Saturday, March 19, 2016

கொஞ்சம் மனிதாபிமானத்துடன் இருங்கள்

* ஞாபக சக்தி குறைவதில் தொடங்கி குறிப்பிட்ட சில நிகழ்வுகள் முற்றிலும் மூளையிலிருந்து அழிந்து விடும்.

* முடிவெடுக்கும் செயல்திறன் குறையும். முடிவெடுப்பதற்கான காரணிகளை ஆராயும் திறம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கும்.

* ஐந்து முதல் ஆறு மணி நேரம் தொடர்ந்து விழித்திருப்பது கடினமாக இருக்கும்.

* ஒரே இடத்தில் ஓரிரண்டு மணிகளுக்கு மேல் அமர முடியாது.

* கேட்கும் திறன் படிப்படியாகக் குறைந்து முற்றிலும் கேட்கும் திறன் அற்றுப் போகும்.

* நினைவாற்றலை இழந்து ஒரு பொருள் குறித்த ஆழ்ந்த பேச்சுக்கள் தடைபடும்.

* கை, கால்கள் வலிமையிழந்து நடுக்கத்துடனே இருக்கும். எழுதுவது போன்ற திறன்கள் கடுமையாக பாதிக்கப்படும்.

மேற்கண்டவை அனைத்தும் 60 வயதுக்கு மேல் மனிதர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியக் குறைவுகள். இவை மருத்துவத்துறையால் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவை. இதன் காரணமாகவே வேலையிலிருந்து ஓய்வு பெரும் வயது 55 லிருந்து 65 க்குள் நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக இந்த வயது மீண்டும் மனிதர்களின் உடல் மற்றும் மூளை மனிதனின் ஆரம்பகால வயதின் திறனை நோக்கிக் கொண்டிருக்கும். அதாவது குழந்தை போன்ற நிலையை அடைந்து கொண்டிருப்பர். இந்த காலங்களில் பெரும்பாலும் உறவுகள் துணையுடன் சிரமாமான வேலைகளைச் செய்யாமல் மகிழ்ச்சியாக வாழ்வை கழிக்கவே மருத்துவர்கள் அறிவுரை செய்வார்கள். அதுவே அவர்கள் வயதுக்கேற்ற சிறந்த வாழ்கை முறையாகும்.

முதிய வயதில் ஒரு மனிதருக்கு கடுமையான பணி என்பது அந்த மனிதரைச் சுற்றியுள்ளவர்கள் மீதான அக்கரையின்மையாகவும், இன்னும் சொல்லப்போனால் அவர்களை கொடுமைப் படுத்துவதற்கு ஒப்பாகும்.

முதல்வர் பதவி, அதுவும் தமிழகம் போன்ற சவால் நிறைந்த மாநிலத்தில், குறிப்பாக பல லட்சம் இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும் நிலை, மாநிலத்தின் கடன், பொருளாதாராச் சுமை, செய்து முடிக்க வேண்டிய பல்வேறு பணிகள், நெடுநோக்குத் திட்டங்கள் வகுத்தல், பல்வேறு துறை சாந்த வல்லுனர்களுடன் தொடர் ஆலோசனை, பின் முடிவுகள் எடுத்தல் என்று மிகவும் சிக்கலான, Demanding பதவி அது.


வெள்ளம் வந்த போது நம் முதல்வர் உறங்கினார், இலங்கையில் போர் நடந்த போது கலைஞர் கடற்கரையில் உறங்கினார், முதல்வர் மக்களைச் சந்திப்பதில்லை, முதல்வரின் உறவினர்களே முக்கிய முடிவுகளை எடுக்கின்றனர், திட்டங்களை திறந்து வைப்பது கூட தொலை வழியே செய்கின்றார், மத்திய அரசின் முக்கியமான முதல்வர்கள் மாநாட்டில் முதல்வருக்கு பதிலாக வேறொருவர் கலந்து கொள்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளில் எந்த நியாயமும் இல்லை. நமது முதல்வர்களின் வயதுக்கு அவர்களால் இயன்றதை செய்கிறார்கள்.

குடும்பசூழல், கட்சி அரசியல் போன்ற பல்வேறு சிக்கல்களால் அவர்களுக்கு தங்களைத் தவிர வேறொருவரை முதல்வராக அறிவிக்க முடியாத நிலை. புரிந்து கொள்ளக் கூடியதே.


ஆனால், தமிழகம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பிரசினைகள் மிகவும் ஆழமானவை. இவற்றை எதிர்கொள்ள துடிப்புடன் இருக்கும், திறன் வாய்ந்த இளையவரால்தான் முடியும். இதைச் சொல்வதால் முக்கிய கட்சிக்காரர்கள் சீறலாம். ஆனால் உண்மை அதுதான். அதையும் மீறி அவர்கள் தங்கள் தலைவருக்கு திறன் உள்ளது, அவர் எல்லாவற்றையும் திறனோடு செய்து முடிப்பார் என்று சொல்வார்களேயானால், அது அறிவியலுக்கு எதிரான, மூட நம்பிக்கை. அதை பொது சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.

அந்த வகையில் தமிழக முதல்வராக சுடாலினோ, அதிமுகவில் வேறு யாரோ(பன்னீரைத் தவிற வேறு யாரையும் தெரியவில்லை), அன்பு மணியோ, வைகோவோ, திருமாவோ, சீமானோ, உதயகுமாரோ, வசீகரனோ, சுதீஸாகவோ அல்லது வீரலட்சுமியாகவோ கூட இருக்கலாம்.


நிச்சயம் அது கருணாநிதியாகவோ அல்லது ஜெயலலிதாவாகவோ இருக்க முடியாது இருக்கவும் கூடாது. அவர்களை நிம்மதியாக ஓய்வில் வைக்க வேண்டியது மனிதப் பண்புள்ள அனைவரது கடமை.

2 comments:

  1. நல்லாச்சொன்னீங்க. ஆனா நல்லதை ஒருத்தனும் எப்பவும் கேக்க மாட்டானே.

    ReplyDelete
  2. முதல் 7 கருத்துகளைப் படித்தவுடன் என்னைப் பற்றித்தான் சொல்கிறீர்களோ என்று சந்தேகம் வந்து விட்டது. என்னைப் பார்த்ததே இல்லையே, இந்த மனுசன் என்னைப் பற்றி எப்படி இவ்வளவு கரெக்ட்டா சொல்லறாரு என்று பயம் வந்து விட்டது.

    ReplyDelete