Wednesday, December 21, 2016

சதுரங்கவேட்டை

பள்ளிக்கூடத்தில் புத்தகத்தில் தமிழக வரலாறு படித்த போதெல்லாம் தமிழ் மன்னர்கள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அழித்தும், காட்டிக் கொடுத்தும் அந்நியரிடம் நாட்டை இழந்தார்கள், அடைமைப்பாட்டார்கள் என்பதுதான் பாடமாகச் சொல்லப்பட்டது.

இப்போதும் அந்த வரலாற்றுப் பாடங்கள் அப்படியே நமது நிகழ்கால அரசியலுக்குப் பொருந்தும். திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டு காங்கிரசின் கைப்பாவையாகி ஈழ விவகாரத்தில் துரோகமிழைத்து, தமிழர்களின் நலனை காவு கொடுத்தது. இப்போது அதிமுக பாஜகாவிடம் மாட்டிக் கொண்டு அலறுகிறது. இதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையென்ன என்று போகப்போகத்தான் தெரியும்.

தமிழகம் போன்ற தன்னாட்சி அதிகார வேட்கை கொண்ட மக்களை ஆளும் கட்சிகள் ஒருபோதும் காங்கிரஸ், பாஜக போன்ற ஒற்றை அதிகார மையத்திற்கு அடிபணியக்கூடாது. இந்திய அளவில் மாநிலக்கட்சிகளுடன் கூட்டணியமைத்து மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு தமிழகம் தாண்டி அரசியல் செல்வாக்கைச் செலுத்தும் வல்லமை வேண்டும். அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளிகளை அடையாளம் கண்டு அதன்மீது அரசியலைக் கட்டமைக்க வேண்டும்.

இவை எதுவும் முடியாதென்றால், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யவாவது தெரிந்திருக்க வேண்டும்.

அதுவும் முடியாதென்றால், ஓரமாக ஒதுங்கிவிட்டு புதியவர்களுக்கு வழியைவிட்டுவிடலாம்.

No comments:

Post a Comment