Showing posts with label சிந்தனைக்கு. Show all posts
Showing posts with label சிந்தனைக்கு. Show all posts

Tuesday, June 27, 2017

கைக்கெட்டும் தூரத்தில் வாய்ப்புகள்

கடந்த இருபதாண்டுகளில் பொருளாதார தாரளமயமாக்கல் மூலம் நமது மனிதவளத்தை கணினித்துறையில் பயன்படுத்தி வெற்றிகண்டது நமது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பெரும் சாதனை எனலாம். ஆனால் அந்த வெற்றியொன்றே நமது வருங்கால சந்ததியினருக்கும் பயணளிக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. வற்றாத மனிதவளத்தை வைத்து நம் நாடு தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பேற்படுத்தும் புதிய துறைகளைக் கண்டெடுத்து அதில் முதலீடு செய்யவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பைப் பற்றியே இங்கு பார்க்கப்போகிறோம்.

இலன் மஸ்க், அறிவியலின் மூலம் மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பெரும் கனவுகள் கொண்ட மனிதர். SpaceX என்ற வின்கலன் செலுத்தும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம், Tesla என்ற மின்னாற்றலில் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம், SolarCity என்ற சூரிய ஒளியில் மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றை உருவாக்கி நடத்தி வருபவர். பேரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழலுக்கு கேடு விளைவிக்காத ஆற்றல் சக்திகளைப் பற்றி பெரும் விவாதங்களை உருவாக்கியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த மஸ்க், டிரம்பின் பேரிஸ் ஒப்பந்தத்தைக் கைவிடும் முடிவிற்குப் பின்னர் அதை எதிர்த்து ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேரினார்.

நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன் எரிகாற்று போன்ற பூமியிலிருந்து கிடைக்கும் அத்தனை சக்தி மூலங்களும் அளவில் மட்டுப்பட்டவை. அவை எப்போதுமே கிடைப்பவையல்ல. எடுக்க எடுக்க குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் காலியாகிவிடக்கூடியவை. அவற்றை எடுப்பதால் பூமி எவ்வாறு பிற்காலத்தில் பாதிக்கப்படும் என்ற தொலை நோக்கு ஆராய்ச்சியெல்லாம் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. சூழலைப் பாதிக்கும் இது போன்ற ஆற்றல் மூலங்களை விட்டு விட்டு, எளிய மட்டற்ற ஆற்றல் மூலங்களான சூரிய ஒளி, வெப்பம், காற்று , கடலலைகள் போன்ற சக்திகளில் முற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் நாட்டம் செழுத்த ஆரம்பித்து விட்டது. சுவீடன் தனது ஆற்றல் தேவை முழுமையையும், சூரிய ஒளி மற்றும் காற்றாலையின் மூலம் உருவாக்கிக் கொள்கிறது.

பெரும்பாலான நமது எண்ணைப் பயன்பாடு வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலாகவும், பெட்ரோலாகவும இருக்கிறது. உலகின் சில நாடுகளே இந்த எண்ணை வளங்களைப் பெற்றிருக்கிறது. அந்த நாடுகள் அல்லது அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளே உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன. வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல் மூலங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியுமானானல் உலக அரசியல் இன்று போலவா இருக்கும்

இலன் மஸ்க்த், மின்னாற்றல் மூலம் இயங்கும் கார்களை(Tesla) உருவாக்கும் ஆலையை நடத்துகிறார். ஒரு முறை இவரிடம் காரை வாங்கிவிட்டால் அதன் ஆயுளுக்கும் கார் உரிமையாளர் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. நாடெங்கும் பரவியுள்ள இந்த நிறுவனத்தின் மின்னூட்டி நிலையங்கள் மூலம் இந்தக் கார்களின் சக்தியை புதுப்புத்துக்கொள்ளலாம். சரி இந்த மின்னூட்டி நிலையங்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது? அதை சூரிய ஒளியிலிருந்து தனது மற்றொரு நிறுவனமனான சோலார் சிட்டி மூலம் உருவாக்கிக் கொள்கிறார். எளிமையான திட்டம் என்றாலும் இது எதிர்காலத்தில்  வாகனப்போக்குவரத்து, சந்தைப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

அதுபோலவே தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டுவரும் தானியங்கி வாகனப்பயன்பாடு. சாலையின் சூழலுக்கேற்ப வாகனங்கள் தம்மைத் தாமே இயக்கிக்கொள்ளும் நுட்பம், போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. ஒரு புறம் இது ஓட்டுனர் போன்ற வேலை வாய்ப்புகளை இல்லாமல் செய்தாலும், இந்த வாகனங்களை உற்பத்தி செய்தல், பழுதுபார்த்தல், மேலாண்மை செய்தல் என்று புதிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.

ஊருக்கு ஊர் பொறியியல் கல்லூரிகளைத் திறந்து கணினி வல்லுனர்களை உருவாக்கிக் கணினித் துறையை இந்தியாவில் அதிகம் பயன்படுத்திக் கொண்ட தமிழகத்திற்கு, வருங்கால வாகனத் தொழில் நுட்பத்தில் மிகப் பெரும் வாய்ப்பிருக்கிறது. இயந்திரவியல் மற்றும் வாகனத் தொழில் நுட்பத்தில் கோவையை மையமாகக்கொண்ட புகழ் பெற்ற கல்வி நிலையங்களும், ஜிடி நாயுடு போன்ற அறிவியல் ஆர்வலர்களும் பல சாதனைகளைச் செய்திருப்பது இயந்திரவியலில் நமக்குள்ள அறிவுத் திறனைச் சொல்லும்.

திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலத்தில, அதாவது 1984ல் IRTT என்ற சாலை மற்றும் போக்குவரத்து தொழில் நுட்பக்கல்லூரி ஈரோ துவங்கப்பட்டது. இந்த கல்லூரியின் நோக்கம் வாகனப் போக்குவரத்துறையில் வல்லுனர்களை உருவாக்குவது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பங்களிப்பினாலும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பாகத் தொடங்கி, இன்று காலத்தின் தேவைக் கேற்ப கணினி, மின்னணுவியல் போன்ற துறைகளில் வல்லுனர்களை உருவாக்குகிறது.

தமிழக அரசு தனது கல்விக் கொள்கையில் தொழில் நுட்பக் கல்வியில் மரபுசாரா எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்பம், தானியங்கி வாகனத் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இந்த இரு பெரும் துறைகள் வருங்காலத்தில் பெரும் சந்தையை உருவாக்கப் போகிறது. அதற்கான அறிவுத்தேவையை தமிழகம் கைக்கொள்ள வேண்டும்.

அதற்கென கல்வி மையங்களை உருவாக்கி அதில் இந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்கவும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள வாகனத்தயாரிப்பு நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த முன்னெடுப்பைச் செய்யும்போது கூடுதல் பயன் கிடைக்கும்.

இதன் மூலம் புதிய தொழில்நுட்பச் சந்தையில் முதலிடத்தையும், புதிய வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்

Thursday, April 27, 2017

கல்வியும் பாடமும்

அக்கவுண்ட்ஸ்- பெயரைக்கேட்டாலே தெரிக்க வைத்த பாடம். வேறு வழியில்லாமல் இளநிலை, முது நிலை பாடங்களில் படித்து தேர்ச்சி பெறவேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் படித்தது. C, C++, Java என்று மோட்டு வளையைப் பார்த்து கனவு கண்டுகொண்டிருந்த போது, விதி Tallyஐ- வேண்டா வெறுப்பாக படித்து புலமை பெற்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. இப்போது வேறு ஒரு முயற்சிக்காக மீண்டும் பொருளாதாரக் கணக்கியலைப் படிக்க வேண்டிய சூழல். ஒன்றிரண்டு பாடங்கள் முடித்த பின் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நானறிந்த சில B.Com படித்த நண்பர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தொழிலைவிட்டு வெளியேற எண்ணிக்கொண்டு சில காரணங்களைச் சொன்னார்கள். அந்தக்காரங்களுக்கான விடை அவர்கள் கற்ற கல்வியிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்து படித்திருப்பார்களா என்று கேள்வி எழுகிறது.


ஒருவர் தன் துறையின் எதிர்காலத்தைக் கணித்து முடிவுகளெடுக்க தவறியவர். இன்னொருவர் அடிப்படைக் கணக்குகளைக்கூடச் சரிவர செய்யாதவர்.


தொழில் செய்பவர்களுக்கு முக்கியமான தேவை, Market Sense. அதாவது சந்தை அறிவு, கூடவே தனது தொழிலை சந்தைக்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்வது. இதைச் சுட்டிக்காட்ட பயன்படுவதே கணக்குகளின் மூலம் கிடைக்கும் நிலைகாட்டிகள்(Indicators). அதாவது லாபம், நட்டம், இயங்கு செலவுகள், சந்தை செல்லும் போக்கு போன்றவை. மோசமான சூழலில் இவை ஒன்றைச் சொல்லும், அதாவது தொழிலை விட்டு வெளியேறும் தருணம். இதைக் கணிக்க முடியாமல்தான் இவர்கள் சுழலுக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.


ஆக கல்வியில் குறையில்லை, பாடங்களைக் கற்றுக்கொள்ளாதவர்களின் குறையே தோல்விக்குக் காரணம் என்று சொல்லலாம்.

Wednesday, December 21, 2016

சதுரங்கவேட்டை

பள்ளிக்கூடத்தில் புத்தகத்தில் தமிழக வரலாறு படித்த போதெல்லாம் தமிழ் மன்னர்கள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அழித்தும், காட்டிக் கொடுத்தும் அந்நியரிடம் நாட்டை இழந்தார்கள், அடைமைப்பாட்டார்கள் என்பதுதான் பாடமாகச் சொல்லப்பட்டது.

இப்போதும் அந்த வரலாற்றுப் பாடங்கள் அப்படியே நமது நிகழ்கால அரசியலுக்குப் பொருந்தும். திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டு காங்கிரசின் கைப்பாவையாகி ஈழ விவகாரத்தில் துரோகமிழைத்து, தமிழர்களின் நலனை காவு கொடுத்தது. இப்போது அதிமுக பாஜகாவிடம் மாட்டிக் கொண்டு அலறுகிறது. இதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையென்ன என்று போகப்போகத்தான் தெரியும்.

தமிழகம் போன்ற தன்னாட்சி அதிகார வேட்கை கொண்ட மக்களை ஆளும் கட்சிகள் ஒருபோதும் காங்கிரஸ், பாஜக போன்ற ஒற்றை அதிகார மையத்திற்கு அடிபணியக்கூடாது. இந்திய அளவில் மாநிலக்கட்சிகளுடன் கூட்டணியமைத்து மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு தமிழகம் தாண்டி அரசியல் செல்வாக்கைச் செலுத்தும் வல்லமை வேண்டும். அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளிகளை அடையாளம் கண்டு அதன்மீது அரசியலைக் கட்டமைக்க வேண்டும்.

இவை எதுவும் முடியாதென்றால், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யவாவது தெரிந்திருக்க வேண்டும்.

அதுவும் முடியாதென்றால், ஓரமாக ஒதுங்கிவிட்டு புதியவர்களுக்கு வழியைவிட்டுவிடலாம்.

Friday, November 13, 2015

மழைக்கால பாதுகாப்பு

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையைக் கொண்டாடியும், கோபித்தும் பல பதிவுகளை எழுதியாகிவிட்டது. மின்சாரமில்லை, மீட்பு நடவடிக்கைகள் இல்லை என்ற குரல்கள் ஒரு புறமும், அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒருபுறமும் நடந்து கொண்டிருக்க, நம்மாலான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நம்மை பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும்.


1. மழை தொடரும் என்று வானிலை அறிக்கை தெரிவிப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். தாழ்வான பகுதியில் இருப்பதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. இது போன்ற அவசர காலங்களில் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருட்களை ஒன்றிரண்டு வாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3. சாலைகளில் தண்ணீர் தேங்கி, சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் இருந்தால், அந்த சாலையை தவிர்திடுங்கள். மழையின் நீரோட்டத்தால் பாலங்கள், சாலைகள் உடைந்து பெரும் குழிகள் இருப்பது மேலிருந்து பார்த்தால் தெரியாது. அது போன்ற இடங்களில் பயனிக்கும் போது வாகனத்துடன் நீரீல் மூழ்கும் அபாயம் உண்டு. அவ்வாறான சூழல்களில் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்த அளவு பயணங்களைத் தள்ளிப் போடுவது பாதுகாப்பானது.

4. மரங்கள், மின் கம்பங்கள், கட்டிட வேலை நடக்கும் இடங்களில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையினால் இவை பாதிப்படைத்து விழுவது மட்டுமல்லாமல் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடும்.

5. மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தாலோ, அருகில் நெருங்க வேண்டாம். உடனடியாக மின் வாரியத்திற்கும், உங்கள் பகுதி உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கவும். வேறு யாரும் நெருங்காமல் இருக்க, சிவப்பு துணிகொண்டும்/ தடுப்புகள் அமைத்தும் எச்சரிக்கை செய்யுங்கள்.

6. மழை காலங்களில் தண்ணீர் நிலத்தில் தேங்கும் போது, நிலத்தில் வாழும் பாம்பு, எலி போன்ற உயிரினங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வெளியே வரும். கவனமுடன் இருப்பது நல்லது.

7. மழைக் காலங்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் தண்ணீரில் பரவும் கிருமிகள் காரணமாக நோய்த்தொற்று ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவற்றுள் காலரா, டெங்கு போன்ற நோய்களும் அடங்கும்.

8. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

9. உணவுப் பண்டங்கள் எளிதில் கெட்டுப் போகும். பாதுகாக்கப்படாத உணவுப்பண்டங்களை தவிர்த்திடுங்கள்.

10. கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரையே பருகுங்கள்.வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

11. கொசுக்கள் வளராமல் சுற்றுப் புறத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

Thursday, October 8, 2015

படிக்கச் சொல்லிக்கொடுப்போம்

கடந்த வாரம் பிள்ளைகளின் பள்ளியில் "Literacy Night" என்ற கலந்தாய்வு. இதில் குழந்தைகளுக்கு "படிப்பறிவு" எப்படி அவர்களின் கல்வித்திறனை வளர்க்கும், அதற்கு பள்ளியில் எடுக்கப்படும் முயற்சிகள், திட்டங்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. படிப்பறிவுத் தேர்வு மிகவும் முக்கியமெனவும், அது மாகான சட்டவிதிகளின் படி தேர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது என்று விளக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
நான் படித்த கற்பித்தல் முறைக்கும் இங்கு இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. நமக்கு பள்ளி புத்தகங்களைத் தவிர வேறெதையும் படிக்க கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் இங்கு குழந்தைகளின் படிக்கும் திறனுக்கேற்ற புத்தகங்கள் தினமும் 30 நிமிடம் படித்து அது பற்றிய குறிப்பை நாட்குறிப்பேட்டில் எழுதி பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் அது ஆசிரியரின் பார்வைக்குச் சென்று குறிப்பெடுக்கபடுகிறது. ஒவ்வொரு மாத இடைவேளையிலும் படிப்புத் திறனாய்வு செய்யப்பட்டு குழந்தைகள் அடுத்த நிலைக்கு முன்னேற்றப்பட்டு புத்தகங்கள் பரிந்துரைக்கப் படுகிறது.
நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரத்தியேக நூல்கள் கொள்ளையளவு இருக்கிறது. அவர்கள் விரும்பும் நூல்களை (ஒரு முறைக்கு 30- 40 புத்தகங்கள்) எடுத்து, அவைகளை அவர்களின் படிப்புத்திறனுக்கேற்றதாக உறுதி செய்து (கைபேசி திறன் செயலிகளில் புத்தகத்தின் கோட்டுருவை உள்ளிட்டால் அது படிக்கும் திறனில் (A-Z) வகைப்டுத்திச் சொல்லும்) எடுத்து வருவது நம் கடமை.
புத்தகங்கள்தான் குழந்தைகளுக்கு அறிவைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வெறும் பாடபுத்தகங்களில் இருப்பதைப் படித்தால் சிந்தனை அதற்குள்தான் இருக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு சூழல் நம் நாட்டிலும் வரும்போது, புத்தகங்கள் விற்கவில்லை, எழுதியதை படிக்க ஆளில்லை போன்ற புலம்பல்கள் இருக்காது என்று நம்பலாம்.

Sunday, January 4, 2009

சில நாட்கள் பாரதிதாசனாய் இருந்துதான் பார்ப்போமே!!!!!!

தாயின்மேல் ஆணை! தந்தைமேல் ஆணை!
தமிழகமேல் ஆணை!
தூயஎன் தமிழ்மேல் ஆணையிட்டே நான்
தோழரே உரைக்கின்றேன்:

நாயினும் கீழாய்ச் செந்தமிழ் நாட்டார்
நலிவதை நான் கண்டும்,
ஓயுதல் இன்றி அவர் நலம் எண்ணி
உழைத்திட நான் தவறேன்.

தமிழரின் மேன்மையை இகழ்ந்தவ னைஎன்
தாய்தடுத் தாலும் விடேன்!
எமைநத்து வாயென எதிரிகள் கோடி
இட்டழைத் தாலும் தொடேன்!

"தமக்கொரு தீமை" என்று நற்றமிழர்
எனைஅழைத்திடில் தாவி
இமைப்பினில் ஓடித் தரக்கடவேன் நான்
இனிதாம் என் ஆவி!

மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு
வாழ்ந்தஎன் மற வேந்தர்
பூனைகள் அல்லர்; அவர்வழி வந்தோர்
புலிநிகர் தமிழ் மாந்தர்!

ஆனஎன் தமிழர் ஆட்சியை நிறுவ
அல்லல்கள் வரின் ஏற்பேன்!
ஊனுடல் கேட்பினும் செந்தமிழ் நாட்டுக்
குவப்புடன் நான் சேர்ப்பேன்!

Thursday, December 18, 2008

அடைகாக்கப் படும் அக்கினிக் குஞ்சுகள்

இலங்கையின் குண்டுவீச்சில் இருந்து தமிழீழ மன்னர்களை காக்கும் தாய்மார்கள்.


Friday, November 28, 2008

இந்திய அரசே.. இந்தியர்களை காப்பாற்று

மும்மையில் தீவிர வாதத்தின் பிடியில் சிக்கி உயிரிழந்த அனைத்து மனிதர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்கள் மற்றும் ஆறுதல்கள். பல உயிர்களை காப்பற்ற தங்கள் உயிரை கேடையமாக்கிய காவலர்கள், இராணுவ வீரர்கள், தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் விடுதியின் பணியாளர்களுக்கு எமது இரங்கல் மற்றும் வணக்கங்கள்.

இழப்பின் கொடுமை தமிழினத்தைவிட வேறு எந்த இனமும் அதிகமாக அனுபவித்திருக்காது. அந்த அடிப்படையில் இந்திய அரசை இவ்வாறு கோருவதில் எமக்கே அதிக கடமை இருக்கிறது.

"இந்தியர்களை பாது காக்க இந்திய கடற்படை மற்றும் அனைத்து படைகளையும் பயன்படுத்துவதை விட்டு விட்டு, வேறு ஒரு நாட்டுக்கு வாடகைகு அனுப்பியதால்தான் இந்த விளைவுகள் என்பதை சொல்ல இந்தியன் என்ற தகுதி போதுமென்றே நினைக்கிறேன்."

Friday, November 7, 2008

அரசியல் சதுரங்கம் 1

ஆட்சி, பதவி, மரியாதை, ஒப்பத்தங்கள் என்ற பல பரிமானங்களில் பயணம் செய்யும் அரசியல் தலைவர்களையும் கட்சிகளையும் விமர்சனம் செய்யும் தகுதி தனக்கில்லை என்றாலும் அவர்களின் செயல்கள் ஏதாவது ஒருவகையில் தன்னை பாதிக்கவே செய்கிறது என்ற பாமரனின் குரல் பெரும்பாலான நேரங்களில் கவனிக்கப் படுவதில்லை.

தி மு க - கலைஞர்

தன் இளம் வயதில் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு திராவிட கொள்கைகளையும், பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாட்டையும் மக்களிடம் கொண்டுசேர்த்ததில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றார் என்பது கழகம் அவருக்கு கொடுத்த பதவிகள் சொல்லும். அடிமட்ட தொண்டனில் தொடங்கி தலைமை பொறுப்பை தன்வசப் படுத்த, அற்பணிப்பை விட அவரின் அரசியல் சாமர்த்தியம் முக்கிய காரணம். போரில் போர் தர்மங்கள் எப்படியோ, அதே போல் அரசியலில் தர்மம் இருக்கக் கூடாது என்பதுதான் அரசியல் தர்மம். அன்று இருந்த கலைஞர் தான் இன்றும் இருக்கிறார் என்றால் அவரிடம் சில கேள்விகள்,

1. அறியாமை இருளகற்ற தொடங்கிய இயக்கத்தின் தலைவர், மக்களின் அறியாமையைய் தன் ஆட்சிக்கு படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டது, பகுத்தறிவா?

உதாரணம்:

1. இலவச தொலைக்காட்சியினால் ஒரு குடும்பத்தை வருமையில் இருந்து உயர்த்த முடியும் என்ற கண்டுபிடிப்பு பகுத்தறிவா?.

2. ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுப்பதில் தவறில்லை. ஆனால் இயக்கம் தொடங்கிய காலத்திலிருந்து இன்றுவரை தனிமனிதனின் வருமானம் ஒரு ரூபாய் அரிசி வாங்கும் அளவிலேயே வைத்திருப்பதுதான் பகுத்தறிவு கோட்பாடா?

3. பெரியாரின் கொள்கைகளை இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் இத்தனை ஆண்டுகள் பரப்பியும் சாதியையும், சாமியின் பெயரால் நடக்கும் கூத்துக்களையும் ஏன் ஒழிக்கமுடியவில்லை?

4. பொதுவுடமை தத்துவத்தில் வளர்ந்த இயக்கத்தில் எத்தனை முதலாலிகள், மக்கள் வரிப்பணத்தை தின்றுகொண்டு அமைச்சர் பதவி அனுபவிக்கிறார்கள் என்று தெரியுமா, தலைவருக்கு?

5. மக்களாட்சி தத்துவத்தை முன்னெடுக்கும் இயக்கம் மன்னராட்சி முறைபோல் வாரிசுக்கு பட்டம் கட்டுவது ஏன்? ஸ்டாலினும், அழகிரியும், கணிமொழியும் இயக்கத்துக்காக உழைத்தவர் என்றால் கழகத்தில் வேறு யாருமே உழைக்கவில்லையா? அப்படியானால் உழைக்காத தொண்டர்களை உருவாக்கியது யார்?

6. உங்களைப்போல் அடிமட்ட தொண்டன் இன்று தலைமை பதவிக்கு வரக்கூடிய சூழலை (உங்கள் குடும்பத்தை தவிற)இயக்கம் வைத்திருக்கிறதா?

இவையெல்லாம் அடிப்படை கோட்பாட்டின் கீழ் அமைந்த கேள்விகள். அன்றாட அரசியலில் அர்த்தம் புரியாம் தவிக்கும் பாமரனின் மனதில் ஆயிரம் கேள்விகள்.

Wednesday, October 29, 2008

செய்தி திணிப்பு 2

இன்றய செய்தி திணிப்பு

தி ஹிந்து.

1. தேஸ்முக் வட இந்தியர்களுக்கு ஆறுதல்.
2. ஆனத் உலக சாம்பியன்.
3. நில நடுக்கம் காரணமாக பாகிஸ்தானில் 170 பேர் பலி.
4. மஹாராஸ்ட்ரா வில் நடந்த சம்பவங்களுக்கு மத்திய அரசு. - மாயாவதி.
5. பாராமுலாவில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது.
6. ஜெயலலிதாவுக்கு வந்த மிரட்டல் கடிதம் மீதான மனுவை நீதி மன்றம் ஏற்றுக் கொண்டது.
7. பாதுகாப்பு குறைவான மாநிலங்களுக்கு ரயில் போக்கு வரத்தை நிருத்த தயங்க மாட்டோம். - பிகார் மக்கள் மகாராஸ்ட்ராவில் தாக்கப் பட்ட சம்பவத்துக்கு லாலு பிரசாத் எச்சரிக்கை.
8. மத்திய அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை - கருணாநிதி.
9. தமிழீழ விடுதலைப் புலிகள் கொழும்பின் பாதுகாப்பை மீறி குண்டுகள் வீசி சென்றுள்ளனர்.

இலங்கையில் கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தினமலர்

1.ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகள் மிரட்டல்! தாய்லாந்தில் இருந்து வந்தது எச்சரிக்கை.(எழுதியது விடுதலைப் புலிகள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட வில்லை. இந்த சூழ்நிலையில் புலிகளின் இயக்கம் இது போன்ற செயல்களை செய்திருக்க வாய்ப் பில்லை என்பது அறிவுள்ள எவர்க்கும் விளங்கும்)
2. பாகிஸ்தானில் பூகம்பம்: 200 பேர் பலி.(மற்ற பத்திரிக்கை களில் 170.)
3. இலங்கை பிரச்சனைக்கு ராஜிவ் வழியில் தீர்வு காணவேண்டும். - கருணாநிதி.
4. அடுத்த தாக்குதல்! மும்பையில் உ பி வாலிபர் கொலை. அமர்சிங் மாயவதி கடும் எரிச்சல்.
5. நிதி நெருக்கடி நிலவரம். சிதம்பரம் ஆலோசனை.
6. கொழும்பு, மன்னார் முகாம்களில் புலிகள் குண்டு வீச்சு.
7. ஆனந்த் உலக சாம்பியன்.

புலிகளின் கொழும்பு விமான தாக்குதல், கள முனையில் 60 ராணுவ வீரர்கள் பலி மற்றும் சீமான், அமீர் பினை விடுதலை போன்ற செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன.

தின தந்தி

1. பாகிஸ்தானில் நில நடுக்கம் : 170 பேர் பலி
2. இயக்குனர்கள் சீமான், அமீர் பினையில் விடுதலை.
3. இலங்கை தமிழர்களுக்கு 2 1/2 கோடி கருணாநிதியிடம் வசூல்.
4. ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் கடிதம்.
5. உலக சதுரங்கம் - ஆனந்த் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார்.

தின மணி

1. இன்னும் பத்து நாட்களில் தனியார் நிறுவனங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கை.
2. பாகிஸ்தானில் நில நடுக்கம் 170 பேர் பலி
3. கனடாவில் இருந்து ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல்.
4. நீலிக்கண்ணீர் வடிக்கிறார் இலங்கை அதிபர் - ராமதாஸ்
5. பா ஜா கா ஆட்சிக்கு வந்தால் இலங்கை பிரச்சினைக்கு தீர்வு.
6. உ. பி இளைஞர் மும்மையில் அடித்து கொலை.
7. இலங்கை ராணுவத்தினர் 60 பேர் பலி.
8. உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றார் ஆனந்த்.

தமிழர் எழுச்சியை தடுக்கும் நாளேடுகளை உங்கள் இல்லத்திலும், அலுவலகங்களிலும் தவிர்க்கவும்.