Monday, February 18, 2019

புல்வாமா குண்டு வெடிப்பு

இந்திய ராணுவத்தின் ரிசர்வ் படையினர் விடுமுறை முடிந்து ஜம்முவில் உள்ள படை முகாமுக்குச் செல்லும் வாகனத்தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 45 வீரர்கள் உயிரழந்த செய்தி வேதனையளிக்கிறது. இராணுவத்தில் சேர்வது என்பது நாட்டுப்பற்றைத் தாண்டிய தனிப்பட்ட குடும்பத்தின் சுமையைக் குறைக்கத் தன்னை அற்பணித்துக்கொள்ளும் தியாகச் செயல் என்பதுதான் உண்மை.

இந்தியா போன்ற மக்கள் தொகை கொண்ட வறுமையும் மனித வளமும் மிகுதுள்ள நாட்டில் காலாட்படைக்கு எப்போதும் ஆட்கள் சேர்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்களின் இழப்பிற்குப் பிறகு அவரை இழந்த குடும்பத்திற்குக் கிடைக்கும் இழப்பீடும் அவ்வளவு பெரிதாக இருக்காது. அவர்கள் தியாகத்தை ஒன்றிரண்டு நாட்களுக்கு முகநூலில் எழுதிவிட்டு பிறகு வேறு ஏதோ பிரச்சினையைப் பிடித்துக் கொண்டு காலந்தள்ளும் இந்தச் சமூகம்.

இந்தக்குண்டு வெடிப்பிற்கு மற்றவர்கள் போல் கருப்பு வெள்ளையாக என்னால் ஒரு தெளிவான முடிவில் எழுத முடியவில்லை. இந்தக் குண்டு வெடிப்பு குறித்த சில ஹைப்போதீசை முன் வைத்து வேண்டுமானல் எழுதலாம்.

எந்த ஒரு தாக்குதலுக்குப் பின்னும் ஒரு அரசியல் அல்லது படை இலக்கு இருக்கும். அது எதிரிக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்துவது, நிலங்களை கைப்பற்றுவது, உலகில் எதிரியின் வலிமையைக் கேள்விக்குள்ளாக்குவது, உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்ற ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்குகளாக இருக்கலாம். அந்த அடிப்படையில் சில ஹைப்போதீசிஸ்

ஹைப்போதீசிஸ் 1: பாகிஸ்தான் புத்திசாலி, இந்தியா அப்பாவி

பாக்கிஸ்தானின் இலக்கு காசுமீரம் தாண்டி ஜம்முவுக்குள்ளும் தங்களால் தாக்குதல் நடத்த முடியும். மோடி அரசு சொன்னதுபோல் தாங்கள் பயந்து தாக்குதலை நடத்தாமலிருக்கவில்லை என்று ஒரு சேதியைச் சொல்கிறார்கள்.

இந்தியாவின் தற்போதைய ஆட்சியின் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளது கடந்த தேர்தல்கள் உணர்த்துகிறது. இந்த நிலையில் இந்திய மக்களைத் தண்டிக்க ஒரே வழி இந்த ஆட்சியாளர்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே.

ஹைப்போதீஸ் 2: பாகிஸ்தான் முட்டாள், இந்தியா புத்திசாலி

இது போன்ற தாக்குதல்கள் உள்ளூரில் கட்சி, மத நம்பிக்கை தாண்டி மக்களை ஒன்றிணைத்துவிடும். அந்த ஒற்றுமையை தனக்குத் துறுப்புச் சீட்டாக வைத்து தற்போதைய இந்திய அரசு, அதுவும் இந்துத்துவத்தை முன்னிறுத்தும், இந்தியப் பிரிவினையை எதிர்க்கும் அரசு ஒரு பெரும் தாக்குதலை அல்லது பாகிஸ்தானை மேலும் உலக அரங்கில் தனிமைப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ளும் என்ற கணிப்பு இல்லாமல், தானாகவே மக்களின் செல்வாக்கை இழக்கும் ஆளும் அரசு வரும் தேர்தலில் ஆட்சியை இழக்கும் முன் அவசரப்பட்டு தாக்குதலை நடத்திவிட்டது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியில்லாமல் கவர்னரின் ஆட்சி நடக்கும் போது இரணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் கொடுத்து இந்திய அரசும், இந்துத்துவர்களும் காசுமீரில் ஒரு போர்க்களத்தை உருவாக்கி இசுலாமியர்கள் வேட்டையாடப்படலாம் என்ற அடிப்படை அறிவு இல்லாமல் ஒரு தாக்குதலைத் திட்டமிட்டு நடத்திவிட்டது பாகிஸ்தான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஆளும்கட்சி சிறிய அளவிளான போரை நடத்தி அதில் தன் இலக்கை அடைந்துவிட்டதாக நிறுவி மக்களிடம் மீண்டும் ஆட்சியமைக்க ஆதரவு கேட்டு தேர்தலைச் சந்திக்க வழி ஏற்படுத்துவது. மீண்டும் ஆட்சிக்கு வந்து தொடர்ந்து சண்டைபோட்டுக் கொண்டிருப்பது.

ஹைபோதீசிஸ் 3: பாகிஸ்தான் அப்பாவி, இந்தியா புத்திசாலி

பாகிஸ்தான் குண்டுவெடிப்பை நிகழ்த்தவில்லை, அதற்கு அப்படி ஒரு தேவை இப்போது இல்லை. இந்தியாவின் தற்போதைய ஆட்சி தானாக தேர்தலில் தோல்வியடைந்து விலகும் வரை படை நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது.

இந்த மூன்று ஹைப்போதீசிஸ் இல்லாமல் வேறெதுவும் இருக்கலாம். ஆனால் அவற்றிற்கான அரசியல் முக்கியத்தும் இன்றைய சூழல் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பி அதை ஆராயலாம்.
இந்தியாவைக் கட்டுக்குள் வைக்க சீனாவிற்கு பாகிஸ்தான் தான் தற்போதை துருப்புச்சீட்டு. அது ஒரு போதும் பாகிஸ்தான் வீழ்வதை விரும்பாது. இரஸ்யா இந்தியாவிற்கு நேரடியாக ஆதரவைத் தெரிவித்தாலும் சீனாவின் பின்ணணியில் நடக்கும் பாகிஸ்தான்- இந்தியா போரில் இரஸ்யா இந்தியாவின் பக்கம் நிற்குமா என்பது விடைகிடைக்காத கேள்வி. ஏனென்றால் மத்திய ஆசியாவில் நடைபெறும் போர், எண்ணைச் சந்தையின் சரிவு என ஏற்கனவே அதன் பொருளாதரம் அவ்வளவு சிறப்பாக இல்லை. இப்போது இந்தியாவின் பக்கம் நின்று அது எந்த இலாபத்தை அடையப்போகிறது என்ற கேள்விக்கான விடையிலேயே அதன் ஆதரவு அமையும்.
அமெரிக்கா வெளி நாடுகளில் இராணுவ நடவடிக்கைள் செய்வதைக் குறைத்து தன் செலவுகளைக் குறைத்து வருகிறது. அதற்கு சீனா என்ற கடங்காரன் பொருளாதார வீழ்ச்சி அடைவது விரும்பத்தக்க விளைவு. ஆனால் அதற்கு இந்தியா அமெரிக்காவை பாகிஸ்தானைப் போல தனது மண்ணில் செயல்பட அனுமதிக்காது. மேலும் இந்தியா அமெரிக்காவை முழுமையாக எப்போதும் நம்பியதில்லை, அதற்கான சூழல் இன்னும் ஏற்பட்டதகாத் தெரியவில்லை.
உலக நாடுகளின் முழுமையான ஆதரவில்லாமல் சீன ஆதரவு பாகிஸ்தானுடனான முழுமையான போருக்கு இந்தியாவின் பொருளாதாரம் தாயாராக இருக்கிறதா என்பதும் ஆராயப்படவேண்டும்.
ஆக இந்த குண்டுவிடிப்பில் உயிரிழந்த 45 உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தி அவர்கள் குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவியைச் செய்து அமைதியாக இருப்பதே இப்போதைக்கு நமக்கும் நாட்டிற்கும் நல்லது.

No comments:

Post a Comment