Thursday, April 23, 2015

குருதி

கோடையின் வெப்பம் கொப்பளித்துக்கொண்டிருக்கும் நாட்களில் தண்ணீரையும் நிழலையும் தேடியலையும் மனிதனுக்குச் சட்டென மேகமூட்டத்தால் வானம் இருட்டி இடி மின்னலுடன் மழைத்துளி மண்ணில் படும்போது, அது ஏதோ ஒரு புத்துணர்வை, பேரானந்தத்தை, பெரு மகிழ்சிப்பிரவாகத்தை மனதில் ஏற்படுத்தும் தருணத்தில் மனித மனத்தில் கவலைகள் இருந்துகொள்ள இடமேது மில்லை. அங்கு வெறும் கொண்டாட்டமும் புத்தெழுச்சியுமே. மனிதனை விட மண்ணும் மரமும் கொள்ளும் உவகை உணர்வுள்ள உயிர்களுக்கே தெரியும் அற்புதமான காட்சி. மண்ணில் மரணித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் ஆகாயத்திலிருந்து அனுப்பப்படும் உயிர்த்துளி ஒவ்வொரு மழைத்துளியும். 

பிழைக்கமுடியாமல் இலைகளை உதிர்த்துவிட்டு நீரைத்தேடி வேர்களை வெகு தூரம் பரவவிட்டு வாழ்வின் கடைசி நாளை எதிர்கொண்டிருக்கும் மரமும், செடியும் அந்த மழைத்துளி பட்டவுடன் கண் விழித்துக்கொண்டு இத்தனை நாளும் மரணம் என்ற கனவை கண்டுகொண்டிருந்தோம், அது கனவு.. அது கனவு ... என்று சொல்லிக்கொண்டே தன்மேல் விழும் ஒவ்வொரு மழைத்துளியிலும் மரணம் என்ற கனவை கழுவிக்கொண்டு ஊரே அதிரும்படி கொண்டாடும் மரங்களின் மகிழ்ச்சிக்குரல் யாருக்கும் கேட்பதில்லை. கவலை வேண்டாம், வந்து விட்டாள்.. இதோ இங்கே வந்து விட்டாள்.. இன்னும் சற்று நேரத்தில் உங்களை வந்து சேர்ந்து விடுவாள் அவள்.. என்று தம்பட்டம் அடித்துக்கொண்டே ஒரு அரசியல் தலைவரின் வருகையைத் தெரிவிக்கும் அறிவிப்பாளனை போல் இடி - மழையை அறிவித்துக்கொண்டே வருகிறது. திடீரென வரும் விருந்தாளியை கவனிக்க அங்குமிங்கும் ஓடி பலகாரமும் கலரும் வாங்கிவந்து கவனிக்கும் பாசக்கார வெள்ளந்தியாய் எறும்புகளும், பறவைகளும், தவளைகளும் மழையை வரவேற்க அங்குமிங்கும் ஓடித்திரிகின்றன. மேகமூட்டத்தால் இருட்டிவிட்டதால் வழிதெரியாமல் தவிப்பாள் என்று மழைக்கு வழிகாட்ட அவ்வப்போது மின்னல் ஒளி விளக்கேற்றுகிறது வானம்.

வாடியே கிடந்த கோவைக் கொடி சட்டென்று சிலிர்த்து சாய்ந்திருந்த வேலி மரத்தைத் தழுவித்தழுவி தன்னிருப்பை உணர்த்திக்கொண்டிருந்தது. இந்த மழையாள் வரவில்லையென்றால் வெகுகாலம் உன்னை தாங்கி நின்ற என்னை நீ அலட்சியம் செய்துகொண்டே இருந்திருப்பாயல்லவா?.. என்று ஊடல் மொழியுடன் கொடியை தடவிக்கொண்டது வேலி மரம்.

ஒன்றாய் இரண்டாய் பலவாய் இறங்கிய ஒவ்வொரு மழைத்துளியும் ஒன்றாய் இணைந்து ஒரு குட்டி ஆறாக பிரவாகமெடுத்து மரங்களின் வேர்களை நனைத்தும், சாலைகளைக் கழுவியும் பள்ளங்களை நிறவியும் கட்டிவைத்துள்ள ஆட்டின் கால்களை வருடியும் தவழ்ந்து வேலியின் ஓரம் வெட்டிவைத்திருந்த சிறு வாய்க்காலை அடைந்ததது. அதைப்போலவே அந்த இடத்தை சுற்றியுள்ள நிலத்தைக் கடந்து பல குட்டி ஆறுகள் ஒன்று சேர்ந்து அந்தக் கால்வாயை நிரப்பிவிட்டது. 




இத்தனை நாளும் இருந்த இடம் தெரியாமல் இருந்த தவளைகள், வெளியூரிலிருந்து நீண்ட நாள் கழித்துத் திரும்ப வந்திருக்கும் கணவனை கொண்டாடும் பெண்டாட்டியைப்போல அக்கம் பக்கமெல்லாம் சத்தம் போட்டு தன்னைப் பார்க்கவே இந்த மழை வந்தது என்று தம்பட்டமடித்துகொண்டே இருந்தது. மேலிருந்து விழும் ஒவ்வொரு மழைத்துளியையும், கல்யாணவீட்டில் தன் மேல் தெளிக்கப்படும் பன்னீரைப்போல் குனிந்து குனிந்து வாங்கிக்கொண்டது அந்தச் சிட்டுக்குருவி. சிறகுகளெல்லாம் நனைந்திருந்த போதும் நடுங்கிக்கொண்டே வந்திருக்கும் விருந்தாளி மனங்கோணாமல் வரவேற்றுக்கொண்டே இருந்தது.

எப்போதும் மௌனமாகவே இருந்த அந்த வாகை மரமும் அரச மரமும் கொட்டும் மழையில் தங்களுக்குள்ளான உரையாடலை உரக்க நடத்துகின்றன. வாகை மரம் எதையோ சொல்ல, அரசமரம் இல்லை இல்லை என்று அவ்வப்போது தலையசைத்தும், சில சமயம் இசைந்து மேலும் கீழும் கிளைகளை அசைத்து மழைக்கு நடுவே பிரசங்கம் நடத்திக்கொண்டிருந்தன. அவ்வப்போது அந்த வழியே வந்த காற்று எல்லோரிடமும் சொல்லிவிட்டு கடந்து விட முற்படும்போது மரங்கள் கிளைகளையும் கொம்புகளையும் வைத்து காற்றை தங்கள் கொண்டாட்டத்தில் தொடர்ந்து இருக்குமாறு இழுத்துக்கொண்டே இருந்தது.


நேரம் செல்லச்செல்ல மழை வேகம் பெருகிக்கொண்டே இருந்தது. துணையுடன் புணர்ச்சியின் உச்சத்திலிருக்கும்போது விலகிட எண்ணமில்லாமல் மயங்கிவிட்ட உயிர்களைப்போல் மரங்களும், பரவைகளும், விலங்குகளும் மயங்கி மழையை அனுபவித்துக்கொண்டிருந்தன. 

சிறுவர்கள் சிறிது நேரம் காகிதக்கப்பல் விட்டும், தேங்கி நின்ற தண்ணீரில் துள்ளி துள்ளிக்குதித்தும் களைத்துப்போய் தாழ்வாரத்தின் விளிம்பில் குத்தவைத்து கைகளால் கால்களை இருக்க கட்டிக்கொண்டு மழையை விழுங்கிக்கொண்டிருந்தனர்.

வந்த கொஞ்ச நேரத்திற்குள்லெல்லாம் காய்ந்து கருப்பு படிந்திருந்த அந்த நில மெங்கும் பச்சை வண்ணம் மிளிர்ந்தது. எங்கு தான் இத்தனை நாள் அந்த வண்ணம் ஒழிந்திருந்ததோ. ஒரு வேளை மரங்களும் கிளைகளும் கொடிகளும் வெம்மை தாழாமல் கருப்பு களிம்பு பூசிக்கொண்டதோ, இருக்கும்.. இருக்கும்.. அதனால்தான் மழை வந்து கழுவியதும் அந்தக் களிம்பு கரைந்து பச்சை நிறம் தெரிகிறது. 

கொட்டும் மழையில் யாருமே தங்களை ஏழைகளாகவும், தங்கள் கடன்களை நினைத்தும் கவலை கொண்டிருக்கவில்லை. சாகத்துணிந்தவனின் மனதில் கூட.... இனி கவலையில்லை,, எப்படியாவது தாங்கிக்கொண்டு உழுதுவிட்டால் அடுத்த மழைவரை பிழைத்துக்கொள்ளலாம் என்று நம்பிக்கை பிறந்தது. மழையையே பார்த்துக்கொண்டிருந்த பெருசுகள் " நாலு மாசத்துக்கு தாட்டும்.." என்றவாறு நம்பிக்கை கொடுத்துக்கொண்டிருந்தனர். குட்டை நிரம்பிவிட்டதாக எங்கிருந்தோ ஓடிவந்தவன் எப்படி உழவுக்கும் விதைப்பிற்கும் ஆள் பிடிப்பது என்ற அடுத்த கவலையில் சுரத்தில்லாமல் சொல்லி நின்றான்....

பொழுது விழுந்தும் பொழிந்து கொண்டிருந்த மழை, நேரம் செல்ல செல்ல ஒவ்வொருவராய் விலகி உறைவிடத்தில் பதுங்கிக்கொள்ள கவனிக்க ஆளில்லாமல் தனிமையை உணர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து நின்றபோது நடு இரவே இருக்கும். மாரியம்மனுக்குப் பூ சா(த்தி)ட்டியும், அக்கினிக் குண்டம் வளர்த்தும் வரவேற்ற மனிதர்கள் யாரும் இப்போது மழைக்குக் குடை பிடிக்கவில்லை....துளிர்த்த ஒவ்வொரு செடியும் கிளையும் உயிர் கொடுத்த மழையின் பெயரை முதலெழுத்தாய்க்கொண்டிருக்கும்...

Sunday, April 5, 2015

என்ன வாழ்க்கை இது?

ஒரு எந்திரத்தைப்போல வாழப்பழகிவிட்ட நமக்கு சக மனிதரின் மகிழ்ச்சியும், வலியும், வேதனையும் எந்த ஒரு தாக்கத்தையும் நம்மிடம் ஏற்ப்படுத்தாத அளவிற்கு ஒரு சுற்றுச்சுவர் நம்மைச்சுற்றி நாமே எலுப்பிவிட்டோம். நமது வாழ்வின் ஆகப்பெரிய குறிக்கோல் முதுமையில் மகிழ்சியாக இருக்க பொருளீட்டவேண்டும் என்பதாக இருக்கிறது. அதனுடன் பிள்ளைகள் கல்வி, வாழ்க்கை என்ற ஒரு பெரும் கனவுடன் வாழ்க்கையென்கிற இந்த அற்ப்புதமான படகை எப்போதும் கரையைவிட்டு கடலில் இறக்காமல் துடுப்பைமட்டும் ஓட்டிக்கொண்டிருக்கிறோம். எனக்குத்தெரிந்த அளவு அப்படி பொருள் சேர்த்து, பிள்ளைகளை கரையேற்றியவர்கள் தன் வாழ்நாளின் கடைசிகட்டத்தில் அவர்கள் தேக்கிவைத்திருந்த பெருங்கனவான மகிழ்ச்சியான வாழ்க்கை அமையப்பெருவதில்லை. வாழ்க்கையின் பெரும்பகுதியையும் தன் உழைப்பையும் தன் பிள்ளைகளுக்கு செலவிட்ட பெற்றோர்கள் தங்களின் முதுமை காலத்தை பெரும்பாலும் தனிமையிலேயே செலவளிக்கின்றனர். படித்த பிள்ளைகள் தங்கள் வாரிசுகளின் வாழ்க்கைக்கு பொருளீட்ட தன் பெற்றோரை தனிமையில் விட்டுவிட்டு கடல்கடந்து தன் பெற்றோரைபோலவே பணமீட்டும் எந்திரமாக வெளிநாடுகளில் வாழ்கின்றனர். எந்திரத்தின் குட்டி எந்திரமாகத்தானே இருக்கும்!

வாழ்கையின் ஏதாவது ஒரு நிமிடத்தில் சற்று இளைப்பாறி இந்த கேள்விகளை எபோதாவது உங்களியே நோக்கி கேட்டிருக்கிறீர்களா? யார் நீ? எதற்க்காக இந்த வாழ்க்கை வாழ்கிறாய்? பொருளீட்டுவது மட்டுமே வாழ்க்கையா? எதற்க்காக இவ்வளவு சமரசங்கள்? ஏன் பல சமயங்களில் சக மனிதரின் மீது வெறுப்பும் கோபமும்? படித்த நன்னெறிகள் எதையுமே பின்பற்றாமல் வாழ்வதற்க்கு எதற்க்கு அந்த படிப்பு? ஏன் எப்போதுமே தோல்வி கவலை தருகிறது?

எல்லோருமே வாழ்க்கையில் மிகவும் வேதனையான காலங்களை கடந்து வந்திருப்போம். அதனால் அம்மாதிரியான நிலையை இன்னொருமுறை அடையக்கூடாது என்ற தவிப்பும் முன்னெச்சரிக்கையும் நம்மை எபோதும் அழுத்திக்கொண்டேயிருக்கும். ஆனால் ஆழமாக சிந்தித்துப்பார்தீர்களானால் நீங்கள் கடந்து வந்த இன்ப துன்பங்கள் எதுவுமே தவிற்க்கமுடியதவையாக இருந்திருக்கும். அதைப்போலவே இனி வருங்காலத்திலும் நிகழப்போவதை உங்களால் தவிற்க்கமுடியாது. சரி.. அப்படியானால் நாம் எதுவுமே செய்யத்தேவையில்லையா? என்ற கேள்வியெழும்.



நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இந்த உலகையும் இயற்க்கையையும் புரிந்துகொள்வதுதான். எப்போதாவது ஒரு இரண்டுவயது குழந்தையை ஆழமாக கவனித்திருக்கிறீர்களா? ஒரு ஓடையில் நீந்திவிளையாடும் மீன்களை கவனித்திருக்கிறீர்களா? ஒரு குருவியோ காகமோ அதன் ஒரு நாள்பொழுது எப்படியிருக்குமென்று கவனித்திருக்கிறீர்களா? ஒரு விதையிலிருந்து முளைத்துவரும் செடியை நாள்தோரும் பார்த்து ரசித்திருக்கிறீர்களா? இவையெதுவும் அதனியல்பில் அப்பழுக்கற்றதாகவும், தன்னிகரற்ற வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவை எப்போதும் நம்மைபோல நாளையைப்பற்றிய கவலை கொண்டிருக்கவில்லை. மாறாக தனக்குதெரிந்த அளவில் மகிழ்சியுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் கழித்துக்கொண்டிருக்கின்றன, யாருடைய அனுமதியுமில்லாமல்.



வெட்டவெளியிலும், மொட்டைமாடியில் படுத்து வானத்து வின்மீன்களை எண்ணியவாரு தூங்கிய நாட்கள் உங்களுக்கு வாய்த்திருந்தால் நீங்கள் நிச்சயம் கொடுத்துவைத்தவர்கள். அதைபோன்றதொரு மகிழ்ச்சியான தருணத்தை இப்போதும் உங்களால் பெறமுடியுமென்றால் எதற்க்காக காத்திருக்கிறீர்கள்?. அதை அனுபவிக்க உங்களுக்கு பணமேதும் தேவையில்லை, உங்களுக்கு மனமிருந்தால் போதும். அப்படியான ஒரு வானத்தை நோக்கிய உங்கள் பார்வையானது எழுப்பும் எண்ணவோட்டங்கள் உங்களை உணரச்செய்யும். எத்தனை நட்சத்திறங்கள் அந்த வானில் மின்னிக்கொண்டே இருக்கின்றன. அவை எப்போதும் தன்னிருப்பை நிரூபித்துக்கொள்ள பிரயத்தனப்பட்டுக்கொள்வதில்லை. யார் அந்த நட்சத்திரங்கள் தாங்கிபிடித்துக்கொண்டிருக்கிறார்கள்?. நீங்கள் சிறு குழந்தையாயிருக்கும்போது மிளிர்ந்த அதே நட்சத்திறங்கள் இன்னும் அப்படியே இருக்கிறதா? நம்மைப்போலவே அதுவும் வளர்ந்துகொண்டு வருகிறதா? அந்த வின்மீன்களில் நாம் காணும் ஒளி பல ஆண்டுகள் கடந்து நம்மை வந்து சேர்கிறது என்று அறிஞர்கள் சொல்கிறார்களே, அதற்க்கு அப்படியென்ன தேவை உங்களை வந்துசேர. அப்படி அது நம்மைச்சேர நம்மிடமேதும் எப்போதாவது எதையாவது எதிர்பார்த்திருக்கிறதா? அவையும் பூமியைப்போல உருண்டை வடிவமானதா? ஏன் சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்கக்கூடாது. நமக்குத்தெரிந்த அறிவியலின்படி தூரத்திலிருந்து பார்த்தால் எல்லாமே உருண்டைவடிவமாகத்தானே தெரியும்? ஏன் அங்கு உயிர் வாழ்வு இருக்கக்கூடாது? சூரியனில்லாத வானம் ஏன் எபோதும் இருண்டே இருக்கிறது? இருள்தான் அண்டமா? மனிதனுக்கும் மற்ற பிற உயிர்களுக்கும் இரவில் இயக்கம் நின்றுபோவதேன்? ஒருவேளை சூரியனிடமிருந்துதான் நமக்கு உயிர்ச்சக்தி கிடைக்கிறதா?.




பரந்து விரிந்திருக்கும் இந்த ஆகயத்தில் அந்த முழு நிலவு எப்படி பரிமளிக்க்க்றது? இந்த வானத்தை தவிற வேறெங்கு இந்த காட்சி கிடைக்கும். ஒரே மாதிரி உணவு வீட்டில் பிடிக்கவில்லையென்றால் கடைகளில் புசித்துப்பழகிய நமக்கு, இந்த ஒற்றைவானமும் ஒற்றை நிலவும் எப்போதும் இனிமையாய் இருக்கிறதே. நம் வாழ்நாளில் இதைப்போன்ற இன்னொரு தருணம் இருக்கப்போவதில்லை. அது இன்னொன்றாகத்தனிருக்கும், இதுவேவாக இருக்கப்போவதில்லை. அந்த நிலவுக்குகூட அடியும் முடியும் இருக்கிறதே.. அங்கே பள்ளங்களும் மேடுகளும் அழகாக ஓவியம்போல் இருக்கிறதே. யாருக்காக அவை அப்படி அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்க்கும் காரணம் தேடும் மனித அறிவு இந்தக்கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஒருவேலை இன்னும் பல ஆயிரம் ஆண்டுகழித்து அங்கே வாழப்போகும் உயிர்களுக்காக அது அமைந்திருக்கிறதா? வெரும் கண்ணில் நாம் காணும் இந்த நட்சத்திரங்களும் வின்மீன்களும் தொலைனோக்கியில் இன்னும் அழகாக தெளிவாக தெரிகிறது. அவை எப்போதும் நமக்கு தெரிவித்துகொள்ள ஒரு செய்தியை வைத்திருக்கிறது. ஒரு காலத்தில் உலகம் தட்டை என்று நம்பிய உலகம் இன்று உருண்டையென்று நம்புகிறது. மனிதனின் அறியல் வளர்ச்சி அதிகமாகும்போது அது வேறு ஒரு உருவத்தில் இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஆனால் பூமி தன்னியல்பிலிருந்து எப்போதும் மாறவில்லை. அதைப்போலவே நமக்கு தெரிந்த பால்வெளியும் அண்டமும் இன்னும் இன்னும் ஆயிரம் புதிய பரிமாணங்களை நமக்குச்சொல்லிக் கொண்டிருக்கிறது.





மனிதனின் அறிவியல் அறிவிற்க்கு எட்டிய பால்வெளியும் ஒரு எல்லை கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான கேலக்ஸிக்களும் பால்வெளியும் பறந்து விரிந்து கிடக்கிறது. எண்ணற்ற சூரியன்களும் அவற்றைச்சுற்றிய கோள்களும் நமக்கு தெரியாமல் இயங்கிக்கொண்டுதானிருக்கிறது. ஒரு நட்சத்திறம் இறப்பதும் பிறப்பதும் ஒவ்வொரு நிமிடமும் அண்டத்தில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது. ஒரு நட்சத்திரத்தின் பிறப்பும் இறப்பும் பல ஆயிரம் வருட நிகழ்வு. நமக்குத்தெரிந்த/ கண்டுபிடித்த கருவிகள் காட்டும் வானியல் நிகழ்வுகள் அற்புதம் கொண்டவை. அதைப்போலவே நம்மால் அறியப்படாத, அறியமுடியாத நிகழ்வுகள் ஆயிரம் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. நமக்கு தெரிந்த இந்த வானம் கடந்த நூறு ஆண்டுகள் தான் உண்ணிப்பாக கவனிக்கப்படுகிறது. அண்டத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் பல ஆயிரம் ஆண்டு நிகழக்கூடியது. இன்று நாம் ஊகிக்கும் ஒரு நிகழ்வு இன்னும் பல ஆண்டுகளில் வேறு கோணத்தில் பொய்யென்று நிரூபிக்கப்படும். மனிதனால் எப்பொழுதும் புரிந்துகொள்ளமுடியாதாதாக இருக்கும் இயற்க்கை நமக்கு என்னதான் சொல்ல வருகிறது? ஒரு நிமிடம் தன்னைப்பற்றி யோசிக்கையிலேயே தான் மனித அறிவால் புரிந்துகொள்ளப்படாததாக இருப்பதாகவும், தன்னை தெரிந்துகொள்ள முயற்ச்சிப்பதுபோல் மனிதன் அவனையும் அவனுடைய மனத்தையும் புரிந்துகொள்ள முயற்ச்சிக்க வேண்டும். எதுவெல்லாம் இன்று மகிழ்ச்சி தரக்கூடியது என்று நம்புகிறோமோ அவை நாளையும் அப்படியே இருக்குமென்று சொல்லமுடியாது.



நாளையயைப்பற்றிய கவலையில் இன்றைய நாளைத்தொலைப்பதைவிட்டு விட்டு, வாழும் ஒவ்வொரு கனத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்கவேண்டும். அந்த மகிழ்ச்சிகூட பிற உயிரிணத்தை மகிழ்ச்சிப்படுத்துவதில் இரட்டிப்படைகிறது. கவலைகளை (அப்படி ஒன்று இல்லவே இல்லை ) தூரப்போட்டுவிட்டு இயந்திரமான வாழ்க்கையை விட்டுவிட்டு கண்களைத்திறந்து இந்த பூமிப்பந்தில் படர்ந்துகிடக்கின்ற உயிர்களையும் இயற்க்கையையும் ரசியுங்கள், கொண்டாடுங்கள். வாழ்வதற்க்கு உணவு தேவைதான் ஆனால் அதைத்தேடுவதில் வாழ்க்கையையே தொலைத்துவிடத்தேவையில்லை.




 கடைசியாக இந்தப்பாடல் உங்களுக்காக....