Sunday, January 3, 2016

நம் வாழ்க்கை நம் விரலில்...

“நமக்கெதற்கு அரசியல்... அது ஒரு சாக்கடை.. இவர்களுக்கு வேற வேலையில்லை...” இப்படி நிறைய இளம் தலைமுறையினர் எண்ணுகின்றனர். அவர்களின் நிலையில் அது சரியானதே. அதற்குக் காரணம் நம்மை ஆண்ட, நமக்கு அறிமுகமான அரசியல்வாதிகளின் நடவடிக்கை, அது நமக்கு அரசியல் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அந்தச் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் வந்துவிட்டது. படித்த இளைஞர்கள் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இது வரை நடந்த தேர்தல்களில் வாக்களிப்பவர்கள் சதவீதம் 60-70%. ஏறக்குறைய 40% மக்கள் வாக்களிப்பதில்லை. பதிவான 60% ஓட்டுக்கள் 4 அல்லது 5 கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் பிரித்துக் கொள்கின்றனர். 25% முதல் 35% ஓட்டு வாங்குபர் எதிராளியைத் தோற்கடித்து வெற்றி பெறுகின்றார். அவர் வெற்றிபெற்ற ஓட்டுக்கள் பெரும்பாலும் கட்சியின் அடிப்படையில் காலங்காலமாக ஓட்டுப் போடுபவர்களின் ஓட்டுக்கள். அதிக பட்சமாக 5% - 10% கட்சி சாராத நடுநிலையாளர்கள், புதிய வாக்களார்களின் வாக்குகள் மூலம் வெற்றி உறுதி செய்யப்படுகிறது. நமது ஜனநாயக நாட்டில் 25% ஓட்டு வாங்குபவர் ஏனைய 75% மக்களுக்கான முடிவுகளை எடுக்கிறார். இந்த நிலையால் நம்மை ஆளும், ஆண்ட கட்சிகள் தங்களுக்குள் ஒரு எழுதப்படாத உடன்படிக்கை மூலம், மக்களின் வரிப்பணத்தைத் தவறாக செலவளித்து, ஊழல் செய்து பெரும் பணக்காரர்களாகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் நம் அடுத்த தலைமுறையான, மகன், பேரன்கள் இந்த நிலத்தில் வாழத் தேவையான நீர், காற்று, நிலம், காடுகள், மலைகள் இன்னும் பல இயற்கை வளங்களை சூரையாடி அழித்து லாபம் பார்க்கின்றனர்.
நாம் வாங்கும் சோப்பு, சீப்பு முதல் ஒவ்வொரு பொருளுக்கும் வரி கட்டுகின்றோம். பெட்ரோல், டீசலுக்கு அதன் விலையை விட அதிகமாக வரி கட்டுகிறோம். டெலிபோன் பில்லில் ஒரு பகுதி, சொத்து வரியில் ஒருபகுதி கல்வி வரி கட்டுகிறோம். வாகனத்தை சாலையில் பயன்படுத்த சாலை வரி கட்டுகின்றோம். வருமானத்தில் 20 முதல் 30 சதவீதம் வரி கட்டுகின்றோம். மின்சாரக் கட்டணத்தில் வரி கட்டுகின்றோம்.
இப்படி ஒவ்வொரு அன்றாடத் தேவைகளுக்கும் வரி கட்டுகின்றோம். ஆண்டுக்கு ஒரு லட்சம் (மாதம் 8500 ரூபாய்) குடும்பச் செலவு செய்கிறவர் வரியாக 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அரசுக்கு அளிக்கிறார். இந்த வரி கல்வி, மருத்துவம், சாலை வசதி, குடி நீர் வசதி போன்றவற்றிற்காகவும், அரசு அலுவலர்களின் சம்பளமாகவும் செலவு செய்யப்படுகிறது. இந்த வரிச் செலவினங்களை நாம் முழுமையாகப் பயன் படுத்திக்கொள்கிறோமா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை.
கல்வி, மருத்துவத்திற்கு வரிகட்டினாலும் அந்த சேவைகள் அரசைவிட தனியாரிடம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அந்தச் செலவுகளை நாமே செய்து கொள்கிறோம். இந்தச் செலவுகள் தனிமனிதனின் ஆண்டு வருமானத்தில் பெரும் பங்காகச் செலவு செய்யப்படுகிறது. திருட்டிலிருந்து, பாதுகாப்பு வரை காவல் நிலையங்களை நம்பியிருக்கிறோம். ஆனால் காவல் நிலையங்கள் பெரும்பாலும் மக்கள் எளிதில் அணுகி உதவி பெற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பது நிதர்சனம்.
போடாத சாலையை போட்டது போல் கணக்குக் காட்டுவது, போட்ட சாலை 5 ஆண்டுகள் தாக்குப் பிடிக்க மதிப்பிடப்பட்டிருந்தால் அவை இரண்டு ஆண்டுக்குள் பழுதாகி மீண்டும் சாலை போடவேண்டிய நிலை. ஒவ்வொரு முறை சாலை போடும்போதும் அரசியல்வாதிகள், அரசு அலுவலர்கள் கமிசன் பெருகிறார்கள். ஆக, ஒவ்வொருமுறை அரசு பணம் செலவழிக்கப்படும் போதும் அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் லாபம் அடைவதால், செலவு செய்யத் தேவையான காரணங்களை செயற்கையாக உருவாக்குகிறார்கள். புதிய மின் உற்பத்தி நிலையங்களை அரசு உருவாக்குவதை தவிர்த்து அல்லது தாமதப்படுத்தி, மின்சாரத்தை அதிகவிலைக்கு தனியாரிடம் கொள்முதல் செய்து அதை நமக்கு வினியோகிப்பதன் காரணம் இதுதான்.
எங்கெல்லாம் தனியாரிடம் கொள்முதல் செய்யப்படுகிறதோ அங்கெல்லாம் கமிசன், லஞ்சம் தாண்டவமாடுகிறது. டாஸ்மாக் கொள்முதலிலும் விற்பனையிலும் லாபம் பெருபவர்கள் அரசியல் வாதிகள், பலனடைபவர்கள் அதிகாரிகள். இதில் எந்த கட்டுப்பாடும், கேள்வியும், தண்டணையும் இல்லை. இது உங்கள் உழைப்பை ஒருவகையில் சுரண்டுவதற்கு ஒப்பானதாகும். ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் அரிசி, கரும்பின் விலைகளில் அரசியல் வாதிக்கும், அதிகாரிக்கும் கமிசன் கிடைப்பதில்லை. அதனால் அங்கு கொள்முதல் விலை அதிகரிப்படுவதில்லை.  விவசாயி நட்டத்துடன் கடன்காரனாகத் தற்கொலை செய்து கொள்கிறான்.
அரசின் எல்லா அமைப்புகளும் நேர்மையாக இருந்தால் செலவுகள் குறைந்து, உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகமாகும். வாழ்க்கை முறை எளிதாகவும், வளமானதாகவும் இருக்கும். 60 ஆண்டுகள் தொடர்ந்து கடுமையாக உழைத்து ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்காது. 40 அல்லது 50 வயதிலேயே ஓய்வு பெற்று நிம்மதியாகக் காலம் கழிக்கலாம். உணவு, சாலை, சுற்றுச் சூழல் சரியாக இருந்தால் நோய்கள், விபத்துக்கள், மருத்துவச் செலவு குறையும்.

இவையெல்லாம் நாம் போடும் ஓட்டின் அடிப்படையிலேயே இருக்கிறது. நீங்கள் அலட்சியம் செய்யும் உங்கள் ஓட்டு, நாளை உங்களை கடன்காரர்களாகவும், நோயாளிகளாகவும் வைக்கப்போகிறது என்று புரிந்துகொள்ளுங்கள். நாளை மருத்துவமனையிலும், அரசு அலுவலகங்களில் சேவைகளைப் பெற வரிசையில் நிற்பதைத் தவிற்க, ஒரு நாள் வரிசையில் நின்று ஓட்டுப்போட்டு நல்ல வேட்பாளார்களைத் தேர்ந்தெடுத்து நல்ல அரசை அமைத்துக் கொள்வது புத்திசாலித்தனம். நம் வாழ்க்கை நம் விரலில், ஓட்டுப்போடாத 40% இளைஞர்களும், மக்களும் ஓட்டுப்போட்டால் 25% ஓட்டு வாங்கி வெற்றிபெரும் ஊழல்வாதிகளை அப்புறப்படுத்திவிடலாம். சரியான நபர் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகாரத்திற்கு வருவார். பெரும் கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் படித்த திறமையுள்ள இளைஞர்கள் மக்களுக்கு சேவை செய்ய் தேர்தலில் போட்டி போடுவார்கள். நாடு வளம் பெரும். நாமும் வளம் பெறலாம்.

Wednesday, December 23, 2015

தமிழக அரசியலில் இன்றைய தேவை யார்?


இன்னும் மூன்று மாதத்தில் தமிழகம் தேர்தலைச்  சந்திக்க இருக்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இரு கழகங்களின் ஆட்சியைப் பார்த்துவிட்ட மக்கள்குறிப்பாக இளம் தலைமுறையினர் அரசியல் மாற்றத்தையும் அதன் விளைவாக நிர்வாக சீர்திருத்தம்மக்களின் உரிமைகளுக்கு மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று நினைக்கின்றனர். எப்படி, பொருளாதார தாராளமயமாக்கல் இந்திய அரசியலில் தத்துவங்களை புறந்தள்ளி தனிமனித முன்னேற்றத்தை முன்னிறுத்தியதோஅதே போல அந்த பெரும் மாற்றத்தைக் கைக்கொள்ளும் அரசியல் மாற்றத்தை மக்கள் விரும்புகின்றனர். இன்றைய சமூகம் முகம் கொடுத்திருக்கும் சிக்கல்கள் இது வரை ஆட்சி செய்த கட்சிகள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனியார் மயமான கல்விஇன்று ஒவ்வொரு பெற்றோரையும் கடன்காரர்களாகவும்அவர்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் முக்கியக் காரணியாகவும் இருக்கிறது. எப்படி பிறப்பின் மூலம் சாதிப் படிநிலை ஒரு காலத்தில் ஒருவரின் தலைவிதியைத் தீர்மானித்ததோஅதே போல பிறப்பின் மூலம் வசதி படைத்தவர் ஒரு தரத்திலும்வசதி படைத்திராதவர் ஒரு தரத்திலும் கல்வி பெறும் சூழல் நிலவுகிறது. கல்வி ஒருவருடைய வாழ்கைத் தரத்தை உயர்த்தும் என்ற அடிப்படையையே இந்த நிலை கேள்விக்குள்ளாக்குகிறது.

வெறும் எண்களால் நிறுவப்படும் பொருளாதார முன்னேற்றம், அடுத்த தலைமுறையை இந்த பூமிப்பந்தில் வாழ்வதற்கு வழியில்லாமல் செய்துவிடும் பொருளாதாரச் சார்பு கட்டமைப்புகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஏரிகள்குளங்கள்ஆறுகளை அழித்து ஆலைகள்குடியிருப்புகள் அமைக்க இப்போது எந்த தடையுமில்லை. இது எப்படி பிராய்லர் கோழிகளை முப்பது நாளில் மருந்துகள் கொண்டு எடையேற்றி கறியாக்குகிறோமோ அதைப்போல. இந்த முன்னேற்றம் நீண்ட காலத்தில் மனித சமுதாயத்திற்கு பெரும் கேடு விளைவிக்கக் கூடியது. இன்னொரு புறம் சாமனியன் அரசின் சேவைகளைப் பெற அரசு அலுவலர்களுக்கு கையூட்டு கொடுத்தே ஆகவேண்டிய நிலை. எந்த ஒரு பத்திரப் பதிவும் லஞ்சம் கொடுக்காமல் நடைபெறுவதில்லை. இன்றைய நிலையில் லஞ்சம் வாங்குவதையோ லஞ்சம் கொடுப்பதையோ யாரும் குற்றமாகவோகேவலமாக பார்ப்பதில்லை. சமுதாயத்தின் மனசாட்சியின் அறத்திற்கான அளவுகள் மாறிவிட்டது. ஓட்டு கேட்க வரும் அரசியல் கட்சிக்காரர் மக்களின் காலில் விழுந்த காலம் போய்கரண்சியில் அடித்து ஓட்டு வாங்கும் நிலை நிலவுகிறது. தேர்தல் முடிந்தால் தெருவில் சாக்கடை அடைத்து விட்டாலும்சாலை பழுதானாலும் அந்த அரசியல் கட்சிக்காரரிடம் ஏதும் கேட்க முடியாது. அவருக்கு எதுவெல்லாம் லாபம் தருமோ அந்த அரசுப் பணீகளையே செய்வார். இங்கு காசுக்கு ஓட்டுப்போட்டவனின் உரிமையும் விலைக்கு வாங்கப்படும் சூழல்.

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் போலமனிதனிடம் புதிய வியாதிகளும் ஆண்டு தோறும் கண்டுபிடிக்கப்படுகிறது. சில நேரங்கள் ஏதோ ஒரு மருந்தைத் தயாரித்துவிட்டு அதற்கான நோயைக் கண்டு பிடிக்கிறார்களோ என்று கூடத் தோன்றுவதுண்டு. தனியார் மருத்துவமனைகளின் பெருக்கம் அரசு மருத்துவ மனைகளின் எண்ணிக்கைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் அனுமதித்தோம். ஆனால் இன்று அவையும் ஒரு நோய்போல் பரவி இன்று சாவை முன்னிறுத்திமருத்துவனைப் படியேறும் ஒவ்வொருவரிடமும் கொள்ளையடிக்கின்றன. தனிமனித மருத்துவச் செலவுகள் தனி ஒரு வரவு செலவு திட்டத்திற்கு ஒப்பானதாக இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகளில் தரமான மருத்துவமும்(சுகதாரமும்) கல்வியும் அடிப்படை உரிமைகளாக்கப்பட்டு அது உறுதி செய்யப்படுகிறது. இங்கிலாந்தில் மருத்துவம் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. அமெரிக்காவில் மருத்துவம் தனியார் வசம் இருந்தாலும்எந்த ஒரு மனிதருக்கும் பணமில்லை என்ற காரணத்தால் மருத்துவம் நிறுத்தி வைக்கப்படுவதில்லை. இந்திய அளவில் மருத்துவத்துறையில் மாற்றம் வேண்டும் என்ற போதிலும்மாநில அளவில் அதற்கான முன்மாதிரிகளைச் செய்யலாம்.

சரி... இபோது நமக்குள்ள வாய்ப்புகள் என்னதிமுகஅதிமுக ஆகியவற்றின் ஆட்சியை பார்த்தாகிவிட்டது. பெரிதாக எதுவும் இந்த 40க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் ஆட்சி முறையில் வித்தியாசமில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் இவர்களின் ஆட்சியில் ஓட்டுக்கு காசுஇலவசங்கள்டாஸ்மாக் என்று ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கப்பட்டுவிட்டது.. இந்த முறையும் இவர்களைத் தேர்ந்தெடுத்தால்பெரிய மாற்றத்தை எதையும் நம்மால் எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக எப்படியும் இருவரில் ஒருவர் என்று முடிவுசெய்து இப்போதுபோல் ஊழலைத் தொடர்ந்து தைரியமாகச் செய்வர். அடுத்து நமக்குள்ள தேர்வுமக்கள் நலக் கூட்டணிபாமகநாம் தமிழர்ஆம் ஆத்மிகாங்கிரஸ்பாரதிய ஜனதா.

பாரதிய ஜனதாவும்காங்கிரஸும்ஆம் ஆத்மியும் தேசியத்தலைமையின் கீழ் இயங்குபவை. ஏனைய மாநிலங்களைப் போலல்லாமல் தமிழகத்தின் உரிமைகள்சிக்கல்கள் வேறானவை. இங்கு மொழியிலுருந்துஉணவு வரை ஒரு தனித்துவம் இருக்கிறது. ஒரு போதும் இங்கு வெளி மாநிலத் தலைமை எடுபடாது.

பாமக வின் அரசியல் அதிரடியாய் இருந்தாலும் கடந்த கால சாதி ரீதியான அரசியல் எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்லும் என்ற நம்பிக்கையை இன்னும் பெறவில்லை. மேலும் பாமக எல்லா மாவட்டங்களிலும் வலுவாக இல்லை. அதனால்வட மாவட்டங்களில் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றினாலும் பாமகவின் ஆட்சியமைக்கும் முயற்சி வெற்றி பெறாது.

அடுத்து நாம் தமிழர் கட்சி. ஆரம்பம் முதலே தமிழர்கள் குறித்த அக்கறையுடன் அரசியல் செய்வதுபல தரப்பட்ட மக்களை துணை இயக்கங்கள் மூலம் அரவணைத்துக் கொள்வது போன்ற செயல்பாடுகளில் நம்பிக்கை ஏற்படுத்தினாலும்அவர்கள் அறிவிக்காமலே, இன வெறுப்பை முன்வைத்து அரசியல் செய்வதுபோல் மக்கள் மத்தியில் ஒரு பிம்பம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதற்கான சரியான பதிலையும் செயல் பாடுகளையும் தலமை வெளிப்படுத்தும் போது தமிழகத்தில் பெரும் சக்தியாகும் வாய்ப்பு இருக்கிறது.

அடுத்துவிஜயகாந்தின் தேமுதிக. அது அதிமுகதிமுக விற்கு மாற்றாக உருவெடுத்தது. ஒருகட்டத்தில் திமுக வை ஒழிக்க அதிமுக வுடன் கூட்டணி வைக்கும் நிலை வந்ததும்இப்போது அதிமுக வை ஒழிக்க யாருடன் கூட்டணி வைப்பது என்ற குழப்பத்திலும் இருப்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி வைத்துள்ள விஜய காந்தினால் தனியாக ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும்அவர் கட்சிக்கு விழும் ஓட்டு எதிராளியின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக இருந்து வந்திருக்கிறது. 

கடைசியாக மக்கள் நலக் கூட்டணி. வைகோதிருமாவளவன்இடது சாரிகள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி பல்வேறு பரிமாணங்களில் ஆட்சியமைக்கும் நம்பிக்கையளிக்கிறது. வைகோ சிறந்த தலைவரானாலும் அவர் தமிழக அரசியலில் வெற்றி பெற முடியாததற்குக் காரணம் அவர் தமிழக அரசியல் சூழலை உள்வாங்க வில்லை என்று ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் தமிழக நலனில் வைகோவின் போராட்டங்களும்அரசியலும் மிகப் பெரும்பங்காற்றியது வரலாறு. அதிகாரத்தில் இல்லாதபோதும் அடித்தட்டு மக்களின் ஒவ்வொரு பிரச்சினைக்கும் முன்னின்று அரசியல் போராட்டங்களும்சட்டப் போராட்டங்களும் செய்தது யாவரும் அறிந்தது. அவருடன் இணைந்துள்ள திருமா ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி என்பதைத் தாண்டிஅனைத்து மக்களுக்குமான அரசியல் வாதியாக பரிமளிப்பது மிகப்பெரிய பலம். கூடங்குளம்ஈழப் பிரச்சினையில் கருத்தால் வேறுபட்டிருந்தாலும்அடிப்படையில் தமிழக நலன்களில் இடது சாரிகளின் போராட்டங்களும் முன்னெடுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. தனியார் மயமாக்களுக்கு எதிரான அரசியல்தொழிலாளர் நலன் சார்ந்த அரசியலுக்கு இடது சாரிகள் பெயர்போனவர்கள். இம்மூவர் கூட்டணி பல்வேறு தரப்பு மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. ஆனால் கூட்டுத்தலைமை என்பது தமிழகத்தைப் பொறுத்த அளவில் புதிய முயற்சி. அந்த முயற்சி பரிசோதிக்கப்படும் அதே நேரத்தில் சிறந்த நிர்வாகத்திறமையும்வெளிப்படையான அணுகுமுறையும் கொண்ட முதன்மை-அமைச்சர் தமிழகத்தின் இன்றைய தேவை. அந்த வகையில் நமக்கும் நேர்மைக்கு பெயர்போன சகாயம் ஐஏஸ் சரியான தேர்வாக இருக்கிறார்.

இதுநாள் வரைஒரு கட்சிக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவரே முதல்வராக இருந்து வந்துள்ளனர். அவரே ஒன்றிற்கும் மேலான துறைகளுக்கு அமைச்சராகவும் தன்னிச்சையாக முடிவெடுப்பவராகம் இருந்திருக்கிறார். ஒருவகையில் அதிகாரம் ஒரிடத்தில் குவிந்து அரசு அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்வதில் பெரும் சிக்கல்களைக் கொடுத்துள்ளது.


ஆனால் சகாயம் போன்ற ஒருவர் முதல்வராக இருக்கும்போதுஅரசியல் தலையீடுகள்சமரசங்கள் இல்லாத முதன்மை-அமைச்சராகச் செயல்பட முடியும். வைகோதிருமாகம்யூனிஸ்டுகள்தேமுதிக போன்றவை அமைச்சரவையை பகிர்ந்து கொண்டுசகாயம் அவர்களை சாரதியாக்கி தமிழகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியும். அரசு நிர்வாகத்தில் அரசியல் வாதிகள் தலையீட்டை இது போன்ற முறையில் தடுத்திட முடியும். கொள்கைகளையும், மக்கள் பிரச்சினைகளையும் ஆட்சி இயந்திரத்தின் கவனத்திற்கு நமது அரசியல் தலைவர்கள் கொண்டு செல்லவும்அவற்றிற்கு அரசு இயந்திரத்தின் மூலம் தீர்வு காண்பது, சகாயம் அவர்களின் திறமையின் மூலம் சாத்தியமே. இது போன்றதொரு சூழலில்கட்சிக்காரர்களுக்கு காண்ராக்ட்காண்ராக்டில் கமிசன்நிறைவேற்றப்படாத திட்டங்களுக்கு செலவுக்கணக்கு போன்ற பல்வேறு ஊழல் முறைகளை அரசியல் தலையீடு இல்லாமல் அழித்துவிடலாம். இந்த ஆட்சியில் தேமுதிக வாகும் பங்கெடுத்து அரசை வழிநடத்தும் பட்சத்தில் அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் நிச்சயம் பெரும் மாற்றத்தையும்முன்னேற்றத்தையும் அடைந்திட முடியும்.

Tuesday, December 15, 2015

அதிமுக வெறுப்பு திமுக விற்கு விழும் லைக்கா?...

டாஸ்மாக் மற்றும் வெள்ள பாதிப்பு, தடுப்பு மற்றும் நிவாரணப்பணிகளில் அதிமுக அரசின் இயலாமை பல்லிளிக்கும் இந்த நேரத்தில் திமுக கூடாரம் உற்சாகத்தில் இருப்பது போலும் மக்கள் அடுத்த மாற்றாக திமுக வைத்தான் தேர்ந்தடுப்பர் என்றும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது ஒருவகையான திமுக ஆதரவு பிரச்சாரம் மட்டுமில்லாமல், மக்களை திசை திருப்பும் உக்தியும் கூட.

கடந்த தேர்தலில் திமுக துறத்தியடிக்கப்பட்டதற்கான காரணங்கள் அப்படியேதானிருக்கிறது.

  1. 2G அலைக்கற்றை ஊழல்
  2. ஈழத்தமிழர் விடயத்தில் நீலிக்கண்ணீர் வடித்து ஏமாற்றியது.
  3. மாவட்டச் செயலாளர்கள் முதல் ஊராட்சித் தலைவர்கள் வரை ஊரான் சொத்தையெல்லாம் ஆட்டையைப் போட்டுக் கொண்ட அராஜகம். அதைத் தடுக்க 'அம்மா' கொண்டுவந்த நில அபகரிப்பு தடுப்புச் சட்டம் முதல் இரண்டு மூன்று மாதங்களுப்பின் 'ஏதோ' சமரசத்திற்குப் பின் செயல்படவில்லை.
  4. டாஸ்மாக் குழாயாய் மேலும் திறந்து விட்டு சமுதாயத்தை சீரழித்தது
  5. தாது மணல், கிராணைட் கொள்ளை
  6. நதி நீர் உரிமைகளில் சமரசமடைந்தது.


இன்னும் ஏராளம்...

அதிமுக ஆட்சியைக் கைப்பற்றியது முற்றிலும் திமுக வெறுப்பினாலன்றி வேறு காரணங்கள் ஏதுமில்லை. மேற்ச்சொன்ன ஓரிரு காரணங்களைத் தவிர்த்து அதிமுக வின் ஆட்சிக்கும் திமுக ஆட்சியின் குற்றச்சாட்டுகளை வைக்கலாம்.

இந்த சூழலில் திமுக வின் ஆட்சிக் கனவு மக்களின் மறதியை நம்பியே இருக்கிறது. அவ்வப்போது முகநூல் பதிவுகள் பழைய கதையை நினைவு படுத்தி மக்களை உசார் படுத்தி அந்த கனவை கலைத்து விடுகிறது.

தமிழக அரசியல் சூழலையும், மக்களுக்கு மாற்று ஒன்றை உருவாக்க மக்கள் நலக் கூட்டணி என்ற கூட்டணியயை வைகோ, திருமா மற்றும் இடதுசாரிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர். ஆரம்பத்தில் இந்த கூட்டணியின் மீது மக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அவர்களின் தொடர் பிரச்சாரம், டாஸ்மாக் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளில் எடுத்த நிலை, வெள்ள நிவாரணப்பணிகளில் தலைவர்கள் என்ற மமதையெல்லாம் இல்லாமல் வீதியில் இறங்கி சேற்றை அள்ளுவது மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இரண்டு பெரிய கட்சிகளிடமிருந்தும் விடிவு வராதா என்ற ஏக்கத்தில் இருக்கும் மக்களுக்கு இவர்களின் அரசியல் நம்பிக்கையை அளித்திருக்கிறது.

சமீபத்திய கருத்துக்கணிப்புகளும் அதைத்தான் சொல்லுகிறது. ஆனால் இதையெல்லாம் மறைத்து மக்களின் எண்ணவோட்டத்தை திசை திருப்புவதில் கலைஞர் வல்லவராயிற்றே. மதிமுக வில் முக்கியமானவர்கள் விலகி திமுக வில் இணைவது ஏதோ வைகோ மேலுள்ள வெறுப்பினாலும், அவர் அதிமுக வெற்றிபெற கூட்டணி அமைத்திருப்பதனாலும், அவர்கள் திமுக வில் இணைவது இயற்கையானது என்பதுபோலவும் பரப்புரை செய்யப்படுகிறது.

உண்மை என்ன என்பது கடந்த ஆறு மாத நிகழ்வுகளைப் பார்த்தால் தெரியும்.

செப் 17 ல் வைகோ மக்கள் நலக் கூட்டணிக்கான அத்திவாரத்தை அமைத்தபின், திமுக கொஞ்சம் ஜெர்க்காகி தாமரைக்கண்ணன் போன்ற நிர்வாகிகளை திமுக பக்கம் இழுத்தது.

இப்போது விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணியில் சேர்வது போன்ற அறிகுறி தெரிந்தவுடன், ஜோயல்... இந்த ஜோயலுக்கு வைகோ மக்கள் நலக்கூட்டணி அமைத்தபோதும், வைகோ திமுக, அதிமுக வுடன் கூட்டணி அமைக்கமாட்டேன் என்று அறித்த ஆறு மாதத்திற்கு முன் கட்சி மாறாமல், இன்று அதிமுக வெறுப்பு மக்கள் நலக் கூட்டியக்கத்தின் மேல் விழும் அறிகுறி தெரிந்த பின் கட்சிமாறியது இயற்கையானதா?

கருணாநிதியின் அரசியல், இத்துபோன பழி பாவங்கள் சேர்ந்த அரசியல். அது இப்படித்தானிருக்கும். எப்போதெல்லாம் தனக்கு பாதிப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஜோயல் போன்ற யாராவது மாற்றுக் கட்சியிலிருந்து கருணாநிதிக்கு சால்வை சாத்தும் நிகழ்வுகள் நடக்கும். அதற்கான முன்னேற்ப்பாடுகள் பல நாட்களுக்கு முன்னரே முடிக்கப்பட்டிருக்கும்.

வெள்ள நிவாரணத்தில் இவ்வளவு செலவிட்டோம், அவ்வளவு செலவிட்டோம் என்று அப்பட்டமாக பொய் சொல்லி கொண்டிருக்கும் அதிமுக விற்கு, திமுக விடம் எந்த கேள்விகளும் இல்லை. ஆட்சியமைப்போம் என்ற நம்பிக்கை இருந்தால், இது போன்ற ஊழல்களை ஆய்ந்து ஊழலில் ஈடுபட்டவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுப்போம் என்றல்லவா அறிக்கை வந்திருக்க வேண்டும். ஆனால், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்றிருக்கும் திமுக விற்கு, இப்போதிருக்கும் வாய்ப்பெல்லாம் அறிவாலையம் பக்கம் போகும் ஸ்கூல் பசங்களை பிடித்து வைத்துக்கொண்டு அவர்கள் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து திமுக விற்கு வந்து விட்டனர் என்று ஆரஞ்சு மிட்டாய் கொடுத்து கொண்டாடுவதுதான்.

இன்றைய இளைஞர்கள் ஊழலற்ற, மக்கள் நலன் காக்கும் ஆட்சியை தேர்ந்தெடுக்கும் அறிவு பெற்றவர்கள். அதானால் திமுக வைப் பற்றி திமுக காரர்களே கவலைப் பட்டுக்கொள்ளட்டும் என்று விட்டுவிடுவார்கள்.

Sunday, November 29, 2015

இதுவும் ஒரு சாதாரண பதிவுதான்

சம்பவம் 1:  ஒரு வழியாக Thanks Giving Weekendக்கு எண்டு கார்டு போட்டாகிவிட்டது. அங்க இங்க Search பண்ணி ஒரு ஆப்பிள் கணினியை 30% தள்ளுபடியில் வாங்கியாகிவிட்டது. இன்று அந்த கடை, ஒரே நாளில் ஒரு மில்லியன் டாலர் அளவிற்கு விளம்பரம் ஏதுமில்லாமல் விற்பனை செய்து சாதனை படைத்திருப்பதாக அதன் இணைய தளத்தில் விளம்பரம் செய்திருந்தது.

சம்பவம் 2:  நேற்று பொழுது போகவில்லையென்று 'தி கன் மேன்' என்ற ஆங்கிலப் படம் பார்த்தேன். வழக்கமான உயிரை காப்பாற்றிக்கொள்ளும் திரில்லர்தான். கதையின் நாயகன் காங்கோவில் அங்கு தோண்டப்படும் தாதுக்களை கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து வாங்கி விற்றுப் பயன்பெரும் தனியார் நிறுவனங்களின் கைக்கூலியாகச் செயல்பட்டு அந்த நாட்டின் சுரங்கத்துறை மந்திரி சுரங்கங்களை அரசுடமையாக்கும் சட்டத்திருத்ததை கொண்டுவர முயல்வதால் அவரை சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிவிடுவான். பின் அவனைக் கொள்ள அவனது முன்னாள் கேப்டன் முயற்சி செய்வது தெரிய வரும்போது, நமக்கும் ஒரு உண்மை தெரியும். அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சம்பவம் 3:  நாம் பயன்படுத்தும் பெரும்பாலான எலக்ட்ரானிக் பொருட்கள் கோல்டான் என்ற மூலப்பொருளைக் கொண்ட டேண்டலம் கெப்பாசிடரை உள்ளடக்கியது. இந்த கோல்டான் காங்கோவில்தான் அதிகம் வெட்டியெடுக்கப் படுகிறது. இந்த உண்மை இன்று பார்த்த காங்கோவின் Conflict Mineral என்ற ஆவணப் படத்திலிருந்து தெரிந்தது. அந்த ஆவணப் படத்தில், கோல்டான் வெட்டியெடுக்கும் சுரங்கம் உள்ள பகுதி கிளர்ச்சிக்காரர்கள் கைவசம் இருக்கிறது. ஆவணம் தயாரிப்பவர் அரசு கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்து கிளர்ச்சிக்காரர்கள் பகுதிக்குச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் Neutral லைனைக் கடக்க அங்கிருக்கும் ஐநா வின் துருப்புக்களைச் சந்திக்கிறார். அந்த ஐநா துருப்பின் சட்டையில் 'பெலி சிங், இந்திய ராணுவம்' என்று எழுதப்பட்டிருக்கிறது.


மேற்சொன்ன மூன்று சம்பவங்களுக்கும் உள்ள தொடர்பை உங்களால் புரிந்து கொள்ள முடிந்தால், கட்டுரையை மேலும் படிக்க வேண்டியதில்லை.

நாம் எங்கெல்லாம் தள்ளுபடியையும், விலைக்குறைப்பையும் எதிர்பார்க்கிறோமோ பெரும்பாலான சமையங்களில் அங்கெல்லாம் அந்த தள்ளுபடிக்கும், விலைக்குறைப்பிற்கும் உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் ஒரு அப்பாவி அவன் உழைப்பை, வளத்தை இழக்கிறான். காங்கோவில் உள்நாட்டுப் போரைத் தூண்டிவிட்டு, கிளர்ச்சிக்காரர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து அவர்களிடமிருந்து தாதுக்களை குறைந்த விலைக்கு வாங்கி அவற்றை பெரு நிறுவனங்களுக்கு விற்பனை செய்பவர்கள் உங்களுக்கும் எனக்கும் தெரிந்த, தெரியாத வணிக நிறுவனங்கள்தான். காங்கோ ஒரு அற்புதமான இயற்கையின் கொடை கொண்ட தேசம். அங்கு இருக்கும் வளங்கள் உலகில் எங்குமே இல்லை. இருந்தும் காங்கோ குடிமகனுக்கு படிப்போ, உணவோ, உடையோ இல்லை. அவன் போராட்டமெல்லாம் அன்றைய உணவுக்கானதாகவே இருக்கிறது.

ஐநா அங்கு அமைதியை நிலை நாட்ட குடிகொண்டிருப்பது போல் நமக்குத் தெரியும். ஆனால் அங்கு நடக்கும் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வராமலும், தனியார் முதலாளிகளின் லாபங்கள் குறையாமல் பார்த்துக் கொள்வதும் தான் முக்கிய நோக்கம். அங்கிருக்கும் பெலி சிங்கிற்கு இதெல்லாம் தெரியுமா என்பது எனக்கு தெரியாது. ஆனால் இங்கிருக்கும் சில முதலாளிகளுக்கு நன்று தெரியும்.

சரி.. புரட்சி பேசியது போதும்.. ஐபோன் 6 ப்ளஸ் 20% தள்ளுபடியில் எங்கு கிடைக்கும் என்று பார்க்க வேண்டிய வேலையிருக்கிறது. வரட்டுமா...

பிறகு சந்திப்போம்...


Saturday, November 21, 2015

ஒரு லைக் ஒரு லைப் - இறுதிப் பாகம்

பக்கம் 1 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

பக்கம் 2 ஐ படிக்க இங்கே சொடுக்கவும்

"இல்லை. எனக்கு முக்கியமான பிராஜக்ட் ரிலீஸ் இருக்கிறது. ஏன்?" என்று கேட்டான். நாளை குழுவின் உறுப்பினர்கள் ஒன்று கூடி இது பற்றி விவாதிக்க இருப்பதாகச் சொன்னார்.

தன்னால் வர இயலாத நிலையையும், குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தான் உதவுவதாகவும் வாக்குறுதியளித்தான். அடுத்த இரண்டு நாட்கள் புராஜக்ட் ரிலீஸ் சம்பந்தமான வேலைகள் இறுக்கவே, அவனால் முகநூல் பக்கம் போக முடியவில்லை.

உலகம் எப்போதும் போல் இயங்கிக் கொண்டிருந்தது. யாரும் விலை வாசியைப் பற்றி கவலைப் படவில்லை. அறை நண்பனுக்கு, கவலையெல்லாம் தளபதி படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என்று. மேனெஜருக்கோ டிக்கெட் எஸ் எல் ஏ வைக் கடக்கக் கூடதென்று. டிராபிக் சிக்னலில் ஹெல்மெட் போடதவருக்கு தூரத்தில் நிற்கும் காக்கிச்சட்டைக் காரரின் கண்ணில் படக்கூடதென்ற கவலை.

வழக்கமான அலுவல்கள் முடித்த பின், பேஸ்புக்கை திறந்தான். அவனது மெஸெஞ்சரில் அவரது நண்பரிடம் இருந்து பல செய்திகள் காத்திருந்தது. ஒன்றன் பின் ஒன்றாக படிக்க ஆரம்பித்தான்.

"ஹாய்"..

"நேற்று குழுவின் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு விவதம் நடந்தது"

"உங்களை நண்பர் ராஜேஸ் எதிர்பார்த்திருந்தார். நான் தான் அவருக்கு உங்கள் நிலையைச் சொன்னேன்"

"ஜனநாயகத்திற்கெதிரான இந்த நகர்வை நாம் தடுப்பதென உறுதி மொழி எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக இதில் சட்ட ஆலோசனை செய்ய திட்ட மிடப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நகர்வாக ஒத்த கருத்துள்ள அரசியல் கட்சிகளை சந்தித்து ஆதரவு கேட்டு ஒரு போராட்டத்தை ஒருங்கினைக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டம் வரும் 14ம் தேதி, வெள்ளிக் கிழமை காலை காந்தி மண்டம் அருகே நடைபெற உள்ளது". என்று முடிந்திருந்தது.

அவனக்கு அந்த குழுவின் நடவடிக்கைகள் நியாயமாகப் பட்டது. 

"நன்றி. நிச்சையம் பங்கேற்கிறேன்" என்று பதிலளித்திருந்தான்.

அவனுக்கு ஜனநாயகத்தின் முறைகளின் மேல் நம்பிக்கை வந்திருந்தது. அநீதியை எதிர்க்க ஜனநாயகத்தில் வழிகளும் இருக்கிறது என்று நம்பினான்.

சிறிது நேரத்தில் அவனுக்கு செய்தி வந்தது.

"நன்றி.. போராட்ட ஏற்ப்பாடுகள் குறித்து மாலை தெரிவிக்கிறேன். போராட்டத்திற்கும், சட்ட முன்னெடுப்பிற்கும் பொருட் செலவு ஆகும். உங்களால் முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றாலும் பராவியில்லை" என்று பதில் வந்திருந்தது.

அவனுக்கு அந்தச் செய்தி ஒரு வித கூச்சத்தை ஏற்படுத்தியது. "இல்லையென்றாலும் பராவியில்லை" - எப்படி நம்மைப் பற்றி அவர் இந்த மாதிரி ஒரு மதிப்பீடு செய்திருந்தார். "எனக்கும் இந்த நாட்டின் மீது அக்கறையிருக்கிறது" என்று அவனுக்கு ஒரு குரல் பேசியது.

"நிச்சயம் உதவி செய்கிறேன். வங்கிக் கணக்கு எண்ணை அனுப்புங்கள்" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு நண்பர் பதிலளித்திருந்தார்.

"நன்றி. வங்கிக் கணக்கு, XXXXXXXXXXX".

அதற்கு முகிலன், "அனுப்புகிறேன். நமது முயற்சி வெற்றி பெற என்னாலான உதவிகளைச் செய்கிறேன்" என்று பதிலளித்தான்.

"நன்றி. நிச்சயம் போராட்ட நிகழ்வில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்" என்று நண்பர் கோரிக்கை வைத்தார்.

"நிச்சயமாக" என்று பதிலளித்தான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு தனது வங்கிக் கணக்கிலிருந்து நண்பர் குறிப்பிட்ட வங்கிக் கணக்கிற்கு ஐந்தாயிரம் ரூபாய்களை அனுப்பி வைத்தான்.

இப்போது ஒரு நிறைவான அனுபவத்தை உணர்ந்தான். தான், நாட்டின் மீது அக்கறை கொண்டுள்ளவனாகவும், அநீதிக்கெதிராகக் குரல் கொடுப்பதையும் நினைத்து பெருமிதமாகவும் உணர்ந்தான்.

அரசியல் போரட்டங்கள் மூலம் ஜனநாயக வழியில் போராடி தனியார் நிறுவனங்கள், பொதுமக்களின் சொத்தை கொள்ளையடிக்கும் போக்கிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று உறுதியாய் நம்பினான். போராட்டத்தில் பங்கேற்க புறப்பட்டான். அவனது இணைய நண்பனிடம் காந்தி மண்டபம் அருகே எங்கு சந்திப்பது என்ற தகவலைப் பெற்றுக்கொண்டான்.

வெள்ளி.......சனி...... ஞாயிறு.......... எப்போதும் போல் கடந்து சென்றது.

இன்று திங்கட் கிழமை மதியம்.....அவனது அலுவலகத்தில் அவனது இருக்கை காலியாகவே இருந்தது. தலைக்குமேல் இருந்த வேலைகளைச் செய்ய மேனஜர் முகிலனைத் தேடிக்கொண்டிருந்தார். அவனது செல்போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது.

அன்றைய மாலை மலரில் செய்தி இப்படியாக இருந்தது....

'சென்னையில் நக்சலைட் கைது'......

தமிழக காவல்துறையின் புலனாய்வுத்துறை மற்றும் சைபர் கிரைம் இணைந்து நடத்திய ஆப்பரேசனில், முகிலன் என்ற நக்சலைட்டை, சென்னையில் மடக்கி கைது செய்தனர். அவர் நாட்டின் பொருளாதாரத்தைச் சீர் குழைக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டியபோது போலிசாரால் வலைவிரித்து பிடிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர் எஞ்சினியரான முகிலன் கடந்த சில நாட்களாக நக்சலைட்களுடன் தொடர்பு கொண்டு இயங்குவதை மோப்பம் பிடித்த காவல்துறை, அவரை லாவகமாக ஒரு இடத்திற்கு வரவைத்து பிடித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்திவரும் காவல் துறை, பல முக்கிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இரண்டு நாட்கள் கழித்து இன்னொரு செய்தி..

'நாட்டு மக்களனைவருக்கும் தட்டுப்பாடில்லாத, சுகாதாரமான குடிநீரை கொண்டு சேர்க்கும் 'அனைவருக்கும் தண்ணீர்' சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேரியது. இந்த சட்டத்தின் மூலம், சுகாதாரமான குடி நீர் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைய, அரசு வழி வகுத்துள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்த அரசு இரண்டு தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யவுள்ளது. குடிநீரை சுத்தீகரித்து மக்களிடம் வினியோக்கும் செலவுளுக்கு அரசு  இந்த நிறுவனங்களுக்கு ஆண்டொன்றுக்கு, இருபத்தி நாலாயரம் கோடி ஒதுக்கியிள்ளது.

................

முற்றும்.

Sunday, November 15, 2015

ஒரு லைக்... ஒரு லைப் - ரியல் லைப் சிறு கதை - 2

பகுதி 1 படிக்கே இங்கே

முகிலனுக்கு இது மிகப்பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. தான் இதுவரை செலவிட்ட நேரம் வீண்போகவில்லை என்பதை அறிந்தும், கண்டுணர்ந்த உண்மைகள் ஆனித்தரமானவை என்பதையும் நினைத்துப் புத்துணர்ச்சி அடைந்தான். தன் ஏனைய நண்பர்கள், பேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருந்தாலும், அவனுக்கு முகமறியாமல் இயங்கும் இந்த சமூக இணைப்பை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல்தான் இருந்தது. ஆனால் இன்று அந்த எண்ணங்களெல்லாம் பொய்யாகும் நேரம் வந்து விட்டதாக உணர்ந்தான்.

இதுபோன்ற மனிதரிடம் நட்பாகவும், தொடர்ந்து அவரது சிந்தனைகளை படிக்கவும், அவரது பேஸ்புக் பக்கத்திற்கு ஒரு லைக் போட்டு வைத்தான். அவ்வப்போது அந்த பக்கத்தில் கருத்துக்களையும் பதிவு செய்துவந்தான். அதிலிருந்து திடீரென அவனக்கு நட்புக் கோரிக்கைகள் குவிந்தது.

நாட்டின் விலைவாசி உயர்வு, ஒவ்வொரு மனிதனையும் பாதித்தது. அந்த பாதிப்பு சாப்ட்வேர் முகிலனையும் பாதித்தது. திடீரென உயரும் பெட்ரோல் விலை, பயணச்செலவை மட்டும் அதிகம் செய்யவில்லை. ஹோட்டல் சாப்பாட்டிலிருந்து, டூத் பேஸ்டு, காபி வரை கொண்டு வந்து நிறுத்தியது. ஒரு புறம் ஏழைகள் ஏழைகளாகவும், பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக மாறும் இந்த பொருளாதாரச் சூழல் ஒரு சட்டப்படி நடக்கும் கொள்ளை என்பதாக உணர்ந்தான். 

அந்த நேரத்தில் அவனது பேஸ்புக் மெஸ்ஸஞ்சரில் "ஹை" என்று ஒரு செய்தி வந்தது. அது அவனைப் போலவே பேஸ்புக்கில் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகளையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளும் குழுவில் இருக்கும் முகம் தெரியாத நண்பர். "இந்தியாவின் பெரும் முதலாளிகள் இணைந்து ஒரு சட்ட முன் வரைவை நமது நிதி அமைச்சரின் மூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி குடி நீர் அடிப்படை உரிமைகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். மக்களுக்கு தண்ணீரை வினியோகிக்கும் கடமையை அரசின் கையிலிருந்து தனியாருக்கு மாற்றி விடும். இனி பெட்ரோல் போல் தண்ணீரும் காசிருப்பவருக்கே" என்ற தகவலைப் பகிர்ந்தார்.

அவனுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது. "இது எப்படி உண்மையாக இருக்க முடியும்? அப்படியெல்லாம் ஒரு சட்டத்தை கொண்டு வந்து விட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினான். "அந்த மசோதாவின் மீது ஓட்டுப் போட தேவையான எம்பிக் களின் ஆதரவை விலைக்கு வாங்கி விட்டனர்" என்று பதில் வந்தது.

முகிலனால் அந்த நிதர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லை. தண்ணீர் - ஜீவ ராசிகளுக்கு பொதுவானதல்லவா?. அதை மனிதனிடமும், உயிர்களிடமிருந்தும் விலக்கினால் உயிர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்காதா? காசுள்ளவன் தான் தண்ணீரை வாங்க முடியுமென்றால், ஒரு வேளை உணவுண்டு உயிர்வாழும் எண்ணற்ற மனிதர்கள் என்ன ஆவார்கள்?  விவசாயம் என்ன ஆகும்? பொதுக் குழாய்களிலிலும், ஏரிகளிலிலும், குளங்களிலும் உள்ள நீரை நம்பி வாழ்பவர் என்ன செய்வார். எண்ணற்ற பறவைகளும் விலங்குகளும் என்ன செய்யும்? பேராசை கொண்ட மனிதன் தண்ணீரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து உயிர்களையெல்லாம் அழிக்க நினைக்கிறானே. இது நடக்கக் கூடாது என்று மனதிற்க்குள் நினைத்துக் கொண்டு, "இதை எப்படி தடுப்பது?" என்று கேள்வி கேட்டான்.

"உங்களைப் போலவே நமது குழுவில் உள்ள பலரும் கொந்தளித்து போயுள்ளனர். இந்த செய்தி பல பத்திரிக்கைக்கும், தொலைக்காட்சிகளுக்கும் தெரியும். ஆனால் அவர்கள் கைகள், அரசின் அதிகாரத்தினால் கட்டப்பட்டுவிட்டது. மக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படாமல் இருக்க அரசு பல்வேறு சென்சிடிவான விசயங்களை தனது அஜெண்டாவில் வைத்துள்ளது. மக்களின் கவனம் எப்போதும் இதன் பக்கம் திரும்பாமலிருக்க, அவை ஒன்றன் பின் ஒன்றாக செயல்படுத்தப்படும், ஏதாவது ஒரு அரசியல் வாதி தாக்கப்படுவார், ஏதாவது ஒரு வழக்கு விசாரணைக்கு வரும், ஏதாவது ஒரு குற்றவாளி என்கவுண்டர் செய்யப்படுவார். புதிய சர்ச்சைக்குறிய அறிவிப்பு, சலுகைகள், ஆணைகள் வெளியிடப்பட்டு அதன் மீது கடுமையான விவாதங்கள் நடக்கும். ஏதாவதோரு சாதிப்பிரச்சினை ஊதிப் பெருக்கப்படும்." என்றார் நண்பர்.

"சரி இதற்கு என்னதான் தீர்வு?" என்றான் முகில்.

"நாளை மாலை நீங்கள் ப்ரீயா?" என்று கேட்டார் நண்பர்.

 - தொடரும் -

Friday, November 13, 2015

மழைக்கால பாதுகாப்பு

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிக அளவு மழை பெய்துகொண்டிருக்கிறது. மழையைக் கொண்டாடியும், கோபித்தும் பல பதிவுகளை எழுதியாகிவிட்டது. மின்சாரமில்லை, மீட்பு நடவடிக்கைகள் இல்லை என்ற குரல்கள் ஒரு புறமும், அரசின் போர்க்கால நடவடிக்கைகள் ஒருபுறமும் நடந்து கொண்டிருக்க, நம்மாலான சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது நம்மை பெரும் சிக்கல்களில் இருந்து காக்கும்.


1. மழை தொடரும் என்று வானிலை அறிக்கை தெரிவிப்பதால், தொடர்ந்து விழிப்புடன் இருங்கள். தாழ்வான பகுதியில் இருப்பதை முடிந்த அளவு தவிர்த்துக் கொள்ளுங்கள்.

2. இது போன்ற அவசர காலங்களில் தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், எரிபொருட்களை ஒன்றிரண்டு வாரத்திற்கு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

3. சாலைகளில் தண்ணீர் தேங்கி, சாலை தெரியாத அளவிற்கு தண்ணீர் இருந்தால், அந்த சாலையை தவிர்திடுங்கள். மழையின் நீரோட்டத்தால் பாலங்கள், சாலைகள் உடைந்து பெரும் குழிகள் இருப்பது மேலிருந்து பார்த்தால் தெரியாது. அது போன்ற இடங்களில் பயனிக்கும் போது வாகனத்துடன் நீரீல் மூழ்கும் அபாயம் உண்டு. அவ்வாறான சூழல்களில் வாகனத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடத்திற்கு சென்று விடவேண்டும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முடிந்த அளவு பயணங்களைத் தள்ளிப் போடுவது பாதுகாப்பானது.

4. மரங்கள், மின் கம்பங்கள், கட்டிட வேலை நடக்கும் இடங்களில் வசிப்பவர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மழையினால் இவை பாதிப்படைத்து விழுவது மட்டுமல்லாமல் பெரும் சேதாரங்களை ஏற்படுத்தி விடும்.

5. மின் கம்பிகள் அறுந்து விழுந்திருந்தாலோ அல்லது தாழ்வாக தொங்கிக் கொண்டிருந்தாலோ, அருகில் நெருங்க வேண்டாம். உடனடியாக மின் வாரியத்திற்கும், உங்கள் பகுதி உள்ளூர் நிர்வாகத்திற்கும் தகவல் கொடுக்கவும். வேறு யாரும் நெருங்காமல் இருக்க, சிவப்பு துணிகொண்டும்/ தடுப்புகள் அமைத்தும் எச்சரிக்கை செய்யுங்கள்.

6. மழை காலங்களில் தண்ணீர் நிலத்தில் தேங்கும் போது, நிலத்தில் வாழும் பாம்பு, எலி போன்ற உயிரினங்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள வெளியே வரும். கவனமுடன் இருப்பது நல்லது.

7. மழைக் காலங்களில் நிலவும் ஈரப்பதம் மற்றும் தண்ணீரில் பரவும் கிருமிகள் காரணமாக நோய்த்தொற்று ஏற்ப்பட வாய்ப்புள்ளது. இவற்றுள் காலரா, டெங்கு போன்ற நோய்களும் அடங்கும்.

8. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கைகளை சுத்தமாக சோப்பு கொண்டு கழுவிக் கொள்ளுங்கள்.

9. உணவுப் பண்டங்கள் எளிதில் கெட்டுப் போகும். பாதுகாக்கப்படாத உணவுப்பண்டங்களை தவிர்த்திடுங்கள்.

10. கொதிக்க வைத்து வடிகட்டிய தண்ணீரையே பருகுங்கள்.வெளியிடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

11. கொசுக்கள் வளராமல் சுற்றுப் புறத்தை வைத்துக் கொள்ளுங்கள்.