Tuesday, February 12, 2019

ரைட்டு விடு...

நம்ம ஊரில் நம்மை ரோசக்காரன் என்றால் பெருமை கொள்வோம்..

மானஸ்தன் என்றால் இன்னும் அதிக பெருமை கொள்வோம்..

ஆனால் இந்த மானம், ரோசம் என்றால் என்ன? இதன் வரைறைதான் என்ன? மானம், ரோசமெல்லாம் எல்லோர்க்கும் ஒன்றேதானா?

அப்படி மான ரோசத்தோடு வாழ்ந்து சாதித்தவர்கள் ஒரு பத்துப் பெயரைச் சொல்லுங்கள்?

அதற்காக மானம், ரோசமில்லாமல் வாழவேண்டுமென்று சொல்லவில்லை... சும்மா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பார்க்க முடியாத மான ரோசத்திற்காக முடிவெடுத்து வீணாய்ப்போனவர்களை நிறயப் பார்த்திருக்கிறேன். பல தற்கொலைகள், கொலைகள் இந்த "மான ரோசத்திற்காக" நடந்திருக்கிறது.

சமீபத்தில் கூட ஒரு வாடகைக் கார் ஓட்டுனர், காவலர்களின் சகிக்க முடியாத வசையை (அதுவும் ஒரு பெண் முன்னே) கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்..

இன்னும் கிராமப்புறத்தில் இப்படி உணர்ச்சிவசப் படுபவர்கள் ஏராளம்...

எங்கள் தாத்தா கூட தங்கள் ஊரில் பாவு தோய்ந்தபோது அங்கு சிந்தியிருந்த கஞ்சி மீது கால் வைத்து வழுக்கி விழுந்துவிட்டாராம். அதைச் சுற்றியிருந்தவர்கள் பார்த்து சிரித்து விட்டார்களாம்..
அவ்வளவுதான்.. வந்தது ரோசம்.. பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு புளியம்பட்டி வந்துவிட்டாராம்.. அவருக்குப் பெயர் வயக்காட்டுக்காரார்... அந்த வயக்காடு எங்கிருக்கிறது, யாரிடம் இப்போது இருக்கிறது என்றெல்லாம் தெரியாது..

முதலிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார்..

நானும் கூட மேலாளர் திட்டியதற்கெல்லாம் ரோசப்பட்டு வேலையை விட்டு வந்திருக்கிறேன்.. (ஆனால் அதனால் பெருமைப் படும் அளவில்தான் இருக்கிறேன்). அன்றைய காலத்தில் அது குடும்பத்திற்குச் சுமையை ஏற்படுத்தியிருந்தது என்பது மறுக்க முடியாது..

எல்லோருமே நம்மைப்போலத்தான் ரோசக்காரர்களா? மானஸ்த்தர்களா? .. வெற்றி பெற்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் மற்றவர்கள் வசவால் ஒருபோதும் தங்களை மானமிழந்தவர்களாகக் கருதிக்கொண்டு முடிவுகளெடுப்பதில்லை..

இன்னும் சொல்லப்போனால் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அதற்கு ஏற்ப மான ரோசத்தை இழந்துதான் அந்த உயரத்தை அடைந்திருப்பார்கள்.. குறிப்பாக விற்பனைப் பிரிவில் இருப்பவர்கள்..

ஆக.. சும்மா மானம் போய்விட்டது, மரியாதை போய்விட்டது என்று உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளெடுத்து வீணாய்ப் போவதைவிட அந்தக் கோபத்தை, உணர்ச்சியை நம் மானத்தை வாங்கியவரின் மானம் போகும் படியாக வாழ்ந்து காட்ட வேண்டும்..

எப்படி?

கடுங்கோபம் வந்தால் ஒரு ஆணை எப்படித் திட்டுவார்கள்.. அவன் தாயைப் பழித்தால் அவனுக்குக் கோபம் வரும் என்பதால் அதைச் செய்வார்கள்..

அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோ அந்த (க்கெட்ட?)வார்த்தைக்கு பொருத்தமான ஆள்.. அவரும் அதைக் கேட்டு கடந்து வந்திருப்பார்தான்..

ஆனால் இன்று வெற்றி பெற்று பெரும் பணக்காரராக நம் முன் வந்து உரையாடும் போது சொல்கிறார்..

"எனது தாய் உயர் நிலைப்பள்ளியிலேயே என்னைக் கருத்தரித்தாள். எனது தந்தை, அதாவது உண்மையான தந்தை மைக், ஒரு கியூப வந்தேறி, என் உயிரியல் தந்தையல்ல. (கவனியுங்கள் தன் பிறப்பிற்குக் காரணமானவரை உண்மையான தந்தை என்று சொல்லவில்லை). என் பெற்றோர்கள் எனக்குக் கிடைத்த வரம்" என்கிறார்.

கோபப்படுவதும், ரோசம் கொள்வதும், மயிர் நீத்தால் மாண்டு விடும் மான் போல் வாழ வேண்டும் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு மிகையுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. சில நேரங்களில் வடிவேல் போல் இருந்துவிட்டு கடந்து சென்றுவிட வேண்டும்.

ஆக இனி "மானங்கெட்டவனே என்று திட்டினால்"..

"ரைட்டு விடு" என்று கடந்துவிட்டால் நல்லது.. இல்லை.. கவரிமான் போல் மாண்டுவிடுவேன் என்று உணர்ச்சிவசப்பட்டால்

"பீ கேர்புல்"..

"யாருக்கு?"

"எனக்கு"..

No comments:

Post a Comment