Wednesday, December 23, 2015

தமிழக அரசியலில் இன்றைய தேவை யார்?


இன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் தேர்தலைச்  சந்திக்க இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இரு கழகங்களின் ஆட்சியைப் பார்த்துவிட்ட மக்கள்குறிப்பாக இளம் தலைமுறையினர் அரசியல் மாற்றத்தையும் அதன் விளைவாக நிர்வாக சீர்திருத்தம்மக்களின் உரிமைகளுக்கு மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கின்றனர். எப்படி, பொருளாதார தாராளமயமாக்கல் இந்திய அரசியலில் தத்துவங்களை புறந்தள்ளி தனிமனித முன்னேற்றத்தை முன்னிறுத்தியதோஅதே போல அந்த பெரும் மாற்றத்தைக் கைக்கொள்ளும் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய சமூகம் முகம் கொடுத்திருக்கும் சிக்கல்கள் இது வரை ஆட்சி செய்த கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனியார் மயமான கல்விஇன்று ஒவ்வொரு பெற்றோரையும் கடன்காரர்களாகவும்அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் முக்கியக் காரணியாகவும் இருக்கிறது. எப்படி பிறப்பின் மூலம் சாதிப் படிநிலை ஒரு காலத்தில் ஒருவரின் தலைவிதியைத் தீர்மானித்ததோஅதே போல பிறப்பின் மூலம் வசதி படைத்தவர் ஒரு தரத்திலும்வசதி படைத்திராதவர் ஒரு தரத்திலும் கல்வி பெறும் சூழல் நிலவுகிறது. கல்வி ஒருவருடைய வாழ்கைத் தரத்தை உயர்த்தும் என்ற அடிப்படையையே இந்த நிலை கேள்விக்குள்ளாக்குகிறது.

வெறும் எண்களால் நிறுவப்படும் பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையை இந்த பூமிப்பந்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் செய்துவிடும் பொருளாதாரச் சார்பு கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏரிகள்குளங்கள்ஆறுகளை அழித்து ஆலைகள்குடியிருப்புகள் அமைக்க இப்போது எந்த தடையுமில்லை. இது எப்படி பிராய்லர் கோழிகளை முப்பது நாளில் மருந்துகள் கொண்டு எடையேற்றி கறியாக்குகிறோமோ அதைப்போல. இந்த முன்னேற்றம் நீண்ட காலத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது. இன்னொரு புறம் சாமனியன் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்தே ஆகவேண்டிய நிலை. எந்த ஒரு பத்திரப் பதிவும் லஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை. இன்றைய நிலையில் லஞ்சம் வாங்குவதையோ லஞ்சம் கொடுப்பதையோ யாரும் குற்றமாகவோகேவலமாக பார்ப்பதில்லை. சமுதாயத்தின் மனசாட்சியின் அறத்திற்கான அளவுகள் மாறிவிட்டது. ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சிக்காரர் மக்களின் காலில் விழுந்த காலம் போய்கரண்சியில் அடித்து ஓட்டு வாங்கும் நிலை நிலவுகிறது. தேர்தல் முடிந்தால் தெருவில் சாக்கடை அடைத்து விட்டாலும்சாலை பழுதானாலும் அந்த அரசியல் கட்சிக்காரரிடம் ஏதும் கேட்க முடியாது. அவருக்கு எதுவெல்லாம் லாபம் தருமோ அந்த அரசுப் பணீகளையே செய்வார். இங்கு காசுக்கு ஓட்டுப்போட்டவனின் உரிமையும் விலைக்கு வாங்கப்படும் சூழல்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் போலமனிதனிடம் புதிய வியாதிகளும் ஆண்டு தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்கள் ஏதோ ஒரு மருந்தைத் தயாரித்துவிட்டு அதற்கான நோயைக் கண்டு பிடிக்கிறார்களோ என்று கூடத் தோன்றுவதுண்டு. தனியார் மருத்துவமனைகளின் பெருக்கம் அரசு மருத்துவ மனைகளின் எண்ணிக்கைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் அனுமதித்தோம். ஆனால் இன்று அவையும் ஒரு நோய்போல் பரவி இன்று சாவை முன்னிறுத்திமருத்துவனைப் படியேறும் ஒவ்வொருவரிடமும் கொள்ளையடிக்கின்றன. தனிமனித மருத்துவச் செலவுகள் தனி ஒரு வரவு செலவு திட்டத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தரமான மருத்துவமும்(சுகதாரமும்) கல்வியும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டு அது உறுதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மருத்துவம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அமெரிக்காவில் மருத்துவம் தனியார் வசம் இருந்தாலும்எந்த ஒரு மனிதருக்கும் பணமில்லை என்ற காரணத்தால் மருத்துவம் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. இந்திய அளவில் மருத்துவத்துறையில் மாற்றம் வேண்டும் என்ற போதிலும்மாநில அளவில் அதற்கான முன்மாதிரிகளைச் செய்யலாம்.

சரி... இபோது நமக்குள்ள வாய்ப்புகள் என்னதிமுகஅதிமுக ஆகியவற்றின் ஆட்சியை பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ஆட்சி முறையில் வித்தியாசமில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இவர்களின் ஆட்சியில் ஓட்டுக்கு காசுஇலவசங்கள்டாஸ்மாக் என்று ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கப்பட்டுவிட்டது.. இந்த முறையும் இவர்களைத் தேர்ந்தெடுத்தால்பெரிய மாற்றத்தை எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக எப்படியும் இருவரில் ஒருவர் என்று முடிவுசெய்து இப்போதுபோல் ஊழலைத் தொடர்ந்து தைரியமாகச் செய்வர். அடுத்து நமக்குள்ள தேர்வுமக்கள் நலக் கூட்டணிபாமகநாம் தமிழர்ஆம் ஆத்மிகாங்கிரஸ்பாரதிய ஜனதா.

பாரதிய ஜனதாவும்காங்கிரஸும்ஆம் ஆத்மியும் தேசியத்தலைமையின் கீழ் இயங்குபவை. ஏனைய மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தின் உரிமைகள்சிக்கல்கள் வேறானவை. இங்கு மொழியிலுருந்துஉணவு வரை ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒரு போதும் இங்கு வெளி மாநிலத் தலைமை எடுபடாது.

பாமக வின் அரசியல் அதிரடியாய் இருந்தாலும் கடந்த கால சாதி ரீதியான அரசியல் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை இன்னும் பெறவில்லை. மேலும் பாமக எல்லா மாவட்டங்களிலும் வலுவாக இல்லை. அதனால்வட மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினாலும் பாமகவின் ஆட்சியமைக்கும் முயற்சி வெற்றி பெறாது.

அடுத்து நாம் தமிழர் கட்சி. ஆரம்பம் முதலே தமிழர்கள் குறித்த அக்கறையுடன் அரசியல் செய்வதுபல தரப்பட்ட மக்களை துணை இயக்கங்கள் மூலம் அரவணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தினாலும்அவர்கள் அறிவிக்காமலே, இன வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுபோல் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதற்கான சரியான பதிலையும் செயல் பாடுகளையும் தலமை வெளிப்படுத்தும் போது தமிழகத்தில் பெரும் சக்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்துவிஜயகாந்தின் தேமுதிக. அது அதிமுகதிமுக விற்கு மாற்றாக உருவெடுத்தது. ஒருகட்டத்தில் திமுக வை ஒழிக்க அதிமுக வுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்ததும்இப்போது அதிமுக வை ஒழிக்க யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்திலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி வைத்துள்ள விஜய காந்தினால் தனியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்அவர் கட்சிக்கு விழும் ஓட்டு எதிராளியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்திருக்கிறது. 

கடைசியாக மக்கள் நலக் கூட்டணி. வைகோதிருமாவளவன்இடது சாரிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி பல்வேறு பரிமாணங்களில் ஆட்சியமைக்கும் நம்பிக்கையளிக்கிறது. வைகோ சிறந்த தலைவரானாலும் அவர் தமிழக அரசியலில் வெற்றி பெற முடியாததற்குக் காரணம் அவர் தமிழக அரசியல் சூழலை உள்வாங்க வில்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் தமிழக நலனில் வைகோவின் போராட்டங்களும்அரசியலும் மிகப் பெரும்பங்காற்றியது வரலாறு. அதிகாரத்தில் இல்லாதபோதும் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் முன்னின்று அரசியல் போராட்டங்களும்சட்டப் போராட்டங்களும் செய்தது யாவரும் அறிந்தது. அவருடன் இணைந்துள்ள திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதைத் தாண்டிஅனைத்து மக்களுக்குமான அரசியல் வாதியாக பரிமளிப்பது மிகப்பெரிய பலம். கூடங்குளம்ஈழப் பிரச்சினையில் கருத்தால் வேறுபட்டிருந்தாலும்அடிப்படையில் தமிழக நலன்களில் இடது சாரிகளின் போராட்டங்களும் முன்னெடுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தனியார் மயமாக்களுக்கு எதிரான அரசியல்தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்கு இடது சாரிகள் பெயர்போனவர்கள். இம்மூவர் கூட்டணி பல்வேறு தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. ஆனால் கூட்டுத்தலைமை என்பது தமிழகத்தைப் பொறுத்த அளவில் புதிய முயற்சி. அந்த முயற்சி பரிசோதிக்கப்படும் அதே நேரத்தில் சிறந்த நிர்வாகத்திறமையும்வெளிப்படையான அணுகுமுறையும் கொண்ட முதன்மை-அமைச்சர் தமிழகத்தின் இன்றைய தேவை. அந்த வகையில் நமக்கும் நேர்மைக்கு பெயர்போன சகாயம் ஐஏஸ் சரியான தேர்வாக இருக்கிறார்.

இதுநாள் வரைஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். அவரே ஒன்றிற்கும் மேலான துறைகளுக்கு அமைச்சராகவும் தன்னிச்சையாக முடிவெடுப்பவராகம் இருந்திருக்கிறார். ஒருவகையில் அதிகாரம் ஒரிடத்தில் குவிந்து அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதில் பெரும் சிக்கல்களைக் கொடுத்துள்ளது.


ஆனால் சகாயம் போன்ற ஒருவர் முதல்வராக இருக்கும்போதுஅரசியல் தலையீடுகள்சமரசங்கள் இல்லாத முதன்மை-அமைச்சராகச் செயல்பட முடியும். வைகோதிருமாகம்யூனிஸ்டுகள்தேமுதிக போன்றவை அமைச்சரவையை பகிர்ந்து கொண்டுசகாயம் அவர்களை சாரதியாக்கி தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அரசு நிர்வாகத்தில் அரசியல் வாதிகள் தலையீட்டை இது போன்ற முறையில் தடுத்திட முடியும். கொள்கைகளையும், மக்கள் பிரச்சினைகளையும் ஆட்சி இயந்திரத்தின் கவனத்திற்கு நமது அரசியல் தலைவர்கள் கொண்டு செல்லவும்அவற்றிற்கு அரசு இயந்திரத்தின் மூலம் தீர்வு காண்பது, சகாயம் அவர்களின் திறமையின் மூலம் சாத்தியமே. இது போன்றதொரு சூழலில்கட்சிக்காரர்களுக்கு காண்ராக்ட்காண்ராக்டில் கமிசன்நிறைவேற்றப்படாத திட்டங்களுக்கு செலவுக்கணக்கு போன்ற பல்வேறு ஊழல் முறைகளை அரசியல் தலையீடு இல்லாமல் அழித்துவிடலாம். இந்த ஆட்சியில் தேமுதிக வாகும் பங்கெடுத்து அரசை வழிநடத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் நிச்சயம் பெரும் மாற்றத்தையும்முன்னேற்றத்தையும் அடைந்திட முடியும்.

Tuesday, December 15, 2015

அதிமுக வெறுப்பு திமுக விற்கு விழும் லைக்கா?...

டாஸ்மாக் மற்றும் வெள்ள பாதிப்பு, தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அதிமுக அரசின் இயலாமை பல்லிளிக்கும் இந்த நேரத்தில் திமுக கூடாரம் உற்சாகத்தில் இருப்பது போலும் மக்கள் அடுத்த மாற்றாக திமுக வைத்தான் தேர்ந்தடுப்பர் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான திமுக ஆதரவு பிரச்சாரம் மட்டுமில்லாமல், மக்களை திசை திருப்பும் உக்தியும் கூட.

கடந்த தேர்தலில் திமுக துறத்தியடிக்கப்பட்டதற்கான காரணங்கள் அப்படியேதானிருக்கிறது.

  1. 2G அலைக்கற்றை ஊழல்
  2. ஈழத்தமிழர் விடயத்தில் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றியது.
  3. மாவட்டச் செயலாளர்கள் முதல் ஊராட்சித் தலைவர்கள் வரை ஊரான் சொத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுக் கொண்ட அராஜகம். அதைத் தடுக்க 'அம்மா' கொண்டுவந்த நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பின் 'ஏதோ' சமரசத்திற்குப் பின் செயல்படவில்லை.
  4. டாஸ்மாக் குழாயாய் மேலும் திறந்து விட்டு சமுதாயத்தை சீரழித்தது
  5. தாது மணல், கிராணைட் கொள்ளை
  6. நதி நீர் உரிமைகளில் சமரசமடைந்தது.


இன்னும் ஏராளம்...

அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது முற்றிலும் திமுக வெறுப்பினாலன்றி வேறு காரணங்கள் ஏதுமில்லை. மேற்ச்சொன்ன ஓரிரு காரணங்களைத் தவிர்த்து அதிமுக வின் ஆட்சிக்கும் திமுக ஆட்சியின் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்.

இந்த சூழலில் திமுக வின் ஆட்சிக் கனவு மக்களின் மறதியை நம்பியே இருக்கிறது. அவ்வப்போது முகநூல் பதிவுகள் பழைய கதையை நினைவு படுத்தி மக்களை உசார் படுத்தி அந்த கனவை கலைத்து விடுகிறது.

தமிழக அரசியல் சூழலையும், மக்களுக்கு மாற்று ஒன்றை உருவாக்க மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியயை வைகோ, திருமா மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த கூட்டணியின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களின் தொடர் பிரச்சாரம், டாஸ்மாக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் எடுத்த நிலை, வெள்ள நிவாரணப்பணிகளில் தலைவர்கள் என்ற மமதையெல்லாம் இல்லாமல் வீதியில் இறங்கி சேற்றை அள்ளுவது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளிடமிருந்தும் விடிவு வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு இவர்களின் அரசியல் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்து மக்களின் எண்ணவோட்டத்தை திசை திருப்புவதில் கலைஞர் வல்லவராயிற்றே. மதிமுக வில் முக்கியமானவர்கள் விலகி திமுக வில் இணைவது ஏதோ வைகோ மேலுள்ள வெறுப்பினாலும், அவர் அதிமுக வெற்றிபெற கூட்டணி அமைத்திருப்பதனாலும், அவர்கள் திமுக வில் இணைவது இயற்கையானது என்பதுபோலவும் பரப்புரை செய்யப்படுகிறது.

உண்மை என்ன என்பது கடந்த ஆறு மாத நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.

செப் 17 ல் வைகோ மக்கள் நலக் கூட்டணிக்கான அத்திவாரத்தை அமைத்தபின், திமுக கொஞ்சம் ஜெர்க்காகி தாமரைக்கண்ணன் போன்ற நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்தது.

இப்போது விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது போன்ற அறிகுறி தெரிந்தவுடன், ஜோயல்... இந்த ஜோயலுக்கு வைகோ மக்கள் நலக்கூட்டணி அமைத்தபோதும், வைகோ திமுக, அதிமுக வுடன் கூட்டணி அமைக்கமாட்டேன் என்று அறித்த ஆறு மாதத்திற்கு முன் கட்சி மாறாமல், இன்று அதிமுக வெறுப்பு மக்கள் நலக் கூட்டியக்கத்தின் மேல் விழும் அறிகுறி தெரிந்த பின் கட்சிமாறியது இயற்கையானதா?

கருணாநிதியின் அரசியல், இத்துபோன பழி பாவங்கள் சேர்ந்த அரசியல். அது இப்படித்தானிருக்கும். எப்போதெல்லாம் தனக்கு பாதிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஜோயல் போன்ற யாராவது மாற்றுக் கட்சியிலிருந்து கருணாநிதிக்கு சால்வை சாத்தும் நிகழ்வுகள் நடக்கும். அதற்கான முன்னேற்ப்பாடுகள் பல நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டிருக்கும்.

வெள்ள நிவாரணத்தில் இவ்வளவு செலவிட்டோம், அவ்வளவு செலவிட்டோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லி கொண்டிருக்கும் அதிமுக விற்கு, திமுக விடம் எந்த கேள்விகளும் இல்லை. ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இருந்தால், இது போன்ற ஊழல்களை ஆய்ந்து ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்றல்லவா அறிக்கை வந்திருக்க வேண்டும். ஆனால், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் திமுக விற்கு, இப்போதிருக்கும் வாய்ப்பெல்லாம் அறிவாலையம் பக்கம் போகும் ஸ்கூல் பசங்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து திமுக விற்கு வந்து விட்டனர் என்று ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவதுதான்.

இன்றைய இளைஞர்கள் ஊழலற்ற, மக்கள் நலன் காக்கும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்கள். அதானால் திமுக வைப் பற்றி திமுக காரர்களே கவலைப் பட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்கள்.

Sunday, November 29, 2015

இதுவும் ஒரு சாதாரண பதிவுதான்

சம்பவம் 1:  ஒரு வழியாக Thanks Giving Weekendக்கு எண்டு கார்டு போட்டாகிவிட்டது. அங்க இங்க Search பண்ணி ஒரு ஆப்பிள் கணினியை 30% தள்ளுபடியில் வாங்கியாகிவிட்டது. இன்று அந்த கடை, ஒரே நாளில் ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு விளம்பரம் ஏதுமில்லாமல் விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதாக அதன் இணைய தளத்தில் விளம்பரம் செய்திருந்தது.

சம்பவம் 2:  நேற்று பொழுது போகவில்லையென்று 'தி கன் மேன்' என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வழக்கமான உயிரை காப்பாற்றிக்கொள்ளும் திரில்லர்தான். கதையின் நாயகன் காங்கோவில் அங்கு தோண்டப்படும் தாதுக்களை கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து வாங்கி விற்றுப் பயன்பெரும் தனியார் நிறுவனங்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு அந்த நாட்டின் சுரங்கத்துறை மந்திரி சுரங்கங்களை அரசுடமையாக்கும் சட்டத்திருத்ததை கொண்டுவர முயல்வதால் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவான். பின் அவனைக் கொள்ள அவனது முன்னாள் கேப்டன் முயற்சி செய்வது தெரிய வரும்போது, நமக்கும் ஒரு உண்மை தெரியும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சம்பவம் 3:  நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் கோல்டான் என்ற மூலப்பொருளைக் கொண்ட டேண்டலம் கெப்பாசிடரை உள்ளடக்கியது. இந்த கோல்டான் காங்கோவில்தான் அதிகம் வெட்டியெடுக்கப் படுகிறது. இந்த உண்மை இன்று பார்த்த காங்கோவின் Conflict Mineral என்ற ஆவணப் படத்திலிருந்து தெரிந்தது. அந்த ஆவணப் படத்தில், கோல்டான் வெட்டியெடுக்கும் சுரங்கம் உள்ள பகுதி கிளர்ச்சிக்காரர்கள் கைவசம் இருக்கிறது. ஆவணம் தயாரிப்பவர் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கிளர்ச்சிக்காரர்கள் பகுதிக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் Neutral லைனைக் கடக்க அங்கிருக்கும் ஐநா வின் துருப்புக்களைச் சந்திக்கிறார். அந்த ஐநா துருப்பின் சட்டையில் 'பெலி சிங், இந்திய ராணுவம்' என்று எழுதப்பட்டிருக்கிறது.


மேற்சொன்ன மூன்று சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், கட்டுரையை மேலும் படிக்க வேண்டியதில்லை.

நாம் எங்கெல்லாம் தள்ளுபடியையும், விலைக்குறைப்பையும் எதிர்பார்க்கிறோமோ பெரும்பாலான சமையங்களில் அங்கெல்லாம் அந்த தள்ளுபடிக்கும், விலைக்குறைப்பிற்கும் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு அப்பாவி அவன் உழைப்பை, வளத்தை இழக்கிறான். காங்கோவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களிடமிருந்து தாதுக்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பெரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்பவர்கள் உங்களுக்கும் எனக்கும் தெரிந்த, தெரியாத வணிக நிறுவனங்கள்தான். காங்கோ ஒரு அற்புதமான இயற்கையின் கொடை கொண்ட தேசம். அங்கு இருக்கும் வளங்கள் உலகில் எங்குமே இல்லை. இருந்தும் காங்கோ குடிமகனுக்கு படிப்போ, உணவோ, உடையோ இல்லை. அவன் போராட்டமெல்லாம் அன்றைய உணவுக்கானதாகவே இருக்கிறது.

ஐநா அங்கு அமைதியை நிலை நாட்ட குடிகொண்டிருப்பது போல் நமக்குத் தெரியும். ஆனால் அங்கு நடக்கும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வராமலும், தனியார் முதலாளிகளின் லாபங்கள் குறையாமல் பார்த்துக் கொள்வதும் தான் முக்கிய நோக்கம். அங்கிருக்கும் பெலி சிங்கிற்கு இதெல்லாம் தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இங்கிருக்கும் சில முதலாளிகளுக்கு நன்று தெரியும்.

சரி.. புரட்சி பேசியது போதும்.. ஐபோன் 6 ப்ளஸ் 20% தள்ளுபடியில் எங்கு கிடைக்கும் என்று பார்க்க வேண்டிய வேலையிருக்கிறது. வரட்டுமா...

பிறகு சந்திப்போம்...


Saturday, November 21, 2015

ஒரு லைக் ஒரு லைப் - இறுதிப் பாகம்

பக்கம் 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 2 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

"இல்லை. எனக்கு முக்கியமான பிராஜக்ட் ரிலீஸ் இருக்கிறது. ஏன்?" என்று கேட்டான். நாளை குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி இது பற்றி விவாதிக்க இருப்பதாகச் சொன்னார்.

தன்னால் வர இயலாத நிலையையும், குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தான் உதவுவதாகவும் வாக்குறுதியளித்தான். அடுத்த இரண்டு நாட்கள் புராஜக்ட் ரிலீஸ் சம்பந்தமான வேலைகள் இறுக்கவே, அவனால் முகநூல் பக்கம் போக முடியவில்லை.

உலகம் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. யாரும் விலை வாசியைப் பற்றி கவலைப் படவில்லை. அறை நண்பனுக்கு, கவலையெல்லாம் தளபதி படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என்று. மேனெஜருக்கோ டிக்கெட் எஸ் எல் ஏ வைக் கடக்கக் கூடதென்று. டிராபிக் சிக்னலில் ஹெல்மெட் போடதவருக்கு தூரத்தில் நிற்கும் காக்கிச்சட்டைக் காரரின் கண்ணில் படக்கூடதென்ற கவலை.

வழக்கமான அலுவல்கள் முடித்த பின், பேஸ்புக்கை திறந்தான். அவனது மெஸெஞ்சரில் அவரது நண்பரிடம் இருந்து பல செய்திகள் காத்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக படிக்க ஆரம்பித்தான்.

"ஹாய்"..

"நேற்று குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விவதம் நடந்தது"

"உங்களை நண்பர் ராஜேஸ் எதிர்பார்த்திருந்தார். நான் தான் அவருக்கு உங்கள் நிலையைச் சொன்னேன்"

"ஜனநாயகத்திற்கெதிரான இந்த நகர்வை நாம் தடுப்பதென உறுதி மொழி எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக இதில் சட்ட ஆலோசனை செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நகர்வாக ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்டு ஒரு போராட்டத்தை ஒருங்கினைக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் வரும் 14ம் தேதி, வெள்ளிக் கிழமை காலை காந்தி மண்டம் அருகே நடைபெற உள்ளது". என்று முடிந்திருந்தது.

அவனக்கு அந்த குழுவின் நடவடிக்கைகள் நியாயமாகப் பட்டது. 

"நன்றி. நிச்சையம் பங்கேற்கிறேன்" என்று பதிலளித்திருந்தான்.

அவனுக்கு ஜனநாயகத்தின் முறைகளின் மேல் நம்பிக்கை வந்திருந்தது. அநீதியை எதிர்க்க ஜனநாயகத்தில் வழிகளும் இருக்கிறது என்று நம்பினான்.

சிறிது நேரத்தில் அவனுக்கு செய்தி வந்தது.

"நன்றி.. போராட்ட ஏற்ப்பாடுகள் குறித்து மாலை தெரிவிக்கிறேன். போராட்டத்திற்கும், சட்ட முன்னெடுப்பிற்கும் பொருட் செலவு ஆகும். உங்களால் முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றாலும் பராவியில்லை" என்று பதில் வந்திருந்தது.

அவனுக்கு அந்தச் செய்தி ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. "இல்லையென்றாலும் பராவியில்லை" - எப்படி நம்மைப் பற்றி அவர் இந்த மாதிரி ஒரு மதிப்பீடு செய்திருந்தார். "எனக்கும் இந்த நாட்டின் மீது அக்கறையிருக்கிறது" என்று அவனுக்கு ஒரு குரல் பேசியது.

"நிச்சயம் உதவி செய்கிறேன். வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புங்கள்" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர் பதிலளித்திருந்தார்.

"நன்றி. வங்கிக் கணக்கு, XXXXXXXXXXX".

அதற்கு முகிலன், "அனுப்புகிறேன். நமது முயற்சி வெற்றி பெற என்னாலான உதவிகளைச் செய்கிறேன்" என்று பதிலளித்தான்.

"நன்றி. நிச்சயம் போராட்ட நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்" என்று நண்பர் கோரிக்கை வைத்தார்.

"நிச்சயமாக" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தனது வங்கிக் கணக்கிலிருந்து நண்பர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய்களை அனுப்பி வைத்தான்.

இப்போது ஒரு நிறைவான அனுபவத்தை உணர்ந்தான். தான், நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளவனாகவும், அநீதிக்கெதிராகக் குரல் கொடுப்பதையும் நினைத்து பெருமிதமாகவும் உணர்ந்தான்.

அரசியல் போரட்டங்கள் மூலம் ஜனநாயக வழியில் போராடி தனியார் நிறுவனங்கள், பொதுமக்களின் சொத்தை கொள்ளையடிக்கும் போக்கிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று உறுதியாய் நம்பினான். போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டான். அவனது இணைய நண்பனிடம் காந்தி மண்டபம் அருகே எங்கு சந்திப்பது என்ற தகவலைப் பெற்றுக்கொண்டான்.

வெள்ளி.......சனி...... ஞாயிறு.......... எப்போதும் போல் கடந்து சென்றது.

இன்று திங்கட் கிழமை மதியம்.....அவனது அலுவலகத்தில் அவனது இருக்கை காலியாகவே இருந்தது. தலைக்குமேல் இருந்த வேலைகளைச் செய்ய மேனஜர் முகிலனைத் தேடிக்கொண்டிருந்தார். அவனது செல்போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

அன்றைய மாலை மலரில் செய்தி இப்படியாக இருந்தது....

'சென்னையில் நக்சலைட் கைது'......

தமிழக காவல்துறையின் புலனாய்வுத்துறை மற்றும் சைபர் கிரைம் இணைந்து நடத்திய ஆப்பரேசனில், முகிலன் என்ற நக்சலைட்டை, சென்னையில் மடக்கி கைது செய்தனர். அவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குழைக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டியபோது போலிசாரால் வலைவிரித்து பிடிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் எஞ்சினியரான முகிலன் கடந்த சில நாட்களாக நக்சலைட்களுடன் தொடர்பு கொண்டு இயங்குவதை மோப்பம் பிடித்த காவல்துறை, அவரை லாவகமாக ஒரு இடத்திற்கு வரவைத்து பிடித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவரும் காவல் துறை, பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு செய்தி..

'நாட்டு மக்களனைவருக்கும் தட்டுப்பாடில்லாத, சுகாதாரமான குடிநீரை கொண்டு சேர்க்கும் 'அனைவருக்கும் தண்ணீர்' சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேரியது. இந்த சட்டத்தின் மூலம், சுகாதாரமான குடி நீர் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைய, அரசு வழி வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளது. குடிநீரை சுத்தீகரித்து மக்களிடம் வினியோக்கும் செலவுளுக்கு அரசு  இந்த நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு, இருபத்தி நாலாயரம் கோடி ஒதுக்கியிள்ளது.

................

முற்றும்.

Sunday, November 15, 2015

ஒரு லைக்... ஒரு லைப் - ரியல் லைப் சிறு கதை - 2

பகுதி 1 படிக்கே இங்கே

முகிலனுக்கு இது மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தான் இதுவரை செலவிட்ட நேரம் வீண்போகவில்லை என்பதை அறிந்தும், கண்டுணர்ந்த உண்மைகள் ஆனித்தரமானவை என்பதையும் நினைத்துப் புத்துணர்ச்சி அடைந்தான். தன் ஏனைய நண்பர்கள், பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், அவனுக்கு முகமறியாமல் இயங்கும் இந்த சமூக இணைப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருந்தது. ஆனால் இன்று அந்த எண்ணங்களெல்லாம் பொய்யாகும் நேரம் வந்து விட்டதாக உணர்ந்தான்.

இதுபோன்ற மனிதரிடம் நட்பாகவும், தொடர்ந்து அவரது சிந்தனைகளை படிக்கவும், அவரது பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு லைக் போட்டு வைத்தான். அவ்வப்போது அந்த பக்கத்தில் கருத்துக்களையும் பதிவு செய்துவந்தான். அதிலிருந்து திடீரென அவனக்கு நட்புக் கோரிக்கைகள் குவிந்தது.

நாட்டின் விலைவாசி உயர்வு, ஒவ்வொரு மனிதனையும் பாதித்தது. அந்த பாதிப்பு சாப்ட்வேர் முகிலனையும் பாதித்தது. திடீரென உயரும் பெட்ரோல் விலை, பயணச்செலவை மட்டும் அதிகம் செய்யவில்லை. ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து, டூத் பேஸ்டு, காபி வரை கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு புறம் ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறும் இந்த பொருளாதாரச் சூழல் ஒரு சட்டப்படி நடக்கும் கொள்ளை என்பதாக உணர்ந்தான். 

அந்த நேரத்தில் அவனது பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் "ஹை" என்று ஒரு செய்தி வந்தது. அது அவனைப் போலவே பேஸ்புக்கில் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் குழுவில் இருக்கும் முகம் தெரியாத நண்பர். "இந்தியாவின் பெரும் முதலாளிகள் இணைந்து ஒரு சட்ட முன் வரைவை நமது நிதி அமைச்சரின் மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி குடி நீர் அடிப்படை உரிமைகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். மக்களுக்கு தண்ணீரை வினியோகிக்கும் கடமையை அரசின் கையிலிருந்து தனியாருக்கு மாற்றி விடும். இனி பெட்ரோல் போல் தண்ணீரும் காசிருப்பவருக்கே" என்ற தகவலைப் பகிர்ந்தார்.

அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. "இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அப்படியெல்லாம் ஒரு சட்டத்தை கொண்டு வந்து விட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினான். "அந்த மசோதாவின் மீது ஓட்டுப் போட தேவையான எம்பிக் களின் ஆதரவை விலைக்கு வாங்கி விட்டனர்" என்று பதில் வந்தது.

முகிலனால் அந்த நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. தண்ணீர் - ஜீவ ராசிகளுக்கு பொதுவானதல்லவா?. அதை மனிதனிடமும், உயிர்களிடமிருந்தும் விலக்கினால் உயிர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்காதா? காசுள்ளவன் தான் தண்ணீரை வாங்க முடியுமென்றால், ஒரு வேளை உணவுண்டு உயிர்வாழும் எண்ணற்ற மனிதர்கள் என்ன ஆவார்கள்?  விவசாயம் என்ன ஆகும்? பொதுக் குழாய்களிலிலும், ஏரிகளிலிலும், குளங்களிலும் உள்ள நீரை நம்பி வாழ்பவர் என்ன செய்வார். எண்ணற்ற பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? பேராசை கொண்ட மனிதன் தண்ணீரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உயிர்களையெல்லாம் அழிக்க நினைக்கிறானே. இது நடக்கக் கூடாது என்று மனதிற்க்குள் நினைத்துக் கொண்டு, "இதை எப்படி தடுப்பது?" என்று கேள்வி கேட்டான்.

"உங்களைப் போலவே நமது குழுவில் உள்ள பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இந்த செய்தி பல பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் கைகள், அரசின் அதிகாரத்தினால் கட்டப்பட்டுவிட்டது. மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு சென்சிடிவான விசயங்களை தனது அஜெண்டாவில் வைத்துள்ளது. மக்களின் கவனம் எப்போதும் இதன் பக்கம் திரும்பாமலிருக்க, அவை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்படும், ஏதாவது ஒரு அரசியல் வாதி தாக்கப்படுவார், ஏதாவது ஒரு வழக்கு விசாரணைக்கு வரும், ஏதாவது ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்படுவார். புதிய சர்ச்சைக்குறிய அறிவிப்பு, சலுகைகள், ஆணைகள் வெளியிடப்பட்டு அதன் மீது கடுமையான விவாதங்கள் நடக்கும். ஏதாவதோரு சாதிப்பிரச்சினை ஊதிப் பெருக்கப்படும்." என்றார் நண்பர்.

"சரி இதற்கு என்னதான் தீர்வு?" என்றான் முகில்.

"நாளை மாலை நீங்கள் ப்ரீயா?" என்று கேட்டார் நண்பர்.

 - தொடரும் -

Friday, November 13, 2015

மழைக்கால பாதுகாப்பு

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையைக் கொண்டாடியும், கோபித்தும் பல பதிவுகளை எழுதியாகிவிட்டது. மின்சாரமில்லை, மீட்பு நடவடிக்கைகள் இல்லை என்ற குரல்கள் ஒரு புறமும், அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒருபுறமும் நடந்து கொண்டிருக்க, நம்மாலான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நம்மை பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும்.


1. மழை தொடரும் என்று வானிலை அறிக்கை தெரிவிப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். தாழ்வான பகுதியில் இருப்பதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. இது போன்ற அவசர காலங்களில் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருட்களை ஒன்றிரண்டு வாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3. சாலைகளில் தண்ணீர் தேங்கி, சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் இருந்தால், அந்த சாலையை தவிர்திடுங்கள். மழையின் நீரோட்டத்தால் பாலங்கள், சாலைகள் உடைந்து பெரும் குழிகள் இருப்பது மேலிருந்து பார்த்தால் தெரியாது. அது போன்ற இடங்களில் பயனிக்கும் போது வாகனத்துடன் நீரீல் மூழ்கும் அபாயம் உண்டு. அவ்வாறான சூழல்களில் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்த அளவு பயணங்களைத் தள்ளிப் போடுவது பாதுகாப்பானது.

4. மரங்கள், மின் கம்பங்கள், கட்டிட வேலை நடக்கும் இடங்களில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையினால் இவை பாதிப்படைத்து விழுவது மட்டுமல்லாமல் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடும்.

5. மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தாலோ, அருகில் நெருங்க வேண்டாம். உடனடியாக மின் வாரியத்திற்கும், உங்கள் பகுதி உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கவும். வேறு யாரும் நெருங்காமல் இருக்க, சிவப்பு துணிகொண்டும்/ தடுப்புகள் அமைத்தும் எச்சரிக்கை செய்யுங்கள்.

6. மழை காலங்களில் தண்ணீர் நிலத்தில் தேங்கும் போது, நிலத்தில் வாழும் பாம்பு, எலி போன்ற உயிரினங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வெளியே வரும். கவனமுடன் இருப்பது நல்லது.

7. மழைக் காலங்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் தண்ணீரில் பரவும் கிருமிகள் காரணமாக நோய்த்தொற்று ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவற்றுள் காலரா, டெங்கு போன்ற நோய்களும் அடங்கும்.

8. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

9. உணவுப் பண்டங்கள் எளிதில் கெட்டுப் போகும். பாதுகாக்கப்படாத உணவுப்பண்டங்களை தவிர்த்திடுங்கள்.

10. கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரையே பருகுங்கள்.வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

11. கொசுக்கள் வளராமல் சுற்றுப் புறத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

திப்புவும் - திருவும்

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தி கோவை, பாலக்காடு வரை தனது கட்டுப்பாட்டில் வத்திருந்தார் திப்பு சுல்தான். கோயம்புத்தூரைக் கைப்பற்ற கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய இரண்டு போர்களில் திப்புவிடம் தோல்வியுற்று 'இந்தப்பக்கம் தலைகாட்டுவதில்லை' என்று எழுதிக்கொடுத்து ஓடி விட்டனர். திப்புவின் மரணத்திற்குப் பின் மூன்றாவது போரில் கோயம்பத்தூர் பிரிட்டிஸ்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது.

சரி - திப்புவும்கும் திருவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா?.. இருக்கிறது...

திப்பு மைசூரிலிருந்து தனது பரந்த விரிந்த சாம்ராஜ்யத்தை பார்வையிட சாம்ராஜ்நகர், நஞ்சன்கூடு, சத்தியமங்கலம் வழியாக கோவை நோக்கிப் பயணித்த சாலை, புன்செய்ப் புளியம்பட்டியின் வழியே அமைந்தது. அந்த சாலை இன்றும் 'திப்பு சுல்த்தான் சாலை' என்றே அழைக்கப்படுகிறது. அனேகமாக நான் நடந்த முதல் நடை இந்த சாலையிலாகத்தான் இருக்கும். ஏனென்றால் எங்கள் வீட்டின் வாசலை ஒட்டியே திப்பு சுல்தான் சாலை அமைந்துள்ளது. 

தேசிய நெடுஞ்சாலை NH209 திப்புவின் கால் தடத்திலேயே அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 12, 2015

ஒரு லைக்... ஒரு லைப் - ரியல் லைப் சிறு கதை

முகிலன் சமீபத்தில் தான் இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு சாப்ட்வேர் நிறுவத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். கன்னியாகுமரியில் இருந்து வந்தவனுக்கு சென்னை கார்ப்பரேட் வாழ்கை ஆச்சர்யமாகவும் பெருமிதம் தருவதாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளும் ஐடி கார்டை அணிந்து கொள்ளும்போதும் அவனுக்குள் ஏதோ மெடலை அணிந்துகொள்வது போன்ற ஒரு அனுபவத்தை உணர்ந்தான். இருக்காதா பின்னே..., இப்படித்தானே படித்து முடித்து வேலைக்குச் சேரும் ஒவ்வொரு இளைஞனும் இந்த 21ஆம் நூற்றாண்டில் உணர்கிறான்.
ஒரு வழியாக ஜாவா டிரெயினிங் முடித்து ஒரு அமெரிக்க மருந்து கம்பெனியின் அப்ளிகேசனை சப்போர்ட் செய்யும் டீமில் இடம்பிடித்து, வெள்ளைக் காலர் பட்டாளத்தில் ஒருவானாகினான். முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பிறகு வேலை நுணுக்கங்களை ஓரளவு கற்றுக்கொண்டிருந்தான். வேலை மீதிருந்த அதீத பயம் விலகி, ஒரு மாட்டை பழக்கி, பால் கறக்கும் பக்குவத்தை அடைவது போல், சாப்ட்வேர் வேலையையும் பழகிக் கொண்டான்.
அப்ளிகேசனை தெரிந்து கொண்டதால் அவனுக்கு ஒதுக்கப்படும் வேலைகளை சீக்கிரமே முடித்துவிட்டு கூகுள் குரோம் உலவியில் அறிவுத்தேடலைத் தொடங்கியிருந்தான். அப்போது எதேச்சையாக தமிழில் எழுதப்பட்ட "உலகப் பொருளாதாரம்" என்ற ஒரு கட்டுரை அவன் கண்ணில் பட்டது. அது 'ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்" என்ற ஆங்கில நூலை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கட்டுரை. அதுவரை அவன் நகர வாழ்க்கை, கார்ப்பரேட் நிறுவனங்களின் மீது கொண்டிருந்த பிம்பங்களை அந்த கட்டுரை உடைத்தது. அவனால் அந்த கட்டுரையை நம்ப முடியவில்லை. அதன் தொடர்சியாக சில தரவுகளை கூகுளில் தேடினான். வந்து கொட்டிய தகவலை படித்த முடித்தபோது அவனால் அமைதி கொள்ள முடியவில்லை. அவன் வளர்ந்த விதமும், பணியில் சேர்ந்தபின் தன் வாழ்கை பற்றி அவன் கொண்டிருந்த கனவும் கேள்விக்குள்ளாக்கப் படுவதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இரண்டொரு நாள் கூகுளின் பக்கம் போகமல் இருந்தான். ஆனால் அவனுடைய தேடல் முற்றுப் பெறாமலும் முழுமையடையாமலும் அவனைத் துளைத்தது. தன் டீம் மேட்டிடம் இதைப்பற்றி தெரிந்து கொள்ள, "எகானமி ஹிட்மேன்" பற்றி தெரியுமா என்று கேள்வி எழுப்பினான். "அது என்ன புதிய அர்னால்டு படமா?" என்று வந்த பதிலில் ஒருவாறு தெளிவு பெற்றான், தன் டீம் மேட் தெளிவாக இருக்கிறான் என்பதை புரிந்து கொண்டு அவனிடம் அது பற்றிய பேச்சை பின்நாளில் எடுக்கவே இல்லை.
ஆனால் அவனுக்குள் ஓடிக்கொண்டிருந்த டர்புலன்ஸை கட்டுப்படுத்த முடியாமல் அந்த கட்டுரையின் ஆசிரியர் யார் என்று தேடினான். "விடுதலை பாண்டியன், சென்னை" என்ற பெயருடன் அவரின் பேஸ்புக் புரொபைலை பெஸ்ட் பெட்டாக கூகுள் கொண்டுவந்து நிறுத்தியது. அதுவரை பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத அவன், அந்த புரொபைலின் முழு விவரங்களைத் தெரிந்து கொள்ள ஒரு அக்கவுண்டை உருவாக்கினான். பிறகு அவர் மிகச்சிறந்த சிந்தனைவாதியென்றும், அவர் இதற்கு முன் இந்திய அரசின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் குறிப்பிடத்தக்க உறுப்பினராக இருந்தாரெனவும், மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக்காலத்தில் நிகழவிருந்த பெரும் ஸ்டாக் மார்கெட் சரிவை தன்னுடைய ஆலோசனையின் பேரில் தடுத்து விட்டதாகவும், பின்நாளில் தன்னுடைய வாழ்க்கை - பெரும் பொருளாதாரக் காணல் நீரைச் சுற்றி அலைந்து வீனாகப் போய், ஏகாதிபத்திய சூழ்ச்சிகளை உணர்ந்து அது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துருவாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துவதைக் கடமையாகச் செய்து கொண்டிருப்பதாக அவரது டைம்லைன் போஸ்டுகளும், லிங்க்குகளும் காண்பித்தது.

....தொடரும்.....

Sunday, November 1, 2015

திண்ணைப் பேச்சு

ராமசாமி: இந்த வருச விஜய தசமி திருவிழா சிறப்பா இருந்துச்சைய்யா.. ஆனா வர வர ஊர்வலப் பந்தல் எண்ணிக்கை கொறைஞ்சுட்டே போகுதய்யா... பத்து வருசத்துக்கு முன்னாடி, சாமி ஊர்வலப்பாதையில் பத்தடிக்கொரு பந்தல் இருக்கும்...இப்ப மொத்தமே நாலு பத்தல்தான்..

முனுசாமி: இப்பத்த மக்களுக்கு எங்கைய்யா அதுக்கெல்லாம் நேரம்.. அப்பல்லாம் ஏதாவது ஒரு வேண்டுதல வெச்சு, பந்தல் போட்டுட்டு இருந்தாங்க.. இப்ப வேண்டுதலையும் கம்ப்யூட்டர்லயே முடிச்சிருவாங்களா இருக்கும்...
ராமசாமி: ஆமாமாம்...காலம் மாறிருச்சு.. வாத்தியர் கிருஸ்ண மூர்த்தி வரார்...
கிருஸ்ண மூர்த்தி : என்ன நேரத்திலியே திண்ணைல கூடிட்டீங்களாட்டிருக்கு.. இன்னைக்கு செய்தி யாரோ கோவன்னனு ஒருத்தரை கைது பண்ணிப் போட்டாங்களாமா.. பேப்பர்ல அதான் செய்தி..
முனுசாமி: யாருங்க அவரு... ஏதும் தீவிர வாதிங்களா?
கிருஸ்ண மூர்த்தி: அது வேற கதையய்யா.. சோட்டா ராஜன். இது நம்ம மாதிரி சாதரண ஆள்தான்யா.. மக்கள் கலை இலக்கிய மன்றம் அப்படிங்கற பேர்ல, இடது சாரி கருத்துக்களை ஊர் ஊரா பொய் பாட்டுப் பாடி பிரச்சாரம் செய்யறவுரு..
ராமசாமி: நக்சலைட்டா இருக்குமய்யா..
கிருஸ்ண மூர்த்தி: நக்சலைட்டெல்லாம் இல்லைய்யா.. இடது சாரின்னா நக்சலைட்டா.. இவரு சமீத்துல டாஸ்மாக் கடைகளை எதிர்த்து பிரச்சாரம் பண்ணும் போது ஒரு சில பாடல்கள் பாடி பிரச்சாரம் பண்ணியிருக்கார்...பாட்டுல கடைய மூடனும்னு சொன்னதோட இல்லாம, முதலமைச்சரையும் கொஞ்சம் கடிஞ்சு வரிகள் அமைச்சிருக்கார்.. அதனால அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைச்சிருக்காங்களாமா.
முனுசாமி: இப்பதான் போராட்டமெல்லாம் முடிஞ்சு போய், மாட்டுக்கறி பத்தி பேச ஆரம்பிச்சாச்சே.. அப்ப இவர் இன்னும் பிரச்சாரத்தை நிறுத்தலையா?
கிருஸ் : ஆமாம், நீங்க சொல்றது சரிதான்.. இவர் பாடுனது இரண்டு மூனு மாசத்துக்கு முன்னாடி.. இப்ப ஏதோ காரணத்துக்காக இவரைப் புடிச்சு உள்ள போட்டிருக்காங்க..
ராமசாமி: இந்த அரசியல் வாதிகளுக்கு ஏதாவது பிரச்சினைன்னா, ரோட்ல போறவன புடிச்சி வெச்சி பிரச்சினையை திசை திருப்பியுட்டுறுவானக..
கிருஸ்: இருக்குமய்யா.. இருக்கும்.. நேத்து தான் இந்த முதலமைச்சரோட தோழி சசிகலா ஏதோ பெரிய தியேட்டரை வெலைக்கு வாங்குச்சாமா.. அது பத்திரிக்கையிலும், கலைஞரும் அறிக்கை விட்டு எழுதியிருக்காங்க.. ஒரு வேளை அதை மக்கள்கிட்ட இருந்து திசை திருப்ப இப்படி செய்றாங்களோ என்னமோ...
ராமசாமி: இருக்கும்.. இருக்கும்..நமக்கெதுக்கு ராஜங்க ரகசியமெல்லாம்..தேசிய பாதுகாப்பு சம்பந்தமானதுன்னு வேற சொல்ற.. எதுக்கு அந்த பாதுகாக்கப்பட்ட தேசிய சொத்தை பற்றி நாம பேசணும்...
கிருஸ்: ஆமாம்..நேரமாகுது.. வீட்டுக்கு கறி ஒரு கிலோ எடுத்துக் குடுக்கணும், பொறவு வரேன்.
ராமசாமி: சரி சரி.. நானும் கெளம்பிறேன். முனுசாமி, அப்படியே சைக்கிள்ள என்னைய அந்த ரோட்டுக் கடைவரைக்கும் எறக்கி விட்டுடு.

Wednesday, October 28, 2015

திராவிட ராமாயணம்

தர்மநாடு என்ற நாட்டை கபாலி என்று ஒரு ராஜா ஆண்டு வந்தாராம். அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தனராம். மூத்த மனைவிக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு மூன்று மகன்களும் ஒரு மகளும், மூன்றாவது மனைவிக்கு ஒரு மகளும் இருந்தனர்.

பல்வேறு இடர்களைத் தாண்டி தன் சாம்ராஜ்யத்தை கட்டிக் காத்து வந்த கபாலி ராஜா. பல்வேறு  சந்தர்பங்களில் தன் குடும்பத்தை காத்துக் கொள்ளச் செய்த கொலைகளும், கொள்ளைகளும் மகத நாட்டு மகராணிக்கு தெரியவந்து, கபாலி ராஜாவை தனக்கு அடிமையாக்கி தன்னுடைய சாம்ராஜ்யத்தில் கப்பம் கட்டும் அரசனாக மாற்றிக் கொண்டால். கபாலி ராஜாவிற்கு இதனால் எந்த பாதிப்பு மில்லை, காரணம் அவர் குடும்பத்திற்கும், அரச பதவிக்கும் எந்த பாதகமும் இல்லாததனால் மக்களைப் பற்றி அக்கரையில்லாமல் இருந்தார்.

அதே காலத்தில் பக்கத்து நாடான இலங்கையில் இராவணனின் வாரிசு பிறர்குபகாரி, மகத நாட்டிலிருந்து வந்த படைகளின் ஆட்சியிலிருந்து இலங்கையை மீட்க போராடி வந்தான்.

கபாலி ராஜாவின் மூத்த மகனான அழகுராஜாவிற்கு ஆட்சி அதிகாரத்தை கொடுக்கவிடாமல் இளைய மகனான  சுடலைராஜாவிற்கு முடி சூட்ட குடும்பத்திலிருந்து வந்த பல்வேறு அழுத்தம் காரணமாக முடிவெடுக்கிறார். அதுவரை போக்கிரியாக இருந்த சுடலைராஜ முடி சூட மக்கள் ஆதரவைப் பெற நல்லவனாக நடிக்க தொடங்குகிறான். அதே வேளையில் அழகுராஜாவை வனவாசத்திற்கு அனுப்பி வைத்து விடுகிறார் கபாலி ராஜா.

சமகாலத்தில் இலங்கையில் மகதப் படைகளின் அட்டூழியங்கள் அத்து மீரவே, இராவணின் வாரிசான பிறர்க்குபகாரி கபாலி ராஜாவிடம் உதவி கேட்கிறான். கபாலி ராஜா ஏற்கனவே மகதநாட்டு ராணியிடம் அடிமையாக இருப்பதால், பேசாமல் நீயும் என்னைப்போலவே மகத ராணிக்கு அடிமையாய் இருந்து விடு. உனக்கும் என்னைப் போல் நல்ல வாழ்வு கிடைக்கும் என்று ஆசை வார்த்தை (மகத நாட்டு ராணியின் உத்தரவின் பேரில்) காட்டுகிறார்.

ஆனால் மானத்தை இழந்து அடிமையாக உயிர் வாழ்வதைவிட மானத்தோடு உயிர் துறப்பது மேல் என்று கூறி கபாலி ராஜாவின் ஆலோசனையை புறந்தள்ளிவிட்டான் பிறர்க்குபகாரி.

மகதாட்டுப் படைகளின் சூழ்ச்சியினால் பிறர்க்குபகாரி போரில் பின் வாங்கி, பின் சூழல் கனிந்து வரும்போது படைதிரட்டி பகைவரை விரட்டலாம் என்று தலை மறைவாகிறார். மகதநாட்டு படைகள் பிறர்க்குபகாரியின் நிலங்களையும் மக்களையும் ஆக்கிரமித்து அவர்களை அடிமைப் படுத்துகிறார்கள்.

இந்த துயரச் செய்தி தர்மநாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. கூடுதலாக பிறர்க்குபாரி உதவி கேட்டு கோரிக்கை அனுப்பியதை கொச்சைப் படுத்திய கபாலி ராஜாவின் கயமைத்தனத்தைக் கேள்விப்பட்டு கொந்தளிப்பில் இருந்தனர். இதைத் தெரிந்துகொண்ட கபாலி ராஜா, எங்கே தனது ராஜ்யம் பட்டத்து இளவரசனாக அறிவிக்கப்பட்ட சுடலைராஜாவிற்கு கிடைக்காமல் மக்கள் பறித்து வேறொருவரிடம் கொடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் அமைச்சரவையில் உளவுத்துறை மூலம் ஆலோசனை செய்கிறார். ஆலோசனைக் கூட்டத்தில் ராமாயணக் கதையை கருவாக எடுத்து, ஆரியர்கள் எப்படி ராமனை கதாநாயகக் காட்ட ராவணனை தீயவனாகக் காட்டினார்களோ அதே போல் கபாலியை கதாநாகனாகக் காட்ட பிறர்க்குபகாரியை தீயவனாக மக்களிடம் காட்ட முடிவெடுக்கப் பட்டது. அந்த ஆலோசனையின் பேரில், அவையின் ஆஸ்தான புலவர்கள் மற்றும் லகுட பாண்டிகளைக் கொண்டு வரலாற்றை மாற்றி எழுத உத்தரவிடுகிறான்.

அதன்படி மண்டபப் புலவர்களும், லகுட பாண்டிகளும் ஊருக்குள் சென்று, பிறர்க்குபகாரிதான் இலங்கை நாட்டு மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் சென்றவன். கபாலி ராஜாவின் ஆலோசனையைக் கேட்காமல் மகத நாட்டு படைகளுடன் போரிட்டு மக்களை பலி கொடுத்து விட்டார் என்று நாடகங்கள், பாடல்கள் மற்றும் ஏடுகளில் எழுதி ஊர் ஊராய் பரப்பிக் கொண்டிருந்தனர். சில லகுட பாண்டிகள் இன்னும் கொஞ்சம் மேலே போய், பிறர்க்குபாகாரிதான் படுகொலைகளைச் செய்த பாதகன் என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

இதையெல்லாம் பார்த்த மக்களோ, கபாலியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டு புலவர்களையும், லகுட பாண்டிகளையும் ஊரை விட்டு துறத்து, நாட்டின் ராஜ்ஜியத்தை கபாலிராஜாவிடமிருந்து மீட்டு தற்காலிகமாக ஒரு அரசரை தேர்ந்தெடுத்து அமர்த்திக்கொண்டனர்.

ஏமாற்றமடைந்த கபாலி ராஜாவும், காதுக்கெட்டியது கைக்கு எட்ட வில்லையே என்று துயறுற்ற சுடலையும் வேறு வழீன்றி நாட்டை விட்டு ஒதுங்கியிருந்தனர்.

கொஞ்சகாலம் கழித்து மீண்டும் ராஜ்ஜியத்தைக் கைப்பற்ற மீண்டும் ஆலோசனை செய்கிறார் கபாலி. மீண்டும் அந்த இலங்கை பிறர்க்குபகாரியை கொலைகாரணாக மக்களிடம் பரப்புரை செய்ய புலவர்களையும், லகுட பாண்டிகளையும் ஏற்பாடு செய்கிறார். அதே சமயத்தில், சுடலை ஊர் ஊராகச்  மாறு வேடத்தில் சென்று மக்களின் மன நிலையைத் தெரிந்து கொள்கிறேன் என்று கிழம்பி ஊரில் மக்கள் இன்னும் கபாலி மீது கடுப்பில் இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். எப்படியாவது மக்களை ஏமாற்றி, அவர்கள் மனதை மாற்றி ராஜ்ஜியத்தை கைப்பற்ற வீதியெங்கும் வித்தைகள் செய்கிறார். ஆனால் கடைசி வரை கபாலியின் கன்வு பலிக்கவே இல்லை... சுடலை தன் ராஜ்ஜிய கனவு தகர்ந்து

வாழ்கையை வெறுத்து அலைந்து கொண்டிருந்தான். கபாலியின் பாவச் செயலுக்கு அவன் வாழ்ந்து, அவன் சந்ததி வீழ்வதைப் பார்க்கும்படியான தண்டனை அடைந்தான்.

Thursday, October 8, 2015

படிக்கச் சொல்லிக்கொடுப்போம்

கடந்த வாரம் பிள்ளைகளின் பள்ளியில் "Literacy Night" என்ற கலந்தாய்வு. இதில் குழந்தைகளுக்கு "படிப்பறிவு" எப்படி அவர்களின் கல்வித்திறனை வளர்க்கும், அதற்கு பள்ளியில் எடுக்கப்படும் முயற்சிகள், திட்டங்கள் மற்றும் பெற்றோர்களின் பங்களிப்பு முறைகள் குறித்து விளக்கப்பட்டது. படிப்பறிவுத் தேர்வு மிகவும் முக்கியமெனவும், அது மாகான சட்டவிதிகளின் படி தேர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமானது என்று விளக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
நான் படித்த கற்பித்தல் முறைக்கும் இங்கு இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது. நமக்கு பள்ளி புத்தகங்களைத் தவிர வேறெதையும் படிக்க கற்றுக்கொடுக்கவில்லை. ஆனால் இங்கு குழந்தைகளின் படிக்கும் திறனுக்கேற்ற புத்தகங்கள் தினமும் 30 நிமிடம் படித்து அது பற்றிய குறிப்பை நாட்குறிப்பேட்டில் எழுதி பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் அது ஆசிரியரின் பார்வைக்குச் சென்று குறிப்பெடுக்கபடுகிறது. ஒவ்வொரு மாத இடைவேளையிலும் படிப்புத் திறனாய்வு செய்யப்பட்டு குழந்தைகள் அடுத்த நிலைக்கு முன்னேற்றப்பட்டு புத்தகங்கள் பரிந்துரைக்கப் படுகிறது.
நூலகங்களில் குழந்தைகளுக்கான பிரத்தியேக நூல்கள் கொள்ளையளவு இருக்கிறது. அவர்கள் விரும்பும் நூல்களை (ஒரு முறைக்கு 30- 40 புத்தகங்கள்) எடுத்து, அவைகளை அவர்களின் படிப்புத்திறனுக்கேற்றதாக உறுதி செய்து (கைபேசி திறன் செயலிகளில் புத்தகத்தின் கோட்டுருவை உள்ளிட்டால் அது படிக்கும் திறனில் (A-Z) வகைப்டுத்திச் சொல்லும்) எடுத்து வருவது நம் கடமை.
புத்தகங்கள்தான் குழந்தைகளுக்கு அறிவைக் கொண்டுவந்து சேர்க்கிறது. வெறும் பாடபுத்தகங்களில் இருப்பதைப் படித்தால் சிந்தனை அதற்குள்தான் இருக்கும் என்பதை அறிந்து வைத்திருக்கிறார்கள்.
இது போன்ற ஒரு சூழல் நம் நாட்டிலும் வரும்போது, புத்தகங்கள் விற்கவில்லை, எழுதியதை படிக்க ஆளில்லை போன்ற புலம்பல்கள் இருக்காது என்று நம்பலாம்.

Saturday, October 3, 2015

நம் சூழலில் ஏன் புதிய கண்டு பிடிப்புகள் நிகழ்வதில்லை?

"ஏன் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு அறிவியல் கண்டு பிடிப்புகள் நிகழவில்லை." என்ற கேள்வி அவ்வப்போது எழும். ஆனால் அதற்கான விடைதேடல் பெரும்பாலும் முடிவு பெறுவதே இல்லை. காரணம், எங்கு அதை தொடங்குவது என்பதில் இருக்கும் சிக்கல். சமீபத்தில் நண்பர்களுடன் உரையாடுகையில் இது குறித்த விவாதம் ஒன்று வந்தது. அப்போது பொதுவாக நாம் ஒரு கருத்தையோ அல்லது எண்ணத்தையோ அவ்வளவு எளிதில் வெளிச் சொல்வதில்லை. அதற்கான பல காரணங்கள், அதில் சில, "நமக்கு எதுக்கு வம்பு", "நம் கருத்து தவறாக இருந்தால், கேலி செய்யப்படுவோம் என்ற எண்ணம்", "இதைப் பற்றி கருத்துச் சொல்லுமளவிற்கு எனக்கு அறிவில்லை", முக்கியமாக "கருத்தைச் சொல்வதால் மட்டும் என்ன நடந்து விடப்போகிறது" போன்ற எண்ணங்கள். இது போன்ற இந்தியச் சூழலும், கடந்த 8 ஆண்டுகளுக்கம் மேலான எனது அமெரிக்க வாழ்கையில் நான் உணர்ந்து கொண்டவையுமே இந்த கட்டுரை.

பொதுவாக மேற்கத்திய நாடுகளில் உள்ள மனிதர்களுக்கும், மனிதர்களின் கருத்துக்களுக்கும் கொடுக்கப்படும் மரியாதை என்னை வியக்க வைக்கிறது. ஒவ்வொரு சமுதாய அங்கத்தினருக்கும் கருத்துச் சொல்ல உரிமையும், ஊக்குவிப்பும் இயல்பாக வழங்கப்படுகிறது. உதாரணமாக, அலுவலகங்களில் ஒரு பிரச்சினை குறித்து விவாதிக்கும்போது, பணிப் பொறுப்பு தாண்டி, யாரும் உபயோகமான கருத்துச் சொல்லலாம். அந்த கருத்து விவாதிக்கப்படும் பொருளில் தாக்கத்தை ஏற்படுத்தப்படும் போது, கருத்துச் சொன்னவரை ஊக்குவித்து அவரிடம் மேலும் விளக்கங்கள் கேட்டுப் பெற்றுக்கொள்வர். பின் அந்த கருத்தோ அல்லது எண்ணமோ செயல்வடிவம் பெற்று வெற்றியைத் தரும்போது கருத்தை வழங்கியவர் பாராட்டப்ப்டுவார் அல்லது அதற்கான சன்மானம் கிடைக்கப் பெறுவர்.

இது போன்ற ஒரு சூழலை நாம் இந்தியாவில் எளிதில் பார்க்க முடியாது. ஒரு நிறுவனத்தின் பொறுப்பு அடுக்கில் கீழுள்ளவர், பொது அரங்கில் தன் மேலதிகாரியைத் தாண்டி கருத்துச் சொல்ல முடியாது. அப்படியே கருத்துச் சொன்னாலும் அவர் அந்த இடத்திலேயே அவமதிக்கப்படுவார் அல்லது எச்சரிக்கை விடுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார். இது போன்ற சூழலால், அதிகாரம் இருந்தால் மட்டுமே கருத்துச் சொல்ல முடியும் என்ற ஒரு நிலை இருக்கிறது. எப்படி இந்தச் சூழல் உருவாகியிருக்கும் என்று ஆராயும் போது சில உண்மைகள் நமக்கு விளங்கும். 

பெரும்பாலான உயர் பதவியில் இருப்பவர்கள், அரசு அலுவலகமானாலும் தனியார் நிறுனங்களானாலும் அவர்கள் அனுபவத்தின் பேரில் தான் அந்த பதவியில் இருப்பார்கள். திறமையும் அறிவும் உள்ள மூத்த அதிகாரிகள் பெரும்பாலும் தனக்கு கீழுள்ளவர்களை ஊக்குவிப்பவர்களாகவே இருப்பர். ஆனால் வெறும் பணி மூப்பு அடிப்படையில் உயர்பதவி அடைந்தவர், அநியாயமாக தனக்கு கீழுள்ளவர் தனது அடிமை என்னும் மன நிலையிலேயே நடந்து கொள்கின்றனர். அதற்கு பல காரணங்கள் இருப்பினும், பெரும்பான்மை காரணம் தன்னுடைய தகுதிக் குறைபாடு வெளிப்பட்டுவிடக்கூடாதெனவும், தன் அதிகாரம் பலமிழந்து விடக்கூடாது என்பதும் தான். இவர்கள் ஒரு போதும் புது சிந்தனையை, புதிய அறிவை ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக அதுபோன்ற ஒரு வஸ்து உருவாகிவிடாத ஒரு சூழலை உருவாக்கி விடுகின்றனர். இது ஒரு வகையென்றால், பிறப்பால் தான் உயர்ந்த இனம், ஏனையோர் அறிவிலும் அதிகாரத்திலும் தன்னைவிட கீழேயே இருக்க வேண்டும் என்று நினைப்பவர் இன்னொரு வகை. முன்னவர்களிடமாவது அவர்களின் இயலாமையை நினைத்து இரக்கப்படலாம், பின்னையவர்கள் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் அவர்களுக்குள் பகிர்ந்து கீழுள்ள வேறோருவருக்கு எதனையும் கிடைக்காமல் செய்துவிடுவர், இவர்களிடம் இரக்கப்பட ஏதுமில்லை. இவர்கள் புதிய சிந்தனையை முன்னவர்போல் குண்டுக்கட்டாக நிராகரிக்க மாட்டார்கள். மாறாக சிந்தனை வட்டத்திற்கு வெளியே இருந்து, இல்லாத ஒன்றை இருப்பதுபோல் அடித்துச் சொல்லி, கருத்து தவறு என்று உருவகப்படுத்திவிடுவர். விவரம் தெரியாதவர் அதை நம்பி தன் கருத்தை மாற்றிக்கொண்டு அமைதியாக இருந்துவிடுவர். ஆனால் அவர் சொன்ன புதிய கருத்தை அந்த உயர்சாதி மேலதிகாரி, பூ வைத்து, பொட்டு வைத்து தன் மேலதிகாரிக்கு விற்றுவிட்டு பலனை அனுபவித்திருப்பார். இவர்களின் அறிவுத்திருட்டிலிருந்து தப்பிப்பதற்கு கற்றுக்கொள்ளும் வித்தைகளில் புதிய சிந்தனைகளில் செலவளிக்கும் நேரம் பாதி கடந்திருக்கும்.

மேற்ச்சொன்ன கூற்று ஒரு புறம் இருக்க, நமக்குள்ளான தேடல் நம்மிடமிருந்து தொடங்க வேண்டும் என்பதால், நாம் நமது ஆய்வை வீட்டிலிருந்தும் ஆரம்பப்பள்ளியிலுருந்தும் தொடங்க வேண்டும். இரண்டு மூன்று வயதுவரை குழந்தைகள் அவர்கள் எண்ணம்போல் சிந்திக்கவும் செயல்படவும் உரிமை இருக்கிறது. குழந்தை எப்போது பேச ஆரம்பிக்கிறதோ, அப்போதிருந்து அதன் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. ஓரளவிற்கு இது குழந்தையை சமூக ஒழுங்கில் வளர்த்தெடுக்கும் முறையாக இருந்தாலும், இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனை கட்டுப்படுத்தும். உதாரணங்களாக, "பெரியவர்களை எதிர்த்து பேசக்கூடாது!", "சாமியைக் கேள்வி கேட்கக் கூடாது", "அவர்களுடன் பேசக்கூடாது" என்பது போன்ற கட்டுப்பாடுகள். இது தொடர்ந்து பள்ளியில் "முதலில் நான் சொல்வதைக் கேள்", "அது பாடத்திட்டத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட கேள்வி", "உன் வயசுக்கு இது போன்ற கேள்விகளெல்லாம் கேட்கக் கூடாது" என்று கேள்வி கேட்கும் குழந்தைகளின் ஆர்வத்தை மட்டுப்படுத்தும் பள்ளியின் செயல்பாடுகள்.

கல்லூரிகள் பெரும்பாலும் பாடதிட்டத்தை தவிர்த்து ஒரு இம்மியளவுகூட சிந்தனையை உருவாக்குவதில்லை. சில நேரங்களில் பாடத்திட்டத்தில் கூட வரையறை வைத்துக் கொண்டு அதைத்தாண்டி மாணவர்கள் சிந்திப்பதை ஊக்குவிப்பதில்லை. ஒரு மாணவன் சுதந்திரமாக கேள்விகளை முன் வைத்து பதில் பெற முடியாத சூழல் பல கல்லூரிகளில் இருக்கிறது. உடையிலிருந்து உணவு வரை எல்லாவற்றிலும் கட்டுப்பாடு வைத்திருக்கும் இவர்கள் மாணவர்கள் சிந்திப்பதிலும் கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றனர் என்பது விந்தையல்ல.

நான் இங்கு ஒரு பெரும் வங்கியின் மிகப்பெரும் மென்பொருள் திட்டத்தில் பங்கெடுத்திருந்த போது, திட்ட மேலாளராக இன்னொரு போட்டி நிறுவனத்திலிருந்து ஒருவரைக் கொண்டு வந்திருந்தனர். போட்டி நிறுவனமாக இருந்தாலும் அமெரிக்கரான அவருடன் எனது உறவு ஆரோக்கியமாகவே இருந்தது. அவருடைய இலக்கு முழு செயல் திட்டத்தையும் அவருடைய நிறுவனம் எடுத்து நடத்துவது. எனக்கோ பெரும் போராட்டத்திற்குப் பிறகு ஒன்று இரண்டாகச் சேர்த்து ஒரு பெரிய குழுவை உருவாக்கி வைத்திருந்தேன். பொதுவாக இதுபோன்ற சூழலில் பாதுகாப்புணர்வும், அச்சமும் தவறுகளுக்கு வழி வகுத்து விடும் என்பதால் நான் அந்த மேலாளரிடம் நட்பாகவே இருந்து வந்தேன். ஒரு கட்டத்தில் அவரின் முயற்சி வெற்றியளிக்காத போதும், அவரும் பணியிலிருந்து விரைவில் விடுவிக்கப்படுவோம் என்றுனுணர்ந்து மனம் திறந்து என்னிடம் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டது "எப்போதும் கட்டளைகளை வாங்கிக் கொண்டு ஒரு அடியாள் போல வேலை செய்பவரை இங்கு யாரும் விரும்புவதில்லை. மாறாக தனது சிந்தனையாலும், உழைப்பாலும் இருப்பதைவிட எப்படி அதிகமான மதிப்பை நாம் நம் வேலையில் ஏற்படுத்தி, அதனால் நமது வாடிக்கையாளருக்கு பயனை ஏற்படுத்த முடியும் என்பதே இப்போதைய தேவை. அதை நீ நன்கு தெரிந்து வைத்திருக்கிறாய். தொடர்ந்து தொடர்பில் இரு" என்பதாக இருந்தது அந்த உரையாடல்.

என்னைப் பொறுத்தவரை, எல்லா மனிதர்களும் இயல்பில் சிறந்தவர்கள்தான். அவர்களிடம் பயத்தை விலக்கி நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டால் அவர்கள் சிந்திப்பதும், சிந்தனையை வெளிப்படுத்துவதும் இயல்பாய் வளர்ந்துவிடும். அதுபோன்ற ஒரு சூழலில் அவர்களை ஒரு போட்டியாளராக கருதாமல், அவரைச் சக மனிதராய் பாவித்து, எப்படி அவரின் சிந்தனை, நாட்டினுடையதோ அல்லது நிறுவனத்தினுடைய நோக்கத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பார்க்கவேண்டும். இங்கு வயதோ, அனுபவமோ, தகுதியோ முக்கியமல்ல. கேட்கும் பொறுமையும் கேட்பவர்மேல் நம்பிக்கையுமே வேண்டும். அவரின் கருத்து உடனடியாக ஒரு பெரும் அறிவுப் புதையலை கண்டுபிடிக்காவிட்டாலும், அறிவுப் புதையலைத் திறக்கும் சாவியாக அது இருக்கலாம். ஒருவரின் கருத்து சரியோ, தவறோ, தனக்கான கடமையும், தன்னுடைய பங்களிப்புமாக தன் சிந்தனையையும் அறிவையும் பங்களிக்க வாய்ப்பளிப்பதே ஆரோக்கியமான அறிவுவளர்ச்சிக்கான சூழல். அதை ஏற்படுத்த கொஞ்சம் விசாலமான மனதும் வினோதங்களை ரசிக்கும் குணமும் வேண்டும். அது இல்லையென்றால், வளர்த்துக்கொள்ளலாம், இன்னும் காலமிருக்கிறது என்றே நினைக்கிறேன்.


Friday, September 25, 2015

மரங்களும் பேசும்

மனித சமூகத்திற்கு மட்டுமே சிந்திக்கவும், சிரிக்கவும் தெரியும் என்று எவரோ கண்டுபிடித்துச் சொன்னதை இன்னமும் ஆச்சர்யத்துடனும், கர்வத்துடனும் கேட்டு வளர்ந்த நமக்கு, இந்த அறிவு எல்லையைத் தாண்டியுள்ள, இயற்கை உலகம் புலப்படுகிறது. சமீபத்திய உயிரியல் ஆராய்ச்சி முடிவுகள் சொல்லும் செய்திகள் நம் கர்வத்தின் மீது கல்லெரிகிறது. அதிலிருந்து ஒன்றைப் புரிந்துகொள்ள முடிகிறது, அறிவியல் விசாலமடைய அடைய, மனிதன் ஒரு மிகப் பெரிய முட்டாள் என்பதைத் தெரிந்து கொண்டே போகிறோம். ஆம், மனிதனை விட பல மடங்கு புத்திசாலிகளான உயிரினங்களின் உலகம் இது.

நிலத்தை உழுது, விதை விதைத்து, நீரிட்டு, உரமிட்டு, களையெடுத்து உற்பத்தி செய்யும் வேளாண் முறை ஏதோ மனிதன் தன் உழைப்பாலும் அறிவாலும் இயற்கையை பயன்படுத்தி உணவு உற்பத்தி செய்கிறான் என்று வியந்து கொண்டிருக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. மனித குலத்தின் உண்ணதமான தொழிலே இப்படியானால், செயற்கையாகச் செய்யும் எண்ணற்ற மனிதனுக்கு மட்டுமே பயன்படக்கூடிய பொருட்களின் உற்பத்தியை என்ன சொல்ல?

ஒரு விதை மரமாக வளர்வதும் அது எப்படித் தன் சக மரங்களுடன் சமூகமாக வாழ்கிறது என்பது பற்றிய சமீபத்திய ஆராய்சி முடிவுகள் ஆச்சர்யமூட்டுகின்றன. நாம் நினைப்பது போல் மரங்களின் வாழ்கை மண்ணுக்கு மேலே மட்டுமல்ல. மண்ணுக்கு அடியில் வேர்களின் மூலம் பரிமாரிக்கொள்ளும் தகவல்களும், உணர்ச்சிகளும் நாம் கற்பனையில் நினைத்துப் பார்த்திருக்க முடியாதது. தனக்குத் தேவையான உணவை மண்ணிலிருந்து எடுத்துக்கொள்வதோடல்லாமல், சக மரங்களோடும் பகிர்ந்து கொள்கிறது, அதுவும் வேர்கள் மூலமாகவே. ஒரு மரம் தன்னிடம் இருக்கும் அதிகப்படியான சக்தியை தன் சகோதரனுக்கோ, சகோதரிக்கோ பகிர்ந்து கொடுக்கிறது. என்ன ஆச்சர்ய மாக இருக்கிறதா? ஆம், மரங்களுக்கிடையில் உறவுகள் இருக்கிறது.

தன்னுடன் வளரும் மரங்களில் எது தன் சகோதரி அல்லது தன் சகோதரன் என்று அடையாளம் கண்டு கொண்டு, அவற்றுடன் வேர் பரவும் நிலம், மற்றும் மண்ணிலிருந்து கிடைக்கும் சக்திகளையும் பரிமாரிக்கொள்கிறது. ஒரு மரமோ அல்லது செடியோ பூச்சியால் தாக்கப் படும்போது, தன்னைக் காத்துக்கொள்ள முதலில் ஒரு வித வேதிப் பொருளைச் சுரக்கும். இது அந்த பூச்சிக்கு சகிக்க முடியாத உணர்வை ஏற்ப்படுத்தும், சிறிது நேரத்தில் அந்த பூச்சி விலகிச்சென்று விடும். அதையும் மீறி ஒரு பூச்சியோ, புழுவோ தாக்கும்போது, ஒரு வித வாசனையை வெளிவிடும். இந்த வாசனை காற்றில் கலந்து வேறொரு பறவைக்கோ அல்லது பூச்சிக்கோ அழைப்பை ஏற்படுத்தும். இந்த அழைப்பில் வரும் பறவை அந்த செடியிலோ அல்லது மரத்திலோ அமரும்போது அது செடியைத் தாக்கிய பூச்சியை உணவாகக் கொள்ளும். இது ஒரு வகையில் அவசரகால அழைப்பைப் போன்றதே.

சரி எப்படி ஒவ்வொருவிதமான தாக்கும் பூச்சிக்கும் அதை உணவாக உண்ணும் இன்னோரு பூச்சியையோ, பறவையையோ அழைப்பது என்று மரத்திற்கு தெரியும்?. இன்னும் இது கண்டு பிடிக்கப்படவில்லை யென்றாலும் செடிகளுக்கும் மரங்களுக்கும் அந்த நுண்ணுணர்வு இருக்கிறது என்பது மட்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது. மரங்களும் செடிகளும் மண்ணுக்குள்ளும் வெளியிலும் தங்களைச் சுற்றியுள்ள சூழலை உணர்ந்து கொள்ளும் தன்மையுடையவை. தாவரங்கள் பனிக் காலங்களில் சூரிய ஒளியிலிருந்து ஸ்டார்ச் தயாரிக்க முடியாது என்பதாலும், இலைகள் மூலம் பனியின் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதாலும் இலைகளை உதிர்த்து விடுவது நாம் அறிந்த இலையுதிர் காலம்.

ஒரு செடி இருக்கும் இடத்தில் திடீரென்று வரட்சி ஏற்படும்போது, அந்த வரட்சியை தன்னால் முடிந்த அளவிற்கு தாங்கிக் கொள்ள தன்னை தகவமைத்துக் கொள்கிறது, வேர்கள் தண்ணீரைத் தேடி நிலத்தில் பரவுகிறது. அதே போல், சில படரும் கொடிகள் எப்படி அருகிலுள்ள மரத்தை அடையாளம் கண்டுகொள்கிறது?.. ஆச்சர்யம்.. அந்த கொடி வளரும் ஒவ்வொரு மில்லி மீட்டரிலும் தன்னைச் சுற்றி இருக்கு இடத்தை தடவிச் சுற்றிக் கொண்டே இருக்கும். எப்போது அதற்கு ஒரு அசையா மரம் தட்டுப் படுகிறதோ அதைப் பிடித்துக் கொண்டு தன் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ளும்.

இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ள இன்னும்  நமக்கு ஏராளம் இருக்கிறது. எல்லாம் நமக்குத் தெரியும் என்று நினைக்கும் நொடியில் நாம் நமது அறிவு வாசலை மூடி, அழிவு வாசலைத் திறந்து கொள்கிறோம்.

Wednesday, September 23, 2015

தேர்தல் விழாச் சலுகைகள்

தமிழக அரசியல் கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகள், நமக்கு தேர்தல் என்பது ஒரு விழாவோ என்று எண்ணத் தோன்றும் அளவுக்கு இருக்கின்றன. ஆடி மாதம் சென்னை சில்க்ஸிலும், போத்தீஸிலும் வழங்கப்படும் கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல் விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை, மக்களும் தேர்தல் வந்தால் தங்களுக்கு ஏதாவது சலுகை கிடைக்கும் என்ற மன நிலை வந்துவிட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. இது நமது நாட்டை எங்கே கொண்டு சேர்க்கப்போகிறது?. தேர்தலுக்கு முன் இருக்கும் ஆரவாரம், பதவியில் அமர்ந்த அடுத்த விநாடியே, மயான அமைதியை உள்வாங்கிக் கொள்கிறது. மக்களுக்கும் தீபாவளிக்கு அடுத்த நாள் போல் குப்பைகளை அள்ளிப்போட்டுக் கொண்டு அவர் அவர் வேலைகளை பார்க்கச் சென்று விடுகின்றனர்.

இந்த தேர்தல்களும் அறிக்கைகளும் அரசியல் கட்சிகளால் கேளிக்க்கூத்தக்கப் பட்டுவிட்டது. இன்னும் ஒரு படி மேலே போய் மக்களை ஒரு வாடிக்கையாளராகவே மாற்றி விட்டார்கள். இங்கு எந்த கட்சியும் கொள்கைகளை முன் வைத்து ஓட்டு கேட்பதில்லை. "கொள்கைகள் இருந்தால் தான் அதை வைத்து ஓட்டுக் கேட்பார்களே" என்ற உங்கள் குரல் கேட்கிறது. நம்மை விட்டால். இந்த நாட்டை திருத்த யார் இருக்கிறார்கள்?(!) ஆகவே கொஞ்சம் நாமும் இந்த கட்சிகள் என்ன செய்வது சரியாக இருக்கும் என்று பார்போம்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ்தான் நாடுதழுவிய பெரும் அரசியல் இயக்கம். குடியரசான நாடு தேர்தலை சந்திக்கும்போது இன்று இருக்கும் அளவிற்கு அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை அதிகம் இல்லை, போட்டி இல்லை. இருந்தும் அன்றைய தலைவர்களுக்கு நாடு எதிர் கொண்டுள்ள சவால்கள் மற்றும் தொலை நோக்குப் பார்வை மூலம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான திட்டங்களை முன் வைத்து தேர்தலை சந்தித்து செயல் பட்டார்கள். வறுமை ஒழிப்பு, எல்லோர்கும் கல்வி, தொழில் வளர்ச்சியை பெருக்குதல், குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வது போன்ற திட்டங்களை முன்வைத்து செயல் பட்டார்கள். 

பின் தமிழத்தில் முன்னோடியாக திராவிட இயக்கம் சுய மரியாதை, பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, சமூக நீதி, கட்டாயக் கல்வி, அனைவருக்கும் வேலை வாய்ப்பு என்ற முற்ப்போக்கான கொள்கைகளை முன் வைத்து மக்களை ஒரு பெரும் மாற்றத்திற்கு தயார் படுத்தினர். மக்கள் ஒரு பெரும் சமூக மாற்றத்தை எதிர் கொண்டனர். ஏனைய மாநிலங்களை விட முற்ப்போக்கான சிந்தனைகளுடன் மனித நாகரீகத்தின் அடுத்த கட்டத்திற்கு தமிழகம், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவல் எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு வந்த கலைஞரும், எம் ஜி ஆரும் அவ்வாறான மிகப் பெரும் சமூக மாற்றங்களைச் செய்யாவிட்டாலும் ஆட்சியமைப்பை செம்மைப் படுத்தி மக்களின் மேலதிகத் தேவைகளை அரசுகள் பூர்த்தி செய்யும் வகையில் ஆட்சி செய்தனர். அந்த கால கட்டங்களில் பெரும் சமூக முன்னேற்ற நகர்வுக்கு வாய்ப்பில்லாமல், அதற்கு முன் இருந்த தலைவர்கள் மிகப்பெரும் மாற்றத்தை செய்து விட்டு போயிருக்கலாம் என்பதை நாம் காரணமாக எடுத்துக்கொண்டு, எம் ஜி ஆரையும், கலைஞரையும் உள்ளபடியே ஏற்றுக்கொள்வோம்.

ஆனால் 1990 களுக்குப் பின் ஆட்சிசெய்த திராவிடக் கட்சிகள் அடுத்த கட்ட முற்போக்கு கொள்கைகளை முன் வைத்திருக்க வேண்டும். ஏன் 1990 என்கிறீர்களா? இந்த கால கட்டத்தில் தான் இந்தியாவின் பொருளாதார சூழல் மாறுகிறது. தாராள மயமாக்கல், மற்றும் கூட்டணி ஆட்சிகள் நாட்டில் பெரும் தாக்கதை ஏற்படுத்திகின்றன. நமது அரசியல் கட்சிகள் இந்த மாற்றங்களை மக்களின் நலனுக்கான தொலை நோக்கு கொள்கை வடிவமைப்புக்காக உள்வாங்கிக் கொள்ளாமல், தமது சுயநல குறுகிய நோக்கு திட்டங்களுக்காக சிந்திக்கக் தொடங்கியது. பொருளாதார தாராள மயத்தின் மூலம் வகுக்கப்படும் திட்டங்களில் எப்படி கொள்ளையடிப்பது, தனியார் மயத்தின் மூலம் எப்படி அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நாட்டின் வளங்களை கொள்ளையடிப்பது, கூட்டணியில் எந்த துறை பணம் கொழிக்கும் துறையோ அதை எப்படி பேரம் பேசி வாங்குவது, அதற்க்குப் பின், எப்படி தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளைக் கொண்டு தங்கள் தனிப் பொருளாதார சாம்ராஜ்யத்தை கட்டியமைப்பது என்பது போன்ற திட்டமிடல்களில் மக்களை மறந்தே போயினர்.

மக்களின் கோபம் ஆட்சி மாற்றத்தை ஏற்ப்படுத்தியதும், ஆட்சிக்கு வந்தவர் முன்னவர் செய்த ஊழல்களை வெளிக்கொண்டுவந்த வழக்குகள் தொடுத்து தான் நேர்மையாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார். ஓராண்டுக்குப் பிறகு வந்தவரும் அனுபவத்தினால், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யக் கற்றுக்கொண்டு, மக்கள் செல்வத்தை சுரண்ட ஆரம்பித்தார். அவ்வப்போது எழும் மக்கள் குரலுக்காக அங்கொன்றும் இங்கொன்றும் கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் வேலை வாய்ப்பு பெரும் பிரச்சினையாக வளர்ந்த போது அரசு அனைவருக்கும் வேலை வழங்க முடியாது, அதனால் தனியார் வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும் என்பதை உணர்ந்து ஆலைகள் நிறுவ, சலுகைகள் அளித்தனர், பின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் வெளி நாட்டு முதலீடுகளின் மூலம் நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டனர். இந்த நிறுவனங்களுக்கு தேவையான கல்வித் திறனை அரசு மட்டுமே வழங்க முடியாது என்று கருதி, தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு கட்டற்ற அனுமதி வழங்கினர். தனியார் பள்ளிகள் ஒரு புறம் இந்த வாய்ப்புகளை தங்களுக்கானதாக மாற்றி தங்களை வளர்த்துக்கொண்டனர்.

இப்போது 2015, இருபத்தைந்தாண்டுகள் கடந்தும், அரசியல் கட்சிகள் அடுத்த கட்ட தொலை நோக்கு கொள்கைகளை வகுத்துக் கொள்ள வில்லை. மாறாக ஆட்சிக் காலமான ஐந்தாண்டுகள் போய், தேர்தல் காலமான இரண்டு மாதத்திற்க்கு மட்டும் திட்டங்கள் தீட்டும் நிலமை வந்து விட்டது. இவர்கள் ஆட்சி செய்த 50 காலமாக இருக்கும் பிரச்சினைகளுக்கு இவர்களால் தீர்வு காண முடியாத போது , அது அவர்களின் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகிறது.
  • சாதிப் பாகுபாடு.
  • அழிந்து வரும் விவசாயம் போன்ற தற்ச்சார்பு தொழில்கள்.
  • நிர்வாகச் சீர்கேடு
  • எங்கும் பரவி இருக்கும் ஊழல்.
  • அழிந்து வரும் கிராமங்கள்.
  • அழிந்து வரும் இயற்கை வளங்கள்.
  • குறைந்து வரும் நீர் வளம்.
  • அறிவியல்த் தேவை.
  • கல்வி மற்றும் சுகாதாரத் தரம்.
போன்ற இன்றைய காலத் தேவைகளை கணக்கில் கொண்டு தொலை நோக்கு கொள்கைகளையோ, திட்டங்களையோ எந்த அரசியல் கட்சியும் முன்வைக்கவில்லை. மாறாக இவர்கள் கொள்கைகள் வெறும் இலவசங்களாகவும், தள்ளுபடிகளாகவும், விரைவில் நீர்த்துப்போகும் திட்டங்களாகவுமே இருக்கிறது. இதைச் சொல்வதால் கட்சி சார்பு அறிவு சீவிகள் தங்கள் துறுப்பிடித்த வாளை எடுத்துக் கொண்டுவந்து, நிதித் திட்டத்தைப் பார், கோனார் நோட்சைப் பார் என்று தங்கள் மேதாவித்தனைத்தை மேடையேற்ற வருவார்கள். வரட்டும்... அவர்களைப் பொறுத்தவரை மக்கள் தேவை முழுமையடைந்து விட்டதாக எண்ணிக்கொண்டு இருக்க நம்மால் முடிவதில்லை, ஒரு வேளை உண்ணும் உணவு செரிக்காததால் கூட நாம் இப்படி சிந்திக்கலாம்!

இன்னும் ஒரு படி மேலே போய், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்து வாகனங்கள் மேம்படுத்தப்படும், மின் தடை இருக்காது, அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்று நிர்வாகம் தொடர்பான வாக்குறுதிகளைக் கொடுக்கின்றனர். நமக்கு அரசியல் கட்சிகல் இது போன்ற வாக்குறுதிகளைக் கொடுக்கும் போது கேட்கத் தோன்றுவது, "இவை எல்லாம் அதிகாரிகளின் வேலை. அரசியல் கட்சிகள் எந்த எதிர்பார்ப்புமில்லாமலே இந்த நிர்வாக மேலாண்மையை ஆட்சிக்கு வந்தது செய்யவேண்டும், இதைச் செய்வேன் என்று சொல்வதற்கு எதற்கு அரசியல் கட்சி, நல்ல அதிகாரிகளே போதுமே" என்று சொல்லத் தோணுகிறது. 

தேர்தலை சந்திக்க வரும் கட்சிகள் தங்கள் கொள்கைகளை முன்னிருத்தி ஓட்டு கேட்க வேண்டும். துணிக்கடைகளைப் போல் ஆப்பர்களை முன்னிருத்தியல்ல. அடுத்த தலைமுறைச் சமூகத்தை வழி நடத்தத் தேவையான காரணிகளை உள்வாங்கிக் கொள்ளாமல், ஆட்சி நடத்தும் அதிகாரத்தை மட்டும் நோக்கி ஓடுவதால்தான் சமுதாயச் சிக்கல்கள் பிரச்சினைகளாக உருவெடுக்கின்றன. பிரச்சினைகள் போராட்டங்களாகவும், போராட்டங்கள் புரட்சியாகவும் மாறுகிறது. மக்களை புரட்சி செய்ய விட்டுவிட்டு, தாங்கள் ஆட்சி அதிகாரம் செழுத்துவதில் கவனமாக இருந்தால் , ஆட்சி செய்த இயக்கங்களின் தேவை இல்லாமல் போய், காலப்போக்கில் அழிந்து போகும் நிலைக்குத் தள்ளப்படும். அவ்வாறான ஒரு காலகட்டத்தை நோக்கியே நம் நாட்டு அரசியல் போய்க்கொண்டிருப்பது ஏன் நம் கண்களுக்கு மட்டும் தெரிந்து தொலைக்கிறதோ....

Monday, September 21, 2015

உயிர் வாழ்தல்

'அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது' என்ற வரிகள் எவ்வளவு ஆழமானது என்பது எல்லோராலும் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பலருக்கு இந்த உலகில் மனித இனத்தின் பங்கு, அது எவ்வாறு இந்த பூமிப்பந்தில் உள்ள உயிர்ச்சூழலில் செயல்படுகிறது என்று சிந்திக்குமளவிற்க்கெல்லாம் நேரமோ அல்லது சிந்தனையோட்டமோ இருப்பதில்லை. இயற்கையின் மாபெரும் கட்டமைப்பில் ஒவ்வொரு படைப்பும் ஏதோ ஒரு காரணத்திற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு மனிதன் கருவில் உருவாகும் போது நேரும் விந்தைகள் நம் அறிவுக்கு எட்டாதவை. அந்த விந்தையில் உருவாகும் உயிர், ஓர் அற்ப்புதமான படைப்பு. மனிதன் வடிக்கும் சிலைகளும், ஓவியங்களும் நாம் எண்ணி வியக்கும் அளவிற்க்கு அதன் பின் உள்ள உழைப்பு காரணமாக இருக்கிறது. ஒரு சிலைக்கே இவ்வளவு அபாரமான உழைப்பு வேண்டுமெனில், விந்துவிலிருந்து உருவாகும் உயிர், முழு உடலைப்பெற்று உலகில் தன் பயணத்தை நடத்தும் ஒவ்வொரு வினாடியும் அதிசயமானது. ஒரு குழந்தை தன்னை முழு மனிதனாக மாற்றிக்கொள்ள எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் எண்ணற்ற அணுக்களின் செயல்பாடும், அவற்றை இயக்கும் நோக்கமும் நம்மால் உணர்ந்து கொள்ள முடியாதவை.

நமது அறிவுக்கு எட்டியவரை குழந்தை பிறக்கிறது, தவழ்கிறது, நடக்கிறது, பேசுகிறது, ஓடுகிறது.. அவ்வளவுதான்.. ஆனால் இந்த செயல்பாடுகளுக்குள் இருக்கும் நிகழ்வுகள் நம் கண்களால் காணமுடியாது. அந்த நிகழ்வுகளை நம்மால் ஒரு கார் இயங்குவது போல் எளிதில் விளக்கிவிட முடியாது. அதைத் தெரிந்து கொள்ளவே நமக்கு இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வேண்டும். ஒரு சிறு கண் சிமிட்டலுக்குப் பின் ஆயிரமாயிரம் தகவல் பரிமாற்றம் மூளையிலிருந்து உடலின் பல்வேறு பாகங்களில் நடக்கிறது. இவை எதனின் மீதும் நம்மால் நாம் விரும்பியபடி ஒரு மாற்றத்தை ஏற்ப்படுத்தி விட முடியாது. உடலுறுப்புக்களை அசைப்பது மட்டுமே நம்மால் செய்யக்கூடிய செயல். அதன் பின் இயங்கு ரத்த ஓட்டம், சதை சுருங்கி விரிதல், எலும்பு நகர்வு எதையுமே நம்மால் ஊகித்து கட்டுப்ப்டுத்த முடியாது. நமது அறிவியலும் அந்த அளவிற்கு இன்னும் வளரவில்லை. நீங்கள் ஒருவேளை தற்கால மருத்துவ அறிவியலைக் கொண்டு, ஏன் இதையெல்லாம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள் என்றால், உங்களுக்கு இயற்கையின் உருவம் இன்னும் அகப்படவில்லை என்றே சொல்லவேண்டும். இங்கு நாம் பேசுவது அந்த இயக்கங்களுக்கான மூலத்தைப்பற்றி. 

இவ்வளவு விந்தைகளைக் கொண்ட உயிர் படைப்பான நாம் அதிகம் கவனம் செலுத்துவதெல்லாம், செயற்க்கையாக மனித சமுதாயம் வகுத்துக்கொண்ட நடைமுறைகளையும், விதிகளையும், மதிப்பீடுகளைப்பற்றியுமே. இவை மனித சமுதாயக்கூட்டத்தில் ஒரு ஒழுங்குடன் வாழ்வதற்க்கு ஏற்ப்படுத்திக்கொண்ட கட்டமைப்புகள். இவை மீறப்படும்போது அதற்க்கான விளைவுகளை நாம் சிறிதாகவோ, பெரிதாகவோ அனுபவிக்கக்கூடம். ஆனால் இந்த விளைவுகள் நாம் ஒப்புக்கொண்ட இந்த சமுதாய நடைமுறையின் ஒரு பகுதியே. இதற்க்கும் நம் உயிர் மூலத்திற்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நம் அறிவுக்கு எட்டியவரையில் நாம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து விளைவுகள் இருக்கும். அந்த விளைவுகளை தாங்குமளவிற்கு மனம் பக்குவமடையவில்லையென்றால், நமக்கு முடிவெடுக்கும் பயிற்சி தேவை என்பதோடு கடந்து விடவெண்டும். இந்த மனித வாழ்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்விற்கும் நம் செயல்களும், முடிவுகளும் அடிப்படையாக இருக்கின்றன. இவற்றை தவறு, சரி என்ற வகைப்படுத்தும் காரணிகள் கூட அந்த மனிதனின் புறச்சூழல் சார்ந்தது. ஒரு முடிவை ஆராய்ந்து எடுத்தபின் அதில் வரும் விளைவுகள் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதன் தாக்கம் நம்மீது இருக்கும். ஆனால் அது ஒரு போதும் உயிர் சார்ந்தது கிடையாது. இந்த உலகில் நாம் தேடிக்கொண்ட அறிவு சார்ந்தது. 

சமீபத்தில் நாம் பார்த்த அரசு அதிகாரிகளின் தன்னுயிர் மாய்த்தல் நிகழ்வுகள் ஒரு பக்கம் துயரத்தை ஏற்படுத்தினாலும், இன்னொருபக்கம் அந்த முடிவுகளுக்குப் பின் உள்ள சூழலை நாம் புறந்தள்ளிவிடக்கூடாது. ஒரு மனிதன் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முடிவை எடுப்பது சாதாரணமானதல்ல. அப்படி ஒரு முடிவை எடுக்கும் மன நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்? அது போன்றதொரு முடிவை எடுக்காமல் தவிர்த்திருக்க முடியுமா? அவருக்கு வேறு ஏதும் வாய்ப்புகள் இருந்திருக்குமா? எதை எதிர்பார்த்து அவர்கள் தங்களை மாய்த்துக்கொண்டார்களோ, அவை அவர்கள் இறந்த பின் நிறைவேறிவிட்டதா? இந்த கேள்விகளுக்கு விடைகான, நம் மனதை நாம் உருவாக்கிக்கொண்ட புறச்சூழலில் இருந்து விடுவித்து, வாழ்தல் என்ற அடிப்படை நோக்கை மட்டும் கொண்டு சிந்திக்கவேண்டும். 

ஒரு அரசு அதிகாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்கிறார்? காரணம், அவரது மேலதிகாரியின் துன்புறுத்தலாலோ அல்லது அந்த அதிகாரி உருவாக்கிக் கொண்ட சுய மதிப்பீடுகளுக்கு ஆபத்து ஏற்படும்போது, உயிர் வாழ்தலை நிராகரிக்கிறார். இந்தச் சூழலில் அவர் வாழ்வை தொடர்வதற்க்கான காரணிகள் எவையாக இருக்கக்கூடும்? தன்னால் முழு ஈடுபாட்டுடணும் சுதந்திரத்துடனும் பணியாற்ற முடியாதபோது, அந்த பணியை துறந்துவிடலாம், அல்லது தன் புறச்சூழலை மாற்ற முயற்ச்சிக்கலாம். தன் புறச்சூழல்களான தனது பணி, மேலதிகாரி, துறை எதையும் மாற்ற முடியாதபோது அதைவிட்டு விலகிவிடலாம். விலகினாலும் ஏதோ ஒருவகையில் அழுத்தம் தொடருமென்றால், அந்த அழுத்தத்திற்கான காரணங்களுடன் சமரசம் செய்துகொள்ளலாம். 

இவற்றைச் செய்வதானால் சமுதாயத்தில் நாம் நம் மீது உருவாக்கிக்கொண்ட மதிப்பீட்டை உடைத்துவிடுவோம், அது எதிர்மறை விளைவை உண்டாக்கும் என்ற எதார்த்தம் இருந்தாலும், இந்த பூமிப்பந்தில் நம்மைச்சுற்றி இருக்கும் பத்துப்பேர்களின் அறிவில் நம்மைப் பற்றிய மதிப்பீட்டிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துவிடவேண்டியது தான். அந்த மதிப்பீட்டைக் காக்க இயற்கையின் அற்புதப் படைப்பை அழிக்க எடுக்கும் முயற்ச்சிக்குப் பதிலாக, சில சமரசங்களுடன் உயிர்களை புரிந்து கொள்வதிலும், அவற்றின் வாழ்விற்கு உதவுவதிலும், எந்த மதிப்பீடுகளும் இல்லாமல் முயலலாம். அவ்வாறான ஒரு தருணத்தில் அங்கு வாழ்வது ஒரு உயிர் அல்ல, ஓர் அற்புதம். அந்த உயிர் யாருக்கும் சொந்தமானதல்லாமல், இயற்கையுடன் இணைந்து கொள்கிறது. அங்கு வாழ்தல் மட்டுமே இருக்கிறது, இறப்பதற்க்கு வழிதேடும் மனிதர்கள் வாழ்வதற்கான காரணங்கள் பல உண்டு என்பதைப் புரிந்து கொள்ளும்போது, நம் வாழ்க்கைப் பயணம் இனிதாகிறது. வாழ்தல் உயிர்களுக்கானது...

Thursday, September 17, 2015

மொழி உரிமை மாநாடு 2015

தாய்மொழியில் பேசி, படித்து வாழ வழியேர்ப்படுத்திய நம் முன்னோர்கள், 1965 மொழியுரிமைப் போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்து இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழகத்திற்கென சில விலக்குகளை பெற்றுக்கொடுத்தனர். தமிழத்தை பொறுத்தவரை தமிழ் ஆட்சி மொழியாகவும் அலுவல் மொழியாகவும் இருக்கிறது. ஆங்கிலம் இரண்டாம் மொழியாக விளங்குகிறது. மூன்றாவது மொழியாக எந்த மொழியையும் விரும்புபவர் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்ற வகையில் நமக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த மொழிக்கொள்கையால் ஏனைய மாநிலங்களை விட தமிழத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் அதிகமாக இருக்கின்றனர். இது நமக்கு கணினித்தொழில் நுட்பத்துறையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியது. நம்மை ஆண்ட திராவிடக் கட்சிகளுக்கு நம் மொழியுரிமையை மீட்டுத் தந்ததில் பெரும் பங்கு இருக்கிறது. ஆனால் 1965க்குப் பிறகு மொழியுரிமைச் செயல்பாடுகள் சுனக்கம்கொண்டன. இயக்கங்கள் இந்த விடயத்தில் தன்னிறைவடைந்ததாக எண்ணிக்கொண்டனவோ என்னவோ. ஆனால் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தொடர்ந்து இந்தியை ஒட்டுமொத்த இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற பல்வேறு முயற்ச்சிகளை செய்து வருகின்றனர். இந்த முயற்சி, இப்போது பெரும்பான்மை அரசு அமைத்திருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மூலம் பன்மடங்கு வீரியம் பெற்று விட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் அம்மையார் சுஸ்மா சுவராஜ் இந்தியை ஐ நா வில் ஆட்சி மொழியாகச் செய்ய முயற்ச்சி எடுப்பதாக அறிவித்துள்ளார். பல்வேறு தனித்தன்மை வாய்ந்த மொழிகளைக் கொண்டுள்ள ஒரு நாட்டில் எப்படி ஒரு மொழியை அந்த நாட்டின் அடையாளமாக காண்பிக்க முயல்கிறார்கள் என்பதே நமது கேள்வி. இந்தியாவின் எல்லா மொழிகளுக்கும் சம உரிமையும் மரியாதையும் வேண்டும் இந்தத் தருணத்தில் இந்தியை ஒட்டுமொத்த இந்தியாவின் மொழியாக அறிவிப்பது ஏனைய மொழிபேசுபவரின் அடையாளங்களை அழிப்பதாகும்.

தமிழர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் பண்பாடு, மொழி, தேசியம் எதுவும் இந்தியையும், வட இந்தியாவையும் சார்ந்ததல்ல. சொல்லப்போனால் தமிழகம் இந்தியாவின் நிலப்பரப்பில் இணைந்திருக்கும் ஒரு தனிச்சிறப்பு கொண்ட மாநிலம். தமிழர்களின் வரலாறு, இலக்கியம், பண்பாடு எதுவும் இந்திக்கோ, வட இந்தியாவிற்கோ தொடர்பில்லாதது. அப்படியிருக்கையில் எப்படி இந்தி தமிழரின் ஆட்சிமொழியாகவும், அலுவல் மொழியாகவும், அடையாளமாகவும் இருக்க முடியும்?. இந்தியோ, வேறு எந்த மொழியோ தேவையான போது அதைத் தேவைப்படுவோர் கற்றுக்கொள்வதுதான் இயல்பு. அதைவிடுத்து இந்தியை இந்திக்கு சற்றும் தொடர்பில்லாத தமிழர்கள் மேல் திணிப்பது, தமிழர்கள் மீண்டும் தங்கள் உரிமைக்கான குரலை உயர்த்த வேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுப் பணிகளில் தேர்வுகள் இந்தியிலும், மத்திய அரசு சார் நிறுவனங்களில் விண்ணப்பங்கள், அறிவுப்பகள் இந்தியில் எழுதப்படும்போது, அதன் தேவை சற்றும் இல்லாத தமிழர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு மொழிகளை தாய்மொழியாகக்கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தை மாதிரியாகக் கொண்ட ஒரு மொழிக் கட்டமைப்பை இந்தியா உருவாக்கிக்கொண்டு மொழிகளுக்கிடையேயான சிக்கலை தீர்க்க முனையவேண்டும் என்ற நோக்கில் வரும் செப் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் மொழியுரிமை மாநாடு சென்னையில் நடக்கவிருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில் இந்த மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த மாநாடு எழுப்பும் குரல் மொழியுரிமைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த பேருதவியாக இருக்கும். தமிழத்தின் பல்வேறு தமிழார்வ அமைப்புகளும் தலைவர்களும் கலந்துகொள்ளும் இந்த மாநாடு நமது வாழ்நாளில் ஒரு மிகச் சிறப்பு மிக்க நிகழ்வாக இருக்கும். முடிந்த வரையில் தமிழால் வாழும் நண்பர்களும், தமிழை இன்னும் பல்லாண்டு வாழவைக்கும் எண்ணம் கொண்ட் நெஞ்சங்களும் கலந்து கொள்ள வேண்டும்.

நிகழ்ச்சி நிரல்:

செப் 19 : காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை,
                 சென்னை மியூசுஜ் அகாடமி அருகில் உள்ள கவிக்கோ அரங்கில்
                 கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளன.

                இதில் மொழியுரிமைக்கான தீர்மானம் உருவாக்கப்படும்.
           
                தமிழ் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு கி.த. பச்சையப்பன்
                தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர், திரு. பெ. மணியரசன்,
                தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்க நெரியாளுகைக் குழுத்தலைவர் திரு பா. செயப்பிரகாசம் மற்றும்,
                எழுகதிர் ஆசிரியர் திரு. அருகோ ஆகியோர்

                மாநாட்டுத் தொடக்கச் சிறப்புறைகளை ஆற்ற உள்ளனர். 

செப் 20: மேற்கு மாம்பலத்தில் உள்ள சந்திர சேகர் திருமண மண்டபத்தில்

மாலை 2 மணி முதல் 3 மணிவரை : மொழியுரிமைத் தியாகிகள் நினைவேந்தல்

மாலை 3 மணி முதல் 5 மணிவரை :  மொழியுரிமைக்கான சென்னை பறைசாற்றத்தை வெளியிட்டு உரையாற்றூவோர்,

              திரு மணி மணிவண்ணன்- மொழியுரிமை முன்னெடுப்பு - தமிழ்நாடு, 
              பேரா. ஜோகா சிங், பஞ்சாப், 
              திரு தீபக் பவார் - மகாரஸ்டிரம், 
              பேரா. கர்கா சாட்டர்ஜி, மேற்கு வங்கம், 
              திரு. சாகேத் சாரு - கோசாலி/ஒடிசா, 
              திரு ஆனந்த்.ஜி- பனவாசி பலகா, கர்நாடகம், 
              பேரா. பி. பவித்திரன் - மலையாள ஜக்கியவேதி, கேரளம்,
              திரு வளர்மதி - தமிழ்நாடு, 
              திரு சேகர் கொட்டு - ஆந்திர பிரதேசம்,


 மாலை  5 மணி முதல் 9 மணி வரை : சிறப்புரைகள்

               தலைமை திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார், பேருர் ஆதினம், கோவை,
              வரவேற்புரை தோழர் பாவேந்தன், தமிழ்தேச நடுவம்,
              அறிமுகவுரை திரு. ஆழி செந்தில்நாதன்,

நமது மொழி, நமது அதிகாரம், மாநாட்டுச் சிறப்புறைகள்

             தலைமை  திரு. பழ. நெடுமாறன், தலைவர், தமிழர் தேசிய முன்னணி,
            திரு. தொல். திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி,
            திரு. எம்.எச். ஜவாகிருல்லா, மூத்த தலைவர், மனிதநேய மக்கள் கட்சி,
           தோழர் சி.மகேந்திரன், தேசியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
           திரு. தி. வேல்முருகன், நிறுவனர் - தலைவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி,
           திரு சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி,
           திரு சுப. உதயகுமாரன்ஒருங்கிணைப்பாளர், பச்சைத் தமிழகம்,

இன்னும் பல முக்கிய ஆளுமைகள் கலந்து கொள்கிறார்கள்.