Sunday, January 31, 2010

அன்புப் பஞ்சம்

பிறை நிலா பார்த்து அலை கடல்
வாரி இறைக்கும் வசந்தம், அன்பே
நீ என்னைக் கடக்கும் ஒரு நிமிடம்.....

உன் அன்பின் சிறைதள்ள முனையும்
உன் ஓரவிழிப்பார்வை, அதையே
வேண்டி தவமிருக்கும் என் ஊமை நெஞ்சமும்
விட்டுக் கொடுக்கவில்லை இந்தக்கணம் வரை...

ஆதாயம் பாராமல் பொழியும் ஆகாயம்-
அன்பு போழியும் தேவதை உன் நெஞ்சம்,
அள்ளி அள்ளிக்குடித்தாலும் தீராத தாகம் கொண்ட
அன்பு பஞ்சத்தில் வாடுது என் மானுட நெஞ்சம்!.

சொல்லிச் செல்வதுமில்லை
அழுது புலம்பினால் வருவதுமில்லை -
உன் நினைவுகள்!

உனக்கு தெரியும்
எனது கண்ணீர் துளிர்க்கும் தருணங்கள்!
உனக்கு தெரியும்
எனது மனம் சிரிக்கும் தருணங்கள!

கண்ணீர் துடைக்கிறாய்,
இன்பத்தில் தோழ் சாய்கிறாய்
காதல் சொல்ல விளைகிறேன் -
விடைபெற வேண்டும் என்கிறாய்.

தூர இருந்தாலும் என் உயிரின்
ஈர நினைவுகள் உன்னைச்சுற்றியே இருக்கும்
என்பது உனக்கும் தெரியும்- அதனால்தான்
நீ என்னை விட்டு விலகினாலும் என் காதல்
உன்னோடு உயிர்ப்போடு இருக்கிறது...

Saturday, November 28, 2009

எங்கள் தலைவன்

எங்கள் தலைவன் - டாஸ்மாக் உள்ளே போகும் முன்

ஐந்துவேலை சோறும்
அசதிபோக்க ஆடல் பாடல்
கேளிக்கை தொலைக்காட்சிகளும்
இருக்க எனக்கென்ன கவலை இந்த உலகத்திலே!

இருக்கிறார் எங்கள் தலைவர்
பசி தீர்க்க ஒரு ரூபாய் அரிசி போட
பொறுக்கிக் கொள்வோம் அவர்போடும் பிச்சையய் ஆசையாய்
அவர்பாதம் எம் தலைமேல் வைத்து
துதிபாடுவோம் எந்நாளும் அவர் புகழ் ஓங்க!

மூட்டைதூக்கி முதுகுவலி வந்தாலும்
சாக்கடை சுத்தம் செய்து நளிந்துபோனாலும்
ஆண்டு முழுதும் தூக்கமில்லாமல் ஆடை நெய்தாலும்
ஆதவனின் அன்புப் பிள்ளை எம் தலைவன் எழுதும்
ஆபாசக் கவிதை படித்தால் எம் துன்பம் பறந்து போகுமே!

(டாஸ்மாக் ஊள்ளே )

தன் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் ஊரார்பிள்ளை
தானெ வளரும் என்ற தத்துவம் கண்ட தற்கால சாக்ரடீசே!
எத்தனை துரோகம் செய்தாலும் உனக்குத்தான் என் ஓட்டு
மறக்காமல் குவாட்டர் மட்டும் தொடர்ந்து ஊத்து!

எவன் மாய்ந்தால் எனக்கென்ன?
எவன் எந்த நதியைய் தடுத்தால் எனக்கென்ன?
எவன் எங்கு குண்டு போட்டால் எனக்கென்ன?
என் பிள்ளை நாளை எவனுக்கு அடிமையய் இருந்தால் எனக்கென்ன?
எனக்கு இப்போது நீ குவாட்டர் ஊத்து!

சீனாக்காறான் கச்சத்தீவில் குண்டுபோடும்
களம் அமைத்தால் எனக்கென்ன?
அவன் நாளை என் மீது குண்டு போட்டால்
எனக்கென்ன?
இப்போ நீ எனக்கு குவாட்டர் ஊத்து!

தக்காளி! நீதாண்டா தமிழன தலைவன்!
புறநானூற்றின் வீரம் சொறிந்து சொறிந்து
புறமுதுகெல்லாம் புண்ணானபோதும்
உடன்பிறப்பை உசிப்பிவிட்டு ரசிக்கும் ரசிகனே!

தொலைபேசி தரகில் லட்சம் கோடி அமுக்கிவிட்டு
அதைபத்தி பேசாமல் உலகச் செம்மொழி மாநாடு
கும்மியடிக்கும் உன் திறன் வியந்து செயல்மறந்து
வாய் பிளக்கிறேன்... அந்த குவாட்டரை கொஞ்சம் ஊத்து!


அந்த குவாட்டரை கொஞம் ஊத்து!!!

- குவாட்டருடன் உடன் பிறப்பு

Friday, November 20, 2009

மாவீரர் நினைவுச்சுடர்!



உம் உயிர் கொடுத்து எமது மானம் காத்த
மாவீரர் உம் பாதம் தொட்டு வணங்குகிறோம்!!!

Monday, May 18, 2009

அகதி

மார்தட்டி கொள்வோம்
எங்கள் குலதெய்வம் நீ யென்று!
யார் சொல்லியும் உண்மையாகுமோ
ஆதவன் இல்லையென்று!

நாளை அவர் போல் புகழ்கொள்வாயென்று
உன் பேர் சொல்லி
வளர்த்தாள் அன்னை என்னை அன்று!

வீரம் கொண்ட வரலாறு எமதென்று
நாவினில் வாள் சுழற்றும்
கோமகன்கள் வாழும் காலமொன்றில்

கங்கைகொண்டான், கடாரம் வென்றான்
அவன் மீண்டும் வந்து நின்றான் எம்முன்
யாழ்தீபம் தரித்த அனல் பிழம்பென்று!

வேல்தாங்கி நிற்க்குமிந்த
அக்கினிக் குன்றுள்ளவரை
எதிரிக்கு தெரியும்
வெற்றி என்பது கனவென்று!

அவனைக் கொன்று விட்டால் யார்கேட்பார்
இந்த நாதியற்ற மக்களை தீண்டிணாலென்று
கொக்கரிக்கும் குருடர் கூட்டம் தெரிந்து கொள்ளும்
"விடுதலை தேசம்" எமதென்று!

அவர்கள் ரத்தம் கொண்டு
வெற்றித் திலகமிடும் நாள் சொல்லும்
எமது வீரம் எதுவென்று!

வெறி கொண்ட யானை வென்று
அதன்மேல் எம்மன்னன் ஊர்வலம் வரும்ப்போது
புத்தனும் இவன்மேல் ஆசைகொள்வான்
வெற்றி வீரன் இவனென்று!

அதுவரை சொல்லமாட்டோம்
உலகிற்கு நாம் தமிழனென்று,
மறக்கமாட்டோம்
"அகதி" என்பதே எமது இனமென்று!

- "அகதி" திரு

Sunday, May 17, 2009

முடிவின் தொடக்கம்

எல்லோராலும் எதிர்பார்த்ததாக தேர்தல் முடிவுகள் இல்லாவிடினும், கொடுத்தவர் எதிர்பார்த்த முடிவுவாகவே இருக்கிறது. எத்தனை ஊடகங்கள், எத்தனை ஆர்வளர்கள், எத்தனை பரப்புரைகள்?... எல்லாம் மண்ணாய் போனது பணத்தாலே. ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலை பணம் மட்டும் வென்று விட்டது என்று சொல்லி இந்த தேர்தல் முடிவுகளை ஒதுக்கிவிட முடியாது. அது ஆளுங்கட்சி பெற்ற வெற்றிகளுக்கு வேண்டுமானால் காரணமாக இருக்கலாம். ஆனால் எதிர்கட்சிகள் பெற்ற தோல்விக்கு நிச்சயம் அது மட்டும் காரணமல்ல.
சந்தர்பவாத அரசியல், அரசியல் வியாபரமயமாகிப்போனமை, கொள்கை இல்லாக் கூட்டணி மற்றும் தலைவர்களின் மேல் மக்கள் கொண்ட நம்பிக்கை போன்றவை மறுக்க முடியாத காரணிகள்.

பணம் கொடுத்து வாக்குப் பெற்று வெற்றிகளை குவிக்க முடியும் என்று தமிழகம் ஒரு தவறான முன்னுதாரணத்தை காட்டி நின்றும், எதிர்காலத்தில் சன நாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதைக்கொண்டு பின்னப்பட்ட அரசியலமைப்பும் அதை தாங்கி நிற்கின்ற அடிப்படை கோட்பாடுகளும் அதன் நம்பிக்கைத்தன்மையை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதில் ஐயம் இல்லை.

அதே நேரம் பணத்துக்கு வாக்களிக்கும் வாக்காளன் தான் அதைச் செய்யாமல் தவிர்த்த வாக்காளனுடைய தலைவிதியையும் தீர்மானிப்பவன் என்றால் அதற்க்கு வாய்ப்பளிக்கும் அரசியலமைப்பை, சிறுபான்மை சிந்தித்து வாக்களிப்பவர்களின் கோபம், அதன் விழைவால் உருவாகப்போகும் அணுகுமுறையும் சிதைக்கும் வாய்ப்புகள் அதிகம்.

"உங்களைத்தான் நம்பியிருக்கிறோம் எங்களுக்கு ஒரு விடிவு தாருங்கள்" என்று அழுத ஓரு இனத்தின் அங்கத்திற்க்கு இன்னொரு அங்கம் செவிசாய்க்காத போது, நிச்சயம் அவர்கள் உதாசினப் படுத்தப் பட்டார்கள் அல்லது அவர்களின் குரல் இன்னும் இந்த பாமர மக்களிடம் போய்ச்சேர வில்லையோ என்ற கருத்தோட்டங்களை ஏற்படுத்துகிறது. இதில் உண்மை இரண்டாவது காரணமாக இருக்குமானால், அது சரி செய்யப்படலாம். ஆனால் அது முதல் காரணமாக இருப்பின் அந்த இனம் அதன் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பது உறுதி.

அவர்ளுக்கான விடிவை அவர்களே தேடிக்கொள்வார்கள், அல்லது காலம் அவர்களுக்கு அதை கொடுக்கும். அந்த நேரத்தில், அழிவின் தொடக்கத்தை அந்த இனத்தின் இன்னொரு அங்கம் அடைந்திருக்கும். கலாச்சாரம், பண்பு, மொழி என அனைத்திலும் கலப்பை ஏற்படுத்தி தன் இனத்தை தானே அழித்து மாயையான தேசிய கோட்பாடுகளை தலைமேல் தூக்கிவைத்து தன் அடையாளத்தை இழந்து நிற்க்கும் இன்றைய தமிழக தமிழர்களின் நிலைக்கு அவர்களின் தலைவிதியைவிட தலைவர்களே முதல் காரணம்.

காகம் கூட தன் உறவு இறந்தால் கூடி அழும், ஆனால் இந்த இனம் மட்டும் தன் அங்கத்தையே தின்று பசிதீர்க்கும் குணம் கொண்டது என்பது மறுக்க முடியாத சோகம்.

Monday, May 11, 2009

கல்கியின் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலை மின் நகலில் பெற

http://ponniyinselvan.in/pages/downloads.html

Thursday, May 7, 2009

யார் பெரியாரின் பேரன்?









"பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்று சீமான் சொல்கிறாறே?" என்று ஈ வெ கி ச இளங்கோவனிடம் நிறுபர்கள் கேட்ட கேள்விக்கு இறையாண்மை மிக்க நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் அளித்த பதில் என்ன தெரியுமா?

"பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கலாம்" என்று எக்காளமாய் பதில் சொல்கிறார்.

அடிமைத் தனத்தை உடைத்தெரிந்த சுயமரியாதையை சொல்லிக்கொடுத்த பகுத்தறிவு பகலவனின் வாரிசு நிச்சயம் இளங்கோவனாக இருக்க வாய்ப்பில்லை. இளங்கோவன் பெரியாரின் தலைமுறை என்று சொல்வது வேண்டுமானால் பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கும்.



இவருக்கு முத்து குமார் யார் என்று தெரியாது. இலங்கை மக்கள் துயருக்கு காங்கிரஸ் கட்சி தான் விடியலை கொடுத்துள்ளது என்று சொல்லும் இந்த மூடரையா நாம் தேர்ந்தெடுத்தோம் என்னும்போது வெட்கம் தலைகுனிய வைக்கிறது.

சோனியாவை அன்னை என்று கூறும் இவர், யார் செய்த இளவயது தவறு என்று சோனியாவிடம் கேட்டுச் சொல்வாரா?