Tuesday, March 12, 2019

பொல்லா ஆட்சி


சட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும்.
ஆனால் அதிகாரமும், பணமும் இணைந்தால் இந்தியத் திருநாட்டில் எந்தத் தவறையும் செய்துவிட்டு தப்பித்துக்கொள்ளலாம். ஒரு காலத்தில் குடிப்பது தவறு என்பதால் மறைந்து குடித்தனர். ஆனால் இன்று குடிப்பது சமூகத்தில் இயல்பான செயலாக மாறிப்போனது.
திருட்டு, கொலை, கற்பழிப்பு, கொள்ளை எல்லாவற்றையும் எந்தக் குற்றவுணர்வின்றிச் செய்துவிட முடிகிறது இன்றைய இளைஞர்களால். பாதிக்கப்பட்டவர் நம்மில் ஒருவராக இல்லாதபோது அனைத்தையும் ஒரு செய்தியாகக் கடந்துவிடுகிறோம்.
அறத்தின் அளவுகோள் மாறிப்போனது. எத்தனை காசைக்கேட்டாலும் கொடுத்துத் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளுக்கு எந்தக் கேள்வியுமில்லாமல் இடம் வாங்கிப் படிக்க வைக்கிறார்கள். என்ன படிக்கிறார்கள் என்ற கவலை யாருக்குமில்லை. மனித வாழ்க்கையின் அடிப்படை அறத்தைக் கற்றுக்கொடுக்கும் கல்வி மறைந்துவிட்டது. இண்டர் நேசனல் ஸ்கூல் என்று உலகத்தில் இல்லாததைக் கற்றுக் கொடுக்கிரார்கள். கல்வியின் நோக்கமே மிகுந்த பொருளீட்டும் வாழ்க்கையைப் பெறுவதாக மாறிவிட்டது. அறமற்ற வாழ்கை வாழ எவருக்கும் குற்றவுணர்ச்சியில்லை.
காசுக்காகப் பொய் சொல்வது, திருடுவது, பலமில்லாதவர்களின் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அதிகாரத்தை வைத்து காரியம் சாதிப்பது, பணமிருந்தால் எதையும் செய்யலாம் என்ற மனவலியைப் பெறுவது என அடிப்படையே தவறாக வந்து நிற்கிறது.
சட்டத்தைக் காக்கும் காவல் துறையும் அதை இயக்கும் அரசும் மக்களைத் தவறு செய்ய அனுமதிக்கிறது. மக்கள் செய்யும் தவறுகளே அவர்களுக்கு மூலதனம். தாங்கள் செய்யும் தவறுகளை மக்கள் கேள்விகேட்கும் தார்மீக உரிமையை அழிக்க எளிதான வழி.
வெகுதூரம் பயணித்துவிட்ட அறமற்ற வாழ்க்கையைத் திருத்துவதெல்லாம் அவ்வளவு எளிதில்லை. நடந்த கொடுமைகளை தேர்தல் நேரத்தில் கையிலெடுத்து எதிர்கட்சிகள் ஆதாயம் தேடுகின்றன. எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் பெயரளிவில்தான் வேறுபாடு. அவர்கள் கையில் அதிகாரமிருந்தபோதும் இந்தக் கொடுமைகள் நடந்ததற்கு நாளிதழ் செய்திகள் சான்று.
வெளியே வந்தது ஒரு பொள்ளாச்சி, பொல்லா ஆட்சியில் வெளியே வராத பொள்ளாச்சிகள் எத்தனையோ?
குற்றம் எப்படி நடந்தது என்பதை மட்டுமே காவல்துறை விசாரிக்கும்.
குற்றம் ஏன் நடந்தது, அதற்கான காரணிகளை எப்படி சரி செய்வது, எதிர்காலத்தில் குற்றங்கள் நடக்காமல் எப்படித் தடுப்பது என்பதை அரசு செய்யவேண்டும். அதற்கு விசாரணைகளைத் தாண்டிய சமூக உளவியல் ஆய்வு நடத்தப்படவேண்டும். அதனடிப்படையில் சட்டங்களும் திட்டங்களும் உருவாக்கப்படவேண்டும்.
என்கவுண்டரில் போட்டால் எல்லாம் சரியாகிவிம் என்றால் ஆளுக்கொரு துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் அதுவா ஆரோக்கியமான சனநாயகம்?

Sex Offenders - பாலியல் குற்றம் புரிந்தவர்களுக்கென தனியான ஒரு பதிவேடு அமெரிக்காவில் உண்டு. ஒரு முறை குற்றமிழைத்தாலும் அவர்கள் வாழ்க்கையே முடிந்தது. வேலைக்கான பின்புல ஆய்வில் இவை வெளிப்படும். இவர்களுக்கு நிறுவனங்கள் வேலை கொடுக்கத் தயங்கும். இவர்கள் பற்றிய பதிவேடு பொதுமக்கள் எவராலும் எப்போதும் பார்வையிடமுடியும்.
இன்னும் கொஞ்சம் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தினால், அவர்கள் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வந்தால் நமது செல்லிடப்பேசிகள் நமக்கு எச்சரிக்கை கொடுக்கும்படி செய்ய முடியும். அவர்கள் இருக்கும் இடத்தை வரைபடத்தில் பார்த்து அவர்களைத் தவிர்த்துவிடலாம்.
இதை இந்தியாவில் செய்ய நீதிமன்றத் தீர்ப்புகளையும், காவல் நிலையத்தில் பதியப்பட்ட புகார்கள் மற்றும் தனி நபர் புகார்களின் அடிப்படையில் தனியான அமைப்பு நடத்தும் வலைத்தளமாகவே செய்யலாம்.

கடைசியாக பொள்ளாச்சி புகழ் பெற்றது 1965ல் நடை பெற்ற மொழிப்போராட்டத்தில். இந்தித் திணிப்பிற்கு எதிராக நடந்த போராட்டத்தில் பிப் 12 அன்று ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அதன் பின் திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆண்டு வருகின்றனர். சரியாக 54 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தேசியக் கட்சிகள் தமிழகத்தில் காலூன்ற வாய்ப்புத் தேடிக் கொண்டிருக்கும் சூழலில் பெண்களைச் சீரழிக்கும் போக்கு வளர்ந்து நிற்கிறது.
இது பெரியார் பிறந்த மண். இது திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்த மண்.
அதிகாரத் திமிரில், ஊழல் செய்து சேர்த்த செல்வத்தில் குற்றங்களை கூச்சமில்லாமல் செய்வது அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுக்கு சாமரம் வீசும் அரசு அதிகாரிகள்.
இவைதான் 54 ஆண்டுகால சாதனைகள்..

No comments:

Post a Comment