Tuesday, March 12, 2019

சந்தோசின் தமிழ்ப் பாடங்கள் - 1

வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளிக்குச் செல்வது சந்தோசிற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வாரத்தின் ஒவ்வொரு நாளும் பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைப் படிப்பதும், வீட்டுப்பாடங்களைச் செய்வதும் சுமையாக இருப்பது போதாதென்று பெற்றோர்கள் ஆசைக்காக இப்போது தமிழ்ப்பள்ளியில் பாடம் கற்பது இன்னும் சுமையை அதிகமாக்கியதாக உணர்ந்தான். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடுவது, போர்ட் நைட் கேம் விளையாடுவது என்று கொண்டாட்டமாக இருக்கும். இப்போது ஞாயிற்றுக் கிழமையில் ஒரு பாதி தமிழ்ப் பள்ளியால் வீணாகி விடுகிறது.

ஞாயிற்றுக் கிழமை பாடம் கற்பதை விட கொடுமை இந்த உலகத்தில் இல்லை என்பதுபோல் சலித்துக் கொண்டான் அவன். எதற்காக தமிழ் படிக்க வேண்டும். பள்ளியில் கற்பது போதாதா? பக்கத்து வீட்டு ராகேசோ, ஆரியனோ தமிழோ, குஜராத்தியோ படிப்பதில்லையே.. நான் மட்டும் ஏன்..? என்றெல்லாம் கேள்விகேட்டு தமிழ்ப் பள்ளிக்கு வருவதற்கெதிரான காரணங்களை மனதிற்குள் சேர்த்துக்கொண்டே போனான்...

தன்னைப்போலவே தமிழ்ப்பள்ளியின் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களும் உணர்வதுபோல் தெரிந்தது அவனுக்கு. ஒரு சில பெண் பிள்ளைகள் மட்டும் வெகு ஆர்வமாக பாடம் படித்தனர். ஆசிரியர் சொல்வதை அப்படியே கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் தமிழ் கற்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லையா? எப்படி இப்படி வரட்சியாக வகுப்பில் இருக்க முடிகிறது? என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும் அவனால் அவற்றை வெளிக்காட்ட முடியவில்லை.

அ, ஆ என்று தொடங்கி இப்போது க், ங், ச் என்று போக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஓரிரு பாடல்கள், ஓரிரு கதைகள் என்று பாடம் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதுதான் நிலை 1. அடுத்த ஆண்டு நிலை 2, அதற்கடுத்த ஆண்டு நிலை 3 என்று 8 நிலைகள் முடிக்க வேண்டும். முடித்த பின்? முடித்தால் என்ன கிடைக்கும்? ஏன் முடிக்க வேண்டும்? என்று ஒவ்வொரு முறையும் தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான்.

இன்று நடந்த வகுப்பில் தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது நடுவில் தூங்கிவிட்டான் சந்தோசு. ஆசிரியர் அவனை எழுப்பி முகம் கழுவி வரச்சொன்னார். சலிப்புடன் சென்று முகம் கழுவி வந்தான். ப், ம், வ் என்று பாடம் நகர்ந்து கொண்டிருந்தது. பொறுமை இழந்தவன் எழுது நின்றான். ஆசிரியர் அவனை வியப்புடன் பார்த்தார். இப்பொழுதுதான் கழிவரைக்குப் போய்வந்தான், மறுபடியும் போக வேண்டுமா? என்பது போல் பார்த்தார்.

ஆனால் அவன் ஒரு கேள்வியைக் கேட்டு ஆசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கினான். "ஏதற்குத் தமிழ் படிக்க வேண்டும்?" என்று கேட்டுவிட்டு அமர்ந்தான். ஆசிரியருக்கு தொண்டை வரண்டுவிட்டது. அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரக் குடித்துக் கொண்டு பதில் சொன்னார்.

தமிழ் நமது தாய்மொழி. அது 2000 வருடத்திற்கு முன் உருவான பழமையான மொழி. அதை நாம் படிப்பது அவசியம் என்று பதில் சொன்னார். ஆனால் சந்தோசிற்கு அது திருப்தி அளிக்கவில்லை. அவர் சொன்ன பதில் தமிழ் மொழியைப் படிக்கத் தேவையான காரணமாகத் தெரியவில்லை.

புரிந்து கொண்ட ஆசிரியர் சிறிது அமைதிக்குப் பின் பாட புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அருகில் வந்து நின்று பேசினார். நியூட்டன் யார் என்று தெரியுமா என்று கேட்டார். தெரியும்.. இயற்பியல் ஆய்வாளர் என்றான் சந்தோசு. நல்லது. அவர் என்ன ஆராய்ச்சி செய்தார்? பொருட்களின் அடிப்படை இயக்கம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியவர் என்றான்.

சரி.. அவர் எப்போது பிறந்தார் என்று தெரியுமா? என்றார். தெரியாது என்றான். 16ம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் என்று ஆசிரியர் பதிலளித்தார். புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிராற்றலைக் கொடுப்பது சூரியன். சூரியன் இல்லையென்றால் பூமி வெறும் பனிக்கோளமாக இருக்கும். சூரியனி ஒளி மற்றும் வெப்பம் மற்றும் கதிராற்றலால்தான் புவியிலுள்ள தாவரங்கள், மற்ற உயிரினங்கள் தங்கள் வாழத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது.

இதை நியூட்டனுக்கு முன் 1600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். தமிழ் இலக்கியங்கள் 2000 வருடங்கள் பழமையானவை. அதில் ஒன்றான திருக்குறளில் இந்த சூரிய ஆற்றல் பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். அந்தக் குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களுக்கெல்லாம் மூலம் அகரம் அதுபோல உலகின் உயிர்களுக்கு மூலம் ஆதவன் என்கிற சூரியன் என்பதுதான் அதன் பொருள் என்று விளக்கமளித்தார்.

சந்தோசிற்கு சந்தோசம் பொங்கியது. தான் தமிழ் படிப்பது என்பது வீணானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டான். மேலும் தமிழாசிரியர் சொன்னார் "தமிழ் இலக்கியங்கள் ஒரு புதையல். நீங்கள் படிக்கும் தமிழ் மொழியானது அந்தப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம்" என்று இன்னொரு தகவலைச் சொன்னார். அவனுக்கு டோராவின் நினைவு வந்தது.

அவன் தமிழ் கற்பதில் பெருமிதம் கொள்ளத் தொடங்கினான். அந்த பெருமிதம் பெரும் மகிழ்ச்சியாக அவனது முகத்தில் தெரிந்தது. தொடர்ந்து தமிழ்ப் பாடத்தைக் கூர்மையாகக் கவனித்து கேள்விகள் கேட்டுப் படிக்க ஆரம்ப்பித்தான் சந்தோசு.

No comments:

Post a Comment