Sunday, July 31, 2016

டிரம்பு ஒரு டிராகனா?


டிரம்பு, கிளாரி, மோடி, மன் மோஹன், ராகுல் என்ற தனிமனிதர்களின் எண்ணப்போக்கை வைத்து அவர்களின் ஆட்சி அமையும் என்று நம்புவது முட்டாள்தனம் என்பது வரலாறு. அரசு இயந்திரம் என்பது பல்வேறு அதிகாரச் சக்கரங்கள் ஒன்றினை ஒன்று இழுத்தும் தள்ளியும் சுற்றும் அமைப்பு. முடிவெடுத்தல் கூட தன்னிச்சையாக அதிபராலோ பிரதமராலோ செய்ய முடியாது(வெளியில் அப்படித் தெரியலாம், ஆனால் உண்மையில் அப்படியில்லை), வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துவது உட்பட. அதிகபட்சம் தனது தனிச்செயலாளரை வேண்டுமானால் தன் விருப்பத்திற்கு தேர்வு செய்து கொள்ளலாம். கேபினட் அமைச்சர்களை தேர்வு செய்ய பிரதமர் அல்லது அதிபர் என்ற தனியான பிம்பத்தால் முடியாது. அந்த தேர்விற்குப்பின் இருக்கும் அரசியலை வெற்றிகரமாக கைக்கொண்ட அரசியல்வாதி இதுவரை யாருமில்லை. தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சியமைப்புகள், உள்ளூர் தாதாக்கள், வெளி நாட்டு அழுத்தங்கள் என்று பல்வேறு காரணிகளே அமைச்சரவையை முடிவு செய்கிறது. ஒபாமா வந்தால் உலக அரசியலில் தலைகீழ் மாற்றாம் ஏற்பட்டுவிடும் என்று மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். ஆனால் அவரை இரண்டாவது முறை தேர்ந்தெடுத்ததற்கு முக்கிய காரணம் கடந்த ஆட்சியின் தொடர்ச்சியாக செய்ய வேண்டியவற்றை செய்யவும், எதிர்மறை விழைவுகளைத் தள்ளிப்போடவும்தான். இந்த முறை ஒரு வேளை டிரம்பே அதிபரானாலும், அவரால் பெரிதாக எதையும் செய்ய முடியாது, நல்லனவற்றையும், தீயவையும். அரசியல் என்பது ஒரு நபரால் எப்போதும் செய்யப்படுவதில்லை, அது ஒரு கூட்டு நோக்கம் கொண்டது, வெளிப்படையாக பேசப்படாவிட்டாலும், உள்ளுணர்வால் மனிதர்கள் இணைக்கப்பட்டு இயங்குவது. அந்த உள்ளுணர்வை ஆதிக்கம் செய்வது மேலோட்டமான பொதுநலமும், ஆழமான சுயநலமுமே.