Saturday, January 7, 2017

Above and Beyond

1947ல் ஐநாவில் இஸ்ரேலை தனிநாடாக ஏற்றுக்கொண்ட பின், இங்கிலாந்துப் படைகள் பாலஸ்தீனத்திலிருந்து வெளியேருவதற்காக ஐந்து(எகிப்து, ஈராக், ஜோர்டான், சிரியா, லெபனான்) அரபு நாடுகள் காத்திருக்கின்றன. பாலஸ்தீனம் உடைவதை விரும்பாத அரபு நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்காமல் அதன்மீது வலிந்த போரைத் தொடுத்து தடுத்து நிறுத்த திட்டமிடுகின்றன. உருவாகப்போகும் போரில் இன்னும் உருவாகாத இஸ்ரேல் தோற்றுவிடுவது நிதர்சனம் என்று கருதி எந்த நாடும் அவர்களுக்கு வெளிப்படையாக உதவவில்லை. அமெரிக்காவில் குடிபெயர்ந்த சில யூதர்களின் உதவியுடன் இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவில் எஞ்சிய காயலான்கடைக்குப் போகப்போகும் இரண்டு பழைய சிறிய விமானங்களை முதலில் வாங்குகின்றனர். அமெரிக்கப் விமானப் படைகளில் பணியாற்றிய யூதர்கள் உதவியுடன் அந்த விமானங்கள் செக்கோஸ்லோவியாவை அடைகின்றது. மேலும் சில விமானங்களை வாங்கி ஒரு விமான நிறுவனமாக உருவாக்கி விமானங்களையும் ஆயுதங்களையும் அமெரிக்காவிலிருந்து கடத்தி இஸ்ரேலுக்குக் கொண்டு செல்கின்றனனர். எகிப்தின் படைகள் இஸ்ரேலை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் எதிர்பாராத விமானத் தாக்குதலில் எகிப்தின் பீரங்கிப்படையை திணரடிக்கின்றனர். இஸ்ரேலிடம் பெரும் விமானப் படை இருப்பதாக எண்ணி எகிப்து பின் வாங்குகிறது. அதே போல ஈராக் படைகளும். 

ஒருகட்டத்தில் கெய்ரோ விமான நிலையத்தின் மீது பறந்த இஸ்ரேலிய விமானத்திடம் தன்னை அடையாளம் காட்டச்சொன்ன கட்டளைக்கு தமது விமானத்தின் பெயரைச் சொன்னதும், தங்கள் நாட்டு விமானம் என்று எண்ணி தரையிரங்க விளக்குகளை எரியவிட்டது கெய்ரோ விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம். மேலிருந்து கெய்ரோ நகரை அடையாளம் கண்டுகொண்ட விமானிகள் பெரும் குண்டுகளை நகரத்தின் மீது வீசிச் செல்கின்றனர். பெரும் இழப்பிற்குள்ளான எகிப்து திகிலடைந்து பின் வாங்குகிறது.

தங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விமான படையணிகள் இருப்பது போல், விமானத்தில் 101 என்று எழுதி எதிரியை ஏமாற்றி பயம் கொள்ள வைத்தது கவனிக்கத்தக்க போர்த் தந்திரம். உலகின் பல பகுதிகளிலிருந்து தன்னார்வலர்களாகவோ, ஊதியத்திற்கோ அமர்த்தப்பட்ட விமானிகளைக் கொண்டும், பழைய விமானங்களைக் கொண்டும் தன்னை எதிர்த்த 5 பெரும் நாடுகளுடன் சண்டையிட்டு வென்று, இஸ்ரேல் தனி நாடாக உருவெடுக்கும் நிகழ்வுகளைச் சொல்கிறது இந்த ஆவணப்படம்.

தோல்வியடைந்து விடுவார்கள் என்று அனைவரும் எண்ணிய நிலையில், வாழ்வுக்கும் சாவுக்குமான தெரிவில், சாவை அடைந்தாவது வாழ்ந்து விடவேண்டும் என்று எண்ணிய இஸ்ரேலியர்கள் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி தங்களுக்கான நாட்டை உருவாக்கிக் கொள்கின்றனர். அவர்களுக்குள் காட்டிக் கொடுக்கவும், கைகழுவி விடவும் எந்த துரோகிகளும் இல்லாமல் போனது ஆச்சர்யமான உண்மை.

இஸ்ரேல் - சரியா தவறா என்பதைத் தாண்டி, அவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

Thursday, January 5, 2017

அற்பர்கள் தமிழர்களா?

இதைப்பற்றி நானும் சிந்தித்ததுண்டு.. என்னளவில் இதற்குக் காரணமாக நான் அறிந்து கொண்டது,

ஆந்திர மேல்தட்டு மக்கள் போல், இன்றைய பணக்காரத் தமிழர்கள் பரம்பரைப் பணக்காரர்கள் அல்லர். தமிழர்களைப் பொறுத்த அளவில் அவர்கள் சேர்க்கும் பணத்தின் மீதான பாசம் என்பது, ஏழ்மையின், பசியின் மீதான அனுபவப் பூர்வமான பயத்தின் அடிப்படையிலானது. எங்கே மீண்டும் பழைய ஏழ்மை நிலைக்குச் சென்றுவிடுவோமோ என்ற பயத்தின் அடிப்படையிலானது. இவர்கள் மேல்தட்டு மக்களாக உருவெடுத்திருப்பதில் இவர்கள்தான் முதல் தலைமுறையினராய் இருப்பர். அதுவும் உலகமயமாக்கல் கொண்டு வந்து சேர்த்த வேலை வாய்ப்பினால். ஆந்திரக்காரர்களுக்கோ, பரம்பரை பரம்பரையாக நிலங்களும், சொத்துக்களும் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். 

தமிழர்கள் அடிப்படையில் சுரண்டப்பட்டவர்கள். எடுத்த எடுப்பில் அவர்களை தலைமுறைப் பணக்காரர்களாக இருக்கும் ஆந்திரக்காரர்களுடன் ஒப்பிட்டு அற்பர்கள் என்று சொல்லுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

இதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்தால், அது சேரும் இடம் சாதி, ஆண்டான் அடிமைக் கலாச்சாரம் என்று திராவிட இயக்கம் எதிர்த்து போராடிய காரணிகளாக இருக்கும். அதைப்பற்றிய எந்த சிந்தனையுமில்லாமல் தமிழர்களை அற்பர்கள் என்று அடையாளமிடுவது திராவிடத்தை தூக்கி நிறுத்தும் விநாயகமுருகன் போன்ற நவீன திராவிட எழுத்தாளர்களுக்கு வேண்டுமானல் இயல்பாக இருக்கலாம், எதார்த்தம் அதுவல்ல.

Vinayaga Murugan
நேற்றிரவு ஆந்திரா கிளப் சென்றிருந்தேன். திநகரின் மையத்தில் இருக்கிறது. சாதாரணமாக எல்லாரும் அங்கு சென்றுவிடமுடியாது. அதில் உறுப்பினராக சேர வேண்டுமென்றால் பத்து லட்ச ரூபாய் வேண்டும். அங்கிருக்கும் உறுப்பினர் விரும்பினால் உங்களை உள்ளே அழைத்துச்செல்லலாம். எனது அலுவலக நண்பர்கள் இரண்டு பேர் அங்கு உறுப்பினர்கள். இன்னொரு நண்பரின் மாமா அந்த கிளப்பில் பணிபுரிபவர். தரமான உணவு, குறைந்த விலை. நல்ல மது. சுகாதாரமாக பரமாரிக்கப்படும் நீச்சல்குளம். எவ்வளவு நேரமானாலும் அங்கு அமர்ந்து சீட்டு, அரட்டை , விளையாட்டு என்று பொழுதுபோக்கலாம். நண்பர்கள் வட்டத்தில் விருந்து வைப்பது என்றால் அங்கு சென்று விடுவோம். நேற்று செல்லும்போது கிளப் வாசலில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் நின்றிருந்தது. வரிசையாக பல இறக்குமதி கார்கள் நின்றிருந்தன. சென்னையில் ரோல்ஸ் ராய்ஸை பார்ப்பது அபூர்வம். ஹைதராபாத்தில் இருந்தபோது சர்வசாதாரணமாக அதுபோன்ற கார்களை பார்த்திருக்கிறேன். உயர்தட்டு மக்கள் வந்துசெல்லும் கிளப் அது. அது வேறு ஒரு உலகம். பணம் ஒரு பொருட்டே இல்லை என்பதுபோல பணத்தை அலட்சியமாக பார்க்கும் மனிதர்களின் உலகமும் இதே சென்னையில்தான் இருக்கிறது.
நேற்று தமிழர்களின் பிச்சைக்காரத்தனத்தை பற்றி பேச ஆரம்பித்தோம். பிச்சைக்காரத்தனம் என்று நான் குறிப்பிடுவது வேறொன்றை . அது கையில் பத்து காசுகூட இல்லாத நிலை பற்றி அல்ல. கோடிக்கணக்கான பணத்தை கையில் வைத்திருந்தாலும் சிலருக்கு அதை அனுபவிக்க தெரியாது. அவ்வளவு பணத்தை பார்த்ததும் பணத்தின் மீது ஒரு பயம் வந்துவிடும். அல்லது திகைப்பு அல்லது பக்தி கலந்த மரியாதை வந்துவிடும். நல்ல உணவகத்துக்கு சென்று சாப்பிடமாட்டார்கள். நல்ல உடையை வாங்கி அணியமாட்டார்கள். பணத்தை பூட்டி பூட்டி வைப்பார்கள். எளிமையாக இருத்தல் என்பது வேறு. எளிமைக்கு எப்போதும் மதிப்புண்டு. நான் இங்கு குறிப்பிடுவது பிச்சைக்காரத்தனம். இதை தமிழர்களிடம் அதிகம் பார்க்கலாம். அவர்களுக்கு அனுபவிக்க தெரியாது. யுனைட்டட் ஸ்ட்டேஸ் ஆப் ஆந்திராவில் (அமெரிக்காவை நாங்கள் அப்படித்தான் வேடிக்கையாக அழைப்போம்) தெலுங்கர்கள் பலரை பார்த்துள்ளேன். அவர்களிடம் ஒரு ஜென்டில்மேன்தன்மை இருக்கும். அதுபோல கொண்டாட்டம் இருக்கும். பிட்ஸ்பர்க்கில் இருந்தபோது மகேஷ்பாபு நடித்த பிசினஸ்மேன் திரைப்படம் வெளியானது. அது ஒரு நடுங்க வைக்கும் குளிர்காலத்தின் வெள்ளிக்கிழமை மாலை. வெளியே ஏழங்குல பனிப்பொழிவு. கார்கள் கூட வெளியே செல்லமுடியாது. நாங்கள் இருந்த பகுதியிலிருந்து நாற்பது மைல் தாண்டி ஒரு திரையரங்கில் அந்த திரைப்படத்தை தெலுங்கர்கள் சிலர் வாங்கி திரையிட்டிருந்தார்கள். எனது நண்பர்கள் திரைப்படம் பார்க்க அழைத்தார்கள். வெளியில் மோசமானசூழல். நாற்பது மைல் அந்த நடுங்கவைக்கும் குளிரில் சென்று நள்ளிரவில் திரும்பிவருவது ஆபத்தான விஷயமாக பட்டது. தவிர அவர்கள் எல்லாரும் திருமணமாகாத மொட்டை பசங்க..காரில் சீட்பெல்ட்டை இறுக்ககட்டிக்கொண்டு பிட்ஸ்பர்க் மலையிலிருந்து கூட குதித்துவிடுவார்கள் போலிருந்தது..எப்போதும் சாகச மனநிலையுடன் இருப்பவர்கள். எனக்கு அந்த திரைப்படத்தை பார்க்க அவ்வளவு விருப்பமில்லை. தவிர நான் அதுவரை ருசித்திராத ஒரு புதுரக மதுபாட்டிலை வாங்கி வந்திருந்தேன். அதை ருசித்து பார்க்கும் ஆர்வத்தில் இருந்தேன். எனது பக்கத்து அறையில் திருமணமாகாத இன்னொரு தமிழ் பேசும் டீம்மேட் இருந்தான். அவனுக்கு மதுஅருந்தும் பழக்கம் இல்லை. சினிமா நிறைய பார்ப்பான். மகேஷ்பாபுவின் விசிறியும் கூட. அவனை அழைத்துபோக சொன்னேன். தெலுங்கு நண்பர்கள் அவனை அழைத்தார்கள். அவன் அவர்களோடு போகவில்லை. சரி விருப்பமில்லை என்று அவர்களும் சென்றுவிட்டார்கள். மறுநாள் காலையில் டீம்மேட் அறைக்கு சென்று பார்க்கும்போது அவன் ஆன்லைனில் பிசினஸ்மேன் படத்தை பார்த்துக்கொண்டிருந்தான். அங்கெல்லாம் ஒரு படம் வெளிவந்தால் மறுநாளே ஆன்லைனில் பார்த்துவிடலாம். அவங்களோட படம் பார்க்க போனா அஞ்சு டாலர் டிக்கெட் செலவாகும். சாப்பாடு கூட அஞ்சு பத்து டாலர். முப்பது டாலர் செலவாகும். முப்பதை அறுபதால் பெருக்கினால் ஆயிரத்து எண்ணூறு என்று சொன்னான். அன்றிலிருந்து அவனை பார்த்தாலே எனக்கு கால்குலேட்டரை பார்ப்பதுபோல இருக்கும். அந்த கால்குலேட்டரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? மாதம் பத்தாயிரம் டாலர். இதை கஞ்சத்தனம் என்று சொல்லமுடியாது. கஞ்சத்துக்கும், அற்பதனத்துக்கும் வித்தியாசம் இருக்கும். கஞ்சன் என்றால் தான் மட்டும் செலவுசெய்யமாட்டான். அற்பத்தனம் என்றால் மற்றவர்களுக்கு உதவிகூட செய்யமாட்டான். இதை ஏன் சொல்கிறேன் என்றால் அவனது தம்பி இங்கு சென்னையில் ஒரு பெட்ரோல் பங்கில் வேலைபார்த்துக்கொண்டு படித்துக்கொண்டிருக்கிறான். அப்படி மிச்சம் பிடிக்கும் டாலரில் சொந்த சகோதரனுக்கு கூட உதவி செய்வதில்லை. இதுதான் நான் குறிப்பிடும் பிச்சைக்காரத்தனம் என்பது.
தெலுங்கர்களின் சமூகத்தையும், அவர்கள் எறும்பு புற்றுக்குள் இருக்கும் எறும்புகள்போல ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்துக்கொள்கிறார்கள் என்பதை பார்த்தும் வியப்பாக இருக்கும். தமிழர்கள் இந்த விஷயத்தில் ஒருவர் முன்னேறினால் இன்னொருவர் அவரது காலை பிடித்து இழுத்துவிடுவார்கள். ஒவ்வொருமுறை அந்த கிளப்புக்கு செல்லும்போதும் அவர்கள் தனிநபர் கொண்டாட்டத்தை மீறி எப்படி நட்புகளை பேணிக்காக்கிறார்கள் என்றும் குடிக்கும்போதும் தொழில்விஷயங்கள் பற்றி விவாதிப்பதை பார்த்தும் வியப்பாக இருக்கும். நேற்று நாங்கள் பெங்களூரில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்ட பாலியல் அத்துமீறல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். பெரும்பாலும் தெலுங்கர்கள் இதுபோன்ற சில்லறை வேலைகளில் இறங்க மாட்டார்கள். ஒன்று கன்னடர்களாக இருந்திருக்க வேண்டும். இல்லை வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்று நண்பர் சொன்னார். தவிர பொது இடங்களில் பெண்களின் மார்புகளை பிடித்து கசக்கிவிட்டு ஓடிய அற்பர்களை பற்றியும், கூட்டமாக இன்னொரு நாட்டுக்கு சென்று அங்கிருக்கும் பெண்களை வன்புணரும் இராணுவவீரர்களை பற்றியும் பேச ஆரம்பித்தோம். இந்தியர்கள் என்றில்லை எந்தநாட்டிலும் கும்பல் மனப்பான்மை அப்படித்தான் இருக்கும். கும்பலாக சேர்ந்தால் மனிதர்களுக்கு வெறிவந்துவிடும். கூடவே குடியும் சேரும்போது அடக்கிவைக்கப்பட்ட எல்லா வக்கிரங்களும் வெளியே வந்துவிடும். கொண்டாட்டம் என்பது உண்மையில் என்ன என்று பேச ஆரம்பித்தோம். இந்தியாவில் பஞ்சாபிகள், தெலுங்கர்கள்போல வாழ்க்கையை கொண்டாடுபவர்கள் யாருமில்லை. இந்த மாநிலத்தில் பாலியல் அத்துமீறல்கள் மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் குறைவு என்று நண்பர் சொன்னார். கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இளம்வயதிலேயே செக்ஸ் கிடைத்துவிடும். பெரும்பாலும் தெலுங்கர்களுக்கு இருபத்து இரண்டிலிருந்து இருபத்தெட்டு வயதுக்குள் திருமணம் நடந்துவிடும் என்று நண்பர் சொன்னார். அது உண்மை என்று எனக்கு தோன்றியது. அதற்காக ஏழைமக்கள் அல்லது நடுத்தர வர்க்க இளைஞர்கள்தான் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுகிறார்கள். உயர்தட்டு இளைஞர்கள் எல்லாரும் உத்தமர்கள் என்றும் பொதுப்படையாக நான் சொல்லவில்லை. ஆந்திராவில்தான் நக்சலைட்டுகளும், பஞ்சாபில் தீவிரவாதிகளும் அதிகரித்துக்கொண்டே போகிறார்கள் என்று நினைத்தாலும் பாலியல் வன்புணர்வு குறைவு என்பதையும் யோசிக்க வேண்டும். அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்தியர்கள் எல்லாரையும் ஒரேமாதிரித்தான் பார்ப்பார்கள் என்றாலும் தெலுங்கர்களின் கொண்டாட்ட மனநிலை அவர்களுக்கு ஓரளவு அணுக்கமாக இருக்கும்.
ஜனவரிமாதம் வந்தால் அடுத்து என்ன புதிதாக எழுதலாமென்று யோசிப்பேன். நேற்று ஆந்திராகிளப்பில் உட்கார்ந்திருந்த தருணத்தில் அடுத்த நாவலுக்கான தெளிவான வரைபடமொன்று கிடைத்துள்ளது. ராஜீவ்காந்தி சாலை நாவலில் யுனைட்டேட் ஸ்ட்டேட்ஸ் ஆப் ஆந்திரா பற்றி சின்ன புள்ளியொன்று இருக்கும். அந்த புள்ளியை பற்றி எழுத உத்தேசித்துள்ளேன்.

Monday, January 2, 2017

எனது 2016


புதிய அனுபவங்கள்  நம் வாழ்வில் சுவைகூட்டுகின்றன. அந்த அனுபவங்களை கொடுக்கும் புத்தகங்கள் என்றுமே நம்மை உயிர்ப்புடன் வைக்கிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு புத்தகங்களுடன் அதிக நேரம் செலவிட முடிந்தது.  அந்த வகையில் 2016ல் வாழ்வை சுவையாக்கிய புத்தகங்கள் இதோ.... 
  1. என்று  முடியும் இந்த மொழிப்போர்? - ராமசாமி
  2. எங் கதே - இமையம்
  3. யாமம் - எஸ் ராமகிருஸ்ணன்
  4. எனது இந்தியா - எஸ் ராமகிருஸ்ணன்
  5. கோயமுத்தூர் ஒரு வரலாறு - சி ஆர் இளங்கோவன்
  6. காமராஜர் வாழ்வும் அரசியலும் - மு கோபி சரபோஜி
  7. வனவாசம் - கண்ணதாசன்
  8. பச்சைத் தமிழகம் - சுபஉதயகுமார்
  9. The Alchemist - Paulo Coelho
  10. போரும் சமாதானமும் - ஆண்டன் பாலசிங்கம்
  11. திராவிடத்தால் வீழ்ந்தோம் - வெங்காளூர் குணா
  12. களிநயம் - மகுடேசுவரன் 
  13. திராவிட இயக்கம் - புனைவும் உண்மையும்

பயணங்கள் என்ற வகையில் வட இந்திய சுற்றுப்பயணமும், புதிய மனிதர்கள் என்ற வகையில் அந்தப்பயணத்த்தில் சந்தித்த அமெரிக்கர்களும், செக் குடியரசு நாடடவரும்.

அனுபவம் என்ற வகையில் தந்தையின் இழப்பிற்குப் பின்னான உறவுகளுடனான சந்திப்பு நெகிழ்ச்சியைத் தந்தது . அதைத்  தனியே எழுத வேண்டும்.

கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்தித்து மகிழ்ந்தது இந்த ஆண்டின் மகிழ்ச்சியான தருணம்.

நிறைய வலைப்பூக்கள், ஒரு மின்னூல், விகடனில் சில கட்டுரைகள், தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை என்பது இந்த ஆண்டின் ஆக்கமான எழுத்துப் பங்களிப்பு. 

Wednesday, December 21, 2016

சதுரங்கவேட்டை

பள்ளிக்கூடத்தில் புத்தகத்தில் தமிழக வரலாறு படித்த போதெல்லாம் தமிழ் மன்னர்கள் ஒற்றுமையில்லாமல் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் அழித்தும், காட்டிக் கொடுத்தும் அந்நியரிடம் நாட்டை இழந்தார்கள், அடைமைப்பாட்டார்கள் என்பதுதான் பாடமாகச் சொல்லப்பட்டது.

இப்போதும் அந்த வரலாற்றுப் பாடங்கள் அப்படியே நமது நிகழ்கால அரசியலுக்குப் பொருந்தும். திமுக ஆட்சியில் ஊழல் வழக்குகளில் மாட்டிக்கொண்டு காங்கிரசின் கைப்பாவையாகி ஈழ விவகாரத்தில் துரோகமிழைத்து, தமிழர்களின் நலனை காவு கொடுத்தது. இப்போது அதிமுக பாஜகாவிடம் மாட்டிக் கொண்டு அலறுகிறது. இதற்காக நாம் கொடுக்கப்போகும் விலையென்ன என்று போகப்போகத்தான் தெரியும்.

தமிழகம் போன்ற தன்னாட்சி அதிகார வேட்கை கொண்ட மக்களை ஆளும் கட்சிகள் ஒருபோதும் காங்கிரஸ், பாஜக போன்ற ஒற்றை அதிகார மையத்திற்கு அடிபணியக்கூடாது. இந்திய அளவில் மாநிலக்கட்சிகளுடன் கூட்டணியமைத்து மத்தியில் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும். அதற்கு தமிழகம் தாண்டி அரசியல் செல்வாக்கைச் செலுத்தும் வல்லமை வேண்டும். அவர்களை ஒன்றிணைக்கும் புள்ளிகளை அடையாளம் கண்டு அதன்மீது அரசியலைக் கட்டமைக்க வேண்டும்.

இவை எதுவும் முடியாதென்றால், மாட்டிக்கொள்ளாமல் ஊழல் செய்யவாவது தெரிந்திருக்க வேண்டும்.

அதுவும் முடியாதென்றால், ஓரமாக ஒதுங்கிவிட்டு புதியவர்களுக்கு வழியைவிட்டுவிடலாம்.

Monday, December 19, 2016

அன்பின் ஊற்றே...

சரியாக நான்கு வருடங்களுக்கு முன், நடந்து சென்றுகொண்டிருந்த என் தந்தை, சாலையில் இரு சக்கர வாகனத்தால் மோதித் தள்ளப்பட்டு தரையில் வீழ்ந்தார். பெருங்காயமேதும் இல்லாமல் ஆட்டோவில் வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கப்பட்டார். மாலை தலை சுற்றல், வாந்தியுடன் வலிப்பு ஏற்பட்டு உள்ளூர் மருத்துவர் அறிவுரைப்படி கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலையின் பின் பக்கம் அடிபட்டதால் மூளைக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பேற்பட்டு பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். சிறிது நினைவு, பேச்சு, நடையை இழந்திருந்தார். ஒன்றைரை மாதகாலம் தீவிர சிகிச்சைக்குப்பின் வீடுதிரும்பியும், உடற்பயிற்சி(Physio Therapy) மூலம் ஓரளவு நடக்கவும், பேசவும் முடிந்தது. அப்போது சென்னையில் வேலையில் இருந்ததால் ஒன்றரை மாத காலமும் விடுப்பெடுத்து அவருடனே இருக்க முடிந்தது. சில குறிப்பிட்ட நிகழ்வுகள் நினைவில் இல்லையென்றா ஓரளவு தேறியிருந்தார்.

ஏறக்குறைய ஓராண்டிற்குப் பிறகு மீண்டும் வீட்டில் சோபாவில் இருந்து வழுக்கி விழுந்து மீண்டும் வலிப்பு ஏற்பட்டு கோவையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது சிக்காகோவில் இருந்ததால், கோவையில் நெருங்கிய மருத்துவர் அறிவுருந்த்தலின் பின்பே எனக்கு தகவல் சொல்லப்பட்டு, அன்றே குடும்பத்துடன் கோவை புறப்பட்டுச் சென்றோம். இந்த முறை ரத்தக் கொதிப்பு வலிப்புக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. பின்பு நுரையீரல் தொற்று காரணமாக நலம்பெறுதலில் தாமதமானது. இருபது நாட்களுக்குப் பின் செயற்கை சுவாசம் இன்றி சுவாசிக்கவும், சாதரண உணவு எடுத்துக் கொள்ளவும் தொடங்கிய பின், மீண்டும் உடற்பயிற்சி செய்ய மருத்துவர் படுக்கையில் இருந்தபடியே முயற்சி செய்யும் போது, சோபாவில் இருந்து விழுந்ததில் இடுப்பு எழும்பு முறிவு ஏற்பட்டதைக் கண்டறிந்து ஒரு அறுவை சிகிச்சை செய்தனர். அந்த நிலையில் மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை செய்வது ஆபத்தென்றாலும் வேறு வழியின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மீண்டு வந்தார்

சிகிச்சைக்குப் பின் பெரும்பாலும் நடையில்லாமல் படுக்கையிலேயே இருந்தார். அப்போது மிகவும் கடுமையான செயல்திட்ட மேலாண்மை செய்து கொண்டிருந்த வேளையில், சம்பளத்துடன் விடுப்பளித்தும், ஆறுதலாகவும் தேற்றிய Client பேட்டி மற்றும் ஸ்டீவ் அன்பு மற்றும் உறுதுணையாக இருந்த காக்னிசண்ட் நிறுவனத்தின் பரிவினாலும்  ஒரு மாதம் அருகிலுருந்து தந்தையைக் கவனிக்க முடிந்தது. என் மகளின் மீது பேரன்பு கொண்ட அவரை மீட்டுவந்து அவளிடம் காட்டியபின்பே மகனாக, தந்தையாக நிம்மதியடைந்தேன்.

அதன் பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்ற மாதம் ஊருக்குச் செல்வது மட்டுமே காரணமாகக் கொண்டு ஒரு பயணம். ஏதோ ஒன்று என்னை ஊரை நோக்கி ஈர்த்ததை இப்போது உணர்கிறேன். அது எம்மை உருவாக்கிய அந்தச் சிற்பியின் ஆணை போலும். அவரின் வாழ்வின் இறுதித் தருணங்களின் பக்கங்களின் என்னை இடம்பெறச் செய்ய அவர் கொடுத்த வாய்ப்பென்றே கருதுகிறேன்இந்தமுறை அவர் வேண்டிய இறைவனடி சேர எந்தத் தடையுமிருந்திருக்கவில்லை.

அன்பின் ஊற்றே,

இனியொரு பிறவியிலும் உமக்கு மகனாக, உமக்கு அடங்கிய மகனாக இருக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்

எதிலெல்லாம் என்னை அறிவாளியாகக் கருதிக்கொண்டேனோ அதிலெல்லாம் இன்று என் மகன் என்னை முட்டாளாக்கிக் கொண்டிருக்கும்போதே, அறிவார்ந்த, அனுபவம் நிறைந்த உங்கள் சமரசங்களைப் புரிந்து கொள்கிறேன். இன்னலுறும்போது துணை நின்ற தூணை இழந்து நிற்கிறேன். சாய்ந்து நிற்க தூணில்லாமல் நானே மற்றவர்க்கு தூணாக மாறும் காலமாற்றத்தைப் பழகட்டும் என்று விட்டு விட்டீரோ?

இந்த உலகில் நில்லாமை நிலையான பின்பு, உங்களின் நீட்சியாக கொஞ்ச நாள் நிலைத்திருப்பதே எனக்குக் கிடைத்த பெரும் பேறாக் கருதிகிறேன். இயற்கையுடன் ஒன்றாகிவிட்ட நீங்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கையில் விடைபெறுதல் ஏது?...

Monday, November 28, 2016

பிடல் - 1

தற்கால அரசியலை புரிந்து கொள்ள, கடந்த கால வரலாற்றை சிறிது திரும்பிப் பார்ப்பது உதவியாய் இருக்கும். ஐரோப்பாவிலிருந்து கிருஸ்டோபர் கொலம்பஸ் 1492ல் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பொழுதிலிருந்து தொடங்குகிறது அந்த அரசியல் வரலாறு. வணிக மற்றும் மதப் பரவலாக்கத்திற்காகவே ஆரம்ப கால கடலோடிகளின் புதிய நாடு கண்டுபிடிப்பின் நோக்கமாக இருந்திருக்கிறது. இத்தாலியரான கொலம்பஸின் அமெரிக்கக் கண்டுபிடிப்பிற்குப் பிறகு ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவிற்கான கடல் பயணம், நாடு பிடித்தல், வணிகம் போன்ற நடவடிக்கைகள் அதிகமானது.



இங்கிலாந்து, ஸ்பெயின், பிரெஞ்சு, போர்ச்சுகீசியர்கள் அதிக அளவில் அமெரிக்காவில் காலணி(குடியேற்றம்) அமைத்து அமெரிக்க மண்ணில் காலூண்றத்தொடங்கினர். வட அமெரிக்கா பெரும்பாலும் ஆங்கிலேயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. தென்னமெரிக்கா ஸ்பெயின், போர்ச்சுகீசயர்கள், பிரெஞ்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. பின்பு காலணி அமைத்தவர்கள் தங்கள் தாய்நாட்டிலிருந்து பிடியை விலக்கி சொந்தமாக தனி நாடாக உருவெடுத்து தங்கள் சுதந்திரத்தை அறிவித்துக் கொண்டனர். 



அமெரிக்காவின் அருகில் இருந்த ஸ்பெயினின் ஆட்சிக்குட்பட்ட கியூபாவில் அமைதியில்லாமல் அரசியல் குழப்பம் நிலவியதால் அமெரிக்க தலையிட்டு ஆட்சியதிகாரத்தை மறுசீரமைக்க கேட்டது. ஸ்பெயினும் இதோ செய்து விடுகிறோம், இதோ செய்து விடுகிறோம் என்று காலம் கடத்தியதே தவிர, செயலில் இறங்கவில்லை. அதே நேரத்தில் ஹவனா துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பல் மர்மமான முறையில் மூழ்கியதால் கோபமடைந்த அமெரிக்கா ஸ்பெயினுடன் போரில் இறங்கியது. போரில் வென்ற அமெரிக்கா 1898ல் கியூபா, போர்டோ ரிகோ, குவாம், பிலிப்பைன்ஸ் தீவுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. கியூபாவை அமெரிக்கா ஒரு சர்கரை உற்பத்தித் தொழிற்சாலையாகவே பார்த்தது. கியூபாவின் மீதான அமெரிக்காவின் அக்கரை அதன் வணிக நலன்கள் சார்ந்ததாகவே இருந்தது.

மஞ்சள் காய்ச்சல் என்னும் கொள்ளை நோய் கியூபாவில் பரவ அது அங்கு அமர்த்தப்பட்டிருந்த அமெரிக்கப்படைகளை கடுமையாக தாக்கி பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவாக சிறிய கறுப்பின படைக்குழுவை மட்டும் நிறுத்திவிட்ட மற்றவர்களை திரும்ப அழைத்துக் கொண்டது. கறுப்பினத்தவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் கொள்ளை நோயை சமாளித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருப்பார்கள் என்ற அடிப்படையில் அப்படிச் செய்தது அமெரிக்கா. பிறகு 1902ல் கியூபா அமெரிக்காவிடமிருந்து விடுதலை அடைந்தது.

அமெரிக்கா விடுதலை அளித்திருந்தாலும், அடுத்த இருபது ஆண்டுகள் தொடர்ந்து கியூபாவின் உள்விவாகரங்களில் தலையிட்டு ராணுவ மற்றும் அரசியல் நடவடிக்கைகள் மூலம் தன் அதிகாரத்தை நுழைத்து வந்தது. அமெரிக்கா தன் விசுவாசியான அதிபர்களை நாடாளவிட்டு அதன் மூலம் கியூபாவின் விவசாய விளைபொருட்கள், நிலம் மற்றும் வளங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது.

1958ல் பிடல் காஸ்ற்றோவின் முன்னெடுப்பில் உருவான புரட்சியால் அதிபர் பாடிஸ்டாவுடனான ஆயுதப் போரில் வெற்றி பெற்று பிடல் நாட்டைக் கைப்பற்றினார். பாடிஸ்டாவின் அரசிற்கு ஆயுதம் விற்றுவந்த அமெரிக்க தனது முடிவை மாற்றிக்கொண்டது பாடிஸ்டாவின் தோல்விக்கு முக்கியமான காரணம் எனவும் சொல்லப்படுகிறது.


(தொடரும்)


Tuesday, November 15, 2016

ஊர் சேர்ந்தாகிவிட்டது

வானூர்தி மயக்கம்(ஜெட் லேக்) தெளிந்து பின்னிரவில் எழுதுகிறேன். மும்பை, சென்னை, கோவை பிறகு புளியம்பட்டி என எங்கும் மோடியின் வித்தை பல்லிளிக்கிறது. கோவையிலிருந்து வரும் 45 கிமீ நெடுஞ்சாலைப் பயணத்தில் வழியிலிருக்கும் ஒவ்வொரு தானியங்கி காசுவழங்கி எந்திரங்கள், வங்கிக் கிளைகள் அனைத்தும் மக்கள் வரிசை, மக்களிடம் வாழ்க்கைப் போராட்டத்தைவிட இதை ஒரு மன தைரியத்துடனேயே அனுகுகிறார்கள். பார்ப்பவர் அனைவரிடமும் வருத்தமும், குழப்பமும் நிலவுகிறது.
உள்ளூர்க்காரர்கள் பெரும்பணக்காரர்கள் விழி பிதிங்கி நிற்பதை ரசிக்கிறார்கள், வரவேற்கிறார்கள். தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலைவிட ஏதோ கள்ளப்பணத்தை அழிக்க மோடி பெரும் முயற்சி எடுத்துள்ளதாக கருதுகிறார்கள், அகமகிழ்கிறார்கள்.
சன் மற்றும் இதர செய்தித் தொலைக்காட்சிகளே தொடர்ந்து மக்கள் சிக்கலை மோடிக்கு எதிராக செய்தியாக வைக்கின்றன. உண்மையான செய்தி மற்றும் சிக்கலின் விளைவு, எப்படி பெருமுதலாளிகள் குறிப்பாக வடவிம்திய முதலாளிகள் பயனடையப்போகிறார்கள் என்று முதன்மைத் தொலைக்காட்சி நேரத்தில் பேசுவதாய்த் தெரியவில்லை.
வானூர்தி நிலையத்தில் காவலர்கள் வெளிநாட்டு காசு மாற்றும் நிறுவன ஊழியர்களிடம் லேசாகக் கேட்டுப்பார்க்கிறார்கள், 500 க்கும் 1000க்கு சில்லரை கிடைக்குமா என்று. உள்ளிருக்கும் தானியங்கி காசுவழங்கிகள் பெரும்பாலும் கூடமில்லாமல் இருக்கிறது. சென்னையில் வானூர்தி நிலையத்திற்குள் தேனீர் மற்றும் வடையை வண்டியில் விற்கும் ஒரு நபர் 500, 1000 த்தை வாங்கிக் கொள்கிறார். வானூர்தி நிறுவன ஊழியர்கள் மற்றும் காவலர்களே அவரது வாடிக்கையாளர். எப்படி காசை மாற்றுகிறார் என்றெல்லாம் தெரியாது, ஆனால் செல்வாக்கானவர்போலவே இருக்கிறார்.
அருகிலிருக்கும் கிராமத்தில் செயல்படும் தனியார் வங்கிக் கிளை மேலாளலருடன் பேசுகயில், பணப்பட்டுவாடா மைய அரசின் ஒருமுகமாக்கப்பட்ட இணையத்தில் பதியப்படுவதாகவும், ஒரு நபரின் தனி அடையாளத்தை வைத்து எத்தனை பணமெடுக்கிறார், போடுகிறார் என்பதை எளிதாக வங்கி வேறுபாடு கண்டுகொள்ள முடியும் என்று கூறினார். மேலும் வங்கிக் கிளைகள் வழக்கமாக பெரும் பணத்தைக் கையாளும் நூற்ப்பாலை மற்றும் இதர அதிமதிப்புக் கொண்ட வாடிக்கையாளருக்கு பணத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்வதாகவும், ஒவ்வொரு நாளும் அடுத்த நாளின் பணத்தேவையை முன்கூட்டியே ஊகித்து சொல்லிவிடுவதாகவும், அதைப்பொறுத்தே அடுத்த நாள் அவர்களுக்கு காசு வழங்கப்படுகிறதாகவும் சொன்னார். நண்பர்கள் திருமண ஏற்பாடுகளிலும், புதியவீடு கட்டுவதிலும் இருப்பதால் பணச்சிக்கல் அவர்களை வைதைக்கிறது. கட்டுமான நிறுவனம் காசாக மட்டுமே கேட்கிறது. இத்தனைக்கும் முதலாளி பிஜெபியில் பொறுப்பில் இருப்பவர்.
வங்கிகள் விரைவில் மூடப்பட்டுவிடுகிறது. ஊழியர்களின் களைப்பைப் பார்க்க முடிகிறது. ஊருக்குச் செல்வதால் அண்டைவீட்டு ஆந்திர நண்பர்கள் சிலர் கொண்டுவந்திருக்கும் 500, 1000ம் தாள்களை மாற்றி வரக்கேட்டுள்ளுனர். மோடி வித்தையிலிருந்து எப்படி தப்பித்து மாற்றலாம் என்று யோசித்துக் கொண்டுள்ளேன்..... வெயிட்... மொத்தத் தொகையே 20000க்கும் குறைவுதான்.