Monday, December 4, 2017

பட்டான்


பள்ளிப் பாட புத்தகங்களைத் தூக்குப் பையில் போட்டுக்கொண்டு போவது அப்போதெல்லாம் அதியசமில்லை. தூக்குப்பையின் தூக்கு தோழிலிருந்து அவ்வப்போது தலைக்குச் செல்லும். தலைக்குச் செல்லும் தூக்கினால் புத்தப்பை பின்னுக்குச் சென்று புட்டத்தைத் தட்டிக் கொண்டு வரும்.

தூக்குப்பையா... அது என்ன வித்தியாசமான பை என்று கேட்கும் நவீன நாகரீக வாசகர்களுக்கு.... அது ஒன்று வித்தியாசமானதல்ல... சாதரண துணிப்பையுடன் நீண்ட துணிப்பட்டையை பையின் இரு புறமும் வைத்துத் தைத்திருப்பார்கள். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், பழைய விசு படத்தில் அவர் அணிந்து வரும் பை, பழைய பத்திரைக்கையாளர்கள் தோழில் ஒரு "ஜோல்னா" பையைத் தொங்க விட்டு வருவார்களே, அதுதான்.

அந்தத் தூக்குப்பை அதிகபட்சம் ஒரு நாளில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வர அரை மணிநேரம் சுமக்க வேண்டியிருந்தது. அதுவே அன்றைய காலத்தில் ஆகப்பெரிய சுமையாக இருந்தது. அந்தச் சுமையின் வலியைக் கேள்வி கேட்டது, இன்னொருவரின் சுமை.

தெருக்களில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளில் உள்ள காகிதங்களைத் தேடியெடுத்து அவற்றை பத்திரப்படுத்திச் சேர்த்துச் சேர்த்து தன் தலையில் ஒரு காகிதக் குவியலைப் பையில் கட்டிச் சுமந்து கொண்டிருந்தார், பட்டான். ஆம், அவரை அப்படித்தான் அழைத்தனர். காகிதங்களை ஏன் அவர் அப்படிச் சேகரிக்கிறார் என்று அப்போது கேட்கத் தோன்றவில்லை. ஊருக்குள் சுற்றும் மனநிலை சரியில்லாதவர்களில் ஒருவர் என்று நினைத்தே ஒவ்வொருவரும் அவரைக் கடந்து சென்றிருப்பர். ஆனால் அவரின் கதை அவ்வளவு எளிதில் கடந்து விடக்கூடியதில்லை.

ஊராட்சியில் துப்புறவுப் பணியாளராகப் பணியாற்றிய அவருக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருந்ததாகவும், அந்த நிலத்திற்கு பட்டா அவர் பெயரில் வழங்கப் பட்டிருந்ததாகவும் அவர் கதை தொடங்கியது. அந்தப் பட்டா எப்படியோ அவரை விட்டுத் தொலைந்து போகிறது. அதைத் தொலைத்த அவர் வீட்டில் தொடங்கிய தேடல் ஊரெல்லாம் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. ஒரு வருடமா இரண்டு வருடமா என்ற கணக்கெல்லாம் இல்லை. நான் பார்த்த வரையில், எனது பள்ளிக்காலம் முடிந்து கல்லூரிக்காலம் வரை அவர் தனது பட்டாவைத் தேடிக்கொண்டே இருந்ததாக நினைவு.

அவர் தனக்குள்ளே ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டே வீதிகளில் பறந்து கிடக்கும் காகிதங்களை தேடியெடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்தார். வழியில் தான் பேச நினைக்கும் மனிதர்கள் முன் நின்று மெல்லிய குரலில் தொடர்ச்சியாக எதையோ பேசுவார். அவரைப் பற்றித் தெரிந்தவர்கள், வெறும் "சரி சரி" என்று கேட்டு அவரின் சுமையைக் குறைக்க தன்னாலானதைச் செய்தார்கள்.

ஊராட்சியில் இருந்த மனிதநேயம் மிக்க அதிகாரிகள், அவரது வாரிசு ஒருவருக்கு அவரின் வேலையைக் கொடுத்து அவரது குடும்பத்திற்கான உணவை உறுதி செய்திருந்தனர்.

ஒரு சிலர்  அவரைக் கண்டால், "அதோ பட்டா அங்கே கிடக்கிறது, இங்கே கிடக்கிறது" என்று வீதியில் கிடக்கும் காகிதங்களைக் கைகாட்டி வேடிக்கை நிகழ்த்துவர். பட்டானும் அது தன் பட்டாவென நினைத்து ஓடி எடுத்துப் பார்த்து தனது பெட்டகத்தில் சேர்த்துக் கொள்வார். ஆனால் அவர் பட்டா கடைசி வரை அவருக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை...

ஒரு மனிதனை பித்தனாக மாற்றும் அந்தக் காகிதம் வெறும் பட்டாவா? 

ஏன் தொலைந்து போன பட்டாவிற்கு மாற்றாக நகலோ அல்லது வேறொ ஒன்றையோ அவரால் பெற முடியவில்லை? 

அரசு வேலையை விட்டுவிட்டுத் தேடுமளவிற்கு அந்தச் சொத்தின் விலை அவ்வளவு உயர்ந்ததா?

இவை எதற்கும் யாரிடமும் பதிலில்லை.

Sunday, November 5, 2017

பாலாவின் கைதுக்குப் பின் உள்ள அரசியல்

பாலாவின் கைதிற்கு திருநெல்வேலி ஆட்சியர்தான் காரணம், பாலா வரைந்த அந்த அம்மண ஓவியம்தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால், அது காவி கும்பலின் வெற்றியே..
பாலாவின், எழுத்துக்களையும், ஓவியங்களையும் linesmedia.in இல் போய் பாருங்கள். அவை பெரும்பாலும் காவி கும்பல் மற்றும் அதன் கைப்பாவை எடப்பாடியின் அரசை விமர்சிக்கும் ஓவியங்களும் கட்டுரைகளாகவே இருக்கும்.
பாலாவின் கைதிற்கு ஒரு அம்மண ஓவியத்தைக் காரணமாக்குவதன் மூலம், சப்ஜக்சட் (அ) பேசுபொருள் ஓவியம் மட்டுமே என்றாகிவிடுகிறது.
காவிகளின் அரசியலுக்கு எதிர் அரசியல் செய்யும் குறிப்பிடத்தக்கவர்கள் கூட இந்தக் கைதிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், கைதை வரவேற்பதைப் பார்க்க முடிகிறது. இதைத்தான் காவி கும்பல் எதிர்பார்க்கிறது. அவர்களின் எதிரிகள் எப்படி இயங்குவார்கள் அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டார்கள்.
நாளை ஸ்டாலின் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டினார் என்று கைது செய்யலாம்..
வைகோவை வருமான வரி கட்டவில்லை என்று கைது செய்யலாம்...
இவையெல்லாமே சட்டப்படி சரிதான். ஆனால் அவர்கள் தவறு செய்தார்களா, இல்லையா என்று நீதிமன்றம் தீர்ப்பெழுதும் முன்னறே இங்கு அரசியல் குழப்பங்களை தொடர்ந்து நிறைவேற்றலாம். அதன் பலனை குறிப்பிட்டவர்கள் அனுபவிக்கலாம்.
ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் விமர்சனம் செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும்போது, நீங்கள் சர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதே போலத்தான் ஒரு முறை சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். என்ன காரணம் சொல்லித் தெரியுமா? வழியில் சென்ற ஒருவரைத் தாக்க முயற்சித்ததாக.
உண்மையான காரணம் அவர் அன்றைய ஆட்சியாளர்களின் அதிகார அத்துமீரல்களை வெளியிட்டார் என்ற கோபத்தில்தான்.
உங்கள் தர்க நியாயங்கள் வெறும் அரசு சொல்லும் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்குமானால், உங்கள் அரசியல் அறியாமையை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.
கெளரி லங்கேசைக் கொன்றவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருந்தது. அதைப்போலவே இலங்கையில் லசந்த் விக்ரமசிங்கவைக் கொன்றவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருந்தது. அதைப்போலவே இப்போது பாலாவை கைது செய்தவர்களுக்கும், அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருக்கிறது.
ஆனால் அந்த "அரசியல் சரி" களுக்கு எதிராக உலகமே கண்டனக்குரல் கொடுத்தது.
எது சரி எது தவறு என்பது வெறும் ஒற்றை நிகழ்வில் தீர்மானிக்கப்படுவதில்லை.
பாலா வெளியே வந்தவுடன் இந்தக் கைதிற்குப் பின் உள்ள உண்மைகள் வெளியே வரும். அப்போது பாலா கார்ட்டூனிஸ்டாக இருக்கமாட்டார். ஒரு அரசியல் காற்றாறாகவே இருப்பார்..

Tuesday, June 27, 2017

கைக்கெட்டும் தூரத்தில் வாய்ப்புகள்

கடந்த இருபதாண்டுகளில் பொருளாதார தாரளமயமாக்கல் மூலம் நமது மனிதவளத்தை கணினித்துறையில் பயன்படுத்தி வெற்றிகண்டது நமது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பெரும் சாதனை எனலாம். ஆனால் அந்த வெற்றியொன்றே நமது வருங்கால சந்ததியினருக்கும் பயணளிக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. வற்றாத மனிதவளத்தை வைத்து நம் நாடு தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பேற்படுத்தும் புதிய துறைகளைக் கண்டெடுத்து அதில் முதலீடு செய்யவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பைப் பற்றியே இங்கு பார்க்கப்போகிறோம்.

இலன் மஸ்க், அறிவியலின் மூலம் மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பெரும் கனவுகள் கொண்ட மனிதர். SpaceX என்ற வின்கலன் செலுத்தும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம், Tesla என்ற மின்னாற்றலில் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம், SolarCity என்ற சூரிய ஒளியில் மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றை உருவாக்கி நடத்தி வருபவர். பேரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழலுக்கு கேடு விளைவிக்காத ஆற்றல் சக்திகளைப் பற்றி பெரும் விவாதங்களை உருவாக்கியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த மஸ்க், டிரம்பின் பேரிஸ் ஒப்பந்தத்தைக் கைவிடும் முடிவிற்குப் பின்னர் அதை எதிர்த்து ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேரினார்.

நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன் எரிகாற்று போன்ற பூமியிலிருந்து கிடைக்கும் அத்தனை சக்தி மூலங்களும் அளவில் மட்டுப்பட்டவை. அவை எப்போதுமே கிடைப்பவையல்ல. எடுக்க எடுக்க குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் காலியாகிவிடக்கூடியவை. அவற்றை எடுப்பதால் பூமி எவ்வாறு பிற்காலத்தில் பாதிக்கப்படும் என்ற தொலை நோக்கு ஆராய்ச்சியெல்லாம் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. சூழலைப் பாதிக்கும் இது போன்ற ஆற்றல் மூலங்களை விட்டு விட்டு, எளிய மட்டற்ற ஆற்றல் மூலங்களான சூரிய ஒளி, வெப்பம், காற்று , கடலலைகள் போன்ற சக்திகளில் முற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் நாட்டம் செழுத்த ஆரம்பித்து விட்டது. சுவீடன் தனது ஆற்றல் தேவை முழுமையையும், சூரிய ஒளி மற்றும் காற்றாலையின் மூலம் உருவாக்கிக் கொள்கிறது.

பெரும்பாலான நமது எண்ணைப் பயன்பாடு வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலாகவும், பெட்ரோலாகவும இருக்கிறது. உலகின் சில நாடுகளே இந்த எண்ணை வளங்களைப் பெற்றிருக்கிறது. அந்த நாடுகள் அல்லது அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளே உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன. வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல் மூலங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியுமானானல் உலக அரசியல் இன்று போலவா இருக்கும்

இலன் மஸ்க்த், மின்னாற்றல் மூலம் இயங்கும் கார்களை(Tesla) உருவாக்கும் ஆலையை நடத்துகிறார். ஒரு முறை இவரிடம் காரை வாங்கிவிட்டால் அதன் ஆயுளுக்கும் கார் உரிமையாளர் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. நாடெங்கும் பரவியுள்ள இந்த நிறுவனத்தின் மின்னூட்டி நிலையங்கள் மூலம் இந்தக் கார்களின் சக்தியை புதுப்புத்துக்கொள்ளலாம். சரி இந்த மின்னூட்டி நிலையங்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது? அதை சூரிய ஒளியிலிருந்து தனது மற்றொரு நிறுவனமனான சோலார் சிட்டி மூலம் உருவாக்கிக் கொள்கிறார். எளிமையான திட்டம் என்றாலும் இது எதிர்காலத்தில்  வாகனப்போக்குவரத்து, சந்தைப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

அதுபோலவே தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டுவரும் தானியங்கி வாகனப்பயன்பாடு. சாலையின் சூழலுக்கேற்ப வாகனங்கள் தம்மைத் தாமே இயக்கிக்கொள்ளும் நுட்பம், போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. ஒரு புறம் இது ஓட்டுனர் போன்ற வேலை வாய்ப்புகளை இல்லாமல் செய்தாலும், இந்த வாகனங்களை உற்பத்தி செய்தல், பழுதுபார்த்தல், மேலாண்மை செய்தல் என்று புதிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.

ஊருக்கு ஊர் பொறியியல் கல்லூரிகளைத் திறந்து கணினி வல்லுனர்களை உருவாக்கிக் கணினித் துறையை இந்தியாவில் அதிகம் பயன்படுத்திக் கொண்ட தமிழகத்திற்கு, வருங்கால வாகனத் தொழில் நுட்பத்தில் மிகப் பெரும் வாய்ப்பிருக்கிறது. இயந்திரவியல் மற்றும் வாகனத் தொழில் நுட்பத்தில் கோவையை மையமாகக்கொண்ட புகழ் பெற்ற கல்வி நிலையங்களும், ஜிடி நாயுடு போன்ற அறிவியல் ஆர்வலர்களும் பல சாதனைகளைச் செய்திருப்பது இயந்திரவியலில் நமக்குள்ள அறிவுத் திறனைச் சொல்லும்.

திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலத்தில, அதாவது 1984ல் IRTT என்ற சாலை மற்றும் போக்குவரத்து தொழில் நுட்பக்கல்லூரி ஈரோ துவங்கப்பட்டது. இந்த கல்லூரியின் நோக்கம் வாகனப் போக்குவரத்துறையில் வல்லுனர்களை உருவாக்குவது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பங்களிப்பினாலும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பாகத் தொடங்கி, இன்று காலத்தின் தேவைக் கேற்ப கணினி, மின்னணுவியல் போன்ற துறைகளில் வல்லுனர்களை உருவாக்குகிறது.

தமிழக அரசு தனது கல்விக் கொள்கையில் தொழில் நுட்பக் கல்வியில் மரபுசாரா எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்பம், தானியங்கி வாகனத் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இந்த இரு பெரும் துறைகள் வருங்காலத்தில் பெரும் சந்தையை உருவாக்கப் போகிறது. அதற்கான அறிவுத்தேவையை தமிழகம் கைக்கொள்ள வேண்டும்.

அதற்கென கல்வி மையங்களை உருவாக்கி அதில் இந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்கவும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள வாகனத்தயாரிப்பு நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த முன்னெடுப்பைச் செய்யும்போது கூடுதல் பயன் கிடைக்கும்.

இதன் மூலம் புதிய தொழில்நுட்பச் சந்தையில் முதலிடத்தையும், புதிய வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்

Friday, May 26, 2017

ராஜீவும் கருணாவும்

ராஜீவ் கொலையை சரி/ தவறு என்று ஒற்றைச் சொல்லில் கடந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவர் இந்தியாவிற்கு நல்ல தலைவராக இருந்திருக்கலாம், இன்றைய இந்திய அரசியலின் நிலையை மாற்றியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் சக மனிதனாக அவரை நினைவு கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

சரி... இப்போது காங்கிரசுக்காரர்கள் மற்றும் அவர்கள் கூட்டணிக்காரர்கள் சொல்வது போல், ராஜீவ் கொலைக்காக பிரபாகரனை சோனியாவின் வழிகாட்டலில் முடித்துக் கட்டினார்கள், அதனால் பிரபாகரனின் தவறான முடிவுகளே காரணம் என்பதை ஏற்றுக்கொள்வோமானால்,

அமைதி காக்கச் சென்ற இந்தியப் படை தமிழ் மக்களின் மீதான அடக்குமுறையையும், வன்முறையையும் ஏவிவிட்டது யார்? ராஜீவின் ஆணையால் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களில் சோனியாவைப் போல கணவன்மார்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களுக்கு இருந்த பழிதீர்க்கும் ராஜீவின் முடிவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லையா?

அமைதிப் பேச்சு வார்த்தைகாலத்தில் இந்தியாவின் அரசியல் தந்திரங்களை, பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஆண்டன் பால சிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்ற புத்தகம் விரிவாக விவரிக்கிறது. ராஜீவிற்கும், பிரபாகரனுக்குமான மோதலில் தனி மனிதர்களின் ஈகோவே முன் நிற்கிறது. ராஜீவ் இலங்கையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக நினைத்து பிரபாகரனை தன் அதிகாரத்தில் கட்டுப்படுத்த முயற்சித்தார். போராளிகளின் தலைவரை இந்தியாவில் வைத்து இரண்டு மூன்று நாட்கள் உணவில்லாமல் அடைத்து வைத்து, அவமானப்படுத்தப்பட்டு, மிரட்டல்கள் மூலம் அடிபணிய வைக்க முயற்சி செய்யப்பட்டது. ஒரு புறம் பிரபாகரனை அடைத்து வைத்துவிட்டு இன்னோரு புறம் எதிர் குழுக்களை வளர்த்துவிடவும், இன்னோரு இந்திய அடிமையை வட மாகாணத்தின் முதல்வராக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வந்தது. அதாவது இனச்சிக்கலை தனது அதிகாரத்தின் மூலம் உதாசினப்படுத்தி தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டது. 

இந்த நிலையில்தான் தமிழீழத் தாயக லட்சியத்திற்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்த்து போராளிகளுக்கும் மக்களுக்கும் எதிராக செயல்பட்ட ஆயுதக் குழுக்கள் குழுக்கள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டனர். இதன் நியாய தர்மங்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இல்லை, தமிழீழ போராட்டக் களத்தில் இருந்தது.

இந்திய ராணுவத்திற்கு எதிரான போரில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது சிங்கள அரசு. இந்தியாவின் பழிவாங்களில் ஒரு நியாயம் இருக்குமானால், ஆயுதம் வழங்கிய இலங்கை அரசிற்கு என்ன செய்தது?.. ஐநாவில் ஆதரவு, பல்லாயிரங்கோடி உதவி. இன்றுவரை எந்தச் சிங்களனாவது இந்தியாவையும், கலைஞரையும் நன்றிமறவாமல் நினைத்திருகிறானானா?

அந்தகாலகட்டத்தில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டதாலோ என்னொவோ எம் ஜி ஆருக்கு புலிகளின் மீதான அனுதாபம் பெரும் ஆதரவாக இருந்தது. அவரின் புலிச் சார்பு தமிழக அரசியலைத் தாண்டியது.

அதே நேரத்தில் கலைஞரின் போராளிகளுக்கான ஆதரவு அரசியல் நெடுநோக்கு எதுவுமில்லாமல், பேட்டை ரவுடிபோல் எதிரிக்கு எதிரி தமக்கும் எதிரி என்பது போல் குழப்பமான சூழ்ச்சியான முடிவுகளையே எடுத்து வந்தார். குறிப்பாக எம் ஜி ஆருக்கு எதிரான அரசியல் நகர்வுகளையே செய்து வந்தார். அதனை மீறியும் அவ்வப்போது நடந்த ஆதரவு நடவடிக்கைகள் கலைஞரைச் சுற்றியிருந்த தலைவர்களின் அழுத்தங்களாக இருந்திருக்காலாம் என்பது பின்னாளில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

போர்களத்தின் நியாய தர்மங்கள் அரசியல் களத்தின் நியாங்களிலிருந்து வேறுபட்டது. அரசியலில் தோல்வியும் வெற்றியும் இடமாறிக்கொண்டே இருப்பவை. ஆனால் போரில் ஒரு தொல்வி அடுத்த வெற்றியை இல்லாமல் செய்துவிடும். இங்கு தோட்டாவிற்கு தோட்டா, எரிகுண்டுக்கு எரிகுண்டே பதில். ஆயுதத்தை வைத்துக்கொண்டு அதிகாரத்தை நிறுவ இன்னொரு ஆயுதம் தரித்த போராளிகளுடனான மொதலில், இழப்புகள் இருபுறமும் இருக்கும் என்பது எதார்த்தம். அவரவர்க்கான நியாயங்கள் அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் களத்தில் இல்லாமல் போராட்டக்காரர்களின் கால்களை வாரிவிட்ட துரோகிகள் எதிரிகளைவிடவும் ஆபத்தானவர்கள். எதிரிகளைக் கூட யுத்த தர்மத்தின்படி அவனின் நியாயங்களுடன் ஏற்றுக்கொண்டு மதிக்கலாம். ஆனால் துரோகிகளை ஒருபோதும் மறக்கவும் மன்னித்தலும் ஆகாது.

Thursday, April 27, 2017

கல்வியும் பாடமும்

அக்கவுண்ட்ஸ்- பெயரைக்கேட்டாலே தெரிக்க வைத்த பாடம். வேறு வழியில்லாமல் இளநிலை, முது நிலை பாடங்களில் படித்து தேர்ச்சி பெறவேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் படித்தது. C, C++, Java என்று மோட்டு வளையைப் பார்த்து கனவு கண்டுகொண்டிருந்த போது, விதி Tallyஐ- வேண்டா வெறுப்பாக படித்து புலமை பெற்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. இப்போது வேறு ஒரு முயற்சிக்காக மீண்டும் பொருளாதாரக் கணக்கியலைப் படிக்க வேண்டிய சூழல். ஒன்றிரண்டு பாடங்கள் முடித்த பின் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நானறிந்த சில B.Com படித்த நண்பர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தொழிலைவிட்டு வெளியேற எண்ணிக்கொண்டு சில காரணங்களைச் சொன்னார்கள். அந்தக்காரங்களுக்கான விடை அவர்கள் கற்ற கல்வியிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்து படித்திருப்பார்களா என்று கேள்வி எழுகிறது.


ஒருவர் தன் துறையின் எதிர்காலத்தைக் கணித்து முடிவுகளெடுக்க தவறியவர். இன்னொருவர் அடிப்படைக் கணக்குகளைக்கூடச் சரிவர செய்யாதவர்.


தொழில் செய்பவர்களுக்கு முக்கியமான தேவை, Market Sense. அதாவது சந்தை அறிவு, கூடவே தனது தொழிலை சந்தைக்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்வது. இதைச் சுட்டிக்காட்ட பயன்படுவதே கணக்குகளின் மூலம் கிடைக்கும் நிலைகாட்டிகள்(Indicators). அதாவது லாபம், நட்டம், இயங்கு செலவுகள், சந்தை செல்லும் போக்கு போன்றவை. மோசமான சூழலில் இவை ஒன்றைச் சொல்லும், அதாவது தொழிலை விட்டு வெளியேறும் தருணம். இதைக் கணிக்க முடியாமல்தான் இவர்கள் சுழலுக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.


ஆக கல்வியில் குறையில்லை, பாடங்களைக் கற்றுக்கொள்ளாதவர்களின் குறையே தோல்விக்குக் காரணம் என்று சொல்லலாம்.

Monday, April 24, 2017

மொழிப்போராட்டமும் புளியம்பட்டியும்

இன்று மத்திய நடுவன் அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு இயக்கங்கள் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தும், தொடர்ந்து தமிழில் பேசவும், எழுதவும் முயற்சியெடுக்கும் காலத்தில், நமக்கு முந்தைய தலைமுறை, அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1965களின் தலைமுறையின் அனுபவத்தை, குறிப்பாக புன்செய்ப் புளியம்பட்டியில் மொழிப்போராட்டத்தின் வீச்சு, போராட்ட வடிவங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு(2016) இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது சில முக்கியமான மொழி ஆர்வலர்கள் என்று அறியப்படுகிற மதிப்பிற்குரியவர்களிடம் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

அந்தக் காலத்திலேயே "மறைமலை அடிகள் மன்றம்" என்ற இயக்கத்தை ஆரம்பித்து தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதில் எனது தந்தையும் இடம்பெற்றிருந்ததால் மறைமலையடிகள் மன்றம் தொடர்பான ஏடுகள் சிலவற்றை சிறுவயதில் பார்த்திருந்தேன்.  பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றியவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் புளியம்பட்டியிலும் எதிர்ப்பைத் தெரிவித்து போராட எண்ணம் எழுந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் காவல் துறை அடக்குமுறையும் பலமாக இருந்திருக்கிறது. போராட்டக்காரர்கள் என்று அறியப்படுபவர்களை உளவுத் தகவல்கள் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் வெகுவாக நடந்துவந்திருக்கிறது. அன்றைய ராஜாஜியின் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

கைது நடவடிக்கைகள் பற்றிய செய்தி புளியம்பட்டியில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. அரசுப்பணியில் இருந்தததால் தமிழார்வலர்கள் பணிப்பாதுகாப்பைக் கருதி போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று பணியை இழந்து குடும்பங்களை தவிக்கவிட்டுவிடுவோம் என்று சிறிது தயக்கம் காட்டியுள்ளனர். சில கருத்து வேறுபாடுகள் தமிழார்வலர்களுக்குள் எழுந்திருக்கிறது. ஒரு சிலர் போரட்டம் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவும் விரும்பியிருக்கின்றனர்.

அந்த சமையத்தில், காவல் துறை மறைமலை அடிகள் மன்றத்தைப் பற்றி தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாக உறுப்பினர்களுக்கு செய்தி வருகிறது. மன்ற உறுப்பினர்கள் சிலர் தலை மறைவாகின்றனர். காவல் துறையின் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள மறைமலை அடிகள் மன்றம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்படுகிறது. இருந்தும் காவல் துறையிலிருந்து மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு அழக்கப்பட்டிருன்கின்றனர். விசாரணைக்குச் சென்றவர்களிடம் அரசுப்பணி இழப்பு, கைது நடவடிக்கைகள் என்று அச்சுறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று கடிதம் எழுதி வாங்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மன்றத்தின் நடவடிக்கைகள் அதன்பிறகு வெகுவாக குறைந்திருக்கிறது.

அதே சமையத்தில் திராவிட முன்னேற்றகழகத்தினர் தமிழ்நாடெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புளியம்பட்டியைப் பொறுத்த அளவில் பெரியவர் திரு பு.ஆ. சாமிநாதன், திரு பு.கா. ஆறுமுகம் போன்றவர்கள் போராட்ட முனைப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தசமயத்தில் நடந்த போராட்டமொன்றில் கலந்து கொண்டு சிறை சென்றவர் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு அக்பர் அவர்கள். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதால் மொழிப்போராட்ட தியாகியாக அறியப்பட்ட அவருக்கு கழகத்தில் முக்கியப்பொறுப்புகள் வழங்கப்பட்டது.

தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பிற்கு எதிராக வலுவடைந்து  பொள்ளாச்சியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு, பலர் கொத்தாக கைது செய்ப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னும், சத்தியமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் திரு முத்து உயிர்த்தியாகம் செய்தார். பெரும் எழுச்சியடைந்த போராட்டம் மத்திய அரசை கலக்கியது. தலைவணங்காத தமிழகத்தின் தன்மானம் கண்டு மத்திய அரசு தன் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. அதன் பின் நடந்த தேர்தலில் முதன் முதலாக திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது வரலாறு.