Tuesday, March 12, 2019

பொல்லா ஆட்சி


சட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும்.
ஆனால் அதிகாரமும், பணமும் இணைந்தால் இந்தியத் திருநாட்டில் எந்தத் தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் குடிப்பது தவறு என்பதால் மறைந்து குடித்தனர். ஆனால் இன்று குடிப்பது சமூகத்தில் இயல்பான செயலாக மாறிப்போனது.
திருட்டு, கொலை, கற்பழிப்பு, கொள்ளை எல்லாவற்றையும் எந்தக் குற்றவுணர்வின்றிச் செய்துவிட முடிகிறது இன்றைய இளைஞர்களால். பாதிக்கப்பட்டவர் நம்மில் ஒருவராக இல்லாதபோது அனைத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துவிடுகிறோம்.
அறத்தின் அளவுகோள் மாறிப்போனது. எத்தனை காசைக்கேட்டாலும் கொடுத்துத் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு எந்தக் கேள்வியுமில்லாமல் இடம் வாங்கிப் படிக்க வைக்கிறார்கள். என்ன படிக்கிறார்கள் என்ற கவலை யாருக்குமில்லை. மனித வாழ்க்கையின் அடிப்படை அறத்தைக் கற்றுக்கொடுக்கும் கல்வி மறைந்துவிட்டது. இண்டர் நேசனல் ஸ்கூல் என்று உலகத்தில் இல்லாததைக் கற்றுக் கொடுக்கிரார்கள். கல்வியின் நோக்கமே மிகுந்த பொருளீட்டும் வாழ்க்கையைப் பெறுவதாக மாறிவிட்டது. அறமற்ற வாழ்கை வாழ எவருக்கும் குற்றவுணர்ச்சியில்லை.
காசுக்காகப் பொய் சொல்வது, திருடுவது, பலமில்லாதவர்களின் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அதிகாரத்தை வைத்து காரியம் சாதிப்பது, பணமிருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனவலியைப் பெறுவது என அடிப்படையே தவறாக வந்து நிற்கிறது.
சட்டத்தைக் காக்கும் காவல் துறையும் அதை இயக்கும் அரசும் மக்களைத் தவறு செய்ய அனுமதிக்கிறது. மக்கள் செய்யும் தவறுகளே அவர்களுக்கு மூலதனம். தாங்கள் செய்யும் தவறுகளை மக்கள் கேள்விகேட்கும் தார்மீக உரிமையை அழிக்க எளிதான வழி.
வெகுதூரம் பயணித்துவிட்ட அறமற்ற வாழ்க்கையைத் திருத்துவதெல்லாம் அவ்வளவு எளிதில்லை. நடந்த கொடுமைகளை தேர்தல் நேரத்தில் கையிலெடுத்து எதிர்கட்சிகள் ஆதாயம் தேடுகின்றன. எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் பெயரளிவில்தான் வேறுபாடு. அவர்கள் கையில் அதிகாரமிருந்தபோதும் இந்தக் கொடுமைகள் நடந்ததற்கு நாளிதழ் செய்திகள் சான்று.
வெளியே வந்தது ஒரு பொள்ளாச்சி, பொல்லா ஆட்சியில் வெளியே வராத பொள்ளாச்சிகள் எத்தனையோ?
குற்றம் எப்படி நடந்தது என்பதை மட்டுமே காவல்துறை விசாரிக்கும்.
குற்றம் ஏன் நடந்தது, அதற்கான காரணிகளை எப்படி சரி செய்வது, எதிர்காலத்தில் குற்றங்கள் நடக்காமல் எப்படித் தடுப்பது என்பதை அரசு செய்யவேண்டும். அதற்கு விசாரணைகளைத் தாண்டிய சமூக உளவியல் ஆய்வு நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும்.
என்கவுண்டரில் போட்டால் எல்லாம் சரியாகிவிம் என்றால் ஆளுக்கொரு துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதுவா ஆரோக்கியமான சனநாயகம்?

Sex Offenders - பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கென தனியான ஒரு பதிவேடு அமெரிக்காவில் உண்டு. ஒரு முறை குற்றமிழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையே முடிந்தது. வேலைக்கான பின்புல ஆய்வில் இவை வெளிப்படும். இவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்கத் தயங்கும். இவர்கள் பற்றிய பதிவேடு பொதுமக்கள் எவராலும் எப்போதும் பார்வையிடமுடியும்.
இன்னும் கொஞ்சம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வந்தால் நமது செல்லிடப்பேசிகள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி செய்ய முடியும். அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடத்தில் பார்த்து அவர்களைத் தவிர்த்துவிடலாம்.
இதை இந்தியாவில் செய்ய நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகார்கள் மற்றும் தனி நபர் புகார்களின் அடிப்படையில் தனியான அமைப்பு நடத்தும் வலைத்தளமாகவே செய்யலாம்.

கடைசியாக பொள்ளாச்சி புகழ் பெற்றது 1965ல் நடை பெற்ற மொழிப்போராட்டத்தில். இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பிப் 12 அன்று ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதன் பின் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். சரியாக 54 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்களைச் சீரழிக்கும் போக்கு வளர்ந்து நிற்கிறது.
இது பெரியார் பிறந்த மண். இது திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த மண்.
அதிகாரத் திமிரில், ஊழல் செய்து சேர்த்த செல்வத்தில் குற்றங்களை கூச்சமில்லாமல் செய்வது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு சாமரம் வீசும் அரசு அதிகாரிகள்.
இவைதான் 54 ஆண்டுகால சாதனைகள்..

சந்தோசின் தமிழ்ப் பாடங்கள் - 1

வார இறுதியில் நடக்கும் தமிழ்ப் பள்ளிக்குச் செல்வது சந்தோசிற்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை. வாரத்தின் ஒவ்வொரு நாளும் பள்ளியில் நடத்தப்படும் பாடங்களைப் படிப்பதும், வீட்டுப்பாடங்களைச் செய்வதும் சுமையாக இருப்பது போதாதென்று பெற்றோர்கள் ஆசைக்காக இப்போது தமிழ்ப்பள்ளியில் பாடம் கற்பது இன்னும் சுமையை அதிகமாக்கியதாக உணர்ந்தான். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடுவது, போர்ட் நைட் கேம் விளையாடுவது என்று கொண்டாட்டமாக இருக்கும். இப்போது ஞாயிற்றுக் கிழமையில் ஒரு பாதி தமிழ்ப் பள்ளியால் வீணாகி விடுகிறது.

ஞாயிற்றுக் கிழமை பாடம் கற்பதை விட கொடுமை இந்த உலகத்தில் இல்லை என்பதுபோல் சலித்துக் கொண்டான் அவன். எதற்காக தமிழ் படிக்க வேண்டும். பள்ளியில் கற்பது போதாதா? பக்கத்து வீட்டு ராகேசோ, ஆரியனோ தமிழோ, குஜராத்தியோ படிப்பதில்லையே.. நான் மட்டும் ஏன்..? என்றெல்லாம் கேள்விகேட்டு தமிழ்ப் பள்ளிக்கு வருவதற்கெதிரான காரணங்களை மனதிற்குள் சேர்த்துக்கொண்டே போனான்...

தன்னைப்போலவே தமிழ்ப்பள்ளியின் வகுப்பில் இருக்கும் மற்ற மாணவர்களும் உணர்வதுபோல் தெரிந்தது அவனுக்கு. ஒரு சில பெண் பிள்ளைகள் மட்டும் வெகு ஆர்வமாக பாடம் படித்தனர். ஆசிரியர் சொல்வதை அப்படியே கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு ஏன் தமிழ் கற்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லையா? எப்படி இப்படி வரட்சியாக வகுப்பில் இருக்க முடிகிறது? என்ற கேள்வி உள்ளுக்குள் எழுந்தாலும் அவனால் அவற்றை வெளிக்காட்ட முடியவில்லை.

அ, ஆ என்று தொடங்கி இப்போது க், ங், ச் என்று போக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது ஓரிரு பாடல்கள், ஓரிரு கதைகள் என்று பாடம் போய்க்கொண்டிருக்கிறது. இப்போதுதான் நிலை 1. அடுத்த ஆண்டு நிலை 2, அதற்கடுத்த ஆண்டு நிலை 3 என்று 8 நிலைகள் முடிக்க வேண்டும். முடித்த பின்? முடித்தால் என்ன கிடைக்கும்? ஏன் முடிக்க வேண்டும்? என்று ஒவ்வொரு முறையும் தனக்குள் கேள்வி கேட்டுக் கொண்டான்.

இன்று நடந்த வகுப்பில் தமிழ்ப் பாடம் நடந்து கொண்டிருக்கும்போது நடுவில் தூங்கிவிட்டான் சந்தோசு. ஆசிரியர் அவனை எழுப்பி முகம் கழுவி வரச்சொன்னார். சலிப்புடன் சென்று முகம் கழுவி வந்தான். ப், ம், வ் என்று பாடம் நகர்ந்து கொண்டிருந்தது. பொறுமை இழந்தவன் எழுது நின்றான். ஆசிரியர் அவனை வியப்புடன் பார்த்தார். இப்பொழுதுதான் கழிவரைக்குப் போய்வந்தான், மறுபடியும் போக வேண்டுமா? என்பது போல் பார்த்தார்.

ஆனால் அவன் ஒரு கேள்வியைக் கேட்டு ஆசிரியரை அதிர்ச்சிக்குள்ளாக்கினான். "ஏதற்குத் தமிழ் படிக்க வேண்டும்?" என்று கேட்டுவிட்டு அமர்ந்தான். ஆசிரியருக்கு தொண்டை வரண்டுவிட்டது. அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலில் இருந்து தண்ணீரக் குடித்துக் கொண்டு பதில் சொன்னார்.

தமிழ் நமது தாய்மொழி. அது 2000 வருடத்திற்கு முன் உருவான பழமையான மொழி. அதை நாம் படிப்பது அவசியம் என்று பதில் சொன்னார். ஆனால் சந்தோசிற்கு அது திருப்தி அளிக்கவில்லை. அவர் சொன்ன பதில் தமிழ் மொழியைப் படிக்கத் தேவையான காரணமாகத் தெரியவில்லை.

புரிந்து கொண்ட ஆசிரியர் சிறிது அமைதிக்குப் பின் பாட புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அருகில் வந்து நின்று பேசினார். நியூட்டன் யார் என்று தெரியுமா என்று கேட்டார். தெரியும்.. இயற்பியல் ஆய்வாளர் என்றான் சந்தோசு. நல்லது. அவர் என்ன ஆராய்ச்சி செய்தார்? பொருட்களின் அடிப்படை இயக்கம் பற்றிய கோட்பாட்டை உருவாக்கியவர் என்றான்.

சரி.. அவர் எப்போது பிறந்தார் என்று தெரியுமா? என்றார். தெரியாது என்றான். 16ம் நூற்றாண்டில் பிறந்தவர் அவர் என்று ஆசிரியர் பதிலளித்தார். புவியில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உயிராற்றலைக் கொடுப்பது சூரியன். சூரியன் இல்லையென்றால் பூமி வெறும் பனிக்கோளமாக இருக்கும். சூரியனி ஒளி மற்றும் வெப்பம் மற்றும் கதிராற்றலால்தான் புவியிலுள்ள தாவரங்கள், மற்ற உயிரினங்கள் தங்கள் வாழத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது.

இதை நியூட்டனுக்கு முன் 1600 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் தெரிந்து வைத்திருந்தார்கள். தமிழ் இலக்கியங்கள் 2000 வருடங்கள் பழமையானவை. அதில் ஒன்றான திருக்குறளில் இந்த சூரிய ஆற்றல் பற்றி திருவள்ளுவர் எழுதியிருக்கிறார். அந்தக் குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்களுக்கெல்லாம் மூலம் அகரம் அதுபோல உலகின் உயிர்களுக்கு மூலம் ஆதவன் என்கிற சூரியன் என்பதுதான் அதன் பொருள் என்று விளக்கமளித்தார்.

சந்தோசிற்கு சந்தோசம் பொங்கியது. தான் தமிழ் படிப்பது என்பது வீணானது இல்லை என்பதை உணர்ந்து கொண்டான். மேலும் தமிழாசிரியர் சொன்னார் "தமிழ் இலக்கியங்கள் ஒரு புதையல். நீங்கள் படிக்கும் தமிழ் மொழியானது அந்தப் புதையல் இருக்கும் இடத்தைக் காட்டும் வரைபடம்" என்று இன்னொரு தகவலைச் சொன்னார். அவனுக்கு டோராவின் நினைவு வந்தது.

அவன் தமிழ் கற்பதில் பெருமிதம் கொள்ளத் தொடங்கினான். அந்த பெருமிதம் பெரும் மகிழ்ச்சியாக அவனது முகத்தில் தெரிந்தது. தொடர்ந்து தமிழ்ப் பாடத்தைக் கூர்மையாகக் கவனித்து கேள்விகள் கேட்டுப் படிக்க ஆரம்ப்பித்தான் சந்தோசு.

Monday, March 11, 2019

தாய்மொழி நாள்

பால் கலாநிதி என்ற இந்திய வம்சாவளி நரம்பியில் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் ஆய்வாளர் “மூச்சு வெறும் காற்றாகும்போது” என்னும் நூலில் மரணத்துடனான தனது அனுபவத்தை எழுதியிருக்கிறார். புற்றால் பின்நாளில் மரணித்துப் போகும் அவர் தன் அனுபவத்தை நூலாக வெளியிட்டிருக்கிறார்.
அதில் ஒரு அனுபவத்தைச் சொல்லும்போது, மனித மூளையில் மொழியைப் புரிந்துகொள்ளவும், மொழியின் வழி உரையாடவும் என இரு பகுதிகள் இருக்கிறது. அந்தப் பகுதியில் மூளையில் புற்றுக் கட்டி உருவான ஒருவர் நாம் பேசுபவற்றை புரிந்துகொள்வதும், பதிலை வெறும் எண்களில் “4523” சொல்லும் நிகழ்வொன்றைப் பதிவிட்டிருக்கிறார்.
மொழி என்பது வெறும் தொடர்புகொள்ளும் கருவியல்ல. அது மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அவனின் சிந்தனையை, ஆற்றலை தீர்மானிக்கும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. தாய் மொழியில் சிந்திப்பவர்கள் திறன் இயல்பாகவே கூடுதலாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது.ஆங்கிலம், ஸ்பானிஸ், மாண்டரின் என எல்லா மொழிகளையும் கற்கலாம். ஆனால் தாய்மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வழி சிந்திப்பதும், விளங்கிக் கொள்வதும் இயல்பாக கூடுதல் ஆற்றலை ஒருவருக்குத் தரும்.இவ்வாறான நிலையில் ஆங்கிலம் உயர்ந்தது, இந்தி சொறுபோடும், சமசுக்கிருதம் மோட்சம் தரும் என்று தமிழை அரசு அதிகாரத்தின் வழி ஒரு பிரிவினர் அழிக்க முயல்வதை புரிந்து கொள்ளவேண்டும். மொழியை அழிப்பதன் மூலம் ஒருவரது அடையாளத்தை, சிந்திக்கும் ஆற்றலை அழித்துவிட முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அதற்கு நம்முடனே இருக்கும் சில கோமாளிகளும் துணை நிற்கிறார்கள்.தமிழ் மொழி ஒரு அறிவியல் மொழி. அதன் ஒலி, சொல்லமைப்புகள் தற்செயலானதல்ல. வலி மிகுந்த ஒலியை ஏற்படுத்தும் சொற்கள் உணர்ச்சியை அப்படியே வெளிப்படுத்துவை. மூளை தான் சொல்ல வருவதை வாய் அப்படியே வெளிப்படுத்துகிறது. பூசி மெழுகிச் சொல்லும் தேவை தமிழில் இல்லை. தமிழில் ஒரு சொல்லில் வெளிப்படுத்தும் உணர்வை வேறு மொழிகளில் சொல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்த வேண்டும். இது பண்பட்ட மொழிக்கே உள்ள சிறப்பு. தமிழுக்கு யாரும் செம்மொழி அங்கீகாரம் கொடுக்கும் முன்னும் அது செம்மொழியாகவே இருந்தது.

“தமிழுக்கும் அமுதென்று பேர்
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!” என பாரதிதாசன் பாடியது மிகுந்த பொருள் கொண்டது.
உலகத்தினருக்கு தாய்மொழி தின வாழ்த்துகள்
தமிழருக்கு உலகத் தாய்மொழி தின வாழ்த்துகள்..