Sunday, June 7, 2020

கொரோனா என்னும் பித்த மருந்து

உடம்பில் வலுவும் மனதில் திமிரும் இருக்கையில் சக மனிதர்களை மனிதர்களாக மதிப்பதில்லை. அலுவலகத்தில் கூட வேலை செய்பவன் போட்டிக்காரன். எதிர்வீட்டுக்காரன் பொறாமைக்காரன். உதவிகேட்டால் கடங்காரன், கொடுத்த காசு திரும்பி வரவில்லையென்றால் ஏமாற்றுக்காரன், இப்படி எல்லோருக்கும் நல்ல பெயர் கொடுத்து நாமும் நல்ல பெயர் வாங்கி வைந்திருக்கிறோம். நாளைக்கு தன்  தலையெழுத்தை மாற்றப்போகும் அரசியல் எது என்று தெரியாமல்  தங்களுடைய அரசியலுக்கு ஏற்ற ஆட்களைத் தலைவராக எடுத்து வைத்து சொற்போர் செய்கிறோம். பிரித்தாளுவது அரசியல் என்ற நிலை போய், அரசியலே ஆட்களைப் பிரிப்பது என்றாகிவிட்டது.
இப்படி ஓடி ஓடி ஓடி.. ஒரு முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில்..

எங்கோ சீனாவில் வைரஸ் காச்சல் வேகமாக பரவி ஆட்களைக் கொள்கிறது என்ற செய்தி வருகிறது. எப்பவுமில்லாதது போல் என்ன புது வைரஸ்? எதாவது மருந்து கம்பெனிக்காரன் பரப்பி விட்டுருப்பான் என்ற எதார்த்த புரிதலைத்தாண்டி "வைரஸ் - ஆபத்தானது" என்று அச்சுறுத்துமளவு ஆட்பலி எண்ணிக்கை ஏறி நிற்கிறது. அமெரிக்காவிடம் அடங்கிப்போக அமெரிக்கா செய்த சதிவேலையோ என்று செர்லாக் கோம்ஸ் போல் துப்புத் துலக்குகிறது அப்பாவி மனது.

எதுக்கு ஏறுது எதுக்கு எறங்குது என்று ஒரு நெப்பு நிதானமில்லாமல் குடிகாரன் போல ஏறி இறங்கிய பங்குச் சந்தைக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. போயிங் கொண்டுபோனதை டெஸ்லா கொண்டுவந்துரும்னு நம்பிக்கொண்டிருந்த காலத்தில் விக்ஸ் தடவி ஆறுதல் கொடுக்கிறது சந்தை.
வைரஸ் பரவினால் ஆட்கள் பலியாவது உறுதி. அதனால் வேலைக்குப் போவது குறையும். ஆலைகள் உற்பத்தி செய்ய முடியாது. உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ஆட்கள் இருக்க மாட்டார்கள் என்ற நிலையில், வைரஸ் காய்ச்சலுக்கு வட்டி குறைத்து நிலவேம்பு கசாயம் கொடுக்கப் பார்க்கிறார் டிரம்ப். இது சப்ளை பிராப்ளம் இல்லை, டிமாண்ட் பிராப்ளம் இதுக்கு எதுக்கு வட்டியைக் குறச்சு கைக்காச வீணாக்குகிறாய் என்று கேட்கத் தோணுகிறது. இதையும் வாங்கி ஏப்பம் விட்டுவிட்டு மீண்டும் பசியெடுத்துக் காத்திருக்கிறது பங்குச் சந்தை.

இன்று 8 பில்லியன் டாலர் கொராணா எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா செலவிட முடிவெடுத்த செய்தியறிந்தவுடன் துள்ளிக் குதித்து விளையாடிவிட்டான் குட்டிசுவர்த் தெருக்காரன்.
ஊரில் யார் இறந்தாலும் தான் உயிருடன் இருக்க வேண்டும் என்று ஒரு கூட்டம். ஒன்று தேவைப்படுபவன் 10 ஹாண்ட் சனிட்டைசர்களை கடையிலிருந்து அள்ளிச் செல்கிறான். அத்தியாவசியத் தேவைக்குக் கூட இல்லாமல் சுத்தமாக வளித்து வைத்திருக்கிறார்கள் எல்லா பலபொருள் கடைகளிலும். வைரவஸ் கூட நல்ல வியாபரம்தான் இங்கே..

சளியும் காய்ச்சலும் இருந்தால் கொரோன அறிகுறியாம்.. சளி வந்துவிட்டது.. காய்ச்சல்தான் இன்னும் வரவில்லை... எதற்கும் இஞ்சிக்கசாயமும், நிலவேம்பு கசாயமும் தயாரக வைத்திருக்கிறேன். எந்த வைரஸ் வந்தாலும் தமிழனின் கண்டுபிடிப்பான நிலவேம்புக் கசாயம் முறியடித்துவிடும் என்ற உண்மை தெரிந்தபின் எதற்குக் கவலை..?

"சாகும் நாள் தெரிந்துவிட்டால், வாழும் நாளெல்லாம் நரகம்" என்று சூப்பர் ஸ்டாருக்கு வைரமுத்து எழுதிய வசனம் எவ்வளவு மொக்கையானது என்று இப்போதுதான் தெரிகிறது.
சாகப்போகிறவன், சந்தோசமாகவே இருக்கிறான். அவன் மனிதர்களை கூடுதலாக நேசிக்கத் தொடங்குகிறான். இருக்கப்போகும் ஒவ்வொரு விநாடியையும் வாழ நினைக்கிறான். வாழும் வரை இருப்பவர் நினைவில் தன் நல்ல பிம்பத்தை பதியவைக்க நினைக்கிறான். அவனிடம் இழப்பதற்கு எதுவுமில்லாத மன நிலையில், இந்த உலகில் இருப்பதெல்லாம் அவனுடையதாகிவிடுகிறது. அங்கு போட்டிகளில்லை, பொறாமையில்லை..


அன்பும் பேரின்பமும் மட்டுமே நிறைந்திருக்கிறது...

ராஜா சவுண்டு சர்வீஸ்

ஒரு ஊரில் ஒரு சவுண்டு சர்வீஸ்.. அதன் பெயர் ராஜா சவுண்டு சர்வீஸ்... எல்லாக் கடைகளையும் போல அந்தக் கடையும் ஊரின் கடைவீதியில் மக்கள் கூடுமிடத்தில் இருந்தது. திருமண விழாவிற்கு ஒலி பெருக்கிகள், பொதுக்கூட்டங்களுக்கு மைக் செட், கூம்பு ஒலிபெருக்கிகள் முக்கிய வீதிகள் எங்கும் உயர்ந்த மரங்களில் கட்டி உணர்ச்சிகர அரசியல் உணர்வை ஊராருக்கு ஊட்டியதில் பெரும் பங்கு ராஜா சவுண்டு சர்வீசுக்கு உண்டென்றால் அது மிகையில்லை... கடவுள் மறுப்பு, சுயமரியாதை என்று புரட்சிகர சிந்தனைகளை விதைத்துவிட்டு புரட்டாசி, கார்த்திகையில் அம்மன் அருள், முருக கவசம், ஐயப்ப கோசங்களைக் காற்றில் பரவவிட்டு ஊரைக் கடவுளிரின் கட்டுப்பாட்டுக் கொண்டுவந்துவிடுவர்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு, கோவில் திருவிழாக்களுக்கு, பொதுக்கூட்டங்களுக்கு சிறந்த முறையில் ஒலிப்பெருக்கி, மைக் செட், அலங்கார விளக்குகள் அமைத்திட அணுகவும் "ராஜா சவுண்ட் சர்வீஸ்.. ராஜா சவுண்ட் சர்வீஸ்.. சத்தி மெயின்ரோடு.. புஞ்சை புளியம்பட்டி" என்று எக்கோவில் இடையிடையே விளம்பரம் செய்துகொள்ளும் அந்த மல்லிகைப்பூ.
இந்தச் சமூகக் கடமைக்கிடையில் ஆல் இந்திய ரேடியோவின் சென்னை, கோவை வானொலிகள் வழியே கட்டுப்பாட்டில் தவழ்ந்த இளையராஜாவின் இசையை கட்டற்ற காட்டருவியாக்கிய பங்கும் ராஜா சவுண்டு சர்வீசுக்கு உண்டு. T Series 60, 90 என்ற கேசட் (ஒலி நாடா) மூலம் விருப்பமான பாடல்களை எழுதிக் கொடுத்தால் இரண்டொரு நாளில் பாடல்களை கண்டெடுத்து கணகச்சிதமாக பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். 60 நிமிடம் ஓடக்கூடிய ஒலிநாடாவிற்கு 60 ரூபாயும், 90 நிமிடம் ஓடக்கூடிய ஒலிநாடவிற்கு 75 ரூபாயும் கட்டணம். 60 நிமிட ஒலி நாடாவில் ஒரு பக்கத்தில் 5 முதல் ஆறு பாடல்கள், அடுத்த பக்கம் இன்னொடு 5 பாடல்கள் பதிவு செய்து கொடுப்பார்கள்.
Echo Recording Company - Home | Facebook
ஒரே படப்பாடல்களை மட்டுமே கம்பெனிக்காரர்கள் ஒரிஜினல் கேசட்டுகளாகக் வெளியிட்ட வேளையில், தனக்குப் பிடித்த வெவ்வேறு படப் பாடல்களை ஒரு தொகுதியாக ஒரு ஒலி நாடாவில் கேட்பது அன்றைய ஜூக் பாக்ஸ் பிளே லிஸ்ட். வானொலியில் விரும்பிய பாடல்கள் அவ்வப்போது ஒலி பரப்பினாலும் அவற்றைக் கேட்க அவர்கள் விருப்பப் பட்ட நேரத்தில் தான் முடியும். ஆனால் ஒரு இசை ரசிகனுக்கு, குறிப்பாக ராஜாவின் ரசிகனுக்கு காதிலியின் நினைவை மீட்டெடுக்கும் வேளையில், கையில் காசில்லாமல் கவலை குடிகொண்டிருக்கும் நேரத்தில், செல்ல நாயின் மறைவு, காரணமில்லாத சோகம் மற்றும் மகிழ்ச்சியைக் கரைக்க ராஜாவின் கங்கை அருவியை ராஜா சவுண்டு சர்வீசில் பதிவு செய்து வாங்கிய ஒலிநாடாக்களே கட்டவிழ்க்கும்.
ஒரு நேரத்தில் ஒரு பாடல் இளையராஜவினுடையா பாடல் எந்தப் படத்தினுடையது என்ற விவாதத்தில் அந்த இளைஞர்கள் 10 ரூபாய் பந்தையம் வைத்து ராஜா சவுண்டு சர்வீஸ் அண்ணனின் உதவியை நாட.. அவர் இரண்டு பேரும் சொல்லும் படத்தின் பாடல்களை ஒலிக்கவிட்டு தீர்ப்பை வழங்கினார்.. அவர் வெறும் ஒலி அமைப்பாளரில்லை.. நீதி தேவன் என்றும் அமைதியாக நிரூபித்துவிட்டார்..

செல்வம் சலூன், பாபு டெய்லர் கடைகளில் எப்போதும் இளையராஜா பாடல்தான் ஒலித்துக் கொண்டிருக்கும். சலூன் கடை ஸ்பீக்கர்கள் மற்றும் ஆம்ளிபையர் ராஜாவின் இசையைக் கொஞ்சம் தூக்கலாகக் கொடுக்கும். அது டிவிக்கள் ஆக்கிரமிக்காத சலூன்கடைகளின் ராஜ போதைக் காலம். பாபு டெய்லர் கடையில் தைக்கும் நாலைந்து டெய்லர்களும் 30 வயதைத் தாண்டியவர்கள். அங்கு பாபு என்னும் தலைமை டெய்லர் வாடிக்கையாளரின் அளவெடுத்து அதற்கேற்ப அவர்கள் வாங்கிக் கொண்டுவந்த துணிகளை வெட்டி சக டெய்லர்களிடம் கொடுப்பார். அவர்கள் பாடல்களை ரசித்தபடி கால்கல் தையல் மெசினை மிதிக்க கைகள் வளைத்து வளைத்து துணிகளை ஊசியின் குதிரைகளுக்கிடையில் நகர்த்தி அழகான ஆடைகளை உருவாக்கிவிடுவர். காஜா பாய் என்றொரு சிறுவனும் இருப்பான். அவன் புதிதாக தையல் கற்றுக்கொண்டு வருங்காலத்தில் பாபுவைப் போல பெரிய தையல்காரனாக வேண்டும் என்ற கணவு கொண்ட அப்ரண்டீஸ். சர்ட் மற்றும் பேண்டுக்கு பட்டன் தைப்பது, பட்டன் நுலையும் ஓட்டை காஜா, அதைக் கையால் தைப்பது போன்ற வேலைகளை செய்வான்.

இவர்கள் அதிகம் பேசிக்கொள்வது ராஜாவின் இசை வழியேதான். எலோருக்குள்ளும் எதையோ எடுத்தும், வைத்தும், தைத்துக் கொண்டே இருக்கிறார் ராஜா.. அவரவர்க்கான அளவுகளில்..காலை மற்றும் மாலை வேளைகளில் கடந்து செல்லும் இளங்கன்னிகளுக்கென்ற பாடல்கள்

வா வெண்ணிலா.. உன்னைத் தானே வானம் தேடுது...

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி...

ஒரு ஜீவன் அழைத்தது மறு ஜீவன் துடித்தது...

ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு.. காத்தாடி போலாடுது.. (பள்ளி.. கல்லூரிகள் விடுமுறையான சனி மற்றும் ஞாயிறு..)

அந்தந்த நேரத்தில் ஒலிக்கவிடப்படும். 10க்கு 10 தான் கடையின் அளவு, ஆனால் அதற்குள் அந்த ஐயவரின் பேரண்டத்தை அடைத்து வைத்திருந்தார் ராஜா.
வேலைக்குச் செல்வோர், கல்லூரிக்குச் செல்வோர்களை பயணக்களைப்புத் தெரியாமல் நகர்த்துவதும் ராஜாதான். ராஜாவின் பலநூறு முத்துக்களில் பத்திருபதைக் கோர்த்து அந்தக் காலையையும் மாலையையும் காதலால் நிறப்பிவிடுவார் அந்தப் பெரும் ரசிகரான ஓட்டுனர்.

ஒரு நாளும் உனை மறவாத வரம் வேண்டும்...

புண்ணை வனத்து குயிலே...

மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையோ...

நீதான நீதான அன்பே நீதானா...

ராஜ ராஜ சோழன் நான்....

அந்த இளைஞனும் கன்னியும் காதல் வயப்பட்டுப் பின்னாளில் பேசாமலே பிரிந்து சென்ற போனபோதாகட்டும், அந்த இளமையான காதலை அவர்கள் வாழ்நாள் முழுதும் அவர்கள் இருக்கு இரு துருவங்களில் அசைபோட்டக் கொள்ள வைப்பதுவும் ராஜாவின் இசை மதுவே.

இப்படி காற்றைப்போல கலந்திருக்கும் ராஜாவின் இசையை ஆக்சிசன் சிலிண்டரைபோல கேசட்டில் நிறப்பி மூச்சை நிறுத்த விருப்பமில்லாத ஜீவன்களின் மூச்சுக் காற்றாகக் கொடுத்த ராஜா சவுண்டு சர்வீஸ் ஒரு சஞ்சீவிதான். அந்த ராஜா சவுண்டு சர்வீசுக்கு மூச்சைக் கொடுத்த ராஜா ஒரு கடவுளே..