Sunday, February 3, 2019

சார்லட் பொங்கல் திருவிழா - 2019

நேற்று பிப் 2 அன்று ராபின்சன் உயர்நிலைப் பள்ளியில் சார்லட் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் திருவிழா சிறப்பாக நிகழ்ந்து முடிந்தது. கடுங்குளிர் கடந்து இந்த விழாவில் தமிழர் உறவுகளை சந்தித்து மகிழவும், குழந்தைகள் முதல் பெரியவர் வரை நிகழ்த்திய கலை நிகழ்ச்சிகள் பொங்கல் விழாவின் பெருவிருந்தாக அமைந்தது. ஏறக்குறைய 70 கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஒவ்வொரு நிகழ்விலும் குழந்தைகள் பெரியவர் என அனைவரும் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர். இதற்கான தயாரிப்புகள் இரண்டு மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது நிகழ்ச்சியை கண்டுகளித்தவர்கள் உணர்வார்கள்.

கலை நிகழ்ச்சிகள் கலையரங்கில் நடக்க, ஒரு சிறு சந்தையையும் தமிழ்ச்சங்கள் அரங்க வாயிலில் அமைத்திருந்தது. அதில் பாரம்பரிய உடைகள், கலைநயம்படைத்த ஆபரண அங்காடி, தமிழ் இலக்கிய வரலாற்று நூலங்காடி மற்றும் பல அங்காடிகள் நிறைந்து விழாவிற்கு வருவோரை ஈர்த்து எளிதில் கிடைக்காத பண்டங்களை பெற்றுக்கொள்ள வழிவகை செய்திருந்தனர்.

நிகழ்வில் நூலங்காடி அமைக்கும் வாய்ப்பைத் தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்தது மகிழ்ச்சி. அதனினும் மகிழ்ச்சி அந்த அங்காடியை நடத்தும் பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்தது. அங்காடியில் நூல்களை வாங்க வருபர், பார்க்கும் நூல்கள், நூல்களைப் பற்றிய அவர்கள் பார்வை, அதனைத் தொடர்ந்த உரையாடல் நம் எண்ணவோட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களை அடையாளம் காண உதவியது. நமக்குப் பிடித்த ஒரு எழுத்தாளரை வாசிக்கும் இன்னொரு வாசகரைச் சந்திப்பது எவ்வளவு மகிழ்வுக்குறிய நிகழ்வு என்பது, தேனைச் சுவைத்தவருக்கே அதன் ருசி தெரியும் என்பதுபோல் அனுபவித்தவருக்கே அந்த மனமகிகழ்ச்சி தெரியும். இலாப நோக்கில்லாமல் புத்தகம் மற்றும் அதைக் கொண்டுவர ஆன பொதியனுப்பும் கட்டணத்தைக் கொண்டே புத்தகங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டது இலக்கிய வாசிப்பை நம் மக்களிடம் கொண்டு சேர்ப்பது என்று தமிழ் வளர்ச்சியில் சங்கம், சங்ககால தமிழ்ச்சங்கம் போல் செயல்படுவதை உணர்த்துகிறது.

குறிப்பாக தமிழர் அமைப்பின் மூலம் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் நோக்குடன் வேலை வாய்ப்பு, முதலீடு, கல்வி தொடர்பான வாய்ப்புகளை பகிர்ந்து தம்மை வளர்த்துக்கொள்ள "பாலம்" என்ற அமைப்பின் மூலம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதன் மூலம் சார்லட் வாழ் தமிழர்கள் இணைந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்வது, வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது என்ற முன்னெடுப்பு தொடங்கியுள்ளது. நிகழ்வில் வாய்ப்பைத் தவற விட்டவர்கள் தங்கள் தகவல்களை இங்கு பதிந்து கொள்ளலாம். (https://goo.gl/forms/AG5aUqYjcRWZNPL53)

விழாவிற்கு வருகை தந்தவர்களின் மனதை மகிழ்வித்த கலை நிகழ்ச்சிகளுக்கு ஈடாக அவர்கள் நா சுவைக்க விருந்தை சித்தாரா உணவகம் வழங்கியிருந்தது. பரிமாறப்பட்ட சைவம் மற்றும் அசைவ உணவுகளின் சுவையை புசித்தவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியால் அறிய முடிந்தது.


இந்த ஆண்டு பொங்கல் விழாவில் மொழிப்போர் தியாகிகள் 80 ஆண்டு நினைவு கூறப்பட்டு அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. வெறும் கலை நிகழ்ச்சிகளுடன் பொங்கல் விழா நிறைவுறாமால் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்தது தமிழர் தம் மொழி, இனத்திற்கு தியாகம் புரிந்தவர்களை என்றும் மறவாமல் தம் நன்றியைக் கொண்டிருக்கின்றனன் என்பதைக் காட்டுகிறது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்ச்சங்கம் மற்றும் தன்னார்வளர்களுக்குப் பாராட்டுகள்.

No comments:

Post a Comment