Tuesday, December 15, 2015

அதிமுக வெறுப்பு திமுக விற்கு விழும் லைக்கா?...

டாஸ்மாக் மற்றும் வெள்ள பாதிப்பு, தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அதிமுக அரசின் இயலாமை பல்லிளிக்கும் இந்த நேரத்தில் திமுக கூடாரம் உற்சாகத்தில் இருப்பது போலும் மக்கள் அடுத்த மாற்றாக திமுக வைத்தான் தேர்ந்தடுப்பர் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான திமுக ஆதரவு பிரச்சாரம் மட்டுமில்லாமல், மக்களை திசை திருப்பும் உக்தியும் கூட.

கடந்த தேர்தலில் திமுக துறத்தியடிக்கப்பட்டதற்கான காரணங்கள் அப்படியேதானிருக்கிறது.

  1. 2G அலைக்கற்றை ஊழல்
  2. ஈழத்தமிழர் விடயத்தில் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றியது.
  3. மாவட்டச் செயலாளர்கள் முதல் ஊராட்சித் தலைவர்கள் வரை ஊரான் சொத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுக் கொண்ட அராஜகம். அதைத் தடுக்க 'அம்மா' கொண்டுவந்த நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பின் 'ஏதோ' சமரசத்திற்குப் பின் செயல்படவில்லை.
  4. டாஸ்மாக் குழாயாய் மேலும் திறந்து விட்டு சமுதாயத்தை சீரழித்தது
  5. தாது மணல், கிராணைட் கொள்ளை
  6. நதி நீர் உரிமைகளில் சமரசமடைந்தது.


இன்னும் ஏராளம்...

அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது முற்றிலும் திமுக வெறுப்பினாலன்றி வேறு காரணங்கள் ஏதுமில்லை. மேற்ச்சொன்ன ஓரிரு காரணங்களைத் தவிர்த்து அதிமுக வின் ஆட்சிக்கும் திமுக ஆட்சியின் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்.

இந்த சூழலில் திமுக வின் ஆட்சிக் கனவு மக்களின் மறதியை நம்பியே இருக்கிறது. அவ்வப்போது முகநூல் பதிவுகள் பழைய கதையை நினைவு படுத்தி மக்களை உசார் படுத்தி அந்த கனவை கலைத்து விடுகிறது.

தமிழக அரசியல் சூழலையும், மக்களுக்கு மாற்று ஒன்றை உருவாக்க மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியயை வைகோ, திருமா மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த கூட்டணியின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களின் தொடர் பிரச்சாரம், டாஸ்மாக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் எடுத்த நிலை, வெள்ள நிவாரணப்பணிகளில் தலைவர்கள் என்ற மமதையெல்லாம் இல்லாமல் வீதியில் இறங்கி சேற்றை அள்ளுவது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளிடமிருந்தும் விடிவு வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு இவர்களின் அரசியல் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்து மக்களின் எண்ணவோட்டத்தை திசை திருப்புவதில் கலைஞர் வல்லவராயிற்றே. மதிமுக வில் முக்கியமானவர்கள் விலகி திமுக வில் இணைவது ஏதோ வைகோ மேலுள்ள வெறுப்பினாலும், அவர் அதிமுக வெற்றிபெற கூட்டணி அமைத்திருப்பதனாலும், அவர்கள் திமுக வில் இணைவது இயற்கையானது என்பதுபோலவும் பரப்புரை செய்யப்படுகிறது.

உண்மை என்ன என்பது கடந்த ஆறு மாத நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.

செப் 17 ல் வைகோ மக்கள் நலக் கூட்டணிக்கான அத்திவாரத்தை அமைத்தபின், திமுக கொஞ்சம் ஜெர்க்காகி தாமரைக்கண்ணன் போன்ற நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்தது.

இப்போது விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது போன்ற அறிகுறி தெரிந்தவுடன், ஜோயல்... இந்த ஜோயலுக்கு வைகோ மக்கள் நலக்கூட்டணி அமைத்தபோதும், வைகோ திமுக, அதிமுக வுடன் கூட்டணி அமைக்கமாட்டேன் என்று அறித்த ஆறு மாதத்திற்கு முன் கட்சி மாறாமல், இன்று அதிமுக வெறுப்பு மக்கள் நலக் கூட்டியக்கத்தின் மேல் விழும் அறிகுறி தெரிந்த பின் கட்சிமாறியது இயற்கையானதா?

கருணாநிதியின் அரசியல், இத்துபோன பழி பாவங்கள் சேர்ந்த அரசியல். அது இப்படித்தானிருக்கும். எப்போதெல்லாம் தனக்கு பாதிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஜோயல் போன்ற யாராவது மாற்றுக் கட்சியிலிருந்து கருணாநிதிக்கு சால்வை சாத்தும் நிகழ்வுகள் நடக்கும். அதற்கான முன்னேற்ப்பாடுகள் பல நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டிருக்கும்.

வெள்ள நிவாரணத்தில் இவ்வளவு செலவிட்டோம், அவ்வளவு செலவிட்டோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லி கொண்டிருக்கும் அதிமுக விற்கு, திமுக விடம் எந்த கேள்விகளும் இல்லை. ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இருந்தால், இது போன்ற ஊழல்களை ஆய்ந்து ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்றல்லவா அறிக்கை வந்திருக்க வேண்டும். ஆனால், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் திமுக விற்கு, இப்போதிருக்கும் வாய்ப்பெல்லாம் அறிவாலையம் பக்கம் போகும் ஸ்கூல் பசங்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து திமுக விற்கு வந்து விட்டனர் என்று ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவதுதான்.

இன்றைய இளைஞர்கள் ஊழலற்ற, மக்கள் நலன் காக்கும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்கள். அதானால் திமுக வைப் பற்றி திமுக காரர்களே கவலைப் பட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்கள்.

No comments:

Post a Comment