Thursday, December 18, 2008

அடைகாக்கப் படும் அக்கினிக் குஞ்சுகள்

இலங்கையின் குண்டுவீச்சில் இருந்து தமிழீழ மன்னர்களை காக்கும் தாய்மார்கள்.


Wednesday, December 17, 2008

காதல், கல்யாணம்

வர வர இந்த சக்தியோட நடவடிக்கைகள் ஒன்னும் விளங்க மாட்டிங்குது.

"காலைல ஏழு மணிக்கு கோயமுத்தூர் போகனும், கூட நியும் துணைக்குவான்னு" இரவு பத்து மணிக்கு போன் பன்றான்.

"என்னடா திடீர்னு? " கேட்டேன்.

"ஒன்னுமில்லடா, அப்பாவோட பிரண்டு ஒருத்தர் பையன், பெங்களூர்ல பெரிய கம்பெனில பெரிய மேனஜரா இருக்காரம். அவர் ஊருக்கு வந்திருக்கார், அதனால எங்கப்பா அவர்கிட்ட, என் வேலை விசயமா சொல்லி, என்னை சந்திக்க சொல்லியிருக்கார்" என்றான்.

"அட.. இங்க பார்ரா... அப்பா.. பிரண்டு... வேலை... சரி.. சனியன்.. எத்தனைய கேட்டாச்சு.. இத கேக்க மாட்டமா..." - என் மனதுக்குள்..

எங்க வீட்ல "நாளைக்கு இண்டர்வியூக்கு போகனும்" அப்படின்னு சொல்லி ஒரு பிட்ட போட்டு, இருநூறு ரூபாய ஆட்டைய போடலாம்னு அம்மா கிட்ட அப்படியே பேச்சு குடுத்தா, "ஆனிய புடுங்க வேண்டாம்னு" அப்பா யார்கிட்டயோ பேசுறது காதுல விழுந்துச்சு.

அப்புறம் எங்கே....

நானும், நண்பனுக்கு நல்ல காலம் பொறக்க போகுது.. அவனுக்கு வேலை கிடச்சுடுச்சுன்னா, எப்படியும் அவன் என்னைய ரெக்கமண்ட் பண்ண வெச்சு, நானும் ஒரு வேலைய வாங்கிறலாம்னு ஏழு மணிக்கெல்லாம் பஸ்டாண்டுல வெய்ட்பண்ணிட்டு இருந்தா... பையன் எழரை மணிக்கு வந்து..

"சாரிடா மச்சான்.. பிரிபேர் ஆகி வர லேட்டாயிருச்சு.. அடுத்த பாயிண்டு பாயிண்ட்ல போயிர்லாம்" னு சமாதானப்படுத்துனான்...

சரி.. கழுதை விடுன்னு மன்னிச்சு விட்டுட்டேன்.

"மாப்ளை... என்னோட ட்ரஸ் எப்படி இருக்கு? ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கா?" அப்படின்னு கேட்டு அறிச்சான்.

"என்னதான் உயரமா பறந்தாலும், காக்கா குருவியாக முடியாது" ன்னு சொல்லி அவனை கூல் பண்ணினேன். இப்ப எதுக்கு இதபத்தி ரொம்ம பீல் பண்றான்?, அப்பா பிரண்டத்தான் பாக்க போறான்!.. ஒரு வேளை அவுங்க பையன் டிசிப்ளின், டீசென்சியெல்லாம் பாப்பாறோன்னு..... நானும் "கொஞ்சம் நல்ல சட்டைய போட்டுட்டு, மேக்கப் பண்ணிட்டு வந்திருக்கலாம்" னு தோனுச்சு.....

ஏழரை மணியாகியும் பாயிண்டு பாயிண்டு வரலை. அதுக்காக எப்பவும் வெயிட்பன்ற ரெகுலர் கூட்டம், ரோட்டுலு போயி எட்டி எட்டி பாக்கிறதும், டைம் ஆபிசுல போய் விசாரிகிறதும்.. ஒன்னும் சொல்றாப்புல இல்ல... நம்ம ஆளும் பஸ்ஸை எதிர் பார்த்து எட்டி எட்டி பார்த்துட்டு இருந்தான்... எப்படியாச்சும் கஸ்டப்பட்டு வேலை வாங்கிரணும்னு வெறி போல... இருக்காத பின்ன.. எங்கப்பா ஒரு அண்ணா(நல்லா பேசுவார்). அவுங்கப்பா ஒரு காமரசர்(செயல் வீரர்)...

எனக்குதான் எதுக்கு நிற்கிறோம்னு தெரியாம ஒவ்வொருத்தறோட நடவடிக்கையயும் கவனிச்சுட்டு இருந்தேன். எல்லாரும் பரபரப்பா இருந்தாங்க. அந்த பக்கம் எங்க ஏரியா எதிரிங்க நின்னுகிட்டு பொண்ணுகளை பாத்து ஏதோ பாட்டெல்லாம் பாடிக்கிட்டு அவுங்களை சந்தோசப் படுத்திட்டு இருந்தானுங்க..

எங்களுக்கு அந்த பழக்கமெல்லாம் கிடையாது.. ஏன்னா நாங்க பாடுனாலும் யாரும் கண்டுக்க மாட்டாங்க.. அப்படியே கவனிச்சிட்டாலும் அதை பாத்த பெரிசுங்க வீட்டுக்கு வந்து ப்ளாக் எழுதிட்டு போயிருவாங்க... அதனால.. பாட்டெல்லாம் பாடாம, பேசும் படம் மட்டும்தான்.

காத்துட்டு இருந்தவங்க எல்லாத்து கண்லயும் அவ்வளவு சந்தோசம். பாயிண்டு பாயிண்டு வந்தாச்சு.அடுத்து சீட் புடிக்க தயாரானாங்க... ஆன நம்ப ஆளு மட்டும் காத்து புடுங்குன பலூன் மாதிரி சுருங்கிட்டான்...ஓருவேளை "பஸ்ஸுல சீட் கிடைகாதுன்னு பீல் பன்றானோ?"

கேட்பதற்கு முன்.. "இல்லடா.. அடுத்த பஸ்ல போலாம். ஒரே கூட்டமா இருக்கு, நின்னுட்டுதான் போகனும்" னு சொன்னான். சரிதான்.. அப்படின்னு விலகி நின்னு மத்தவுங்களுக்கு வழி விட்டோம்.

அடுத்த பஸ் எப்பன்னு டைம் டேபில்ல பாத்து வச்சுகிட்டேன். அதையெல்லாம் பாக்காம அடுத்த பஸ்ஸுக்கு இப்பவே ரோட்ட பாத்து பாத்து நின்னுட்டு இருந்தான் நம்ம ஆளு. இந்த பஸ்ஸும் புறப்பட ஆரம்பிச்சது. அப்ப பாத்து டி வி எஸ்ல ஒருத்தர் ஒரு பிகரை கொண்டு வந்து பஸ் முன்னாடி நிறுத்தி ஏத்திவிட்டார். எனக்கும்,பேசாம நின்னுட்டே இந்த பஸ்ல போயிடலாம்னு தோனுச்சு. இத நம்ம ஆளுகிட்ட சொல்லி அவன் எங்க நம்மள ஒருமாதிரி கேவலமா நினைச்சுக்குவானோன்னு பீல் பண்ணி விட்டுட்டேன். ஆனா நம்ம ஆளு, "சரிடா வா இந்த பஸ்லயே போயிரலாம், இல்லேன்னா லேட் ஆயிடும்" னு சொல்லி பஸ்ல ஏறிட்டான்.

அவன் என்ன சொன்னான்னு கேட்க தோனாம நானும் ஓடி போயி அந்த பஸ்லயே ஏறிட்டேன். நின்னுட்டு போனாலும் பரவால்லைன்னு, நண்பனோட வேலை தான் முக்கியம்னு பஸ்ல ஏறி என்னை நானே சமாதனம் பண்ணிக்கிட்டேன். கொஞ்ச நேரத்துல நம்ம ஆளு எங்கிட்ட பணத்த குடுத்து மூனு கோயமுத்தூர் வாங்கிருன்னு சொல்லிட்டு முன்னாடி லேடிஸ் இருக்கற பக்கமா போனான்.

என்னடா மூனு டிக்கெட் வாங்க சொல்றான்னு கொழப்பத்துல நடத்துனர்கிட்ட ரெண்டுடிக்கட் மட்டும் வாங்கி வைச்சுகிட்டேன். நானும் லேட்ட வந்து பஸ்ஸ நிறுத்தி ஏறுன அந்த பிகரு இந்த பக்கம் பாக்கும், அப்படி இப்படின்னு இம்ப்ரெஸ் பண்ணனும்னு கனவுகண்டுட்டே இருந்தேன்.

நம்ம ஆளு முன்னாடி ஸ்டெப்ஸ்ல நின்னுட்டு என்னமோ அவனுக்கு அவனே பேசிட்டிருந்தான். அங்க போயி எப்படி பேசனும்னு ரிகர்ஸ் பண்ணிக்கிறான் போல... நேரம் ஆக ஆக பின்னாடி இருந்த காடையர்கள் எல்லாம் முன்னாடி போயி, அந்த பிகரின் சிக்னல் நாட் ரீச்சபில் டிஸ்டன்சுக்கு என்ன பின்னாடி தள்ளிட்டானுங்க...

அப்படி இப்படின்னு ஒரு வழியா காந்திபுரத்துல பஸ் நின்னுது. சரி இப்பவாவது அந்த பிகர பக்கத்துல போயி பாக்கலாம்னு அவசரமா கீழ இறங்கி போனா... அந்த பிகரு என்ன பாக்க நின்னுட்டு இருந்துச்சு. எனக்கு.."எகிரி குதித்தேன் வானம் விழுந்தது" மாதிரி இருந்துது...

அந்த நேரம் பாத்து நம்ம ஆளு குறுக்க வந்து நின்னான். எனக்கு வந்த கோபத்துக்கு......சரி விடுங்க.. இவனோட உதவி நாளைக்கு நானும் அந்த பொண்ணும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க போறப்ப தேவைப்படும்னு நெனச்சுகிட்டு அமைதியாயிட்டேன்.

ரெண்டுபேரும் கொஞ்சம் முன்னாடி போயி ஒரு ஆட்டோ பக்கத்தில் நின்றோம். அவன் ஏதோ ஆட்டோ காரர் கிட்ட பேசிட்டு இருந்தான். அந்த பிகரு என்னை பாத்து என் பின்னாலேயே வந்திட்டு இருந்த்துச்சு.. ஆஹா.. இத்தனை நாளா என்னோட அருமை எனக்கே தெரியாம போச்சே... அப்படின்னு தலைய யெல்லாம் கோதிவிட்டுட்டு போற வர்றவனை எல்லாம் ஏளனமா பாத்துட்டு இருந்தேன். "சாருக்... சாருக்.. "ன்னு யாரோ கூப்டர மாதிரி இருந்துச்சு...

நம்ம ஆளுதான்.. வாடா போலாம்னு ஆட்டோல உக்காந்துட்டு கூப்டான்.. அவனையும் அப்படியே ஒரு லுக்கு விட்டுட்டு, அந்த பிகரு இருக்கிற பக்கம் திரும்பாம.. திமிரா போயி ஆட்டோல உக்காந்துட்டு ஹலோ சொல்லனும்னு நெனச்சுட்டு ஆட்டோல உக்கார போனா.. ஏற்கனவே அந்த பிகரு உள்ள உக்காந்துட்டு...ஹலோ சொல்லுச்சு...

எனக்கா.. ஒன்னும் புரியல... என்ன நடக்குதுன்னு சுதாரிக்கரதுக்குள்ள நம்ம ஆளு அது பக்கத்துல உக்காந்துட்டு இருக்கறத கவனிச்சேன். கண்ணெல்லாம் சுத்த ஆரம்பிச்சது.. உள்ள உக்காந்ததுக்கு அப்புறம்.. சாரிடா மாப்ள... உன்கிட்ட சொல்லாம மறைச்சுட்டேன்.. ஆனா என்னைக்கு இருந்தாலும் நீதான் எனக்கு முன்னாடி இருந்து எல்லாத்தையும் செய்வேன்னு தெரியும்.. இவளும் நானும் உயிருக்கு உயிரா (உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ன்னு மட்டும்தான் எனக்கு கேட்டுச்சு) காதலிக்கிறோம்னான். எப்படியும் எங்க வீட்ல எங்க காதலுக்கு சம்மதிக்க மாட்டாங்கன்னு தெரியும் , அதான் நாங்களே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம். அதான் இன்னைக்கு நல்ல நேரம் பாத்து பேருர்ல கல்யாணம் பண்ணிக்கலாம்னு.. நீதாண்ட எல்லாத்தையும் பாத்துக்கனும்னான்......

ஆனி....சாரூக்...கல்யாணம்.... வேலை.... அண்ணா ...காமராசர்..... அய்யோ............................

Saturday, December 13, 2008

பாடம்

நண்பர்கள் கூடி கேக் வெட்டி இருபத்தொன்பதாவது பிறந்த நாள் கழிக்கப்பட்டு விட்டது. எத்தனை மாற்றங்களை இயற்கை வாழ்வில் ஏற்படுத்தியிருந்தாலும், சக்கரம் கட்டிய கால்களுடன் ஊரைச்சுற்றி திரிந்து, அப்பா கொடுத்த பத்து பைசாவுக்கு இரண்டு பால்கோவா கட்டி வாங்கி ஒன்றை அக்கா முன் தின்று வெறுப்பேற்றி அழ வைத்து பிறகு மற்றொன்றை அவளுக்கு தந்து அதனையும் பங்கு கேட்டு வாங்கித்தின்ற அந்த நாட்கள் அசை போட மட்டுமல்ல மீண்டும் அனுபவிக்க ஏக்கம் தருபவை.

மங்கிய தெரு விளக்கு வெளிச்சத்தில் மணலில் வீடுகட்டி நண்பர்களுடன் விளையாடிய நாட்களை சோடியம் வேப்பர் வெளிச்சத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்.

அப்போதெல்லாம் அம்மா அடித்தால், பாட்டியிடம் ஓடி தஞ்ச மடைந்து கொள்வேன். அவளுக்கென்று ஒரு தனி உலகம் இருந்தது. அங்கு என்னைத்தான் ராஜாவாக வைத்திருந்தாள். வெளியே எங்கு போனாலும் என்னையும் கூட்டிச்செல்வாள். என் தாத்தா எப்போது என்னை வெளியில் கூட்டிச்சென்றாலும், தோழில் வைத்துத் தான் தூக்கி செல்வாராம். அவர் தலையில் அமர்ந்து ஊரை சுற்றியது, பின்பொரு நாளில் 10 பைசாவுக்கு செய்த யானை சவாரியை போல் இன்னும் ஞாபகம் இருக்கிறது. அவர் மறைந்த பின்பு பாட்டிதான் எனக்கு தாத்தாவும். ஆனால் அவளால் தாத்தா போல் என்னை தோழில் தூக்கி வைக்க முடியாது. ஏதொ காரணத்தால் அவள் முதுகு கூண் விழுந்து குணிந்து தான் நடப்பாள். இருந்தும் அவள் என் கை பிடித்து அழைத்து செல்வது தாத்தாவுடன் போவது போன்றே இருந்தது. தன் நண்பர்களிடம், "எம் பேரன்" என்று இருமாப்புடன் சொல்வதை கவனித்திருக்கிறேன். அவர்களோ என் தாத்தாவை போலவே இருக்கிறேன் என்பதும், அதற்கு ஆமாம் என்பது போல், "அக்காங்... அவுங்க அப்பாராட்ட ஒரெடத்தில அடங்கிறதில்லை" என்று என் பெருமைகளை சொல்லத் தொடங்குவாள். அவளின் செல்லப்பரிசு கரும்பு சர்க்கரை. அவள் சொல்லும் வேலைகளை செய்ததும் எனக்குத் தருவாள் அந்த பரிசை. பாலில்லாத காபியில் அந்த சர்க்கரை சேர்த்த சுவை எனக்கு கசப்பை தரும். ஆனால் அவள் விரும்பிக் குடிப்பது அதுதான்.

வியாழன் என்பது எனக்கும் என் சகோதரிக்கும் வாரத்தில் இன்னொரு ஞாயிற்றுக் கிழமை. அன்று அம்மா சந்தைக்கு போய்விடுவாள் என்பதால் எங்களுக்கு பள்ளி விடுமுறைவிடப்பட்டு பாட்டியிடம் ஒப்படைத்து விடுவார்கள். எப்படியும் விளையாட்டில் இரண்டு மூன்று தடவை அக்காவை அழ வைத்துவிடுவேன். அப்போதெல்லாம் பாட்டிதான் எனக்கு நற்சான்று வழங்குவாள் என் பெற்றோரிடம். அதையும் மீறி என்னை திட்டினால், அன்று வீடு போர்களம் தான். அதனால் அதற்கான பூசை வேறொரு நாள் வழங்கப்படும்.

அந்த நாட்களில் அந்த வீதியில் தொலைக்காட்சிப் பெட்டியிருந்தது எங்கள் வீட்டில் மட்டும் தான். அதனால் தூர் தர்சனில் ஜீனோ, ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக் கிழமை தமிழ்ப்படம் போடும் நேரங்களில் எங்கள் வீடு ஒரு திரையரங்கு போல காட்சியளிக்கும். பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள். அவள் மடியில் அமர்ந்துதான் எல்லா பார்வையாளர்களையும் கவனித்துக் கொண்டிருப்பேன். பிறகு எல்லோர் வீட்டிலும் வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வந்தும் எங்கள் வீட்டில் மட்டும் கருப்பு வெள்ளை பெட்டியில் படம் பார்த்தபோதும் பாட்டிதான் அருகில் அமர்ந்திருப்பாள்.

தேர்தல் நேரங்களில், பாட்டிக்கு அவ்வளவு மரியாதை இருக்கும். காரில் வந்து கூட்டிச்செல்வார்கள் வாக்களிக்க. துணையாக என்னையும் கூட்டிச்செல்வாள். வாக்குச் சாவடி செல்வது அதுதான் முதல் தடவை. துப்பாக்கியுடன் நின்ற காவலரை பார்த்து சிறிது பயந்து கால்கள் அடியெடுக்க மறுக்கும். பாட்டிதான் இழுத்துச் செல்வாள். "பேரனா?" என்று கேட்டு உள்ளே அனுமதிப்பார் அந்த காவலர். பாட்டிக்கு கருப்பு மை வைத்தபின் எனக்கும் வைகச்சொல்லி கேட்டு வாங்கி வைத்துக் கொள்வேன். ஓட்டுப்பெட்டிவரை கூட்டிச்சென்று, என்னைத்தான் சின்னம் சொல்லி முத்திரை குத்த சொல்வாள். ஓட்டு போட்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி நடந்து வருவோம். எப்படியும் ஒன்றிரண்டு பெரிசுகள் துணைக்கு சேர்ந்து அரசியல் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்வோம்.

அப்பொதெல்லாம் எனக்கு தெரிந்து அவள் உடல் நிலை சரியில்லையென்று மருத்துவரிடம் சென்ற நினைவில்லை. திருநீரு மந்திரித்து பாடம் சொல்லும் பெரியவரிடம் தான் மாலை நேரத்தில் என்னையும் அழைத்து செல்வாள். எனக்கும் பெரும்பாலான நேரங்களில் அவர்தான் பாடம் போட்டிருந்தார். அவர் தன்னை ஒரு பெரிய மந்திரவாதி போலெல்லாம் காட்டிக் கொண்டதில்லை. மெலிந்த தேகத்தோடு நெற்றி நிறைய திருநீரு வைத்து,சட்டை அணிந்து கொள்ளாமல் வெள்ளை வேட்டி மட்டும் அணியும் காங்கிரஸ் காரர். ஏதொ ஒரு வகையில் அவர் எங்களுக்கு உறவுக்காரர் என்பதால், அங்கு உபசரிப்பும் நலம் விசாரிப்புகளும் எப்போதும் இருக்கும். அவரின் பிளைப்பு நெசவுத்தொழில் தான். அப்போதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் அதுதான் தொழிலாக இருந்தது. நாங்கள் சென்றதும் அவர் மங்கிய ஒளியில் இருக்கும் வீட்டில், தறியிலிருந்து வந்து நலம் விசாரிப்பார். பாட்டி சிறிது நேரம் கதைகளை பேசிக்கொண்டே தன் கழுத்து வலியையொ, காய்ச்சலை பற்றியோ சொல்வாள். கழுத்து வலியாக இருந்தால் இரண்டு உலக்கைகளை பாட்டொயின் இரண்டு கைகளில் கொடுத்து சிறிது நேரம் நிற்க வைத்து விடுவார். பின்னார் தனது பூசை அறையில் உள்ள அனைத்து சாமிகளிக்கும் பாட்டு பாடி திரு நீரு கொடுப்பார். அதனை நெற்றியில் பாட்டி இட்டுக்கொண்டு எனக்கும் வைத்து விடுவாள். சிறிது நேரம் பேசிக்கொண்டு பாட்டி தான் நிவாரணம் அடைந்ததாக உணர்ந்ததையும் சொல்லுவாள். பின் பெரும்பாலான நேரங்களில் அங்கேயே உணவு உண்டுவிட்டு கிளம்புவோம். மந்திரம் சொல்லும் பெரியவர் வருபவர்களிடம் கேட்கும் ஒரெ பொருள் கற்பூரம்.

அப்போதெல்லாம் எனக்குள்ளே அவரைப்பற்றி நிறைய கேள்விகள் எழும். வருமையில் இருந்த அவர் ஏன் வைத்தியம் செய்ததற்கு காசு வாங்குவதில்லை? அவர் சொல்லும் பாடம் மற்றும் மந்திரத்தினால் எப்படி வலியும் பயமும் நோயும் குணமாகிறது? போன்ற கேள்விகள் விடையில்லாமல் இன்னும் இருக்கின்றன.