Friday, September 25, 2015

மரங்களும் பேசும்

மனித சமூகத்திற்கு மட்டுமே சிந்திக்கவும், சிரிக்கவும் தெரியும் என்று எவரோ கண்டுபிடித்துச் சொன்னதை இன்னமும் ஆச்சர்யத்துடனும், கர்வத்துடனும் கேட்டு வளர்ந்த நமக்கு, இந்த அறிவு எல்லையைத் தாண்டியுள்ள, இயற்கை உலகம் புலப்படுகிறது. சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும் செய்திகள் நம் கர்வத்தின் மீது கல்லெரிகிறது. அதிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது, அறிவியல் விசாலமடைய அடைய, மனிதன் ஒரு மிகப் பெரிய முட்டாள் என்பதைத் தெரிந்து கொண்டே போகிறோம். ஆம், மனிதனை விட பல மடங்கு புத்திசாலிகளான உயிரினங்களின் உலகம் இது.

நிலத்தை உழுது, விதை விதைத்து, நீரிட்டு, உரமிட்டு, களையெடுத்து உற்பத்தி செய்யும் வேளாண் முறை ஏதோ மனிதன் தன் உழைப்பாலும் அறிவாலும் இயற்கையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்கிறான் என்று வியந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. மனித குலத்தின் உண்ணதமான தொழிலே இப்படியானால், செயற்கையாகச் செய்யும் எண்ணற்ற மனிதனுக்கு மட்டுமே பயன்படக்கூடிய பொருட்களின் உற்பத்தியை என்ன சொல்ல?

ஒரு விதை மரமாக வளர்வதும் அது எப்படித் தன் சக மரங்களுடன் சமூகமாக வாழ்கிறது என்பது பற்றிய சமீபத்திய ஆராய்சி முடிவுகள் ஆச்சர்யமூட்டுகின்றன. நாம் நினைப்பது போல் மரங்களின் வாழ்கை மண்ணுக்கு மேலே மட்டுமல்ல. மண்ணுக்கு அடியில் வேர்களின் மூலம் பரிமாரிக்கொள்ளும் தகவல்களும், உணர்ச்சிகளும் நாம் கற்பனையில் நினைத்துப் பார்த்திருக்க முடியாதது. தனக்குத் தேவையான உணவை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்வதோடல்லாமல், சக மரங்களோடும் பகிர்ந்து கொள்கிறது, அதுவும் வேர்கள் மூலமாகவே. ஒரு மரம் தன்னிடம் இருக்கும் அதிகப்படியான சக்தியை தன் சகோதரனுக்கோ, சகோதரிக்கோ பகிர்ந்து கொடுக்கிறது. என்ன ஆச்சர்ய மாக இருக்கிறதா? ஆம், மரங்களுக்கிடையில் உறவுகள் இருக்கிறது.

தன்னுடன் வளரும் மரங்களில் எது தன் சகோதரி அல்லது தன் சகோதரன் என்று அடையாளம் கண்டு கொண்டு, அவற்றுடன் வேர் பரவும் நிலம், மற்றும் மண்ணிலிருந்து கிடைக்கும் சக்திகளையும் பரிமாரிக்கொள்கிறது. ஒரு மரமோ அல்லது செடியோ பூச்சியால் தாக்கப் படும்போது, தன்னைக் காத்துக்கொள்ள முதலில் ஒரு வித வேதிப் பொருளைச் சுரக்கும். இது அந்த பூச்சிக்கு சகிக்க முடியாத உணர்வை ஏற்ப்படுத்தும், சிறிது நேரத்தில் அந்த பூச்சி விலகிச்சென்று விடும். அதையும் மீறி ஒரு பூச்சியோ, புழுவோ தாக்கும்போது, ஒரு வித வாசனையை வெளிவிடும். இந்த வாசனை காற்றில் கலந்து வேறொரு பறவைக்கோ அல்லது பூச்சிக்கோ அழைப்பை ஏற்படுத்தும். இந்த அழைப்பில் வரும் பறவை அந்த செடியிலோ அல்லது மரத்திலோ அமரும்போது அது செடியைத் தாக்கிய பூச்சியை உணவாகக் கொள்ளும். இது ஒரு வகையில் அவசரகால அழைப்பைப் போன்றதே.

சரி எப்படி ஒவ்வொருவிதமான தாக்கும் பூச்சிக்கும் அதை உணவாக உண்ணும் இன்னோரு பூச்சியையோ, பறவையையோ அழைப்பது என்று மரத்திற்கு தெரியும்?. இன்னும் இது கண்டு பிடிக்கப்படவில்லை யென்றாலும் செடிகளுக்கும் மரங்களுக்கும் அந்த நுண்ணுணர்வு இருக்கிறது என்பது மட்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. மரங்களும் செடிகளும் மண்ணுக்குள்ளும் வெளியிலும் தங்களைச் சுற்றியுள்ள சூழலை உணர்ந்து கொள்ளும் தன்மையுடையவை. தாவரங்கள் பனிக் காலங்களில் சூரிய ஒளியிலிருந்து ஸ்டார்ச் தயாரிக்க முடியாது என்பதாலும், இலைகள் மூலம் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும் இலைகளை உதிர்த்து விடுவது நாம் அறிந்த இலையுதிர் காலம்.

ஒரு செடி இருக்கும் இடத்தில் திடீரென்று வரட்சி ஏற்படும்போது, அந்த வரட்சியை தன்னால் முடிந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள தன்னை தகவமைத்துக் கொள்கிறது, வேர்கள் தண்ணீரைத் தேடி நிலத்தில் பரவுகிறது. அதே போல், சில படரும் கொடிகள் எப்படி அருகிலுள்ள மரத்தை அடையாளம் கண்டுகொள்கிறது?.. ஆச்சர்யம்.. அந்த கொடி வளரும் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் தன்னைச் சுற்றி இருக்கு இடத்தை தடவிச் சுற்றிக் கொண்டே இருக்கும். எப்போது அதற்கு ஒரு அசையா மரம் தட்டுப் படுகிறதோ அதைப் பிடித்துக் கொண்டு தன் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளும்.

இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும்  நமக்கு ஏராளம் இருக்கிறது. எல்லாம் நமக்குத் தெரியும் என்று நினைக்கும் நொடியில் நாம் நமது அறிவு வாசலை மூடி, அழிவு வாசலைத் திறந்து கொள்கிறோம்.

Wednesday, September 23, 2015

தேர்தல் விழாச் சலுகைகள்

தமிழக அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள், நமக்கு தேர்தல் என்பது ஒரு விழாவோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருக்கின்றன. ஆடி மாதம் சென்னை சில்க்ஸிலும், போத்தீஸிலும் வழங்கப்படும் கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை, மக்களும் தேர்தல் வந்தால் தங்களுக்கு ஏதாவது சலுகை கிடைக்கும் என்ற மன நிலை வந்துவிட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. இது நமது நாட்டை எங்கே கொண்டு சேர்க்கப்போகிறது?. தேர்தலுக்கு முன் இருக்கும் ஆரவாரம், பதவியில் அமர்ந்த அடுத்த விநாடியே, மயான அமைதியை உள்வாங்கிக் கொள்கிறது. மக்களுக்கும் தீபாவளிக்கு அடுத்த நாள் போல் குப்பைகளை அள்ளிப்போட்டுக் கொண்டு அவர் அவர் வேலைகளை பார்க்கச் சென்று விடுகின்றனர்.

இந்த தேர்தல்களும் அறிக்கைகளும் அரசியல் கட்சிகளால் கேளிக்க்கூத்தக்கப் பட்டுவிட்டது. இன்னும் ஒரு படி மேலே போய் மக்களை ஒரு வாடிக்கையாளராகவே மாற்றி விட்டார்கள். இங்கு எந்த கட்சியும் கொள்கைகளை முன் வைத்து ஓட்டு கேட்பதில்லை. "கொள்கைகள் இருந்தால் தான் அதை வைத்து ஓட்டுக் கேட்பார்களே" என்ற உங்கள் குரல் கேட்கிறது. நம்மை விட்டால். இந்த நாட்டை திருத்த யார் இருக்கிறார்கள்?(!) ஆகவே கொஞ்சம் நாமும் இந்த கட்சிகள் என்ன செய்வது சரியாக இருக்கும் என்று பார்போம்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ்தான் நாடுதழுவிய பெரும் அரசியல் இயக்கம். குடியரசான நாடு தேர்தலை சந்திக்கும்போது இன்று இருக்கும் அளவிற்கு அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் இல்லை, போட்டி இல்லை. இருந்தும் அன்றைய தலைவர்களுக்கு நாடு எதிர் கொண்டுள்ள சவால்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை மூலம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான திட்டங்களை முன் வைத்து தேர்தலை சந்தித்து செயல் பட்டார்கள். வறுமை ஒழிப்பு, எல்லோர்கும் கல்வி, தொழில் வளர்ச்சியை பெருக்குதல், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற திட்டங்களை முன்வைத்து செயல் பட்டார்கள். 

பின் தமிழத்தில் முன்னோடியாக திராவிட இயக்கம் சுய மரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற முற்ப்போக்கான கொள்கைகளை முன் வைத்து மக்களை ஒரு பெரும் மாற்றத்திற்கு தயார் படுத்தினர். மக்கள் ஒரு பெரும் சமூக மாற்றத்தை எதிர் கொண்டனர். ஏனைய மாநிலங்களை விட முற்ப்போக்கான சிந்தனைகளுடன் மனித நாகரீகத்தின் அடுத்த கட்டத்திற்கு தமிழகம், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவல் எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு வந்த கலைஞரும், எம் ஜி ஆரும் அவ்வாறான மிகப் பெரும் சமூக மாற்றங்களைச் செய்யாவிட்டாலும் ஆட்சியமைப்பை செம்மைப் படுத்தி மக்களின் மேலதிகத் தேவைகளை அரசுகள் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி செய்தனர். அந்த கால கட்டங்களில் பெரும் சமூக முன்னேற்ற நகர்வுக்கு வாய்ப்பில்லாமல், அதற்கு முன் இருந்த தலைவர்கள் மிகப்பெரும் மாற்றத்தை செய்து விட்டு போயிருக்கலாம் என்பதை நாம் காரணமாக எடுத்துக்கொண்டு, எம் ஜி ஆரையும், கலைஞரையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் 1990 களுக்குப் பின் ஆட்சிசெய்த திராவிடக் கட்சிகள் அடுத்த கட்ட முற்போக்கு கொள்கைகளை முன் வைத்திருக்க வேண்டும். ஏன் 1990 என்கிறீர்களா? இந்த கால கட்டத்தில் தான் இந்தியாவின் பொருளாதார சூழல் மாறுகிறது. தாராள மயமாக்கல், மற்றும் கூட்டணி ஆட்சிகள் நாட்டில் பெரும் தாக்கதை ஏற்படுத்திகின்றன. நமது அரசியல் கட்சிகள் இந்த மாற்றங்களை மக்களின் நலனுக்கான தொலை நோக்கு கொள்கை வடிவமைப்புக்காக உள்வாங்கிக் கொள்ளாமல், தமது சுயநல குறுகிய நோக்கு திட்டங்களுக்காக சிந்திக்கக் தொடங்கியது. பொருளாதார தாராள மயத்தின் மூலம் வகுக்கப்படும் திட்டங்களில் எப்படி கொள்ளையடிப்பது, தனியார் மயத்தின் மூலம் எப்படி அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது, கூட்டணியில் எந்த துறை பணம் கொழிக்கும் துறையோ அதை எப்படி பேரம் பேசி வாங்குவது, அதற்க்குப் பின், எப்படி தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளைக் கொண்டு தங்கள் தனிப் பொருளாதார சாம்ராஜ்யத்தை கட்டியமைப்பது என்பது போன்ற திட்டமிடல்களில் மக்களை மறந்தே போயினர்.

மக்களின் கோபம் ஆட்சி மாற்றத்தை ஏற்ப்படுத்தியதும், ஆட்சிக்கு வந்தவர் முன்னவர் செய்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த வழக்குகள் தொடுத்து தான் நேர்மையாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். ஓராண்டுக்குப் பிறகு வந்தவரும் அனுபவத்தினால், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யக் கற்றுக்கொண்டு, மக்கள் செல்வத்தை சுரண்ட ஆரம்பித்தார். அவ்வப்போது எழும் மக்கள் குரலுக்காக அங்கொன்றும் இங்கொன்றும் கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் வேலை வாய்ப்பு பெரும் பிரச்சினையாக வளர்ந்த போது அரசு அனைவருக்கும் வேலை வழங்க முடியாது, அதனால் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதை உணர்ந்து ஆலைகள் நிறுவ, சலுகைகள் அளித்தனர், பின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் வெளி நாட்டு முதலீடுகளின் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். இந்த நிறுவனங்களுக்கு தேவையான கல்வித் திறனை அரசு மட்டுமே வழங்க முடியாது என்று கருதி, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டற்ற அனுமதி வழங்கினர். தனியார் பள்ளிகள் ஒரு புறம் இந்த வாய்ப்புகளை தங்களுக்கானதாக மாற்றி தங்களை வளர்த்துக்கொண்டனர்.

இப்போது 2015, இருபத்தைந்தாண்டுகள் கடந்தும், அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட தொலை நோக்கு கொள்கைகளை வகுத்துக் கொள்ள வில்லை. மாறாக ஆட்சிக் காலமான ஐந்தாண்டுகள் போய், தேர்தல் காலமான இரண்டு மாதத்திற்க்கு மட்டும் திட்டங்கள் தீட்டும் நிலமை வந்து விட்டது. இவர்கள் ஆட்சி செய்த 50 காலமாக இருக்கும் பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வு காண முடியாத போது , அது அவர்களின் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது.
  • சாதிப் பாகுபாடு.
  • அழிந்து வரும் விவசாயம் போன்ற தற்ச்சார்பு தொழில்கள்.
  • நிர்வாகச் சீர்கேடு
  • எங்கும் பரவி இருக்கும் ஊழல்.
  • அழிந்து வரும் கிராமங்கள்.
  • அழிந்து வரும் இயற்கை வளங்கள்.
  • குறைந்து வரும் நீர் வளம்.
  • அறிவியல்த் தேவை.
  • கல்வி மற்றும் சுகாதாரத் தரம்.
போன்ற இன்றைய காலத் தேவைகளை கணக்கில் கொண்டு தொலை நோக்கு கொள்கைகளையோ, திட்டங்களையோ எந்த அரசியல் கட்சியும் முன்வைக்கவில்லை. மாறாக இவர்கள் கொள்கைகள் வெறும் இலவசங்களாகவும், தள்ளுபடிகளாகவும், விரைவில் நீர்த்துப்போகும் திட்டங்களாகவுமே இருக்கிறது. இதைச் சொல்வதால் கட்சி சார்பு அறிவு சீவிகள் தங்கள் துறுப்பிடித்த வாளை எடுத்துக் கொண்டுவந்து, நிதித் திட்டத்தைப் பார், கோனார் நோட்சைப் பார் என்று தங்கள் மேதாவித்தனைத்தை மேடையேற்ற வருவார்கள். வரட்டும்... அவர்களைப் பொறுத்தவரை மக்கள் தேவை முழுமையடைந்து விட்டதாக எண்ணிக்கொண்டு இருக்க நம்மால் முடிவதில்லை, ஒரு வேளை உண்ணும் உணவு செரிக்காததால் கூட நாம் இப்படி சிந்திக்கலாம்!

இன்னும் ஒரு படி மேலே போய், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து வாகனங்கள் மேம்படுத்தப்படும், மின் தடை இருக்காது, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்று நிர்வாகம் தொடர்பான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். நமக்கு அரசியல் கட்சிகல் இது போன்ற வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கேட்கத் தோன்றுவது, "இவை எல்லாம் அதிகாரிகளின் வேலை. அரசியல் கட்சிகள் எந்த எதிர்பார்ப்புமில்லாமலே இந்த நிர்வாக மேலாண்மையை ஆட்சிக்கு வந்தது செய்யவேண்டும், இதைச் செய்வேன் என்று சொல்வதற்கு எதற்கு அரசியல் கட்சி, நல்ல அதிகாரிகளே போதுமே" என்று சொல்லத் தோணுகிறது. 

தேர்தலை சந்திக்க வரும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை முன்னிருத்தி ஓட்டு கேட்க வேண்டும். துணிக்கடைகளைப் போல் ஆப்பர்களை முன்னிருத்தியல்ல. அடுத்த தலைமுறைச் சமூகத்தை வழி நடத்தத் தேவையான காரணிகளை உள்வாங்கிக் கொள்ளாமல், ஆட்சி நடத்தும் அதிகாரத்தை மட்டும் நோக்கி ஓடுவதால்தான் சமுதாயச் சிக்கல்கள் பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. பிரச்சினைகள் போராட்டங்களாகவும், போராட்டங்கள் புரட்சியாகவும் மாறுகிறது. மக்களை புரட்சி செய்ய விட்டுவிட்டு, தாங்கள் ஆட்சி அதிகாரம் செழுத்துவதில் கவனமாக இருந்தால் , ஆட்சி செய்த இயக்கங்களின் தேவை இல்லாமல் போய், காலப்போக்கில் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படும். அவ்வாறான ஒரு காலகட்டத்தை நோக்கியே நம் நாட்டு அரசியல் போய்க்கொண்டிருப்பது ஏன் நம் கண்களுக்கு மட்டும் தெரிந்து தொலைக்கிறதோ....

Monday, September 21, 2015

உயிர் வாழ்தல்

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்ற வரிகள் எவ்வளவு ஆழமானது என்பது எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பலருக்கு இந்த உலகில் மனித இனத்தின் பங்கு, அது எவ்வாறு இந்த பூமிப்பந்தில் உள்ள உயிர்ச்சூழலில் செயல்படுகிறது என்று சிந்திக்குமளவிற்க்கெல்லாம் நேரமோ அல்லது சிந்தனையோட்டமோ இருப்பதில்லை. இயற்கையின் மாபெரும் கட்டமைப்பில் ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் கருவில் உருவாகும் போது நேரும் விந்தைகள் நம் அறிவுக்கு எட்டாதவை. அந்த விந்தையில் உருவாகும் உயிர், ஓர் அற்ப்புதமான படைப்பு. மனிதன் வடிக்கும் சிலைகளும், ஓவியங்களும் நாம் எண்ணி வியக்கும் அளவிற்க்கு அதன் பின் உள்ள உழைப்பு காரணமாக இருக்கிறது. ஒரு சிலைக்கே இவ்வளவு அபாரமான உழைப்பு வேண்டுமெனில், விந்துவிலிருந்து உருவாகும் உயிர், முழு உடலைப்பெற்று உலகில் தன் பயணத்தை நடத்தும் ஒவ்வொரு வினாடியும் அதிசயமானது. ஒரு குழந்தை தன்னை முழு மனிதனாக மாற்றிக்கொள்ள எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எண்ணற்ற அணுக்களின் செயல்பாடும், அவற்றை இயக்கும் நோக்கமும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாதவை.

நமது அறிவுக்கு எட்டியவரை குழந்தை பிறக்கிறது, தவழ்கிறது, நடக்கிறது, பேசுகிறது, ஓடுகிறது.. அவ்வளவுதான்.. ஆனால் இந்த செயல்பாடுகளுக்குள் இருக்கும் நிகழ்வுகள் நம் கண்களால் காணமுடியாது. அந்த நிகழ்வுகளை நம்மால் ஒரு கார் இயங்குவது போல் எளிதில் விளக்கிவிட முடியாது. அதைத் தெரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வேண்டும். ஒரு சிறு கண் சிமிட்டலுக்குப் பின் ஆயிரமாயிரம் தகவல் பரிமாற்றம் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களில் நடக்கிறது. இவை எதனின் மீதும் நம்மால் நாம் விரும்பியபடி ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தி விட முடியாது. உடலுறுப்புக்களை அசைப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடிய செயல். அதன் பின் இயங்கு ரத்த ஓட்டம், சதை சுருங்கி விரிதல், எலும்பு நகர்வு எதையுமே நம்மால் ஊகித்து கட்டுப்ப்டுத்த முடியாது. நமது அறிவியலும் அந்த அளவிற்கு இன்னும் வளரவில்லை. நீங்கள் ஒருவேளை தற்கால மருத்துவ அறிவியலைக் கொண்டு, ஏன் இதையெல்லாம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள் என்றால், உங்களுக்கு இயற்கையின் உருவம் இன்னும் அகப்படவில்லை என்றே சொல்லவேண்டும். இங்கு நாம் பேசுவது அந்த இயக்கங்களுக்கான மூலத்தைப்பற்றி. 

இவ்வளவு விந்தைகளைக் கொண்ட உயிர் படைப்பான நாம் அதிகம் கவனம் செலுத்துவதெல்லாம், செயற்க்கையாக மனித சமுதாயம் வகுத்துக்கொண்ட நடைமுறைகளையும், விதிகளையும், மதிப்பீடுகளைப்பற்றியுமே. இவை மனித சமுதாயக்கூட்டத்தில் ஒரு ஒழுங்குடன் வாழ்வதற்க்கு ஏற்ப்படுத்திக்கொண்ட கட்டமைப்புகள். இவை மீறப்படும்போது அதற்க்கான விளைவுகளை நாம் சிறிதாகவோ, பெரிதாகவோ அனுபவிக்கக்கூடம். ஆனால் இந்த விளைவுகள் நாம் ஒப்புக்கொண்ட இந்த சமுதாய நடைமுறையின் ஒரு பகுதியே. இதற்க்கும் நம் உயிர் மூலத்திற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நம் அறிவுக்கு எட்டியவரையில் நாம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து விளைவுகள் இருக்கும். அந்த விளைவுகளை தாங்குமளவிற்கு மனம் பக்குவமடையவில்லையென்றால், நமக்கு முடிவெடுக்கும் பயிற்சி தேவை என்பதோடு கடந்து விடவெண்டும். இந்த மனித வாழ்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விற்கும் நம் செயல்களும், முடிவுகளும் அடிப்படையாக இருக்கின்றன. இவற்றை தவறு, சரி என்ற வகைப்படுத்தும் காரணிகள் கூட அந்த மனிதனின் புறச்சூழல் சார்ந்தது. ஒரு முடிவை ஆராய்ந்து எடுத்தபின் அதில் வரும் விளைவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் தாக்கம் நம்மீது இருக்கும். ஆனால் அது ஒரு போதும் உயிர் சார்ந்தது கிடையாது. இந்த உலகில் நாம் தேடிக்கொண்ட அறிவு சார்ந்தது. 

சமீபத்தில் நாம் பார்த்த அரசு அதிகாரிகளின் தன்னுயிர் மாய்த்தல் நிகழ்வுகள் ஒரு பக்கம் துயரத்தை ஏற்படுத்தினாலும், இன்னொருபக்கம் அந்த முடிவுகளுக்குப் பின் உள்ள சூழலை நாம் புறந்தள்ளிவிடக்கூடாது. ஒரு மனிதன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுப்பது சாதாரணமானதல்ல. அப்படி ஒரு முடிவை எடுக்கும் மன நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? அது போன்றதொரு முடிவை எடுக்காமல் தவிர்த்திருக்க முடியுமா? அவருக்கு வேறு ஏதும் வாய்ப்புகள் இருந்திருக்குமா? எதை எதிர்பார்த்து அவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டார்களோ, அவை அவர்கள் இறந்த பின் நிறைவேறிவிட்டதா? இந்த கேள்விகளுக்கு விடைகான, நம் மனதை நாம் உருவாக்கிக்கொண்ட புறச்சூழலில் இருந்து விடுவித்து, வாழ்தல் என்ற அடிப்படை நோக்கை மட்டும் கொண்டு சிந்திக்கவேண்டும். 

ஒரு அரசு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்? காரணம், அவரது மேலதிகாரியின் துன்புறுத்தலாலோ அல்லது அந்த அதிகாரி உருவாக்கிக் கொண்ட சுய மதிப்பீடுகளுக்கு ஆபத்து ஏற்படும்போது, உயிர் வாழ்தலை நிராகரிக்கிறார். இந்தச் சூழலில் அவர் வாழ்வை தொடர்வதற்க்கான காரணிகள் எவையாக இருக்கக்கூடும்? தன்னால் முழு ஈடுபாட்டுடணும் சுதந்திரத்துடனும் பணியாற்ற முடியாதபோது, அந்த பணியை துறந்துவிடலாம், அல்லது தன் புறச்சூழலை மாற்ற முயற்ச்சிக்கலாம். தன் புறச்சூழல்களான தனது பணி, மேலதிகாரி, துறை எதையும் மாற்ற முடியாதபோது அதைவிட்டு விலகிவிடலாம். விலகினாலும் ஏதோ ஒருவகையில் அழுத்தம் தொடருமென்றால், அந்த அழுத்தத்திற்கான காரணங்களுடன் சமரசம் செய்துகொள்ளலாம். 

இவற்றைச் செய்வதானால் சமுதாயத்தில் நாம் நம் மீது உருவாக்கிக்கொண்ட மதிப்பீட்டை உடைத்துவிடுவோம், அது எதிர்மறை விளைவை உண்டாக்கும் என்ற எதார்த்தம் இருந்தாலும், இந்த பூமிப்பந்தில் நம்மைச்சுற்றி இருக்கும் பத்துப்பேர்களின் அறிவில் நம்மைப் பற்றிய மதிப்பீட்டிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துவிடவேண்டியது தான். அந்த மதிப்பீட்டைக் காக்க இயற்கையின் அற்புதப் படைப்பை அழிக்க எடுக்கும் முயற்ச்சிக்குப் பதிலாக, சில சமரசங்களுடன் உயிர்களை புரிந்து கொள்வதிலும், அவற்றின் வாழ்விற்கு உதவுவதிலும், எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் முயலலாம். அவ்வாறான ஒரு தருணத்தில் அங்கு வாழ்வது ஒரு உயிர் அல்ல, ஓர் அற்புதம். அந்த உயிர் யாருக்கும் சொந்தமானதல்லாமல், இயற்கையுடன் இணைந்து கொள்கிறது. அங்கு வாழ்தல் மட்டுமே இருக்கிறது, இறப்பதற்க்கு வழிதேடும் மனிதர்கள் வாழ்வதற்கான காரணங்கள் பல உண்டு என்பதைப் புரிந்து கொள்ளும்போது, நம் வாழ்க்கைப் பயணம் இனிதாகிறது. வாழ்தல் உயிர்களுக்கானது...

Thursday, September 17, 2015

மொழி உரிமை மாநாடு 2015

தாய்மொழியில் பேசி, படித்து வாழ வழியேர்ப்படுத்திய நம் முன்னோர்கள், 1965 மொழியுரிமைப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழகத்திற்கென சில விலக்குகளை பெற்றுக்கொடுத்தனர். தமிழத்தை பொறுத்தவரை தமிழ் ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இருக்கிறது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாக விளங்குகிறது. மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் விரும்புபவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் நமக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மொழிக்கொள்கையால் ஏனைய மாநிலங்களை விட தமிழத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இது நமக்கு கணினித்தொழில் நுட்பத்துறையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. நம்மை ஆண்ட திராவிடக் கட்சிகளுக்கு நம் மொழியுரிமையை மீட்டுத் தந்ததில் பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் 1965க்குப் பிறகு மொழியுரிமைச் செயல்பாடுகள் சுனக்கம்கொண்டன. இயக்கங்கள் இந்த விடயத்தில் தன்னிறைவடைந்ததாக எண்ணிக்கொண்டனவோ என்னவோ. ஆனால் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து இந்தியை ஒட்டுமொத்த இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற பல்வேறு முயற்ச்சிகளை செய்து வருகின்றனர். இந்த முயற்சி, இப்போது பெரும்பான்மை அரசு அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூலம் பன்மடங்கு வீரியம் பெற்று விட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் அம்மையார் சுஸ்மா சுவராஜ் இந்தியை ஐ நா வில் ஆட்சி மொழியாகச் செய்ய முயற்ச்சி எடுப்பதாக அறிவித்துள்ளார். பல்வேறு தனித்தன்மை வாய்ந்த மொழிகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் எப்படி ஒரு மொழியை அந்த நாட்டின் அடையாளமாக காண்பிக்க முயல்கிறார்கள் என்பதே நமது கேள்வி. இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் சம உரிமையும் மரியாதையும் வேண்டும் இந்தத் தருணத்தில் இந்தியை ஒட்டுமொத்த இந்தியாவின் மொழியாக அறிவிப்பது ஏனைய மொழிபேசுபவரின் அடையாளங்களை அழிப்பதாகும்.

தமிழர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் பண்பாடு, மொழி, தேசியம் எதுவும் இந்தியையும், வட இந்தியாவையும் சார்ந்ததல்ல. சொல்லப்போனால் தமிழகம் இந்தியாவின் நிலப்பரப்பில் இணைந்திருக்கும் ஒரு தனிச்சிறப்பு கொண்ட மாநிலம். தமிழர்களின் வரலாறு, இலக்கியம், பண்பாடு எதுவும் இந்திக்கோ, வட இந்தியாவிற்கோ தொடர்பில்லாதது. அப்படியிருக்கையில் எப்படி இந்தி தமிழரின் ஆட்சிமொழியாகவும், அலுவல் மொழியாகவும், அடையாளமாகவும் இருக்க முடியும்?. இந்தியோ, வேறு எந்த மொழியோ தேவையான போது அதைத் தேவைப்படுவோர் கற்றுக்கொள்வதுதான் இயல்பு. அதைவிடுத்து இந்தியை இந்திக்கு சற்றும் தொடர்பில்லாத தமிழர்கள் மேல் திணிப்பது, தமிழர்கள் மீண்டும் தங்கள் உரிமைக்கான குரலை உயர்த்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுப் பணிகளில் தேர்வுகள் இந்தியிலும், மத்திய அரசு சார் நிறுவனங்களில் விண்ணப்பங்கள், அறிவுப்பகள் இந்தியில் எழுதப்படும்போது, அதன் தேவை சற்றும் இல்லாத தமிழர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு மொழிகளை தாய்மொழியாகக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தை மாதிரியாகக் கொண்ட ஒரு மொழிக் கட்டமைப்பை இந்தியா உருவாக்கிக்கொண்டு மொழிகளுக்கிடையேயான சிக்கலை தீர்க்க முனையவேண்டும் என்ற நோக்கில் வரும் செப் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் மொழியுரிமை மாநாடு சென்னையில் நடக்கவிருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாநாடு எழுப்பும் குரல் மொழியுரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பேருதவியாக இருக்கும். தமிழத்தின் பல்வேறு தமிழார்வ அமைப்புகளும் தலைவர்களும் கலந்துகொள்ளும் இந்த மாநாடு நமது வாழ்நாளில் ஒரு மிகச் சிறப்பு மிக்க நிகழ்வாக இருக்கும். முடிந்த வரையில் தமிழால் வாழும் நண்பர்களும், தமிழை இன்னும் பல்லாண்டு வாழவைக்கும் எண்ணம் கொண்ட் நெஞ்சங்களும் கலந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல்:

செப் 19 : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை,
                 சென்னை மியூசுஜ் அகாடமி அருகில் உள்ள கவிக்கோ அரங்கில்
                 கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன.

                இதில் மொழியுரிமைக்கான தீர்மானம் உருவாக்கப்படும்.
           
                தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு கி.த. பச்சையப்பன்
                தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர், திரு. பெ. மணியரசன்,
                தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்க நெரியாளுகைக் குழுத்தலைவர் திரு பா. செயப்பிரகாசம் மற்றும்,
                எழுகதிர் ஆசிரியர் திரு. அருகோ ஆகியோர்

                மாநாட்டுத் தொடக்கச் சிறப்புறைகளை ஆற்ற உள்ளனர். 

செப் 20: மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திர சேகர் திருமண மண்டபத்தில்

மாலை 2 மணி முதல் 3 மணிவரை : மொழியுரிமைத் தியாகிகள் நினைவேந்தல்

மாலை 3 மணி முதல் 5 மணிவரை :  மொழியுரிமைக்கான சென்னை பறைசாற்றத்தை வெளியிட்டு உரையாற்றூவோர்,

              திரு மணி மணிவண்ணன்- மொழியுரிமை முன்னெடுப்பு - தமிழ்நாடு, 
              பேரா. ஜோகா சிங், பஞ்சாப், 
              திரு தீபக் பவார் - மகாரஸ்டிரம், 
              பேரா. கர்கா சாட்டர்ஜி, மேற்கு வங்கம், 
              திரு. சாகேத் சாரு - கோசாலி/ஒடிசா, 
              திரு ஆனந்த்.ஜி- பனவாசி பலகா, கர்நாடகம், 
              பேரா. பி. பவித்திரன் - மலையாள ஜக்கியவேதி, கேரளம்,
              திரு வளர்மதி - தமிழ்நாடு, 
              திரு சேகர் கொட்டு - ஆந்திர பிரதேசம்,


 மாலை  5 மணி முதல் 9 மணி வரை : சிறப்புரைகள்

               தலைமை திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார், பேருர் ஆதினம், கோவை,
              வரவேற்புரை தோழர் பாவேந்தன், தமிழ்தேச நடுவம்,
              அறிமுகவுரை திரு. ஆழி செந்தில்நாதன்,

நமது மொழி, நமது அதிகாரம், மாநாட்டுச் சிறப்புறைகள்

             தலைமை  திரு. பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி,
            திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி,
            திரு. எம்.எச். ஜவாகிருல்லா, மூத்த தலைவர், மனிதநேய மக்கள் கட்சி,
           தோழர் சி.மகேந்திரன், தேசியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
           திரு. தி. வேல்முருகன், நிறுவனர் - தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
           திரு சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி,
           திரு சுப. உதயகுமாரன்ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்,

இன்னும் பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள்.                 

Wednesday, September 2, 2015

காட்சிப் பிழை

எங்கோ ஒரு புள்ளியில் தொடங்கி ஓட ஆரம்பித்து இன்று நாம் நிற்க்குமிடத்தில் நின்று திரும்பிப் பார்க்கும்போது கால் தடத்தின் தொடக்கம் நம் கண்களுக்கு தெரியவில்லை. நாம் சிறுவர்களாக இருந்த போது நம்மிடம் இருந்த நேரமும் மகிழ்ச்சியும் இப்போது நம்மிடம் இல்லை. அதைத் தேடி அலைந்து முடிவில் சிறுவர்களாகவே மாறிவிட வேண்டும் என்ற ஆசை வந்து சேர்ந்து ஒட்டிக்கொண்டது. காலம் நம்மிடம் மாற்றத்தை திணித்துக்கொண்டே இருக்கிறது - நாம்விரும்பாவிட்டாலும். என்றுமே நேற்றைப் போல இன்றும், இன்றைப் போல நாளையும் இருக்கப்போவதில்லை. வருடத்திற்கு இரண்டு பண்டிகைகள் புதுத்துணி கொண்டுவந்து சேர்க்கும். ஆனால் ஆடைகள் எப்போதுமே ஒரு பற்றாக்குறையை உணர்த்தியதில்லை. எனக்கு மட்டுமல்ல எம் பெற்றோருக்குமே. எமது பெற்றோர் ஒரு போதும் பத்து மணி நேரத்திற்கு மேல் பொருளீட்ட கடமையாற்றிக் கொண்டிருக்கவில்லை. ஓட்டு வீடுதான் ஆனால் ஒருபோதும் புழுக்கத்தையும் வெறுமையையும் உணர்ந்ததில்லை. எளிய உணவுதான், ஆனால் ஆத்ம திருப்தி கொடுத்தது. கேளிக்கைகள் அதிகமில்லை, இருந்தும் நண்பர் பட்டாளம் குதூகலத்தைத் தந்தது. 

தொன்னூறுகளில் பதினைந்தாயிரத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அதிகாரியை அதிகம் பார்க்க முடியாது. ஆசிரியர்கள் மட்டுமே இந்தச் சமூக கூட்டத்தில் அதிகம் சம்பாதிப்பவர்கள். அவர்களே சமூகத்திற்கு சீட்டுச் சேர்ப்பது, அவசரத்திற்கு வட்டிக்குக் காசு கொடுத்து உதவுவது போன்ற சமூக பொருளாதாரச் சுமைகளை குறைக்கும் சேவையை செய்து வந்தனர். இரண்டாயிரம் சம்பளம் வாங்குவது சராசரி வேலைக்குச் செல்லும் எவருக்கும் கை வந்தது. அன்றைய விலைவாசியும் ஓரளவு சம்பளத்திற்கு ஈடு கொடுக்குமளவிற்கு இருந்தது. சில சாமர்த்திய குடும்பத்தலைவிகள் அதிலும் சேமித்து குடும்பத்திற்குச் சொத்து சேர்த்தனர். எட்டு ரூபாயில் கோயம்புத்தூர் போய்விடலாம், 4 ரூபாயில் திருப்பூர் போய்விடலாம். 

கல்விக்கென தனி செலவேதும் இல்லை. அதிக பட்சம் கணித டியூசனுக்கு மாதம் முப்பது ரூபாய் கொடுக்கவேண்டியிருக்கும். மற்றபடி அரசுப் பள்ளியில் அனைத்துக் கல்வியும் கிடைத்தது. இங்கு 'அனைத்து' என்பது பாடப்புத்தகத்தில் இருக்கும் கல்வியைத்தாண்டி, சமூகக் கல்வி, பொருளாதாரத்தின் பல்வேறு நிலைகளில் இருந்து வரும் சக மனிதர்களின் வாழ்க்கை, கைத்தொழில் (பள்ளியில் ஒரு பாடம்) என்ற அனைத்தும். ஒரு சமூகத்தின் அத்தனை வகைமனிதர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தோல்விகள், அவமானங்கள் எப்போதும் மன விரக்தியை ஏற்படுத்தியதில்லை,காரணம் அவை பழக்கப்பட்டு விடும். சைக்கிள் மட்டுமே தனி நபர் வாகனம் என்பதால் கூடுதல் செலவில்லை என்பது கூடுதல் லாபம். 

இன்றோ மாதம் ஐம்பதாயிரத்திலிருந்து எண்பதாயிரம் ரூபாய் வரை சம்பளம். வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடன் தவணை 15 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரம் வரை. குழந்தைகள் பள்ளிக்கு ஐந்தாயிரம் முதல் எட்டாயிரம் வரை. வீட்டுச்செலவு இருபதாயிரம், மின்சாரக் கட்டணம் நாலாயிரம், வாகனச் செலவு மூன்றாயிரம் என்று கணக்கு எழுதி கடைசியில் மீதம் என்று ஏதும் இருப்பதில்லை. ஆனால் வேலை நேரம் 10 முதல் 15 மணி நேரங்கள், அக்கம் பக்கம் பழகாத அடுக்குமாடி குடியிருப்பு வாழ்க்கை, நாளும் கூடிக்கொண்டே போகும் வேலைச் சுமை, வேலை நிலைத்தன்மையின்மை, உடல் நலத்தின் மீது கூட அக்கறையின்மை. 

காலத்திற்கு ஏற்ப புதிய நோய்களும், அந்த நோய்களுக்குச் சிகிச்சை மற்றும் மருந்துகள் என்று எண்ணிப்பார்க்கவே முடியாத சிக்கல்கள் மற்றும் செலவுகள். குடும்பங்களிலும் உறவுகளுக்கிடையிலான நெருக்கம் குறைந்து கொண்டேவருகிறது. 

ஒரு புறம் பொருளாதார வளர்ச்சி, தனிமனித ஊதியம் உயர்ந்துள்ளது, வாங்கும் திறன் அதிகமடைந்துள்ளது என்றுபொருளாதார வியாக்கானம், மறு புறம் மனிதனின் உழைப்பையும் நேரத்தையும் உறிஞ்சிக்கொண்டாலும் பெரிதாகசேமிப்போ குடும்பங்களுடன் நேரம் கழிக்கும் வாய்ப்போ பெரிதாக இல்லாதிருப்பது பெரும் சோகம். அன்று கிராமத்தில் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவரின் வாழ்க்கையை இன்று ஐம்பதாயிரம் வாங்குபவரால் வாழமுடியாது. பின் இந்தப் பொருளாதார முன்னேற்றம் என்ற மாயை நமக்கு எதைத் தந்திருக்கிறது? உண்மையிலேயே இது முன்னேற்றமா?. எதுவாக இருந்தாலும் நாம் பின்னோக்கிச் செல்லமுடியாத ஒரு காட்சிப் பிழையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் நிதர்சனம். சக மனிதர்களிடம் அன்பையும், பண்புள்ள குழந்தைகளையும் வளர்த்தெடுப்பதைத் தவிர இந்தச் சமூகத்தில் நாம் சேர்க்கப்போகும் செல்வமும், இன்பமும் வேறெதுவும் இல்லை.