாவிற்கு நினைவூட்டும் போராட்டம்.

தமிழர்கள் தனித்தன்மையானவர்கள் என்று சொல்லும் போராட்டம்.

இதுவல்லவோ போரட்டம், இதுவல்லவோ போராட்டம்.

வேகமும் விவேகமும் கலந்த போராட்டம்

அரை நூற்றாண்டு  காலம் தமிழர்களை ஆண்டு அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கடித்து வைத்ததை முடித்து வைத்து, தமிழர்களை உணர்வு ரீதியாக எழுச்சி பெறச்செய்து ஒருங்கிணைத்தது ஏதோ ஒரு சக்தி. ஆனால் போராட வந்தவர்களுக்கு அரசியல் தெளிவும், நோக்கத்தை அடையும் வழிகளையும் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் இல்லாமல் போனது வருத்தமளிக்கிறது.

தேசியகீதம் பாடினால் காவலர் தடியடியில் தப்பித்துக்கொள்ளலாம்,
பஞ்சாயத்து தீர்மானம் உச்ச நீதிமன்ற தீர்மானத்தைவிட சக்தி வாய்ந்தது,
ரேசன் கார்டை கிழித்துவிட்டால் இந்திய குடியுரிமை போய்விடும், அதனால் இந்திய சட்டங்கள் கட்டுப்படுத்தாது,

போன்ற பைத்தியகார பிதற்றல்கள் அவர்களின் அரசியல் அறிவுப்பற்றாக்குறையையே காட்டுகிறது. வாட்சப்பிலேயே எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது, நூலகங்களும், செய்தித்தாள்களும் இன்னும் நமக்காக உயிரோடு இருக்கிறது. அடிப்படை அரசியல் சித்தாந்த அறிவு, அரசியல் கட்டமைப்பு பற்றிய குறைந்தபட்ச அறிவு இல்லாமல், வாட்சப்பில் வந்ததை மட்டுமே எடுத்துக்கொண்டு உளருவது உதவாது. ஏனென்றால் இன்றை அரசியல்வாதிகளை வெல்ல, அவர்களைவிட அரசியல் அறிவு அதிகம் பெற்றிருக்க வேண்டும்.

வேகமும், விவேகமுமே வெற்றியைக் கொடுக்கும்.

போராட்டத்தைக் கொண்டாடலாமே!

போராட்டத்தின் நோக்கம் பற்றிய தெளிவு, போராட்ட வழிமுறைகளெல்லாம் இப்போது விவாதிக்கப்படுகிறது. இதுதான் களத்திலுள்ளவர்களுக்கும் ஏனையோருக்கும் பாடம். அறவழியில் பெரும் மக்கள் கூட்டம், குறிப்பாக மாணவர்வர்கள் ஒன்றுசேர்ந்து நிற்பதே Establishment என்ற அரச கட்டமைக்கு பயத்தையும், நெருக்குதலையும் உண்டாக்கும் காரணி. இது அறவழியில் நடக்கும்போதும் அவர்களுக்கு பெரும் தலைவழியாக அல்லது எதிராக இல்லாதிருக்கும் வரை அவர்கள் பொருத்துக்கொண்டிருப்பார்கள். எப்போது அவர்களை நோக்கி உங்கள் குரல் உயர்கிறதோ அப்போது உங்கள் வலிமையை அதாவது ஒற்றுமையைக் குலைத்து உங்கள் போராட்டத்தை ஒடுக்க முற்படுவார்கள்.

அதே போல் இந்தப் போராட்டத்தை தங்களுடையதாக மாற்றமுடியாத அரசியல் சக்திகள் அல்லது இந்தப்போராட்டம் வன்முறையாக மாறும்போது பயன்பெற எண்ணும் சக்திகள் பொய்யான, ஆபத்தான செய்திகளைப் பரப்புவர். இன்றுகூட சிலர் காவல் துறையினரால் காவல் நிலையத்தில் தாக்கப்படுவது போன்ற வீடியோவைப் பரப்பினர். உண்மையில் அது சில ஆண்டுகளுக்கு முன் வேறெதோ இடத்தில் நடந்த நிகழ்வு. அதற்கு காவல்துறையும் தனியாக விளக்கமளித்து, போராட்டக்காரர்கள் தாக்கப்படவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டது. உங்களுக்கு காவல்துறை இதுபோன்றதொரு அறிக்கையை சமீபத்தில் வெளியிட்ட நினைவிருக்கிறதா? இருக்க முடியாது. இதுவரை காவல்துறை போராட்டங்களை இந்த அளவிற்கு வளர விட்டது கிடையாது. இந்தப்போராட்டம் கூட அவர்கள் எதிர்பாராததுதான். 

போராட்டத்தில் அசம்பாவிதங்கள் நடந்தால் குழந்தைகள், பெண்கள் பாதிக்கப்படும் போது அது பெரும் கொந்தளிப்பாக மாறி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பெரும் வன்முறையாக மாறிவிடும். அதனால் அவர்களும் போராட்டம் நல்லபடியாக நடக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனாலேயே காவலர் போராட்டக்காரர்கள் நேசக்கரம் கோர்க்கும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. அரசும் இதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கிறது. இப்போதைய நிலையில் யாரும் போராட்டம் வேறு வழியில் திசை திரும்புவதை விரும்பவில்லை. ஆக இந்தச் சூழலை போராட்டக்காரர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்.

போராட்டம் இன்னும் எத்தனை நாள் நீளும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் போராட்டம் அதன் இலக்கை, அதாவது ஜல்லிக்கட்டுக்கான தடை விலகும்வரை தொடரும் என்பது மட்டும் தெரிகிறது. போராட்டக்காரர்களுக்கு உணவு, தண்ணீர், கழிப்பிடவசதி என அனைத்து வசதிகளும் தன்னார்வலர்களால் செய்யப்பட்டு போராட்டத்தை உயிரோட்டத்துடன் வைத்திருக்க முயற்சி செய்யப்படுகிறது.

போராட்டக்காரர்கள் மனச்சோர்வடையாமல் இருக்க போராட்டத்தை சற்று இளக்கமாக கையாளலாம் அல்லது கொண்டாடலாம். பொதுவாக தமிழர்கள் போரில்கூட பரணிபாடிக் கொண்டு போர் புரிந்தார்கள் என்று இலக்கியங்கள் சொல்கிறது. நமக்கும் இப்போது, கோவன்களும், டிரம்ஸ் சிவமணிகளும், குப்புசாமி அனிதா தம்பதியனரின் இசை, சிலம்பாட்டம், கரகாட்டம், காவடியாட்டம், பறை இசையெல்லாம் தேவை. நாம் கலாச்சாரத்தை காக்க முன்னெடுக்கும் போராட்டத்தில் நமது கலைகளையும், அதன் வடிவங்களையும் கொண்டாடுவதும் பண்பாடே.



அதேபோல் அரசியல் பாடமும் கற்றுக் கொள்ள அரிய வாய்ப்பு. மொழி வரலாறு, மொழிப்போராட்டம், தமிழகத்தில் சுதந்திரப்போராட்டம், தமிழறிஞர்களின் வாழ்க்கை, சமூகப்போராளிகளின் வாழ்க்கை என்று நம்மிடையே பேசும் வல்லமை கொண்ட பெரியவர்களின் உரைகளையும் ஒலிக்கச் செய்ய வேண்டும். அதனுடே ஆளுமைத்திறன் பற்றிய உரைகளும் இன்றைய மாணவர்களுக்குத் தேவை. இவற்றை அரசியல், இயக்க சார்பின்றி நிகழ்த்தவேண்டும்.

போராட்டத்தின் நீட்சி போராட்டக்காரர்களுக்கு திறனேற்றும் கருவியாகவும், அரசு மற்றும் அரசியல் வாதிகளுக்கு அடுத்த தலைமுறை மீதான அலட்சியத்தை ஒழிக்கும் முகமாகவும் இருக்கட்டும். காட்டுமிராண்டிகள் என்று சொன்ன கூட்டத்திற்கு நாங்கள் நாகரீகத்தின் நாயகர்கள் என்று காட்டுவோமே.

கொட்டட்டும் முரசு, வெல்லட்டும் போராட்டம், பாயட்டும் காளைகள்.

Tuesday, January 10, 2017

ஏர் இந்தியா - முதலிடம்?

மிக மோசமான விமான சேவையின் பட்டியலில் ஏர் இந்தியா மூன்றாமிடத்தில் இருப்பதாக செய்திகள் வருகிறது. யார் இந்தப் பட்டியலை உருவாக்குகிறார்கள், எதற்காக உருவாக்குகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டால் அதற்குப் பின் உள்ள அரசியல் தெரியும்.

நெடுந்தூரப் பயணங்களுக்கு எமிரேட்ஸ், ஜெட், லுப்தான்சா, யுனைட்டெட், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், பிரிட்டிஸ் ஏர்வேஸ், கெதெ பசிபிக், எதியாட், கதார் ஏர்லைன்ஸ் போன்ற விமான சேவைகளைப் பயன்படுத்தியுள்ளேன். சமீபத்தில் ஏர் இந்தியா சேவையை பயன்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது. இதற்கு முன் ஒருதடவை ஏர் இந்தியா சேவையைப் பயன்படுத்தியுள்ளேன். இருப்பினும் இந்த முறை ஒரு பெரும் வித்தியாசத்தைக் கண்டேன். ஏர் இந்தியா விமானங்கள் மற்ற விமானங்களை விட அதிக இடவசதி(Leg room) கொண்டது. நெடுந்தூரப் பயணத்திற்கு இது மிகவும் தேவையானது. லுப்தான்சா, யுனைடெட் விமானங்களில் கூட முட்டி முன் சீட்டில் முட்டிக் கொண்டு 13 மணி நேரப் பயணத்தில் சிரமப் பட்டிருக்கிறேன். அந்த சிரமம் ஏர் இந்தியாவில் இல்லை.

அடுத்தது உணவு. ஏர் இந்தியா உணவு வகைகள் இந்தியர்களுக்கு ஏற்றதாகவும், குறுகிய தூரப்பயணங்களுக்கு கூட உணவை தனியாக விற்காமல் இலவசமாக அளிக்கிறார்கள்.

சிப்பந்திகளின் சேவையும் பாராட்டும்படியே இருக்கிறது.

இதையெல்லாவற்றையும் விட, இட ஒதுக்கீடு ஏர் இந்திய நிறுவனத்தில் பின் பற்றப்படுகிறது. ஆதலால் எங்கள் கருப்பினத்தவரையும் அமெரிக்க அலுவலகங்களில் காணலாம்.

என்ன ஒரே ஒரு உறுத்தல், விமானியின் ஒவ்வொரு அறிவிப்பிற்குப் பின்னும் "ஜெய் ஹிந்த்" என்று முடிக்கும் போது தூக்கம் கலைந்துவிடுகிறது. சில சமயம் எங்கே அருகிலிருக்கும் தேச பக்தன் எழுந்து வணக்கம் வைக்கவில்லையென்று சாத்திவிடுவானோ என்ற பயம்வேறு அப்பிக்கொள்ளுகிறது.

மற்றபடி, ஏர் இந்தியா சேவை பாராட்டும்படியாகவே உள்ளது.

Monday, January 9, 2017

டிரம்பிற்கு ஒரு ஐமடல்

அன்பின் டிரம்பு,

தாங்கள் அமெரிக்காவை வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்ற உறுதியேற்று மக்களின் ஆதரவு பெற்று ஆட்சியமைப்பதில் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் "மேக் இன் அமெரிக்கா" உறுதி மொழி, எங்கள் அகண்ட மார்பு மோடிஜி அவர்களின் கொல்கைக்கு இணையாக உள்ளதாக பிஸினஸ் இன்சைடர் ஆய்வு முடிவொன்றை வெளியிட்டுள்ளது பெருமிதம் தருகிறது.

பெரும் எதிர்பார்ப்புடன் சிம்மாசனத்தில் அமரவிருக்கும் தாங்கள், சிம்மாசனத்தில் அமரும் முன்பே டொயோடா, போர்டு போன்ற நிருவனங்களை மெக்சிகோவில் ஆலை அமைப்பதை தடுத்து நிறுத்தி, அமெரிக்காவில் ஆலை அமைக்க நிர்பந்தித்து அதில் வெற்றியும் கண்டது, நீங்கள் ஒரு அசகாய சூரர் என்பதை நிரூபித்து விட்டது.

இது போல பல சாதனைகள் புரியவிருக்கும் தங்கள் முயற்சிகளுக்கு தடையாக சில உள்ளூர் நிறுவனங்கள் முயற்சி செய்வதை, ஒரு சக வந்தேரியாக உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

ஒரு காலாண்டுக்கு 9 பில்லியன் டாலர்களை இலாபமாக ஈட்டும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் தன் ஆலையை அமைக்க இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்த பேச்சு வார்த்தையின் முக்கிய அம்சமாக ஆலையில் ஏற்படுத்தப்போகும் வேலைவாய்ப்பிற்கு பதிலாக பல்லாயிரம் கோடி வரி விலக்குக் கேட்டு பேச்சு வார்த்தை நடத்துகிறது. ஏற்கனவே முழுவதும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் போன்களை உற்பத்தி செய்யும் ஆலைகள் பெரிதாக வேலைவாய்ப்பை ஏற்படுத்தாது என்பது அப்பாவி இந்தியர்களுக்குத் தெரியாது. பிராண்டு மயக்கத்திலிருக்கும் அவர்களுக்கு இதைப்பற்றியெல்லாம் சிந்திக்க நேரமிருக்காது. ஆகவே ஆப்பிள் நிறுவனத்தின் இந்த கயவாளித்தனத்தை முறியடித்து ஆலையை அமெரிக்காவிலேயே நிறுவ ஆவன செய்ய வேண்டுகிறேன்.

கடந்த ஆண்டு இரண்டு ஆப்பிள் போன்களை வாங்கி அமெரிக்க அரசுக்கு வரி வருவாயை உயர்த்திய நல்லெண்ணத்திலும், மீண்டும் இந்த ஆண்டு புதிய ஆப்பிள் போனை வாங்கி அரசிற்கு வரிகட்ட கொண்டுள்ள கடமை உணர்வும் என்னை உங்களுக்கு இந்த கடிதத்தை எழுத உந்துகிறது.

எப்படி அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பும், பெருளாதாரமும் உயரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதே போல் எண்ணும் உங்கள் சக ஹிருதையர் மோடி அவர்களை ஏமாற்றவும், உங்கள் லட்சியத்திற்கு எதிராகவும் செயல்படும் ஆப்பிளை, அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்து சலுகை விலையில் போன்களை மக்களுக்கு அளித்திட ஆணையிட வேண்டுகிறேன். இதன் மூலம் சாகித்திய அகாதமி விருதும், இந்திய அரசின் பாரத ரத்னா விருதும் பெறும் அறிய வாய்ப்பை தாங்கள் பெறுவீர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

என்றும் தங்கள் மீது பாசமுள்ள

ஆண்டானடிமை

Saturday, January 7, 2017

Above and Beyond

1947ல் ஐநாவில் இஸ்ரேலை தனிநாடாக ஏற்றுக்கொண்ட பின், இங்கிலாந்துப் படைகள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேருவதற்காக ஐந்து(எகிப்து, ஈராக், ஜோர்டான், சிரியா, லெபனான்) அரபு நாடுகள் காத்திருக்கின்றன. பாலஸ்தீனம் உடைவதை விரும்பாத அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் அதன்மீது வலிந்த போரைத் தொடுத்து தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றன. உருவாகப்போகும் போரில் இன்னும் உருவாகாத இஸ்ரேல் தோற்றுவிடுவது நிதர்சனம் என்று கருதி எந்த நாடும் அவர்களுக்கு வெளிப்படையாக உதவவில்லை. அமெரிக்காவில் குடிபெயர்ந்த சில யூதர்களின் உதவியுடன் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவில் எஞ்சிய காயலான்கடைக்குப் போகப்போகும் இரண்டு பழைய சிறிய விமானங்களை முதலில் வாங்குகின்றனர். அமெரிக்கப் விமானப் படைகளில் பணியாற்றிய யூதர்கள் உதவியுடன் அந்த விமானங்கள் செக்கோஸ்லோவியாவை அடைகின்றது. மேலும் சில விமானங்களை வாங்கி ஒரு விமான நிறுவனமாக உருவாக்கி விமானங்களையும் ஆயுதங்களையும் அமெரிக்காவிலிருந்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு செல்கின்றனனர். எகிப்தின் படைகள் இஸ்ரேலை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத விமானத் தாக்குதலில் எகிப்தின் பீரங்கிப்படையை திணரடிக்கின்றனர். இஸ்ரேலிடம் பெரும் விமானப் படை இருப்பதாக எண்ணி எகிப்து பின் வாங்குகிறது. அதே போல ஈராக் படைகளும். 

ஒருகட்டத்தில் கெய்ரோ விமான நிலையத்தின் மீது பறந்த இஸ்ரேலிய விமானத்திடம் தன்னை அடையாளம் காட்டச்சொன்ன கட்டளைக்கு தமது விமானத்தின் பெயரைச் சொன்னதும், தங்கள் நாட்டு விமானம் என்று எண்ணி தரையிரங்க விளக்குகளை எரியவிட்டது கெய்ரோ விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம். மேலிருந்து கெய்ரோ நகரை அடையாளம் கண்டுகொண்ட விமானிகள் பெரும் குண்டுகளை நகரத்தின் மீது வீசிச் செல்கின்றனர். பெரும் இழப்பிற்குள்ளான எகிப்து திகிலடைந்து பின் வாங்குகிறது.

தங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விமான படையணிகள் இருப்பது போல், விமானத்தில் 101 என்று எழுதி எதிரியை ஏமாற்றி பயம் கொள்ள வைத்தது கவனிக்கத்தக்க போர்த் தந்திரம். உலகின் பல பகுதிகளிலிருந்து தன்னார்வலர்களாகவோ, ஊதியத்திற்கோ அமர்த்தப்பட்ட விமானிகளைக் கொண்டும், பழைய விமானங்களைக் கொண்டும் தன்னை எதிர்த்த 5 பெரும் நாடுகளுடன் சண்டையிட்டு வென்று, இஸ்ரேல் தனி நாடாக உருவெடுக்கும் நிகழ்வுகளைச் சொல்கிறது இந்த ஆவணப்படம்.

தோல்வியடைந்து விடுவார்கள் என்று அனைவரும் எண்ணிய நிலையில், வாழ்வுக்கும் சாவுக்குமான தெரிவில், சாவை அடைந்தாவது வாழ்ந்து விடவேண்டும் என்று எண்ணிய இஸ்ரேலியர்கள் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தங்களுக்கான நாட்டை உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களுக்குள் காட்டிக் கொடுக்கவும், கைகழுவி விடவும் எந்த துரோகிகளும் இல்லாமல் போனது ஆச்சர்யமான உண்மை.

இஸ்ரேல் - சரியா தவறா என்பதைத் தாண்டி, அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

Thursday, January 5, 2017

அற்பர்கள் தமிழர்களா?

இதைப்பற்றி நானும் சிந்தித்ததுண்டு.. என்னளவில் இதற்குக் காரணமாக நான் அறிந்து கொண்டது,

ஆந்திர மேல்தட்டு மக்கள் போல், இன்றைய பணக்காரத் தமிழர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்லர். தமிழர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் சேர்க்கும் பணத்தின் மீதான பாசம் என்பது, ஏழ்மையின், பசியின் மீதான அனுபவப் பூர்வமான பயத்தின் அடிப்படையிலானது. எங்கே மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்குச் சென்றுவிடுவோமோ என்ற பயத்தின் அடிப்படையிலானது. இவர்கள் மேல்தட்டு மக்களாக உருவெடுத்திருப்பதில் இவர்கள்தான் முதல் தலைமுறையினராய் இருப்பர். அதுவும் உலகமயமாக்கல் கொண்டு வந்து சேர்த்த வேலை வாய்ப்பினால். ஆந்திரக்காரர்களுக்கோ, பரம்பரை பரம்பரையாக நிலங்களும், சொத்துக்களும் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தமிழர்கள் அடிப்படையில் சுரண்டப்பட்டவர்கள். எடுத்த எடுப்பில் அவர்களை தலைமுறைப் பணக்காரர்களாக இருக்கும் ஆந்திரக்காரர்களுடன் ஒப்பிட்டு அற்பர்கள் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தால், அது சேரும் இடம் சாதி, ஆண்டான் அடிமைக் கலாச்சாரம் என்று திராவிட இயக்கம் எதிர்த்து போராடிய காரணிகளாக இருக்கும். அதைப்பற்றிய எந்த சிந்தனையுமில்லாமல் தமிழர்களை அற்பர்கள் என்று அடையாளமிடுவது திராவிடத்தை தூக்கி நிறுத்தும் விநாயகமுருகன் போன்ற நவீன திராவிட எழுத்தாளர்களுக்கு வேண்டுமானல் இயல்பாக இருக்கலாம், எதார்த்தம் அதுவல்ல.

Vinayaga Murugan
நேற்றிரவு ஆந்திரா கிளப் சென்றிருந்தேன். திநகரின் மையத்தில் இருக்கிறது. சாதாரணமாக எல்லாரும் அங்கு சென்றுவிடமுடியாது. அதில் உறுப்பினராக சேர வேண்டுமென்றால் பத்து லட்ச ரூபாய் வேண்டும். அங்கிருக்கும் உறுப்பினர் விரும்பினால் உங்களை உள்ளே அழைத்துச்செல்லலாம். எனது அலுவலக நண்பர்கள் இரண்டு பேர் அங்கு உறுப்பினர்கள். இன்னொரு நண்பரின் மாமா அந்த கிளப்பில் பணிபுரிபவர். தரமான உணவு, குறைந்த விலை. நல்ல மது. சுகாதாரமாக பரமாரிக்கப்படும் நீச்சல்குளம். எவ்வளவு நேரமானாலும் அங்கு அமர்ந்து சீட்டு, அரட்டை , விளையாட்டு என்று பொழுதுபோக்கலாம். நண்பர்கள் வட்டத்தில் விருந்து வைப்பது என்றால் அங்கு சென்று விடுவோம். நேற்று செல்லும்போது கிளப் வாசலில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் நின்றிருந்தது. வரிசையாக பல இறக்குமதி கார்கள் நின்றிருந்தன. சென்னையில் ரோல்ஸ் ராய்ஸை பார்ப்பது அபூர்வம். ஹைதராபாத்தில் இருந்தபோது சர்வசாதாரணமாக அதுபோன்ற கார்களை பார்த்திருக்கிறேன். உயர்தட்டு மக்கள் வந்துசெல்லும் கிளப் அது. அது வேறு ஒரு உலகம். பணம் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல பணத்தை அலட்சியமாக பார்க்கும் மனிதர்களின் உலகமும் இதே சென்னையில்தான் இருக்கிறது.
நேற்று தமிழர்களின் பிச்சைக்காரத்தனத்தை பற்றி பேச ஆரம்பித்தோம். பிச்சைக்காரத்தனம் என்று நான் குறிப்பிடுவது வேறொன்றை . அது கையில் பத்து காசுகூட இல்லாத நிலை பற்றி அல்ல. கோடிக்கணக்கான பணத்தை கையில் வைத்திருந்தாலும் சிலருக்கு அதை அனுபவிக்க தெரியாது. அவ்வளவு பணத்தை பார்த்ததும் பணத்தின் மீது ஒரு பயம் வந்துவிடும். அல்லது திகைப்பு அல்லது பக்தி கலந்த மரியாதை வந்துவிடும். நல்ல உணவகத்துக்கு சென்று சாப்பிடமாட்டார்கள். நல்ல உடையை வாங்கி அணியமாட்டார்கள். பணத்தை பூட்டி பூட்டி வைப்பார்கள். எளிமையாக இருத்தல் என்பது வேறு. எளிமைக்கு எப்போதும் மதிப்புண்டு. நான் இங்கு குறிப்பிடுவது பிச்சைக்காரத்தனம். இதை தமிழர்களிடம் அதிகம் பார்க்கலாம். அவர்களுக்கு அனுபவிக்க தெரியாது. யுனைட்டட் ஸ்ட்டேஸ் ஆப் ஆந்திராவில் (அமெரிக்காவை நாங்கள் அப்படித்தான் வேடிக்கையாக அழைப்போம்) தெலுங்கர்கள் பலரை பார்த்துள்ளேன். அவர்களிடம் ஒரு ஜென்டில்மேன்தன்மை இருக்கும். அதுபோல கொண்டாட்டம் இருக்கும். பிட்ஸ்பர்க்கில் இருந்தபோது மகேஷ்பாபு நடித்த பிசினஸ்மேன் திரைப்படம் வெளியானது. அது ஒரு நடுங்க வைக்கும் குளிர்காலத்தின் வெள்ளிக்கிழமை மாலை. வெளியே ஏழங்குல பனிப்பொழிவு. கார்கள் கூட வெளியே செல்லமுடியாது. நாங்கள் இருந்த பகுதியிலிருந்து நாற்பது மைல் தாண்டி ஒரு திரையரங்கில் அந்த திரைப்படத்தை தெலுங்கர்கள் சிலர் வாங்கி திரையிட்டிருந்தார்கள். எனது நண்பர்கள் திரைப்படம் பார்க்க அழைத்தார்கள். வெளியில் மோசமானசூழல். நாற்பது மைல் அந்த நடுங்கவைக்கும் குளிரில் சென்று நள்ளிரவில் திரும்பிவருவது ஆபத்தான விஷயமாக பட்டது. தவிர அவர்கள் எல்லாரும் திருமணமாகாத மொட்டை பசங்க..காரில் சீட்பெல்ட்டை இறுக்ககட்டிக்கொண்டு பிட்ஸ்பர்க் மலையிலிருந்து கூட குதித்துவிடுவார்கள் போலிருந்தது..எப்போதும் சாகச மனநிலையுடன் இருப்பவர்கள். எனக்கு அந்த திரைப்படத்தை பார்க்க அவ்வளவு விருப்பமில்லை. தவிர நான் அதுவரை ருசித்திராத ஒரு புதுரக மதுபாட்டிலை வாங்கி வந்திருந்தேன். அதை ருசித்து பார்க்கும் ஆர்வத்தில் இருந்தேன். எனது பக்கத்து அறையில் திருமணமாகாத இன்னொரு தமிழ் பேசும் டீம்மேட் இருந்தான். அவனுக்கு மதுஅருந்தும் பழக்கம் இல்லை. சினிமா நிறைய பார்ப்பான். மகேஷ்பாபுவின் விசிறியும் கூட. அவனை அழைத்துபோக சொன்னேன். தெலுங்கு நண்பர்கள் அவனை அழைத்தார்கள். அவன் அவர்களோடு போகவில்லை. சரி விருப்பமில்லை என்று அவர்களும் சென்றுவிட்டார்கள். மறுநாள் காலையில் டீம்மேட் அறைக்கு சென்று பார்க்கும்போது அவன் ஆன்லைனில் பிசினஸ்மேன் படத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கெல்லாம் ஒரு படம் வெளிவந்தால் மறுநாளே ஆன்லைனில் பார்த்துவிடலாம். அவங்களோட படம் பார்க்க போனா அஞ்சு டாலர் டிக்கெட் செலவாகும். சாப்பாடு கூட அஞ்சு பத்து டாலர். முப்பது டாலர் செலவாகும். முப்பதை அறுபதால் பெருக்கினால் ஆயிரத்து எண்ணூறு என்று சொன்னான். அன்றிலிருந்து அவனை பார்த்தாலே எனக்கு கால்குலேட்டரை பார்ப்பதுபோல இருக்கும். அந்த கால்குலேட்டரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் பத்தாயிரம் டாலர். இதை கஞ்சத்தனம் என்று சொல்லமுடியாது. கஞ்சத்துக்கும், அற்பதனத்துக்கும் வித்தியாசம் இருக்கும். கஞ்சன் என்றால் தான் மட்டும் செலவுசெய்யமாட்டான். அற்பத்தனம் என்றால் மற்றவர்களுக்கு உதவிகூட செய்யமாட்டான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவனது தம்பி இங்கு சென்னையில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறான். அப்படி மிச்சம் பிடிக்கும் டாலரில் சொந்த சகோதரனுக்கு கூட உதவி செய்வதில்லை. இதுதான் நான் குறிப்பிடும் பிச்சைக்காரத்தனம் என்பது.
தெலுங்கர்களின் சமூகத்தையும், அவர்கள் எறும்பு புற்றுக்குள் இருக்கும் எறும்புகள்போல ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்துக்கொள்கிறார்கள் என்பதை பார்த்தும் வியப்பாக இருக்கும். தமிழர்கள் இந்த விஷயத்தில் ஒருவர் முன்னேறினால் இன்னொருவர் அவரது காலை பிடித்து இழுத்துவிடுவார்கள். ஒவ்வொருமுறை அந்த கிளப்புக்கு செல்லும்போதும் அவர்கள் தனிநபர் கொண்டாட்டத்தை மீறி எப்படி நட்புகளை பேணிக்காக்கிறார்கள் என்றும் குடிக்கும்போதும் தொழில்விஷயங்கள் பற்றி விவாதிப்பதை பார்த்தும் வியப்பாக இருக்கும். நேற்று நாங்கள் பெங்களூரில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட பாலியல் அத்துமீறல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் தெலுங்கர்கள் இதுபோன்ற சில்லறை வேலைகளில் இறங்க மாட்டார்கள். ஒன்று கன்னடர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லை வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நண்பர் சொன்னார். தவிர பொது இடங்களில் பெண்களின் மார்புகளை பிடித்து கசக்கிவிட்டு ஓடிய அற்பர்களை பற்றியும், கூட்டமாக இன்னொரு நாட்டுக்கு சென்று அங்கிருக்கும் பெண்களை வன்புணரும் இராணுவவீரர்களை பற்றியும் பேச ஆரம்பித்தோம். இந்தியர்கள் என்றில்லை எந்தநாட்டிலும் கும்பல் மனப்பான்மை அப்படித்தான் இருக்கும். கும்பலாக சேர்ந்தால் மனிதர்களுக்கு வெறிவந்துவிடும். கூடவே குடியும் சேரும்போது அடக்கிவைக்கப்பட்ட எல்லா வக்கிரங்களும் வெளியே வந்துவிடும். கொண்டாட்டம் என்பது உண்மையில் என்ன என்று பேச ஆரம்பித்தோம். இந்தியாவில் பஞ்சாபிகள், தெலுங்கர்கள்போல வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் யாருமில்லை. இந்த மாநிலத்தில் பாலியல் அத்துமீறல்கள் மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் குறைவு என்று நண்பர் சொன்னார். கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இளம்வயதிலேயே செக்ஸ் கிடைத்துவிடும். பெரும்பாலும் தெலுங்கர்களுக்கு இருபத்து இரண்டிலிருந்து இருபத்தெட்டு வயதுக்குள் திருமணம் நடந்துவிடும் என்று நண்பர் சொன்னார். அது உண்மை என்று எனக்கு தோன்றியது. அதற்காக ஏழைமக்கள் அல்லது நடுத்தர வர்க்க இளைஞர்கள்தான் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். உயர்தட்டு இளைஞர்கள் எல்லாரும் உத்தமர்கள் என்றும் பொதுப்படையாக நான் சொல்லவில்லை. ஆந்திராவில்தான் நக்சலைட்டுகளும், பஞ்சாபில் தீவிரவாதிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள் என்று நினைத்தாலும் பாலியல் வன்புணர்வு குறைவு என்பதையும் யோசிக்க வேண்டும். அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்தியர்கள் எல்லாரையும் ஒரேமாதிரித்தான் பார்ப்பார்கள் என்றாலும் தெலுங்கர்களின் கொண்டாட்ட மனநிலை அவர்களுக்கு ஓரளவு அணுக்கமாக இருக்கும்.
ஜனவரிமாதம் வந்தால் அடுத்து என்ன புதிதாக எழுதலாமென்று யோசிப்பேன். நேற்று ஆந்திராகிளப்பில் உட்கார்ந்திருந்த தருணத்தில் அடுத்த நாவலுக்கான தெளிவான வரைபடமொன்று கிடைத்துள்ளது. ராஜீவ்காந்தி சாலை நாவலில் யுனைட்டேட் ஸ்ட்டேட்ஸ் ஆப் ஆந்திரா பற்றி சின்ன புள்ளியொன்று இருக்கும். அந்த புள்ளியை பற்றி எழுத உத்தேசித்துள்ளேன்.

Monday, January 2, 2017

எனது 2016


புதிய அனுபவங்கள்  நம் வாழ்வில் சுவைகூட்டுகின்றன. அந்த அனுபவங்களை கொடுக்கும் புத்தகங்கள் என்றுமே நம்மை உயிர்ப்புடன் வைக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு புத்தகங்களுடன் அதிக நேரம் செலவிட முடிந்தது.  அந்த வகையில் 2016ல் வாழ்வை சுவையாக்கிய புத்தகங்கள் இதோ.... 
  1. என்று  முடியும் இந்த மொழிப்போர்? - ராமசாமி
  2. எங் கதே - இமையம்
  3. யாமம் - எஸ் ராமகிருஸ்ணன்
  4. எனது இந்தியா - எஸ் ராமகிருஸ்ணன்
  5. கோயமுத்தூர் ஒரு வரலாறு - சி ஆர் இளங்கோவன்
  6. காமராஜர் வாழ்வும் அரசியலும் - மு கோபி சரபோஜி
  7. வனவாசம் - கண்ணதாசன்
  8. பச்சைத் தமிழகம் - சுபஉதயகுமார்
  9. The Alchemist - Paulo Coelho
  10. போரும் சமாதானமும் - ஆண்டன் பாலசிங்கம்
  11. திராவிடத்தால் வீழ்ந்தோம் - வெங்காளூர் குணா
  12. களிநயம் - மகுடேசுவரன் 
  13. திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும்

பயணங்கள் என்ற வகையில் வட இந்திய சுற்றுப்பயணமும், புதிய மனிதர்கள் என்ற வகையில் அந்தப்பயணத்த்தில் சந்தித்த அமெரிக்கர்களும், செக் குடியரசு நாடடவரும்.

அனுபவம் என்ற வகையில் தந்தையின் இழப்பிற்குப் பின்னான உறவுகளுடனான சந்திப்பு நெகிழ்ச்சியைத் தந்தது . அதைத்  தனியே எழுத வேண்டும்.

கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்தித்து மகிழ்ந்தது இந்த ஆண்டின் மகிழ்ச்சியான தருணம்.

நிறைய வலைப்பூக்கள், ஒரு மின்னூல், விகடனில் சில கட்டுரைகள், தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை என்பது இந்த ஆண்டின் ஆக்கமான எழுத்துப் பங்களிப்பு.