Friday, November 13, 2015

மழைக்கால பாதுகாப்பு

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையைக் கொண்டாடியும், கோபித்தும் பல பதிவுகளை எழுதியாகிவிட்டது. மின்சாரமில்லை, மீட்பு நடவடிக்கைகள் இல்லை என்ற குரல்கள் ஒரு புறமும், அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒருபுறமும் நடந்து கொண்டிருக்க, நம்மாலான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நம்மை பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும்.


1. மழை தொடரும் என்று வானிலை அறிக்கை தெரிவிப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். தாழ்வான பகுதியில் இருப்பதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. இது போன்ற அவசர காலங்களில் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருட்களை ஒன்றிரண்டு வாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3. சாலைகளில் தண்ணீர் தேங்கி, சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் இருந்தால், அந்த சாலையை தவிர்திடுங்கள். மழையின் நீரோட்டத்தால் பாலங்கள், சாலைகள் உடைந்து பெரும் குழிகள் இருப்பது மேலிருந்து பார்த்தால் தெரியாது. அது போன்ற இடங்களில் பயனிக்கும் போது வாகனத்துடன் நீரீல் மூழ்கும் அபாயம் உண்டு. அவ்வாறான சூழல்களில் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்த அளவு பயணங்களைத் தள்ளிப் போடுவது பாதுகாப்பானது.

4. மரங்கள், மின் கம்பங்கள், கட்டிட வேலை நடக்கும் இடங்களில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையினால் இவை பாதிப்படைத்து விழுவது மட்டுமல்லாமல் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடும்.

5. மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தாலோ, அருகில் நெருங்க வேண்டாம். உடனடியாக மின் வாரியத்திற்கும், உங்கள் பகுதி உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கவும். வேறு யாரும் நெருங்காமல் இருக்க, சிவப்பு துணிகொண்டும்/ தடுப்புகள் அமைத்தும் எச்சரிக்கை செய்யுங்கள்.

6. மழை காலங்களில் தண்ணீர் நிலத்தில் தேங்கும் போது, நிலத்தில் வாழும் பாம்பு, எலி போன்ற உயிரினங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வெளியே வரும். கவனமுடன் இருப்பது நல்லது.

7. மழைக் காலங்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் தண்ணீரில் பரவும் கிருமிகள் காரணமாக நோய்த்தொற்று ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவற்றுள் காலரா, டெங்கு போன்ற நோய்களும் அடங்கும்.

8. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

9. உணவுப் பண்டங்கள் எளிதில் கெட்டுப் போகும். பாதுகாக்கப்படாத உணவுப்பண்டங்களை தவிர்த்திடுங்கள்.

10. கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரையே பருகுங்கள்.வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

11. கொசுக்கள் வளராமல் சுற்றுப் புறத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment