Monday, November 19, 2018

சார்லட்டில் தமிழாசிரியர் பயிற்சி

கடந்த சனியன்று (நவ 17 2018) அமெரிக்கத் தமிழ் கல்விக்கழகம் அதன் பாடத் திட்டத்தின் வழி இயங்கும் கரோலினா மாகாணங்களில் சார்லட் மற்றும் சுற்றுப்புறத்தில் அமைந்த தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்குப் பயிற்சி வகுப்பொன்றை நடத்தியது. இதில் முனைவர் திரு வாசு அரங்கநாதன் அவர்கள் ஆசிரியர்களுக்குப் பயிற்சியை வழங்கினார். முதலில் பயிற்சி பற்றியும் அதில் வழங்கப்பட்ட தகவல்களையும் பிறகு அது தொடர்பான என் தனிப்பட்ட கருத்துக்களையும் படிப்பவர்கள் பயன் கருதி எழுதியிருக்கிறேன். அன்னப்பறவை போல் எது உங்களுக்குத் தேவையோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். மாற்றுக் கருத்திருந்தால் அதை கருத்தாகப் பதிவிடுங்கள் உரையாடுவோம்.

பயிற்சியின் நோக்கம், ஆசிரியர்கள் கல்விக் கழகத்தின் பாடநூல் மற்றும் பாடத்திட்டத்தினை எப்படி அணுகுவது, பாடங்களை நடத்தும் போது எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களுக்கு ஐயாவின் தீர்வு மற்றும் ஆலோசனைகள், பிறகு கற்பித்தலில் மாணவர்களுக்கு, குறிப்பாக தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் அமெரிக்கத் தமிழ் மாணவர்களுக்குத் தமிழ் கற்றலை எவ்வாறு இனிய அனுபவமாகச் செய்திட முடியும் என்பது பற்றியும் விளக்கமளித்தார் முனைவர் ஐயா அவர்கள்.

குறிப்பாக தமிழின் உயிரெழுத்துகள் மற்றும் மெய்யெழுத்துகள் இணைந்து உருவாகும் ஒலி எப்படி மனித நாவின் இயல்பில் அமைந்தது என்பது பற்றிய விளக்கம் வியப்பளித்தது. வல்லினம்,மெல்லினம் என்ற காரணப் பெயரின் காரணம் அறிந்த பின் தமிழ் மொழி எப்படி ஒரு இயற்கையான தொன் மொழியாக இருக்கிறது என்பதற்குச் சிறய உதாரணமாக உணர்ந்தேன்.

IMG_3190

ஐயாவின் முயற்சியில் உருவான இந்த தளத்தில் முக்கியமான சில கணினி செயலிகள் துணைகொண்டு தமிழ் கற்கும் வழிமுறைகளை விவரித்தார். இது ஆங்கில வழியில் தமிழ் கற்க மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாகத் தமிழ்வழி உரையாடல்களை குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பயிற்சியில் வின்சுடன் சேலம், கிரீன்சு பாரோ, சார்லட் வடக்கு, தெற்கு பகுதிகளில் அமைந்த பள்ளியின் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

சில கேள்விகள் மற்றும் அதற்கு பதில்கள் (இவை என்னறிவின் புரிதல்கள்)

1. குழந்தைகளுக்குத் தமிழ் படிப்பதில் எப்படி ஆர்வத்தை உண்டாக்குவது?

பதில்: அமெரிக்கா வாழ் தமிழர் குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரின் கட்டாயத்தாலேயே தமிழ் கற்கப் பள்ளிக்கூடம் வருகின்றனர். ஆகையால் பள்ளிகளைப் போல் மதிப்பெண் பெற்றால்தான் கல்வியில் முன்னேறமுடியும் என்ற கட்டாயம் அவர்களுக்கு இல்லை, அதனால் தமிழ் கற்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் தமிழைத் தொடர்ந்து கற்று புலமை பெருவதன் மூலம் இளநிலைப் பட்டப்படிப்பில் அவர்கள் வேறு மொழி கற்கவேண்டிய பாடத்தை தவிர்த்து விடலாம். அதாவது ஜெர்மனோ, பிரெஞ்சோ அவர்கள் கற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அந்த பாடத்திற்கான கட்டணமும் மிச்சப்படும். உதாரணம், 34 கிரிடிட் கொண்ட இளநிலைப் பட்டப்படிப்பில் 3 அல்லது 4 கிரிடிட் வேறு மொழி கற்கும் பாடத்திற்கானது. தமிழ்ப் பள்ளியில் தொடர்ந்து தமிழ் கற்றுவருவதுடன் அவர்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் காலத்தில் தமிழ்ப் புலமைக்கான முத்திரை பெற்றுவிட்டார்களானால், இந்த முத்திரையைக் கொண்டு கல்லூரியில் வேறு மொழி கற்கும் பாடத்தை தவிர்த்துவிடலாம். இதற்கு https://sealofbiliteracy.org/ என்னும் இணையதளம் உதவும்.

2. ல, ள வைப் பயன்படுத்தும் இலக்கணம் என்ன?

தமிழில் சொற்கள் ல, ள மற்றும ந, ண வால் இயற்கையாகவே அமைந்தவை. அதற்குத் தனி இலக்கணமெல்லாம் இல்லை. அன்னம், அண்ணா, அன்னை, விளக்கு, விலக்கு போன்றவை எடுத்துக்காட்டும். தமிழில் ள, ண போன்ற எழுத்துக்களில் சொற்கள் தொடங்காது.

3. நான்காம் நிலையில் உள்ள இலக்கணம் கடுமையாக உள்ளதே?

ஆம், நான்காம் நிலையில் உள்ள இலக்கணம் கடுமையாத்தானிருக்கிறது. அதை எளிமையாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

4. ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதுபோல் பெற்றோருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்?

(நகைச்சுவையாக) பயிற்சிக்குப் பயிற்சி நூல் போடலாம். வீட்டுப் பாடத்தை எப்படி எழுதக் கற்றுக்கொடுப்பது என்பதற்கு ஒரு பயிற்சி கொடுக்கலாம்.. இது போன்ற முயற்சிகள் முடிவில்லாதது.

தமிழ்ப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் பாடங்களின் அடிப்படைப் புரிதல் பெற்றோருக்கு விளக்கப்படவேண்டும்.

5. சில நேரங்களில் பெரியவர்கள் தமிழ் கற்க ஆர்வமாக தமிழ்ப் பள்ளிகளில் கேட்கிறார்கள்? அவர்களுக்கு உங்களின் ஆலோசனை என்ன?

தான் எழுதிய புத்தகத்தைப் பரிந்துரைத்தார்.

6. ஏன் தமிழில் எல்லா ஒலிகளுக்கும் எழுத்துக்கள் இல்லை?

[என் கருத்து] மொழி உருவானது அதைப் பேசும் மக்களினால். தமிழ் மொழி அதைப் பேசும் மக்களிடம் புழங்கிய ஒலிகளுக்கான எழுத்துக்களைக் நிறையவே கொண்டுள்ளது. இன்றைய உலகமயமாக்கலுக்குப் பின் அறிவியல் மற்றும் பிற மொழிச் சொற்களைத் தமிழ்ப் "படுத்த" வேண்டிய நிலை உள்ளது. மொழி தொடர்ந்து உயிர்பெற்றிருக்க அது காலத்திற்கேற்ப தன்னை வடிவமைத்துக் கொள்வது முக்கியமாகும். அதற்காக எந்த ஒரு மொழியும் இன்னொரு மொழியைத் தழுவ வேண்டிய தேவையில்லை. உதாரணமாக தமிழில் உள்ள 'ழ' ஒலி ஆங்கிலத்தில் இல்லை. அதற்காக அவர்கள் தமிழின் 'ழ' வை ஆங்கில எழுத்துக்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை. அதுபோலவே வட மொழி எழுத்துக்களும். அந்த வடமொழி எழுத்துக் கொண்ட சொற்கள் தமிழில்லை என்பதை முதலில் அறிக. Jalapeno வை எப்படி அலபீனோ என்று படிக்கிறீர்களோ அதே போலத்தான் தமிழ் மொழிக்கும். மொழியை வளர்க்கும் அதே நேரத்தில் அது சிதைந்து விடாமலும் பார்த்துக் கொள்வது நமது கடமை.

7. ஏன் பாடப் புத்தகத்தில் ஆகாயம், வானம் என்ற இரு சொற்கள் ஒரு ஆங்கிலச் சொல்லுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது? இது குழப்பமளிக்கிறது?

அது சரிசெய்யப்படும்.

என் கருத்து: தமிழில் அருஞ்சொற் பொருள் என்றொன்று படித்திருப்போம். ஆங்கிலத்தில் Vocabulary. ஒரு பொருளைப் பல்வேறு பெயர்களில் அழைக்கும் மொழி வளமை. குழந்தைகளுக்கு இரு சொற்களைக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பை இது தருகிறது. தேர்வில் வானம், ஆகாயம் இதில் எந்த ஒன்றைப் பதிலாகத் தந்தாலும் அவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்கிடலாம்.

மேற்குறிப்பிட்டவை பயிற்சியில் கேட்கப்பட்ட கேள்விகளில் மிகச்சில. நினைவு கூறும்போது மேலும் கேள்வி பதில்களைச் சேர்க்கிறேன்.

ஆசிரியர் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னேட்டுத் தொகுப்பை (presentation) அனுப்பவதாகச் சொன்னார்கள். இன்னும் வரவில்லை..

ஆசிரியர்களுக்கு என் பரிந்துரைகள்
  1. எழுத்துச் சீர்திருத்தம் பற்றிய நூல்
  2. எழுத்துச் சீர்திருத்தம் தொடர்பான விமர்சனம்.
  3. சொல் மற்றும் சொல்லாய்வு முகநூல் குழு. இங்கு ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல் மற்றும் புதிய சொல்லாக்க முயற்சிகள் நடைபெறுகிறது.
  4. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேரகராதி.
  5. தமிழ் இணையக் கல்விக்கழகம்.

Friday, October 26, 2018

திராவிட தோசை


ஒரு காலத்தில் அரிசி சோறு, இட்டிலியெல்லாம் பண்டிகைக்காலங்களில் மட்டுமே உண்டவர்கள் நமக்கு முன் உள்ள தலை முறையினர். எல்லோராலும் அரிசி வாங்கிப் பொங்க முடியாத வறுமை இருந்த காலமது.

ராகி, கம்பு, சோளம்தான் மூன்று வேளை உணவு. கேஸ் அடுப்பு, பிரிட்ஜ் இல்லாத அந்தக் காலத்தில் விறகடுப்பும், உணவைப் பதப்படுத்த தண்ணீர் மட்டும் கிடைத்த காலம் அது. விறகிற்கு அருகிலுள்ள காட்டில் கிடைக்கும் மரக்குச்சிகளைச் சேகரித்து அடுப்பெரித்த காலமும் உண்டு. ஏன் அடுப்பில் கூட பல வகையுண்டு. கல் அடுப்பு, மண் அடுப்பு, மண்ணெண்னை அடுப்பு, இரும்பு அடுப்பு என்று. மரமறுக்கும் கடையில் மரத்தூள் வாங்கி வந்து அதை நிறப்பி எரிக்கும் அடுப்பும் உண்டு. மண்ணெண்ணை அடுப்பு அப்போதைய காலத்தில் பொருளாதார வலிமை மிகுந்தவர்களுக்குக் கிடைத்த வரம். பிறகு ரேசன் கடைகளில் மண்ணெண்ணை மலிவு விலைக்குக் வழங்கப்பட்டபின் பரவலாக மண்ணெண்ணை அடுப்பு புழங்கப்பட்டது. அந்த கால கட்டத்திலும் மண்ணெண்ணை அடுப்பில் தீப்பற்றி எரிந்த மருமகள்கள் செய்திகளும் உண்டு.

மூன்று வேளையும் அடுப்பெரித்து உணவைச் சூடாக உண்பது மேல்தட்டு மக்களின் பொருளாதார பலத்தைக் காட்டும். பெரும்பாலன வீடுகளில் ஒரு வேளை பொங்கி இரண்டு நாட்கள் வைத்து உண்ணும் வழக்கம் அதிகம். முதல் நாள் எஞ்சியது இரண்டாம் நாள் தண்ணீரில் ஊறவைத்து பழைய சோறாகக் கிடைக்கும். 

இட்டிலி மாவைச் செய்ய அதற்கான தனியான அரிசி உண்டு. ரேசனில் வழங்கப்படும் அரிசி இட்டிலி மாவிற்கு மிக உகந்ததாக இருக்கும். அதனாலேயே அது ஓட்டல் கடைகளுக்கு கள்ளத்தனமாக விற்கபடுவதுண்டு. இட்டிலி உண்பதற்கு ஒரு வகையான சுவையான உணவென்றாலும் அதைத் தயாரிக்கச் செய்யும் வேலைகள் இல்லத்தரசிகளை உற்சாகமிழக்கச் செய்யும். இன்று போல் அந்தக் காலத்தில் மின்னாட்டுக்கல் இல்லை. கையில் ஆட்டுக்கல்லைச் சுற்றித் தான் மாவாட்ட வேண்டும். அரிசி, உளுந்து, வெந்தையம் என்று தனித்தனியாக ஆட்டுக்கல்லில் ஆட்டி எடுத்து பாத்திரத்தில் எடுத்து வைக்க மூன்று மணி நேரத்திற்கு மேலாகிவிடும். ஞாயிறு தூர்தர்சனில் தமிழ்ப்படம் போடுவதற்கு முன் மாவாட்டிவிட வேண்டுமென்பது அம்மக்களின், அக்காள் தங்கைகளின் நோக்கமாக இருக்கும்.

அப்படி ஆட்டியெடுத்த மாவை உடனே இட்டிலி ஊற்ற பயன்படுத்த முடியாது. அது புளித்துப் பொங்கிய பின்பே இட்டிலி ஊற்றத்தகுதியானதாகிறது. அதே மாவைக்கொண்டு தோசை ஊற்றலாம். ஆனால் தோசை ஊற்ற அனைவரும் உண்டு முடிக்கும் வரை அடுப்பின் அருகில் இருந்து தோசை சூடாக எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இட்டிலை அப்படியில்லை.. இட்டிலி பாத்திரத்தில் பத்து பதினைந்து இட்டிலிகளை ஊற்றி வைத்து விட்டு வேறு வேலைகளைச் செய்யலாம். பிறகு இட்டிலிகள் வெந்தபின் இட்டிலியை அடுப்பில் இருந்து எடுத்தால் போதும்.

அதுவும் தோசையை மெலிதாக ஊற்றுவது என்பது அதிக தோசைகளைச் சுடவேண்டிய தேவையை ஏற்படுத்துகிறது. இது இல்லத்தரசிகளுக்கு அதிக வேலைப் பலுவைத் தரும். அதனால் இரண்டு மெலிதான தோசைகளைச் சமைக்கு ஒரு பருமணான தோசையைச் சுட்டு வேலையை முடிக்கப் பார்ப்பார்கள். பெரும்பாலான நடுத்தர வர்க குடும்பங்களில் சமையலைத் தீர்மானிப்பது பெண்கள்தான். என்னதான் ஆண்கள் சாதித் திமிரை வெளியில் காட்டிக் கொண்டிருந்தாலும் வீட்டில் பெண்ணே சமையலை கையாள்வது. அவர்களை தினமும் தோசை வேண்டும் அதுவும் மெலிதான தோசை வேண்டும் என்றெல்லாம் எந்த ஆணும் கட்டாயப்படுத்த முடியாது. அப்படிக் கட்டாயப்படுத்தினால் பிறகு உண்ண உணவே கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. அதனால்தான் உப்புமாவை விமர்சித்து நகைச்சுவை வளர்ந்து வந்தது. அது ஆண்களின் ஆற்றமையின் வெளிப்பாடு.

ஆனால் உயர்தட்டு மக்களிடையே இதே நிலைதானா என்றால்..இல்லை. ஒன்று சமையல் காரர் மூலம் சமையல் நடக்கும். அப்படியில்லாமல் தினமும் மெலிதான தோசை சுடப்படுகிறதென்றால் அங்கொரு பெண் அடிமையாக இருக்கிறாள் என்று பொருள்.

மற்றபடி சாதிக்குத் தகுந்தாற்போல் தோசை பருமன் மாறும் என்பது பகுத்தறிவில்லாத கூற்று. வர்க பேதத்தை சாதி பேதமாக மாற்றியது திராவிட அரசியலின் தந்திரோபாயம். ஆனால் அதை அவர்கள் தோசைக்கூற்றில் நிறுவ முயன்று கருகிய தோசையாக நிற்கிறார்கள்.

Saturday, October 20, 2018

சைக்கிள்

பிறந்த நாள் முதல் நமக்குள் நடக்கும் ஒவ்வொரு படி நிலை வளர்ச்சியும் மனிதனின் பண்நெடுங்கால பரிணாம வளர்ச்சியின் ஒரு பாஸ்ட் பார்வாட் அல்லவா. பிறழ்தல், தவழ்தல், நடத்தல் என்று எதுவுமே ஒன்றரையாண்டுகளுல் நடந்து முடிந்துவிடவில்லை. ஒவ்வொரு படி நிலையையும் பல நுறு ஆண்டுகள் கடந்த மனித இனம் எட்டியிருக்கிறது. மனித இனத்தின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ப அதன் உடலமைப்பு தகவமைத்துக்கொள்கிறது. பறக்கும் தேவையிருப்பின் இறகுகள் முளைத்திருக்கும்.

எனக்கு நினைவு தெரிந்த நாட்களில் முக்கியமான பருவம், சுயமாக சைக்கிள் ஓட்டுவது. இரண்டாவது படிக்கும்போது என்று நினைக்கிறேன், சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற ஆவல் எங்கிருந்தோ தொத்திக் கொண்டது. அந்த வயதிற்கான உயரத்திற்கு அப்பாவின் சைக்கிளை ஸ்டாண்டு போட்டு நிறுத்தியபின் முக்கோனச் சட்டத்திற்குள் காலை விட்டு பெடலைச் சுற்றிப்பழகிக் கொள்வதுதான் ஆகச்சிறந்த சைக்கிள் அனுபவம். அதிலும் இரவில் பின் சக்கரத்துடன் இணைந்து சுற்றும் டைனமோவின் உதவியுடன் ஒளிவிளக்கை இயக்கி வண்டியை ஓட்டுவது அவ்வளவு அலாதியானது. டைனமோவை இயக்க ஏதுவாக பின் சக்கர டயரின் வரி வரியான அமைப்பு எதற்கு என்ற கேள்விகள் எதுவும் அப்போது எழவில்லை.

Image result for india old cycles with dynamo

பிறகு முருகன் சைக்கிள் கடையில் சிறுவர்களின் உயரத்திற்கு ஏற்ப வகை வகையான சைக்கிள்களை வரிசையாக நிறுத்தி வைத்திருப்பார்கள். பள்ளிக்கூடம் செல்லும் ஒவ்வொரு நாளும் அந்த சைக்கிள்களைப் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டே செல்வதுண்டு. அதை வாடகைக்கு எடுத்து ஓட்ட தெரிந்த ஒரு நபருடன் செல்ல வேண்டும். சைக்கிளே ஓட்டத் தெரியாதவனுக்கு சைக்கிளை எப்படி வீட்டுவரை கொண்டு வந்து பின்பு ஓட்டுவது என்ற பல கேள்கவிகளுக்குப் பின் அந்த முயற்சி தள்ளிப் போடப்பட்டு வந்தது.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு ரூபாய் வாடகைக்கு அந்த சைக்கிள்களை எடுத்து ஓட்டலாம். சனி மற்றும் ஞாயிறுகளில் நமக்குப் பிடித்த நல்ல சைக்கிள்கள் மற்றவர்களுக்கும் பிடிக்குமென்பதால் அவை நமக்குக் கிடைக்காது. பழைய கவர்ச்சியில்லாத சைக்கிள்களே கிடைக்கும். பல நாள் தயக்கித்திற்குப் பிறகு ஒரு சைக்கிளை ஒரு ரூபாய் கொடுத்து பெயர், முகவரி கொடுத்து எடுத்தாகிவிட்டது. கடை முன்னாலேயே சைக்கிளை ஓட்ட முயற்சி செய்து கீழே போட்டு ஓட்டத் தெரியாது என்று கடைக்காரர் தெரிந்து கொண்டால் சைக்கிளைத் தரமாட்டார். ஆகவே சைக்கிளை எதிரே உள்ள காய்கறி மார்க்கெட் வழியே தள்ளிக் கொண்டு வந்து சைக்கிள் கடை கண்ணில் மறைந்த பின் நண்பனின் உதவியுடன் சைக்கிளில் ஏறி அமர்ந்தாகிவிட்டது. ஹேண்டில் பாரைப் பிடித்துப் பழகுவதே ஒரு கலை. அதற்குப்பின் பெடலை மிதித்து வண்டியை இயக்குவது இன்னொரு நுட்பம். இரண்டையும் இணக்கமாகச் செய்தபின் எதிரே ஆள் வந்தாலோ, குறுக்கு வண்டியேதும் வந்தாலோ பிரேக்கைப் பிடித்து வண்டியை விழாமல் நிறுத்துவது மிகவும் சிக்கலான நுட்பம். இந்தப் படிநிலைகளைக் கடந்து சைக்கிளை யாருடைய துணையுமில்லாமல் தனியாக இயக்குவதற்குள் பல முறை கீழே விழுந்து கை, கால், பல் என பல இடங்களில் நினைவுச் சின்னங்களைப் பெற்றிருப்போம்.


ஒரு வழியாக சின்ன சைக்கிளை தனியாக இயக்குமளவிற்கு பயிற்சி பெற்றாகிவிட்டது. அடுத்தது? பெரிய சைக்கிளில் தனியாக குடங்கு பெடல் அடிப்பது. அதற்கு அப்பாவிற்கு தெரியாமல் சைக்கிளை எடுத்து இயக்கும் துணிவும், கீழே விழுந்தால் உடலுக்குக் காயங்கள்  ஏற்பட்டாலும் சைக்கிளுக்கு எந்த பாதிப்பு மில்லாமல் வீடு கொண்டு வந்து சேர்க்கும் சாமர்த்தியமும் வேண்டும். ஸ்டாண்டு போட்டு நின்று கொண்டிருக்கும் சைக்கிளை ஓட்டுவதற்கும் சக்கரம் தரையில் பட்டு ஓடும்படி ஓட்டுவதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு. முன்னதில் மனம் மட்டுமே நகரும், தரையும் சைக்கிளும் அங்கேயே நின்றிருக்கும். பின்னதில் தரையும் சைக்கிளும் இணைந்து நகரும். அதை நமது மூளை உள்வாங்கிக் கொண்டு எந்தப் பக்கமும் சாய்ந்து விழாமல் ஒரு காலை முக்கோணச் சட்டத்திற்குள் விட்டு பெடலை மிதித்து ஓட்ட வேண்டும். நிறுத்தும் போது முக்கோணச் சட்டத்திற்குள் இருந்தவாரு இரண்டு கால்களையும் தரையில் வைத்து ஓடி பிரேக்கைப் பிடித்து நிறுத்த வேண்டும். மீண்டும் வண்டியை ஓட்ட சற்று உயரமான கற்களோ, படிக்கட்டுகளோ உள்ள வீட்டைத் தேர்ந்தெடுத்து அதில் நின்று கொண்டு வண்டியை உந்தி பெடலை மிதிக்க வேண்டும். சில நேரங்களில் பின்னிருந்து தள்ள நண்பன் இருந்தால் சைக்கிளைக் கிளப்புவது எளிதாக இருக்கும்.

அக்காவிற்கு அவள் பள்ளி ஊருக்கு வெளியே இருந்ததால் அவள் உயர் நிலைப் பள்ளி சென்றவுடனே சைக்கிள் கிடைத்து விட்டது. அது பெண்களுக்கான சைக்கிள். அப்பாவும் அவ்வப்போது அதை ஓட்டுவார். பிறகு கூச்சமெல்லாம் விட்டுவிட்டு நானும் சில நாட்கள் ஓட்டினேன். அவ்வப்போது அதில் சண்டையும் வரும். நான் உள்ளூரில் நடந்து செல்லும் தொலைவில் பள்ளிக்குச் சென்றதால் சைக்கிள் கிடைக்கவில்லை. நடந்துதான் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.

Related image

வெகு காலத்திற்குப் பின் அப்பா ஒரு சைக்கிள் வாங்கித் தந்தார். அது ஒரு நெருங்கிய உறவினர் பயன்படுத்திய சைக்கிள். பஜாஜ் கம்பெனி சைக்கிள். நான் பஜாஜ் கம்பெனி சைக்கிள் தயாரிக்கிறது என்று அப்போதுதான் தெரிந்து கொண்டேன். பரவலா ஹீரோ, ஹெர்குலிஸ் சைக்கிள்களே புழக்கத்தில் இருந்தது. நண்பர்கள் புதிய பையன்களுக்கே உருவான சைக்கிள்களை ஓட்டிக் கொண்டிருந்த போது எனக்கு பழைய பஜாஜ் சைக்கிள் கிடைத்தது மகிழ்சியாகத்தான் இருந்தது. நானாவது பழைய சைக்கிளில் வருகிறேன் பின்னால் ஒருவர் சைக்கிளில்லாமல் நடந்து வருகிறார் என்ற கவுண்டமணியன்னனின் நகைச்சுவை போல மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டேன்.

பிறகு தூக்கநாயக்கன் பாளையத்தில் பாலிடெக்னிக் சேர்ந்த பின் கொஞ்ச காலம் தினமும் பேருந்தில் சென்று வந்து கொண்டிருந்ததேன். பேருந்துப் பயணம் ஒரு நாளின் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டதால், ஊருக்குள் ஒரு தனியறை எடுத்து நானும் நண்பனும் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்தோம். கல்லூரி ஊரிலிருந்து காட்டிற்குள் இரண்டு மைல் தொலைவில் இருந்தது. சத்தி - அத்தாணி ரோட்டில் தூக்க நாயக்கன் பாளையத்தில் இரு தார் சாலை பிரிந்து கல்லூரி வழியாக மீண்டும் பங்களாப்புதூர் அருகே அதே ரோட்டில் வந்து சேரும். நேரத்திற்குச் சென்றால் வழக்கமாகச் செல்லும் 3பி, 3சி பேருந்தில் கல்லூரிக்குச் சென்று விடலாம். ஆனால் தனிவீட்டில் தங்கியிருந்த காலத்தில் வசந்தி மெஸ்ஸில் காலை உணவு முடித்துவிட்டு செல்கையில் பேருந்தை கோட்டைவிட்டிருப்போம். அதுவும் போக பேருந்து நிறுத்தம் சற்று தொலைவில் இருந்தது. சைக்கிள் கொண்டுவருவதற்கு முன் குறுக்கு வழியொன்று இருந்தது. அது ஒரு சுடுகாட்டின் வழியாக கல்லூரியை அடையும் வழி. தனியாகச் செல்வது சற்று அச்சமூட்டுவதாகத்தானிருக்கும். ஏனென்றால் யாருமில்லாத கருவேலங்காட்டில் ஒத்தையடிப் பாதையில் கொஞ்ச தூரம் நடந்த பின் சுடுகாட்டைக் கடந்த பின்னரே தார்ச் சாலை வரும். தார்ச்சாலையை அடையுமிடத்தில் சில குடிசைகள் இருக்கும். அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காச்சப்படுவதாக சில நாட்களுப்பின் நண்பர்கள் சொல்லித் தெரிந்தது. கல்லூரியை அடைவதைவிட சற்று பயத்தைத் தந்தது. 

ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் ஊரிலிருந்து சைக்கிளைக் கொண்டுவந்து அதை தினமும் கல்லூரிக்குச் செல்ல பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. புளியம்பட்டியிலிருந்து சத்தி வழியாக தூக்க நாயக்கன் பாளையத்திற்கு 38 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து தனியாக சைக்கிளை ஓட்டி வந்து சேர்ந்தேன். பிறகு நண்பனும் கூடவே அறையில் தங்கியிருந்ததால் இருவரும் சைக்கிளில் கல்லூரி பயணம் செய்து வந்தோம். கல்லூரிக்காலம் முடிந்த பின் அந்த சைக்கிளை முருகன் சைக்கிள் ஸ்டோரிலேயே அப்பா விற்று விட்டார்.

சைக்கிளில் பயணித்த காலங்கள் பல நினைவுகளை வடித்துச் சென்றிருக்கிறது. வெவ்வேறு காலங்களில் சைக்கிள் ஒரு உற்ற நண்பனைப் போலவே உடன் வந்திருக்கிறது. அதை வெறும் இன்னொரு இயந்திரமாக கருதிவிட்டுச் சென்று விட முடியவில்லை. நண்பரில்லாதவனுக்கும் சைக்கிள் ஒரு பெரும் துணையாக நிச்சயம் இருந்திருக்கும்.. அது காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை சேமித்து வைத்திருக்கும். வழியில் பார்க்கும் ஏதாவது ஒரு சைக்கிள் நம் பழைய நினைவுகளைக் கிளறிக்கொண்டு வந்து விடும். அவை ஆட்களை மட்டும் கடத்துவதில்லை. ஆட்களோடு சேர்ந்து அவர்கள் வாழ்கையையும் காலத்தோடு கடத்துகிறது. சைக்கிள் இல்லாதவன் வாழ்கையின் மிக முக்கியமான அனுவபவத்தை இழந்திருப்பான் என்று நிச்சயமாகச் சொல்லலாம். 

Saturday, October 6, 2018

96

கருப்பு வெள்ளை டிவிதான் வீட்டில். யாகி யுடா ஆண்டனா மூலம் கொடைக்கானலுக்கும் சென்னைக்கும் குறிவைத்து தூர்தர்சனை உறிஞ்சிக்கொண்ட காலம்.
திரையரங்குக்குச் சென்று படம் பார்ப்பது குற்றமாக இருந்தது. சினிப்படப்பாடல் புத்தகங்கள் வைத்திருப்பது கடுங்குற்றம். ராஜா சவுண்டு சர்வீசில் TDK 60, 90 கேசட்டுகள் வாங்கிக் கொடுத்து பாடல்களைத் தேர்வு செய்து கொடுத்தால் பதிவு செய்து கொடுப்பார்கள், ரூ 20க்கு. ஏ ஆர் ரகுமான் பாடல்களை Sony Walkmanல் கேட்கும் போது மட்டுமே இசை நுணுக்கங்களை உணர முடியும் என்று அறிந்து கொண்ட காலம்.
பஜாஜ் சைக்கிள் அண்ணன் Kannan Ganesan இடமிருந்து தம்பிக்கு வந்து சேர்ந்தது. KMK அது பேருந்து இல்லை, பெருந்தேர். அந்த நடத்துனர் படிப்பு முடிந்தும் ஓரிரு வருடங்கள் கழித்து அதே பேருந்தில் காலை நேரத்தில் பயணத்த போது வழக்கமாக ரெகுலர் பயணிகளுக்குக் கொடுக்கும் கன்செசன் டிக்கட் கொடுத்துச் சென்றார். அப்படியொரு உறவு.
செண்பகப்புதூர் சாலையின் இருபுறமும் பசுமை நிறைந்த சோலை. அது பேருந்துக்குள்ளும் பசுமையைக் கொண்டு சேர்த்து பயணத்தை இனிமையாக்கிய ஊர்.
அப்போதுதான் புதிதாக பண்ணாரியம்மன் பொறியியல் கல்லூரி உருவாகிக் கொண்டிருந்தது.
போஸ்டு கார்டுகள் மூலம் கடிதப் பரிமாற்றம் இருந்தது. பேணா நண்பர்கள் இருந்தார்கள். நூலகம் ஈர்த்தாலும் நூலகர் தெரிக்க விட்டார். அடுக்கிலுள்ள புத்தகங்களை எடுக்க அனுமதிக்க மாட்டார்.
எல்லோருக்குள்ளும் ஒரு விஜை சேதுபதி இருந்திருப்பான். என்ன.. திரிசா இல்லையென்றால் திவ்யா என்று கால ஓட்டத்தில் கரைந்திருப்பார்கள். அதனால்தான் 96 இனிமையானது.

Tuesday, September 11, 2018

அரிக்கேன்

"அரிக்கேன் விளக்கு" என்று ஒன்றை பாட்டி வைத்திருந்தால். அது மண்னெண்ணையில் எரியும் விளக்கு. அதற்கு காற்றில் அணையாமல் இருக்க கண்ணாடி கவசம் ஒன்று இருக்கும். அது ஏன் அரிக்கேன் விளக்கு என்ற கேள்வியெல்லாம் அப்போது இருந்திருக்கவில்லை. எவரெடி, ஹெர்குலிஸ் போல் அதுவும் ஒரு கம்பெனி பெயர் என நினைத்திருந்தேன். அந்த விளக்கு மழைக்காலங்களில் காற்றில் அணையாமல் எடுத்துக் கொண்டு பயணம் செய்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்கள் என்ற பாதியளவு புரிதல் பின்னாளி ஏற்பட்டது. ஆம்.. இன்று போல் அன்று வீதியில் மின்சார விளக்குகள் இல்லை. மின்சார வீதி விளக்குகள் இருந்திருந்தாலும் அவை மழைக்காலங்களில் மின்னிணைப்புத் துண்டிக்கப்பட்டிருக்கும். பிறகு எப்படி மழையில், காற்றில் தோட்டங்காட்டிற்குச் சென்று வருவது? அல்லது ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு மாட்டுவண்டிப் பயணம் மேற்கொள்வது.? அரிக்கேன் விளக்கின் துணைகொண்டுதான்...

ஆனால் அந்த "அரிக்கேன்"? பொதுவாக நாம் இப்பொழுதும் புழங்கும் புயல்தான் அரிக்கேன். வேகமாக வீசும் காற்று. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லப்போனால் மணிக்கு 74 மைலுக்கு மேல் காற்று வீசினால் அது அரிக்கேன். இது ஆங்கிலேயர்கள் நமக்கு அறிமுகப்படுத்திய சொல். ஆனால் புயலை Storm என்றும் சொல்கிறோமே? மணிக்கு 39 மைல் வேகத்திற்கு குறைவானது காற்றழுத்தமாகவும் அதற்குமேல் அது Storm ஆகவும் மாறுகிறது. பொதுவாக இந்தியாவில் "புயல்" என்று பெயரிட்டு முடித்துக் கொள்கிறோம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் Storm மற்றும் Hurricane என்பவை அதன் ஆற்றலை உணர்த்தும் சொற்களாகவே பயன்படுத்தப்படுகிறது. அரிக்கேன் கூட Category 1 (மணிக்கு 74 - 95 மைல் காற்றின் வேகம்.) , Category 2 (மணிக்கு 96-110 மைல் காற்றின் வேகம் ), Category 3(மணிக்கு 111-129 மைல் காற்றின் வேகம்), Category 4(மணிக்கு 130-156 மைல் காற்றின் வேகம்), Category 5( மணிக்கு 156 மைலுக்கு மேலான காற்றின் வேகம்). இப்போது நாங்கள் வசிக்கும் வடகரோலினா மற்றும் அருகிலுள்ள தென் கரோலினா, புளோரிடா மாகாணங்கள் இந்த அரிக்கேனில் அதிகம் பாதிக்கப்பட உள்ளது. வரும் வியாழன் அன்று அரிக்கேன் நாங்கள் வசிக்கும் பகுதியை விசிட் செய்யும் என்று இங்கத்தியை ரமணன்(கள்) கூறியுள்ளார்(கள்).

மாகாண கவர்ணர் அவசரகால நிலையை அறிவித்து பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு அதிகாரங்கள் மற்றும் வளங்களை ஒதுக்கியுள்ளார். நேற்று ஏறக்குறைய ஒரு மணி நேரம் தொலைக்காட்சி மற்றும் வானொளியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், மக்கள் பாதுகாப்பாக இருக்க அருகில் அறிவிக்கப்பட்டுள்ள அரிக்கேன் பாதுகாப்பு மையங்கள் மற்றும் அவற்றில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உணவு இறுப்பு வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் அரிக்கேன் வரும் வரை காத்திருக்காமல் கூடிய விரைவில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கோரிக்கை விடுத்தார். கூடவே காவல் துறை மற்றும் தீயணைப்புத்துறையினரும் தொலைக்காட்சியில் அவசரகால பாதுகாப்பு குறித்து மக்களுக்கு விளக்கமளித்தனர். தொடர்ந்து வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் அவ்வப்போது அறிவுப்புகளை வழங்கி வருகிறார்கள்.

நாங்கள் கூட வரும் வியாழனுக்கு இன்றே தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை சேமிக்கத் தொடங்கிவிட்டோம். எங்கள் ஊரில் உள்ள எல்லாக் கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் தீர்ந்து விட்டது. தண்ணீர் வைக்கும் அடுக்குகள் காலியாகக் கிடந்தது. இதன் இன்னொரு விளைவாக சில்லரை வர்த்தகம் மற்றும் வீட்டின் தட்டு முட்டுச் சாமான்கள் விற்கும் நிறுவனங்களின் பங்கு நேற்று 2 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது. இன்றும் நாளையும் உயரும்.

ஆக.. அரிக்கேனோ, புயலோ... வருமுன் காப்பது வந்த பிறகு புலம்புவதற்கு மேலானதில்லையா...

Thursday, August 9, 2018

ஏற்றமும் இறக்கமும்..

இப்போது நாம் வாழும் காலம்தான் எத்தனை இன்பமயமானது. பசியினால் இறப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்றாலும் அவர்கள் நாம் பார்க்கும் தொலைவில் இல்லையே என்பது எவ்வளவு நிம்மதியான காலகட்டம். அன்றாடத்தேவைகளுக்கு நாம் எப்போது கவலையடைந்தோம்? நம்மைச் சுற்றி 90 களில் பிறந்தவர்களுக்குப் பசி என்றால் என்னவென்று தெரியுமா? தொழிற் புரட்சி, உலகமயமாக்களுக்கு முன் எவ்வளவு வேலையில்லா திண்டாட்டம்? வேலை தேடும் ஒரு வழி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது. ஒவ்வொரு படிப்பிற்குப் பின்னும் அங்கு சென்று பதிவைப் புதுப்பிக்க வேண்டும். அதில் கூட பதிவு வரிசையின் படி தான் வேலை கிடைக்கும். காலை 7 மணிக்கு மாவட்டத் தலை நகரில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தின் கதவுகள் முன் கூட்டம் வரிசையில் நிற்கும். 10 மணிக்கு வரும் அலுவலர் கதவைத் திறந்து காத்திருப்போரை மைதானத்தில் வரிசையில் அமரச்செய்வார். பிறகு அனைவரிடமும் வேலைவாய்ப்புக் கோரி படிவமொன்ற பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அப்போது ஐயம் கேட்போருக்கு விழும் வசை கேட்க முடியாது.. முதல் கேள்வி என்ன படித்திருக்கிறாய்? என்று... பிறகு அவர் படித்த படிப்பை வைத்தே திட்டுவார் அலுலக உதவியாளர் முதல் அலுவலர் வரை. 4 மணி வரைதான் விண்ணப்பங்கள் வாங்குவார்கள் அதனால் உணவு எதுவும் இல்லாமல் வரிசையில் நின்று காத்திருந்து பசியுடன் பதிவு செய்து வீடு வந்தால்.. வேலை எப்ப கிடைக்கும் என்ற கேள்வி? பத்து வருடத்திற்கு முன் பதிந்தவர்களுக்குத்தான் இப்போது வேலை என்று சொன்னால் அவர்கள் கவலை இன்னும் அதிகமாகிவிடும் என்பதால், இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டில் கிடைத்துவிடும் என்றார்கள் என்று சமாதனப் படுத்திக் கொண்டு உள்ளூர் மில்களிலும், பனியன் கம்பெனிகளிலும் படித்த படிப்பிற்கு வேலை தேடவேண்டியது. இது 80 களில் பிறந்தவர்கள் வாழ்கை.. 

அதற்கு முன் கல்வி அனைவரையும் அந்த அளவு எட்டாததனால் கூலி வேலை, விவசாயம், நெசவு, வியாபாரம் என்று எதாவது ஒன்றைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கையை ஓட்டியிருப்பார்கள்... இந்தத் தொழில்கள் மூன்று வேலை உணவிற்கெல்லாம் எந்த உத்தரவாதவும் கிடையாது.. அதனால் பசி அவர்களுக்குப் பழகியிருக்கும்.. இப்பொது நாம் எடைகுறைக்க 24 மணி நேரப் பட்டிணி கிடக்கிறதைப் போல அல்ல அந்தப் பசி..

உலகத்தில் பொருளாதாரமும் வேலைவாய்ப்பும் எப்போதும் ஒரே போலவா இருந்திருக்கிறது? இல்லை... அதற்கு சாட்சியங்களே உலகப் போர்கள்... பொருளாதாரம் எப்போதும் ஒரே போல் இருந்ததில்லை. அது ஏற்ற இறக்கங்களை குறிப்பிட்ட கால இடை வெளியில் சந்தித்துக் கொண்டுதான் வந்திருக்கிறது. ஏனென்றால் இந்தப் பொருளாதாரம் வளங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒரு புறம் இயற்கை வளங்களை மனிதனின் தேவைகளுக்கான வடிவங்களில் உருவாக்குது, இன்னொரு புறம் இந்த வளங்களை மனிதனின் தேவைக்கு உருவாக்கும் மனித, இயந்திர, தொழில் நுட்ப வளங்களை உருவாக்குவது என்பதான வகையிலேயே பொருளாதாரம் கட்டியமைக்கப்படுகிறது. உணவுத்தேவையை நிறைவு செய்யக் கிடைக்கப்பெற்ற வாய்ப்பே விவசாயத் தொழில். இதில் நிலத்தையும் நீரையும் உணவுப் பயிர்கள் விளைவிக்கத் தெரிந்த தொழிலே விவசாயம். அதில் மனித உழைப்பின் வரம்புகளைத் தாண்ட எந்திரங்களின் தேவை இயந்திர உற்பத்தித் தொழில் வாய்ப்பை உருவாக்கியது. உணவுப் பொருட்களை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல, உணவைப் பதப்படுத்த, உணவை எளிதில் உண்ண முன்சமைத்த உணவுகளை உருவாக்க, இப்படித் தொழில்களில் உருவாக்கியவர்களின் செல்வங்களைச் சேமிக்க வங்கிகள், இந்த வங்கிகளின் செயல்பாடுகளை இயந்திரமயமாக்க என்று எல்லாத் தொழில்களுமே மனிதர்களின் தேவைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நாம் ஒவ்வொருவர் செய்யும் வேலையும் இன்னொரு மனிதனின் தேவையை ஏதாவது ஒருவகையில் பூர்த்தி செய்வதாக இருக்கிறது. இது ஒரு சுழற்சியில் இயங்குகிறது. வாங்கும் திறன் உள்ளவனின் காசு இன்னொருவனுக்கு வாங்கும் திறனைக் கொடுக்கிறது.

இந்தப் பொருளாதாரச் சுழற்சி எங்காவது தேக்கம் அடைந்து அறுபட்டுப் போனால், அங்கே அப்போது பொருளாதார வீழ்ச்சி நிகழ்கிறது. அப்போது மீண்டும் பசி, பஞ்சம், பட்டினி மீண்டும் தலை விரித்தாடுகிறது. அதனைத் தொடர்ந்து போர்கள் நிகழ்கிறது. ஆக நூறு ஆண்டுகளுக்குள் ஒன்று அல்லது இரண்டு பொருளாதாரத் தேக்க நிலையை உலகம் சந்தித்து வந்திருக்கிறது. ஆனால் அதை உணர்ந்து நாம் நம் வாழ்கையை அமைத்துக் கொள்கிறோமா என்றால்.. இல்லை என்றே பதில் கிடைக்கும்.. ஆம்.. இதுதான் மனித மனம்...

அப்படி ஒரு பொருளாதாரத் தேக்க நிலையின் போது அமெரிக்காவில் நிலவிய சூழலைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஜான் ஸ்டீன்பெக் தனது "Grapes of Wrath" என்னும் புதினத்தில். 1939ல் வெளியான இந்தப் புதினம் அவருக்குப் புலிட்சர் விருதையும், பின்னாளில் நொபெல் விருதையும் வாங்கித் தந்தது. இந்தப் புதினத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அமெரிக்க அரசின் அரிய படைப்புகளைப் பாதுகாக்கும் பெட்டகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஒக்லகோமா மாகாணத்தில் கதை தொடங்குகிறது. சிறையிலிருந்து வரும் நாயகன் தந்து கிராமம் காலியாக இருப்பதை காண்கிறான். வரும் வழியில் ஒருவனைச் சந்திக்கிறான். அவன் ஒரு மதபோதகனாக இருந்தபோது கதாநாயகனுக்கு மதச்சடங்கு செய்தவன் என்பதை உணர்கிறான். அவன் தற்போது மதநம்பிக்கையை விட்டுவிட்டதால் தாம் மதபோதகனில்லை என்கிறான். பின் இருவரும் கதாநாயகனான ஜானின் வீட்டை நோக்கிச் செல்கிகறார்கள். செல்லும் வழியில் வீடுகள் காலியாக இருக்கிறது. வீட்டிலுள்ள அனைவரும், அண்டை வீட்டாரும், ஏன் மொத்த ஊரும் வேறு இடத்தில் தஞ்சம் புகுந்திருப்பதை அறிகிறான். இரவில் அந்த வீட்டில் ஒழிந்திருக்கும் ஒருவன் ஊரில் நிகழ்ந்ததைச் சொல்கிறான். விவசாய நிலங்கள் அனைத்தும் கம்பெனிகளுக்கு அரசாங்கம் விற்று விட்டது. அதனால் அவர்கள் மக்களை காலி செய்யச் சொல்லி விட்டு இயந்திரங்களைக் கொண்டு விவசாயப்பணி செய்யப்போவதாகச் சொல்கிறான். தனது வீட்டை நோக்கி நடக்கையில் இன்னொரு இடத்தில் வீட்டைக் காலி செய்ய மறுத்து நிற்கும் வீட்டுக்காரர்களைத் தாண்டி அந்த ஊரைச் சேர்ந்த ஒரு இளைஞனே இயந்திரம் கொண்டு அந்த வீட்டைத் தரைமட்டமாக்கிச் செல்கிறான். வறட்சி நிலவும் அந்த நாளில், தன் குடும்பத்திற்கு இந்த வேலையைச் செய்துதான் பசி தீர்க்க வேண்டும் என்றும், இந்த வேலையைத் தான் செய்யவில்லையென்றால் அவர்கள் வேறொருவரை வைத்து செய்வார்கள், ஆனால் வீடுகளை இடிப்பதையும், நிலங்களைக் கையகப்படுத்துவதையும் யாரும் தடுக்க முடியாது என்று தர்க்கம் கூறிவிட்டு இடத்து நகர்வான்.

தலைமுறை தலைமுறையாக தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து வந்தவர்கள் ஒரு சில நாட்களில் நிலம் வீடு என எதுவும் தங்களுடைய உடமை இல்லை என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளிக்காட்டும் உணர்வுகள் நமக்குப் புதிதில்லைதான். ஆனால் இவை பல ஆண்டுகளுக்கு முன்னரே அமெரிக்காவில் நடந்திருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி. 

ஒரு வழியாக வீட்டை அடைந்த போது கதாநாயகனின் மொத்த குடும்பமும் ஒரு பழைய வாகனத்தில் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று நான்கு தலைமுறை ஆட்கள் ஒரு வீட்டில் வசித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் 1000 மைல் தொலைவிற்கு அப்பால் இருக்கும் கலிபோர்னியா சென்று ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று புறப்படுகின்றனர். அந்த வீட்டின் மூத்த முதியவர், இது தான் பிறந்து வளர்ந்த இடம், தன்னால் இதைவிட்டு வெளியேற முடியாது என்று அந்த மண்ணைக் கையில் எடுத்துக் கொண்டு பிரண்டு அழுகிறார். அவரைச் சமாதானம் செய்து வண்டியில் ஏற்ற முடியாது என்று தெரிந்து குடும்பத்தினர் கொஞ்சம் மதுபானம் கொடுத்து போதையேறிய பின் வண்டியில் ஏற்றிப் புறப்படுகிறார்கள். அவர்களுடனேயே அந்த முன்னாள் மத போதகரான கேசியும் நண்பனாகப் பயணிக்கிறான்.

அவர்கள் செல்லும் வழியில் ஒரு இடத்தில் குடும்பத்தினருக்கு ஒரு ரொட்டியை வாங்க முனைகிறார் ஜானின் தந்தை. அந்த ரொட்டி 25 செண்ட் என்பதால், அதை 15 செண்டுக்கான அளவு வெட்டித் தருமாறு கேட்கிறார். தாம் இன்னும் குடும்பத்தடன் 1000 மயில்கள் கடந்து செல்ல வேண்டியிருப்பதால் தன்னால் இவ்வளவுதான் கொடுக்க முடியும் என்கிறார். இந்த இடத்தில் இந்தியல் பேரம் பேசி வாங்கியிருப்பார்கள் என்பது வேறு கதை.

கடைக்காரம்மா தன்னால் அப்படிக் கொடுக்க முடியாது என்று சொல்லும்போது, அந்தப் பெண்மணியின் கணவர் உள்ளே இருந்து அதட்டலாக அந்த ரொட்டியை அவர்களுக்குக் கொடுக்கச் 15 செண்டுக்கே கொடுக்கச் சொல்கிறார். பசியறிந்தவர் போலும். அதே நேரத்தில் அந்தக் குடும்பத்தின் சிறுவர்கள் இருவர் அவருடன் கடைக்கு வந்து அவர்களுக்குப் பிடித்த மிட்டாயொன்றையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மிட்டாய் ஒன்று 15 செண்ட். அந்தக் குழந்தைகள் தாத்தாவிடம் கேட்டபோது, பெரியவர் அந்த மிட்டாயின் விலையைக் கேட்கிறார். சூழலைப் புரிந்து கொண்டு குழந்தைகளையே பார்த்த கடைக்காரம்மா இரண்டு மிட்டாய் 10 செண்ட் என்று சொல்லி விற்கிறார். அவரைப் பார்த்து கடைக்காரார் புன் முறுவல் பூக்கிறார்.

இந்த நிகழ்வைப் பார்த்து அங்கு காப்பி அருந்திக் கொண்டிருந்த இரு லாரி ஓட்டுனார்கள், அந்த மிட்டாய் ஒன்றின் விலை 15 செண்ட் நீ குழந்தைகளுக்காக இரண்டு மிட்டாய் 10 செண்டிற்கு கொடுத்தாய் என்று சொல்லிவிட்டு தாங்கள் சாப்பிட்ட உணவிற்கான தொகையைக் கேட்டு அவள் கையில் காசைக் கொடுத்து வெளியேறுகிறார்கள். அவர் உண்ட உணவின் தொகையை விட சற்று அதிகமாகக் கொடுத்து நகர்ந்த போது அந்தப் பெண்மணி அவர்களை அழைத்து மீதித் தொகையைக் கொடுக்க முனைகிறாள். அப்போது அவர்கள் அதை அவளையே வைத்துக் கொள்ளச் சொல்லி நகர்கிறார்கள். படம் முழுக்க சமூகச் சூழலையும் மனிதர்களின் மனங்களையும் அவ்வளவு அற்புதமாகச் சொல்லி காட்சிகளை நகர்த்துகிறார் ஜான் ஸ்டீன்பர்க்.

இந்தப் புதினம் முதலாளித்துவத்தின் கோர முகத்தையும், அங்கே தொழிலாளர் ஒற்றுமையின் தேவை பற்றியும் அதன் அமெரிக்க வடிவம் என்ன என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்லிச் செல்கிறார். இது பொதுவுடைமைத் தத்துவத்திற்கு ஆதரவான புத்தகம் என்று எதிர்ப்புக் கிழம்பியது என்ற செய்தியையும் படிக்க முடிகிறது.

நாளை நாம் செய்து கொண்டிருக்கும் தொழில் இல்லையென்றானால்? நமக்கு வாழுமிடத்தில் உரிமையில்லையென்றானால்? எப்படி அந்தச் சூழலை எதிர்கொள்ளப்போகிறோம்? இது நடக்காது என்பதில்லை, மாறும் இந்த உலகில் எதுவும் நிறந்தரம் இல்லை. அப்படியொரு சூழல் வந்தால் நமக்கு நாம் சேர்த்த செல்வம் துணை நிற்கப்போவதில்லை. நல்ல நண்பர்களும் உறவுகளுமே துணையாக இருப்பார்கள். அந்த உறவுகளைச் சேர்த்து வைத்திருக்கிறோமோ என்று பார்த்துக் கொள்வது நல்லதல்லவா?

Tuesday, August 7, 2018

தெற்கத்தியச் சூரியன் மறைந்தது

கடந்த சில நாட்களாக உடல் நிலை குன்றி ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்து இன்று மாலை 6:10 மணியளவில் மறைந்தார் என்ற செய்தி தொலைக்காட்சிகளின் வழியே தெரிய வந்தது. அவரின் மறைவு உள்ளபடியே துயரத்தை ஏற்படுத்தியது.

அவர் அரசியல் மீதான விமர்சனங்கள் பல இருந்தாலும், அவர் காலத்தில் பல நல்ல திட்டங்கள் மக்களை பயனடையச் செய்தது என்பதை மறுக்க முடியாது. கலைஞர் காப்பீட்டுத் திட்டம், உழவர் சந்தை, பொதுப் போக்குவரத்திற்கு சிற்றுந்து அனுமதி என்பன வெகு சமீபத்திய திட்டங்கள். இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக் குழு போன்ற திட்டங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டவை.

அவரின் இழப்பால் வாடும் திமுகழகத்தினரின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

8:00 PM: அதே நேரத்தில், திரு எடப்பாடி பழநிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கலைஞருக்கு அண்ணா சமாதி அருகே புதைக்க இடம் கொடுக்க இயலவில்லை என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று மெரினாவில் புதிய நினைவிடங்கள் எழுப்பக்கூடாது என்ற பொது நல வழக்குத் தொடர்ந்திருந்தவர் தனது வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்ததால், உயர் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

8:20 PM: மெரினாவில் இடம் தரவில்லையென்றால் போராடப்போவதாக திமுகவினர் கோசம் போடும் காட்சிகளை செய்தி ஊடகமான நியூஸ் 7 ஒளிபரப்புகிறது.

8:21 PM : கலைஞரின் உடல் அஞ்சலிக்காக கோபால புரம் இல்லத்தில் காலை 4 மணிவரை வைக்கப்படும் என்று அன்பழகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

8:30 PM: திமுகவினர் கலைஞருக்கு மெரினாவில் இடம் கொடுக்க வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவேரி மருத்துவமனை முன்பு வைக்கப்பட்டிருந்து தடுப்புகளை வீசியெறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.

8:35 PM: திமுக தலைவரின் மகனும் திமுகவின் செயல் தலைவருமான திரு ஸ்டாலின் அவர்கள் மீண்டும் தமிழக அரசிடம் மெரினாவில் இடம் வேண்டி கோரிக்கை விடபோவதாக செய்திகள் வருகிறது.

8:37 PM : மெரினாவில் அண்ணா சமாதிக்கு அருகில் இடம் வேண்டி நீதிமன்றத்தை நாட இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.

8:40 PM: காவல் துறையினர் திமுகவினரைக் கலைக்க சிறு தடியடி நடத்தினர். இருந்தும் திமுகவினர் கோசமிட்டவன்னம் உள்ளனர்.

9:01 PM: திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபால புரம் இல்லத்திற்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்படுகிறது.

10:29 PM: திமுக தலைவர் கலைஞரின் உடல் கோபாலபுரம் இல்லத்தில் இறக்கப்படுகிறது. மெரினாவில் இடம் வேண்டும் என்ற கோசத்துடன், டாக்டர் கலைஞர் வாழ்க என்ற கோசமும் விண்ணைப் பிளக்கிறது.

ஆகஸ்டு 8 2018

2:02 AM: கலைஞரின் உடல் அவரது மகள் கனிமொழி இல்லமான சி ஐ டி காலனிக்குக் கொண்டுவரப்பட்டது.

இன்றைய முரசொலி கலைஞரின் பார்வைக்கு அவர் படுத்திருக்கு பேழையுள் வைக்கப்பட்டுள்ளது.

5:21 AM : கலைஞரின் உடல் ஆம்புலன்சு மூலம் சி ஐ டி காலனியிலிருந்து ராஜாஜி மண்டபத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த கொண்டுவரப் படுகிறது. கலைஞரின் உடல் அவர் நிறுவிய பெரியார் மற்றும் அண்ணா சிலைகளைக் கடந்து ஒரு பிரியா விடை கொடுத்துச் செல்கிறது...

11:30 AM: கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிடுகிறது.

4:00 PM : கலைஞரின் இறுதி ஊர்வலம் மெரினாவை நோக்கி தொடங்கியது.

7:00 PM:  கலைஞரின் உடல் இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மெரினாவில் கலைஞரை நல்லடக்கம் செய்வதில் நடந்த அரசியல் மற்றும் நீதிமன்ற நிககழுகள் வரலாற்றில் இடம்பெறும்...


1. தமிழக அரசு காந்தி மண்டபத்திற்கு அருகில் இடம் ஒதுக்கில் வெளியிட்ட அறிக்கை.



2. கலைஞரின் இறுதி ஓய்விடம் குறித்த வரைபடம். (https://twitter.com/imranhindu)





3. தமிழ் நாடு அரசு மெரினாவில் இடம் அளிக்க மறுப்புத் தெரிவித்து செய்த வாதம் (https://twitter.com/imranhindu)






Thursday, August 2, 2018

டென்னன்ட் மலையேற்றம்

இந்தவாரம் மேகமலையில் (Smoky mountain) உள்ள டென்னண்ட் உச்சியைத் தொட மலையேற்றத்தை சார்லட் புறச் சாகசக் குழுவினர் (Charlotte outdoor adventure club) ஏற்பாடு செய்திருந்ததை நண்பர் மணி கண்டுபிடித்து பதிவு செய்துகொண்டார். அவர்கள் மூன்றரை மணி நேர தொலைவில் உள்ள மலையை அடைய அருகில் உள்ள பெல்மாண்ட் என்ற இடத்தில் கூடி தனித்தனியாக வாகனங்களில் செல்லாமல் சில வாகனங்களில் கூட்டாகச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். அதன்படி பெல்மாண்ட்டில் ஞாயிறு காலை எட்டு மணிக்கு சந்திப்பதாக இருந்தது.

இதற்கிடையில் குழுவில் உள்ள சிலர் மலையேற்றம் தொடர்பான வனப்பாதுகாப்பு அலுவலகத்தின் அறிவிப்பை அதன் இணையதளத்தில் படித்துவிட்டு, குழுவில் அதிருப்தியைத் தெரிவித்திருந்தனர். வனத்திற்குள் பத்துப் பேருக்கு மேலான குழுவிற்கு அனுமதியில்லை என்ற அறிவிப்புதான் அது. அந்த அறிவிப்பின் நோக்கம் அதிகமான அளவில் மக்கள் வனப்பகுதியில் நடந்தால் அங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும், அதனால் அதைத் தவிற்பதே.

ஆனால் அடிக்கடி அந்த மலையேறுபவர்களுக்குத் தெரியும் அங்கு சில நூறு பேர்களாவது இந்தக் கோடையில் மலையேறுவார்கள் என்று. பொதுவாக அமெரிக்கர்கள் சட்டதிட்டங்களை மதிப்பவர்கள். ஒரு சிலர் சட்டத்தை மீறி மலையேற்றம் திட்டமிடப்பட்டிருப்பதால், தாங்கள் மலையேற்ற நிகழ்விலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து விலகிக்கொண்டனர்.

நாமும் சட்டத்தை மதிப்பவர்களாதலால், அந்தக் குழுவுடன் இணைந்து பத்திற்கும் மேலானவர்களாக பயணித்து சட்டமீறலைச் செய்ய வேண்டாம் என்பதால், மணியும் நானும் தனிக்குழுவாக பயணிப்பது என்று முடிவானது. அதன்படி, குழுவின் மலையேறும் வழிகாட்டுதலை மட்டும் எடுத்துக்கொண்டு இருவரும் நீய்லச்சிமையத் தடம் (Blueridge Parkway) வழியே சென்று பிறகு கருங்குங்கலிக் குமிழ்ச் சாலை (Black Baksan Knowb Road) இல் உள்ள மலையேற்றத் தொடக்கப்புள்ளியை அடைந்தோம்.

முன்பே மலையேற்றத்திற்குத் தேவையான கருவிகளைத் தயார் செய்து கொண்டோம். அதன்படி மலையேற்றத்திற்குத் தேவையான கைக்குச்சிகள், காயம்பட்டால் உதவ சில மருந்துப் பட்டைகள், வலி நிவாரணக் களிம்புகள், முக்கியமாக கரடித் தாக்குதலில் இருந்து தப்பித்துக்கொள்ள கரடி விரட்டி, பயணத்தைப் பதிவு செய்ய படப்பதிவுக் கருவிகள் மற்றும் சிற்றுண்டியை எடுத்துக் கொண்டோம். கைக்குச்சி மிகவும் பயணுள்ளதாக இருந்தது.

குழுவின் வழிகாட்டும் குறிப்புகளின் படி டென்னண்ட் உச்சியை இரண்டரை மயில் மலையேற்றத்திற்குப் பின் அடைந்தோம். அது 6040 அடி உயரத்தில் இருக்கும் மலை உச்சி. கெய்ரால்ட் ஸ்டோனி டென்னன்ட் என்ற மலையேற்ற ஆர்வலரின் பெயரில் அழைக்கப்படுகிறது. அவரது நினைவாக 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நினைவுச் சின்னம் இன்னும் இருக்கிறது.

tennet

அந்த மலை உச்சியில் நின்று மேகமலைத் தொடரை பார்ப்பது மிக்க அழகாக இருந்தது. மேகங்கள் நம்மைத் தொட்டுச் செல்வதும், குளிர் காற்று நம்மை அணைத்துச் செல்வதும் அற்புதமான அனுபவம். அங்கு நண்பர் மணியின் புகைப்படமெடுக்கும் திறத்தில் நமக்குச் சில நல்ல புகைப்படங்கள் கிடைத்தது.








அங்கிருந்து அரை மைல் தொலைவில் நீல பெர்ரி பறிப்பதுதான் மலையேற்றத்தின் நோக்கம். அதன்படி மேலும் அரை மைல் நடக்கத் தொடங்கினோம். அங்கொரு வெட்ட வெளியில் ஒரு சோடிகள் கூடாரம் அமைத்து தங்க ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களிடம் பேசியதில், முந்தைய இரவு  அவர்கள் அருகில் வேறு ஒரு இடத்தில் தங்கியிருந்ததாகவும், இரவில் அவர்கள் உடமைகள் வைத்திருந்த பையை கரடியோ அல்லது வேறு ஏதோவொன்று எடுத்துவந்து பொருட்களைச் சிதரடித்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தனர். முக்கியமான பொருட்களை கண்டெடுத்துவிட்டதாகவும் அருகிலுள்ள புதருக்குள் கரடிகள் இருக்கலாம் என்று நமக்கு எச்சரிக்கை செய்தனர்.

அவர்களைக் கடந்து சென்று நீல பெர்ரிக்களைப் பறித்து ருசித்து மகிழ்ந்தோம். மீண்டும் கீழே வர இப்போது வேறு இலகுவான பாதையை வழிகாட்டியில் குறிப்பிட்டிருந்தார்கள். அதன்படி நடக்கத்தொடங்கையில் அந்தப் பாதை வெறும் கற்கலால் நிறம்பியிருந்தது. அது ஏதோ ஒரு ஓடை உருவாக்கிய வழி போல இருந்தது. அதில் சிறிது தூரம் நடந்தபின், சிற்றுண்டி உண்ண அமைவான இடமொன்று தென்பட்டது. அங்கு சிற்றுண்டியை முடித்துவிட்டு தொடர்ந்து நடந்து வண்டிகளை நிறுத்தியிருந்த இடத்தை அடைந்தோம். இலகுவான பாதை இது என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் இந்தப் பாதை வழி நடந்து வந்துகொண்டிருந்தனர்.
நாங்கள் மலையேறிய பாதை சில இடங்களில் குறுகலாகவும், சில இடங்களில் தீடீர் பள்ளங்கள், அடர்த்தியான புதரில் சிறு பாதைகள், சில இடங்களில் சிறு பாம்புகள், பாறைகள் என்று சற்றுக் கடினமான பாதையாக இருந்தது. இவைகளைக் கடந்து மலையுச்சியை அடைந்து அங்கு இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தது இன்னும் பல நாட்கள் நினைவைப் பசுமையாக வைத்திருக்கும்.

Wednesday, July 18, 2018

அரசனும் தெய்வமுமாகிய

எண்தடச் சாலை குறித்து விமர்சனம், எதிர் கருத்து தெரிவித்தால் கைது செய்யும் திரு எடப்பாடியாரின் மனதை புண்படுத்தி நாம் சிறை செல்ல விரும்பவில்லை. ஆகவே எண்தடச் சாலை பொது மக்கள் சொர்க்கத்தில் சேர்க்கும் சாலை, இந்த சாலையில் பயணம் செய்பவர்கள் வீட்டில் செல்வம் கொளிக்கும், தீராத வியாதிகள் தீரும், மணமாகதவர்கள் விரைவில் மணமாவார்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரைவில் குழந்தை வரம் பெறுவார்கள், தீராத சொத்துப் பிரச்சினைகள் தீரும். பழனியில் இருக்கும் சாமியின் மறு உருவமே நம் பழநிச்சாமி, அவர் தமிழக மக்களின் நலனைத் தவிர வேறெந்த எண்ணமும் ஒரு கனமும் கொண்டிருந்ததில்லை. மத்தியில் ஆளும் திரு. மோடி அவர்களின் அருளாலும், திரு பழநிச் சாமியின் அருளாலும் தமிழகம் முன்பை விட சுபிட்சமாக இருக்கிறது.

எண்தடச் சாலைக்கெதிராக சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் குரல்கள், மலைகளை வெட்டி கனிமங்களை கொள்ளையடிக்கும் திட்டம் என்ற கருத்துக்களைத் தாண்டி அந்தப் பகுதியில் வாழும் மக்களின் எண்ணங்களுக்கு எதிராக நிலங்களைக் கையகப்படுத்திவருவது செய்தியாகிறது.
எண்தடச் சாலை என்று சொன்னாலே கைது செய்து சிறையில் அடைக்கும் காவல் துறை இந்தக் கைதுகள் மூலம் ஒரு உலக சாதனையைச் செய்யவிருக்கிறது.

18/07/2018 - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளார் சீமான் மற்றும் கட்சியினர், விவசாய சங்கத்தினர் 22 பேர்  மக்களைச் சந்தித்து கருத்துக் கேட்டதற்காகக் கைது

17/07/2018 - CPI - ML உறுப்பினர்கள் எட்டுவழிச் சாலை வேண்டாம் என புத்தகம் வெளியிட்டதனால் கைது.

12/07/2018 - சேலத்தில், பசுமை வழிச் சாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட இளைஞர் பெருமன்றத்தினர் 11 பேரை காவலாளர்கள் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

07/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகளை போராட தூண்டியதாக சிபிஎம் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி உட்பட 14 பேர் அரூரில் கைது செய்யப்பட்டார்கள்.

04/07/2018 - எட்டு வழிச்சாலைக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் கருத்துத் தெரிவித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கைது.

03/07/2018 - 8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் பூமாங்காடு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 27), விஜயலட்சுமி (32), கவுசல்யா (20), சந்திரா (30), தாரகேஸ்வரி (38), லட்சுமி (30), செல்வி (32), கோகிலா (32) ஆகிய 8 பெண்கள் மற்றும் விவசாயிகள் சின்னப்பன் (50), ராமசாமி (45), காமராஜ் (39), வரதராஜ் (35), குணசேகரன் (55), கிருஷ்ணராஜ் (20), ரமேஷ் (34), ஆறுமுகம் (72) ஆகிய 16 பேரை போலீசார் கைது செய்து, மல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்கள் மீது அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

27/06/2018 - 8 வழிச் சாலைக்கு எதிராகப் போராடிய விவசாயிகளுடன் கலந்து கொண்டு போராடியதால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு கைது.

26/06/2018 - சேலம் டு சென்னை, எட்டு வழி பசுமைச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட 5 மாவட்ட விவசாயிகள், தம் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி இன்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதைப் படம்பிடித்த கேரள செய்தியாளர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

19/06/2018 - இயற்கை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த வளர்மதி எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்ததற்கு கைது.

18/06/2018 - இயற்கை ஆர்வலர் பியூஸ் மானஸ் எட்டு வழிச் சாலைக்கு எதிராகக் கருத்து தெரிவித்தமைக்கு கைது.

இரவு 8 வழி பசுமைச் சாலைத் திட்டத்துக்காக நில அளவை செய்யப்பட்டது. தங்கள் நிலங்களில் படுத்துக்கொண்டு நில அளவை செய்ய அனுமதிக்காமல்  எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகள் 11 பேர் கைது செய்து வீராணம் காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருந்து மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.

17/06/2018 - நடிகர் மன்சூர் அலிகான் எட்டுவழிச் சாலைக்கெதிராகக் கருத்துத் தெரிவித்தமைக்காக் கைது.

09/06/2018 - எட்டு வழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக அளவைக் கல் நடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பொதுமக்கள் கூட்டத்தை முன் நின்று நடத்தியதாக கூறி குப்பனூரை சேர்ந்த முத்துக்குமார், நாராயணன், ராஜாகவுண்டர், கந்தசாமி, ரவிச்சந்திரன், பழனியப்பன் ஆகிய 6 பேரை அதிகாலை வீடு புகுந்து அம்மாபேட்டை போலீசார் இழுத்து சென்றனர்.

பூலாவாரி சித்தேரியை சேர்ந்த ரவி என்பவரை கொண்டாலம் பட்டி போலீசார் வீடு புகுந்து இழுத்து சென்றனர்.

இப்படி திட்டம் அறிவித்த நாளிலிருந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களை எல்லாம் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு அவர்களுக்கு புது வாழ்வளித்து அவர்களின் நிலங்களை கையகப்படுத்தி அதில் எட்டு வழிச் சாலை போட்டு, சாலை போடுவதற்கு ஒப்பந்தக் காரர்களிடம் கமிசன் பெற்று, பின்  அந்தச் சாலையை தனியாருக்குக் கொடுத்து அவர்கள் சுங்கம் வசூலித்து வளம்பெறவும், அந்தச் சுங்க டெண்டர் மற்றும் மாதவருமானத்தில் பங்கு பெற்று தாங்கள் வளம்பெறவும், சாலை போடும் போது தகர்க்கப்படும் மலைகளின் கனிமங்களை விற்று வளம்பெறவும் வழிவகை செய்யும் சுவாமியை மக்கள் மனதார பாராட்டி இரு கரம் கூப்பி வணங்க வேண்டும். வணங்குவதோடு மட்டுமல்லாமல், வருடா வருடம் பழநிச் சாமிக்கு மாலையணிந்து பாதயாத்திரை செல்லவேண்டும்.
"அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழிக்கு அரசனும், தெய்வுமுமாகி உயிர்கொடுத்த பழநிச்சாமி "பல்"லாண்டு வாழ்க...வாழ்க..

Sunday, July 15, 2018

சோமேசுவரர் மலையும் சின்ன பிராட்லி அருவியும்

அதிகமாக ஒன்றிரண்டு நாட்கள் விடுமுறை என்றாலே கொண்டாடும் மனசு.. இரண்டு மாதம் மனைவி அளித்துச் சென்ற விடுமுறையைக் கொண்டாடாமல் விட்டுவிடுமா என்ன?.. இந்த வாரம்... அடுத்த வாரம் என்று தள்ளிப் போன பயணம் நேற்று உறுதியாகவிட்டது.. நண்பர்களுடன் மூவருமாக காலை 9 மணிக்கெல்லாம் பயணம் தொடங்கியது. வழக்கமாக ஜூலையில் கொளுத்தும் வெய்யில் நேற்று குழுமை காட்டியது. மூன்று மணி நேர பயணத்தில் மேகமலைகளில் உள்ள சோமேசுவரர் ஆலையத்தை மதியம் 1 மணிக்குச் சென்றடைந்தோம்.

மலை மீது இருக்கும் இந்தக் கோவிலுக்குச் செல்வது இதுதான் முதல் முறை. ஆங்காங்கே வழிகாட்டிகள் வைத்திருந்தாலும் கவனத்துடனேயே கோவிலை அடைந்தோம். கோவிலை அடைந்த நேரம் சிவலிங்கத்திற்கு உச்சிக்கால பூசை செய்து கொண்டிருந்தார் பூசாரி. பெருங்கூட்டமில்லையென்றாலும் வார இறுதியில் குறிப்பாக சனிக்கிழமை வரும் வழமையான ஆசுவில் பக்தர்கள் கூட்டம் ஓரளவிற்கு இருந்தது. பூசாரி தேவ பாசையில் பாடல் பாடி நம்மையும் திரும்பப் பாடச் செய்தார். பூசை நடந்து கொண்டிருக்கும் போதே பக்தர் ஒருவர் மயக்கமடந்தார். சனிக்கிழமை பட்டினி இருந்து வழிபாடு செய்ய வந்திருப்பார் போலும். தேங்காய்த் தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளியவைத்தனர் பூசாரி குடும்பத்தினர். பூசாரி வழிபாட்டின் இடையே மயக்கமானவருக்கு உதவி செய்ய தன் மகனை பணித்துக் கொண்டே பூசையைத் தொடர்ந்தார். பூசை முடியும் தருவாயில் கோவிலை ஒட்டியுள்ள உணவகத்தில் மதிய உணவு கிடைக்கும் என்ற அறிவிப்பைச் செய்தார். அதைக்கேட்டதும் "சிவனை நேரில் பார்க்கும் பரவசம்" உண்டாகியது. ஒரு வழியாக சிவ தரிசனம் முடித்து வெளியே வந்து உணவகத்தைக் கண்டு பிடித்து முதலாளாக இல்லாவிடிலும் முதல் பத்து நபர்களுள் சிலராக நாங்கள் இருந்தோம். பன்னிரண்டு டாலருக்கு புளிச்சோறு, சாம்பார், சோறு, டார்ட்டிலா, உருளைக்கிழங்கு மசாலா, பொங்கல், தயிர் மற்றும் தேனீர் எனக்கொடுத்து சிவனைக் கண்ட நிறைவைக் கொடுத்தனர்.


வெளியே வந்து புகைப்படக் கருவிகளைக் கொண்டு கண்ணில் பட்ட இயற்கை அழகை கருவி வசப்படுத்திக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். அடுத்து சேர வேண்டிய இடத்தைப் பற்றிய குறிப்புகளை இணையத்திலிருந்து நண்பர் அரவிந்த் படித்துக் கொண்டே வந்தார். காட்டு வழிப்பாதையில் சென்று சின்ன பிராட்லி அருவியை அடைவதைப் பற்றிய குறிப்பைக் கேட்கும் போதே சாகச உணர்வு ஏற்பட்டது.


வழிகாட்டும் கருவி துணைகொண்டு அருவி இருக்கும் இடத்திற்கு வந்தால் அங்கு சாலை மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதாக அறிவுப்புப் பலகையும் சாலைத் தடுப்புகளும் வைத்திருந்தார்கள். ஓ.. அருவிக்குச் செல்லமுடியாது போல என்று திரும்ப எண்ணுகையில் நான்கு யுவதிகள் மறிக்கப்படிருந்த சாலையிலிருந்து வெளியே வாகனங்கள் நிறுத்தியிருக்கும் இடத்திற்கு வந்தனர். நண்பர் அரவிந்த் அவர்களிடம் அருவியைப் பற்றிக்கேட்டார். அவர்கள் அருவியை அடைய அந்தச் சாலை வழி சிறிது தூரம் சென்றதாகவும் அங்கு சாலைப்பணிகள் நடந்ததால் தங்களால் அதற்கு மேலே செல்ல முடியவில்லை என்று திரும்பிவிட்டதாகவும் சொன்னார்கள். சரி.. அருவியைப் பார்க்க முடியாது போல என்று சொல்லிக்கொண்டு வண்டியை நகர்த்த முனைந்த போது நண்பர் மணி, நாமும் போய் ஏதாவது வழியைக் கண்டுபிடித்து அருவியைக் காணலாம் என்று ஆர்வத்தைத் தூண்டினார்.


அவரின் சொல்லில் உற்சாகமடைந்த அனைவரும் மறிக்கப்பட்டிருந்த சாலையில் நடக்கத் தொடங்கினோம். அழகிய வளைவுகள் கொண்ட அந்தச் சாலையில் சற்றேரக்குறைய ஒரு கிலோ மீட்டர் தொலைவு நடந்த பின் சாலைப்பணிகள் நடக்கும் இடத்தை அடைந்தோம். செல்லும் வழியெங்கும் சாலையின் இருபுறம் காட்டுக் கொடிகள் மரங்களின் மீது படர்ந்து ஒரு போர்வையைப் போலக் காட்சியளித்தது. சில இடங்களில் அது குகைகள் போலவும் சிலைகள் போலவும் காட்சியளித்தது. மேலும் செல்லும் வழி இறக்கமாக இருந்ததால் சலிப்படையவில்லை. அங்கே நின்றிருந்த வாகனமொன்றில் இருந்த பொறியாளர் ஒருவரிடம் அருவி பற்றி விசாரித்தததில், அருவிக்கு இன்னொரு வழி இருப்பதாகவும் அது நாங்கள் வண்டி நிறுத்தியிருந்த இடத்தின் அருகில் காட்டுக்குள் ஒரு ஒத்தையடிப்பாதையின் வழியாகச் செல்லலாம் என்றார்.
மீண்டும் வண்டி நின்றிருந்த இடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம். இந்த முறை சாலை ஏற்றமானதாக இருந்தது. களைப்பைக் கலைக்க பகடிகள் பேசி ஒருவழியாக வண்டி நின்றிருந்த இடத்திற்கு வந்த போது சிவன் கோவில் உண்டி வியர்வையாக வழிந்து சட்டையை நனைத்திருந்தது. பிறகு சாலையின் ஓரத்தில் பிரியும் ஒத்தையடிப்பாதையைத் தேடினோம்.
கடைசியில் அது வண்டி நிறுத்தியிருந்த மரத்தடியில் தொடங்கியது. வழியைக் காட்ட அங்கு இரண்டு சாலைப் பணிகளில் பயண்படுத்தும் கூம்புகளைக் கூட வைத்திருந்தனர். வழக்கமான வழிகாட்டிகள் இல்லாததால் எதிரே இருந்த வழியை விட்டுவிட்டு அதைத்தேடி இரண்டு கிலோ மீட்டர் நடந்து வந்து கண்டுபிடித்தது எதையோ நமக்குச் சொன்னது.




அருவிக்கான பாதை தெரிந்தவுடன் அருவியில் குளிக்கத் தேவையான ஆடைகளை மாற்றிக்கொண்டு காட்டு வழியில் பயணத்தைத் தொடர்ந்தோம். இது சாலைப் பணிகள் தொடங்கிய பின் உருவாக்கப்பட்ட பாதை என்பதால் மனிதர்கள் கால் நடையில் உருவான சிறு பாதையாக இருந்தது. வழியில் கிடந்த மரக் கிளைகளை கைத்தடியாக மாற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தோம். ஆங்காங்கே விழுந்திருந்த மரங்களைத் தாண்டித்தான் நடக்க வேண்டியிருந்தது. ஒரு சில இரங்களில் மண்சரிவுகூட ஏற்பட்டிருந்தது. பாதை சீராக இல்லை. ஒரு இடத்தில் 15 அடிகள் செங்குத்தாக சரிவில் இறங்க வேண்டியிருந்தது. இன்னொரு இடத்தில் வழி முடிந்து ஓடையொன்றை அடைந்தோம். அந்த ஓடையின் பாதையில் சிறிது தூரம் நடந்த பின் மீண்டும் கால்தடம் உருவாக்கிய பாதை தென்பட்டது. அதைத் தொடர்ந்து ஒரு வழியாக அருவியைச் சென்றடந்தோம். வழியெங்கும் அருவியின் சலசலப்புக் கேட்டுக் கொண்டே இருந்தது.
அருவிக்கு அருகில் பல காட்டுப் பாதைகள் பிரியும் சந்திப்பு ஒன்று வந்ததது. வந்த வழியை அடையாளப் படுத்த நண்பர்கள் கிளைகளை மரத்தின் மீது சாய்த்து வைப்பதும், தரையில் குறியீடுகளை எழுதுவதுமாக சில செயல்களைச் செய்தனர். திரும்பி வரும்போது இந்த அடையாளங்கள் வந்த வழியைக் கண்டுபிடிக்க மிக்க உதவியாக இருந்தது.
அருவியைச் சென்றடைந்த போது அங்கு சில இளைஞர்களும் ஒரு யுவதியும் நணபர்களாக அருவியின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். நாம் அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தாமல் இருக்கக் கையசைத்து "ஹாய்.." சொல்லிவிட்டு அருவியை படமெடுக்கக் களத்தில் இறங்கினோம். சிறிது நேரத்தில் அவர்கள் தனிமை பாழ் பட்டதை ஏற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

அருவியில் கால், தலை நனைத்து, அருவி கொண்டு வந்து சேர்த்த புனலில் ஆடிக் குதித்து ஆசை தீரப் படங்கள் எடுத்துக் கொண்டாடினோம். நண்பர் மணியின் புகைப்படக்கருவியில் எங்களை பதிந்து கொள்ள பல வகைகளில் நயனங்கள் செய்தோம். அந்தப் புகைப்படங்களை இன்று பார்க்கையில் அவ்வளவு எழிலாக இருந்தது.

ஒருவழியாக அங்கு எங்கள் கொண்டாட்டத்தை முடித்து மீண்டும் காட்டு வழிப் பயணத்தை நகைச்சுவையுடன் காணொளிப் பதிவு செய்து வாகனத்தை அடைந்தோம். ஆடைகளை மாற்றிக் கொண்டு அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தோம் மிக அழகிய அனுபவங்களோடு.

Thursday, June 21, 2018

மாத்தி யோசி

நிறுவனங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் மனிதர்கள் பெரும்பான்மையான நேரங்களில் தங்களுக்கு ஆதாயம் தரும் செயல்களையே செய்கின்றனர். அதிலும் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்கு வேலையில் ஒரு விருப்பமும், உற்சாகமும் கிடைப்பது அவர்களின் உழைப்பிற்கு கிடைக்கும் மரியாதையிலேயே என பல ஆய்வுகள் மூலம் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.

சேவை அதாவது ஊதியமில்லாமல், பலனை எதிர்பார்க்காமல் செய்பவர்கள் எப்படி அந்த வேலையை முழு மனதுடன், உற்சாகமாகச் செய்கிறார்கள்?

உண்மையில் மனிதனின் இயல்பு, பலனை எதிர்பார்த்தே எதையும் செய்கிறது. ஒரு சிலர் அப்படி எதையுமே எதிர்பார்க்காமல் சேவை செய்யலாம், ஆனாலும் அதில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஏதாவது ஒன்று இருந்தால்தான் அவர்களால் தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய முடியும்.

டிராபிக் ராமசாமி அவர்களை எடுத்துக் கொண்டால், அதிகாரிகளின் மெத்தனத்தை நீதிமன்றங்கள், சட்டங்கள் மூலம் கேள்விக்குள்ளாக்கி பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட வைக்கிறார். அவருக்கு உற்சாகம் சமூகத்தில் நன்மதிப்பு, அதிகாரிகளும் அவருக்கு அஞ்சும் போக்கு என்ற பொருண்மை சாராத பலன்களாக இருக்கலாம்.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு. அதிகாரம், பதிவி தருகின்ற பலன்கள் அவர்களைத் தொடர்ந்து தேர்தல் அரசியலில் இயங்கச் செய்கிறது. பொருன்மியப் பயன்களை எதிர்பார்க்காமல் ஒருவர் அரசியலில் இயங்க முடியுமா? என்றால் அப்படி இயங்குபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். இது மனித இயல்பு.

சரி அரசியலில் சாதாரண மக்கள்? அவர்களும் பலனை எதிர் பார்க்கிறார்கள். அந்தப் பலன் நேரடியான பொருண்மியப் பலனோ அல்லது விரைவில் உணரக்கூடிய பலனோ இல்லாத நிலையில் அது மக்களை உற்சாகப் படுத்துவதில்லை. அதனால்தான் அரசியல் பங்கேற்பு, ஓட்டளித்தலில் கவனம் செலுத்துவதில்லை.

அவர்களை உற்சாகப் படுத்தவே தேர்தலில் ஓட்டுக்குக் காசு, கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகள்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் இப்படி இல்லையே?

வளர்ந்த நாடுகளில் தேர்தல் வாக்குறுதிகள் நேரடியான பொருண்மியப் பலன்களைக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கான உற்சாகம், வாழ்கைத் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தாங்கள் பங்கெடுக்கவில்லையென்றால் சிஸ்டம் சீர்கெட்டுப் போய்விடும் என்று தங்கள் பங்களிப்பைத் தவறாமல் செய்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்த அளவில் நாம் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இதைச் செய்யலாம், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு அரசே ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து ஓட்டுப் போட்டபின் அதை மக்களின் கணக்கில் வரவு வைத்து விடலாம். ஏற்கனவே மானியங்களை ரத்து செய்தபின் அவர்களுக்கு அரசியல் பங்கெடுப்பில் ஆர்வத்தை உண்டு செய்ய இது எளிதான வழி.

அரசியல் கட்சிகள் மக்களுக்கு நேரடியாகப் பணத்தைத் தருவதை தேச துரோகத்தின் கீழ் கொண்டுவரலாம். இதன் மூலம் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடல்லாமல், பணம் கொடுப்பவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்யலாம்.

தேர்தலில் வெற்றி பெற்று சேவை செய்ய வருபரின் சொத்துக்களை அரசுடைமையாக்கிக்கொண்டு அவரின் குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் ஊதியம் தரலாம்.
கடைசியாக சொத்துக்களை வழி வழியாக சென்றடைவதைத் தடுத்து, ஒருவரின் சொத்துக்கள் அவர் இறந்தபின் அரசுடைமையாக்கப் படவேண்டும். (இந்த முறைதான் அமெரிக்காவில் இருக்கிறது)

Wednesday, January 24, 2018

தமிழுக்கு இருக்கை தமிழருக்கு மகுடம்


அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பது தொடர்பாக சமூக ஊடகங்கள், நண்பர்களுக்கிடையில் ஒரு கலவையான விவாதம் நடக்கிறது. அந்த உரையாடல்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு என்னளவிலான பதில்களைத்தரும் முயற்சிதான் இந்தப் பதிவு..

எதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை?

ஏன் 6 மில்லியன் டாலர் செலவு செய்து இருக்கை அமைக்க வேண்டும்?

இத்தனை செலவு செய்து அமைக்கும் இருக்கையால் தமிழுக்கு என்ன பயன்?

இத்தனை செலவு செய்துதான் தமிழை வளர்க்க வேண்டுமா?

போன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில் பொருளாதரத்தில் நல்ல நிலையில் இருக்கும் தமிழர்களிடம் நிதி திரட்ட ஆர்வலர்கள் முனையும்போது இது போன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது.

ஏன் தமிழிருக்கை? ஏன் ஹார்வார்டு? ஏன் 6 மில்லியன் டாலர்கள்? என்பதற்கு தமிழ் இருக்கைக்கான தனியான வலைத்தளத்தில் தெளிவான பதில்களைக் கொடுத்துள்ளனர், அதனால் அவற்றை ஒற்றி இங்கே இடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் இந்தக் கேள்விகளுக்குப் பின்னிருக்கும் நோக்கத்திற்கான பதிலைத் தர முயல்கிறேன்.

முதலில் நிதி திரட்டுவது, யாரிடமும் பிச்சை கேட்பதல்ல.

பொதுவாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவர் பிச்சை கேட்கும் போது, “கையும் காலும் நல்லாத்தானே இருக்கு எதுக்கு இப்படி பிச்சை கேட்டு பிழைக்க வேண்டும்?” என்று கேட்பது வழக்கம்.

தமிழிருக்கைக்கு நிதி கொடுப்பது அந்த வகையில் அல்ல. அப்படி ஒருவர் நினைத்தால் தாராளமாக “இல்லை” என்று சொல்லிவிட்டு விலகிக் கொள்ளலாம்.

மாறாக, வரலாற்றில் தமிழ் வளர்ச்சிக்கு நம் காலத்தில் நம்மாலான பொருளதவியைச் செய்து, வரலாற்றுக் கடமையாற்றுவதில் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை (தமிழ் இருக்கை அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட) தன்னார்வலர்கள் நிதிதிரட்டி நமக்களிக்கிறார்கள் என்பதுதான் நியாயமான எண்ணப்பாடாக இருக்கும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பெருமித உணர்வே நமக்குத் தேவை.

அதையும் மீறி நமக்குக் கேள்விகள் வரும்.. அதற்கான பதிலை நாம் கீழுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் தேடிக்கொள்ளலாம்.

நமக்குத் தமிழகத்தில் வருமானம் ஈட்ட பல வழிகளிருந்தும் ஏன் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வேலைதேடி வந்தோம்?

தமிழகத்தில் வீதிக்கு வீதி கோயில் இருக்கும் போது எதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறோம்?

வந்தபோது பழைய காரை வாங்கி ஓட்டிய நாம் ஏன் சாதரணக் காரை வாங்காமல் புதிய சொகுசுக் காரை வாங்கி ஓட்டுகிறோம்?

பிள்ளைகளைச் சாதாரணப் பள்ளியில் படிக்க வைக்காமல் மிகச் சிறந்த பள்ளியில் படிக்கவைக்க ஏன் முயல்கிறோம்?

இவை எல்லவற்றுக்குமான பதில்: ஆகச்சிறந்ததை அடைந்து கொள்ள வேண்டுமென்ற மனிதனின் சாதாரண வேட்கைதான். தனக்குக் கிடைக்காத வாய்ப்பை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆற்றாமைதான்.

நம் முன்னோர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள். அவர்களுக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால்? தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து தன் வாழ் நாள் முழுதும் செலவிட்டு அவை நயம்பட நமக்குக்கிடைக்க உழைத்த சாமிநாதருக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால்?

தன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாதவனால் தன் எதிர்காலத்தை ஒரு போதும் கைக்கொள்ள முடியாது என்பது முதுமொழி.

ஆகச்சிறந்த அறவிலக்கியங்களைக் கொண்ட தமிழில் இருந்து எத்தனை மேற்கோள்களை இன்றைய உலகலவிலான படைப்புகளில் காட்டுகிறார்கள். பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்றோர்களை மேற்காட்டுபவர்களுக்கு அவர்களின் படைப்பிற்கு இணையான இன்னும் சொல்லப்போனால் மேலான படைப்புகள் தமிழில் இருப்பது, அதை அறிந்தவர்கள் சொல்லாமல் எப்படித் தெரியும்?. அதை நீங்களும் நானும் சொல்லுவதை விட சாக்ரடீசையும், அரிஸ்டாட்டிலையும் ஆராய்ந்தவர்கள் சொன்னால் அதன் வீச்சு காத்திரமாக இருக்குமல்லவா?

தமிழர்கள் கடல்கடந்து தங்கள் வணிக, அரசியல் ஆளுமையைச் செய்திருக்கிறார்கள். அதன் சுவடாக உலகமெங்கும் உள்ள மொழிகளில் தமிழ் கலந்திருக்கிறது. ஊர்ப்பெயர்கள் தமிழில் இருக்கிறது. இவற்றை சான்றுகளுடன் கண்டறிந்து, இன்னும் வரலாற்றில் மறைந்து போன பக்கங்களைத் தூசிதட்டி எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.

இதைச் செய்ய உலகளாவிய, உலகத்தரத்திலான ஆராய்ச்சிகள் தேவை. இந்த ஆராய்ச்சி முடிவுகள் அரசுகளின் கட்டுப்பாடுகள், தடைகளைக் கடந்தவையாக இருக்க வேண்டும்.

கீழடியில் நடந்த ஆய்வின் முடிவை வெளியிடாமலே ஆய்விடத்தை புதைத்ததெல்லாம் தமிழகத்தில்தான் நடந்தது. இன்னும் எண்ணற்றை ஆய்வுகள் நடக்க வேண்டிய தேவையுள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டிய கடமை தமிழர்களான நமக்குத்தான் உள்ளது.

அந்தக் கடமையில் ஒரு பங்குதான் ஹார்வார்டு தமிழிருக்கை. இன்னுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் பண்பாட்டு, மொழியியல் துறைகளில் செம்மொழியாம் தமிழை அதற்குரிய உயரத்தில் தூக்கிவைப்பதிலல்லவோ தமிழ்த்தாயின் பிள்ளைகளின் கடமை. அதைச் செய்வதற்கு நமக்கு யாரும் நினைவூட்டவோ, நிர்பந்திக்கவோ தேவையில்லை. நமது கடமையாக பெருமையுடன் செய்வோம்.

நாளை நமது பிள்ளைகள் தலை நிமிர்ந்து தமிழின் புகழில் உலகெங்கும் ஆளுமை செலுத்துவார்கள். அதைக்காண நாமிருப்போமா என்று தெரியாது. ஆனால் நம் தமிழன்னை நிச்சயமாக இருப்பாள்.

அவள் அரவணைப்பில் நம் சந்ததிகள் புகழ்பெறட்டும். அதற்கு அவளை நாம் கொஞ்சம் கவனித்துக் கொள்ளலாமே..



உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.

இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!

-பாவேந்தர்