Monday, May 11, 2009

கல்கியின் பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவலை மின் நகலில் பெற

http://ponniyinselvan.in/pages/downloads.html

Thursday, May 7, 2009

யார் பெரியாரின் பேரன்?









"பெரியாரின் உண்மையான பேரன் நான் தான் என்று சீமான் சொல்கிறாறே?" என்று ஈ வெ கி ச இளங்கோவனிடம் நிறுபர்கள் கேட்ட கேள்விக்கு இறையாண்மை மிக்க நாட்டின் நாடளுமன்ற உறுப்பினர் அளித்த பதில் என்ன தெரியுமா?

"பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கலாம்" என்று எக்காளமாய் பதில் சொல்கிறார்.

அடிமைத் தனத்தை உடைத்தெரிந்த சுயமரியாதையை சொல்லிக்கொடுத்த பகுத்தறிவு பகலவனின் வாரிசு நிச்சயம் இளங்கோவனாக இருக்க வாய்ப்பில்லை. இளங்கோவன் பெரியாரின் தலைமுறை என்று சொல்வது வேண்டுமானால் பெரியார் இளம் வயதில் செய்த தவறாக இருக்கும்.



இவருக்கு முத்து குமார் யார் என்று தெரியாது. இலங்கை மக்கள் துயருக்கு காங்கிரஸ் கட்சி தான் விடியலை கொடுத்துள்ளது என்று சொல்லும் இந்த மூடரையா நாம் தேர்ந்தெடுத்தோம் என்னும்போது வெட்கம் தலைகுனிய வைக்கிறது.

சோனியாவை அன்னை என்று கூறும் இவர், யார் செய்த இளவயது தவறு என்று சோனியாவிடம் கேட்டுச் சொல்வாரா?

Tuesday, May 5, 2009

உரசல்

நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது அவனுடைய பேச்சில் பிடிப்பில்லாமல் இருப்பதை அறிந்து அவனிடம் என்னவென்று வினவினேன். அவனுடைய மனைவிமேல் அவனுக்கு அளவுகடந்த வெறுப்பு உண்டாகி விட்டதென்றும் அதனால் அவர்களிடையே விரிசல் விழுந்ததாகவும் சொன்னான். எனக்கு இதைக்கேட்டதும் அதிர்ச்சி!. ஏனென்றால் அவனுடைய திருமணம் காதல் திருமணம். அதுவும் நான்கு வருட கல்லூரி காதல். எனக்கு தெரிந்து இருவருக்கும் நல்ல புரிந்துணர்வு இருந்தது. திருமணத்திற்க்கு முன் அவளை பற்றி பேசும்போது சிறிது கூட விட்டுக் கொடுத்ததில்லை. அப்படியிருந்த அவன் எதனால் இப்படி பேசிகிறான் என்று புரியாமலும், இது அவனுடைய இல்வாழ்க்கை தொடர்புடையதும் ஆதலால், சிறிது தயக்கத்துடனேயே வினவினேன். பொதுவாக மனதிலுள்ள பாரம் மற்றவரிடம் பகிர்ந்து கொண்டால் குறைந்துவிடுமென்பார்கள். என்னைப்பொறுத்தவரை அது யாரிடம் சொல்கிறோம் என்பதை பொறுத்து. சிலரிடம் மனதில் உள்ள பாரத்தை சொன்னால் அடுத்த நாள் அது இருமடங்காகி விடும்.

அவன் மனைவி பற்றி அவன் சொல்கையில், "இப்போதெல்லாம் அவள் அவளுடைய வீட்டு உறவுகளைப்பற்றியே அதிகம் கவலை படுகிறாள். சின்ன சின்ன பிணக்கு என்றாலும் விழுந்து விழுந்து உதவி செய்கிறாள் என்றான்".

"சரி அது நல்லதுதானே" என்றேன்.

"மேலோட்டமாய் பார்க்கும்போது அது நல்லதுதான். ஆனால் அதிகமுறை அதுவே எங்களுக்குள் சண்டைக்கு காரணமாகிறது" என்றான்.

"புரியவில்லையே?".. என்றேன்

"அவள் செய்கிற உதவி என்னைப் பாதிக்காத வரையில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனல் சிலநேரங்களில் எனக்குப் பிடிக்காததை அல்லது அந்த உதவியினால் எனக்கு வரும் பாதிப்புகளை அறியாமல் அல்லது அறிந்தோ அவள் செய்யும் போது எனக்கு கோபம் வருகிறது. அதனால் வாய்ச்சண்டையில் தொடங்கி இரண்டு மூன்று நாள் பேசாமல் இருந்திருக்கிறோம்" என்றான்.

"இதுபோலத்தான் சென்ற மாதம் அவளுடையா அம்மாவுக்கு கால் வலி என்று சொல்லி மருத்துவ மனையில் சேர்த்து ஒருவாரம் பார்த்தோம். அதற்க்கு மட்டுமே பதினைந்தாயிரம் செலவு செய்தேன். அதற்க்குப் பிறகு கடைகளுக்கும் மற்றபிற இடங்களுக்கும் எளிதில் செல்ல மார்கெட்டுக்குப் பின் புறம் உள்ள என்னுடைய இன்னொருவீட்டை அவர்களுக்கு தந்துவிடலாம் என்றாள். என்னால் சரி என்று சொல்லவும் முடியவில்லை, முடியாது என்று சொல்லவும் முடியவில்லை. அதில் வரும் நாலாயிரம் வாடகையை தான் என் பெற்றோருக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

சரிடா இதெல்லாம் எல்லோர் வீட்டிலும் இருக்கும் சிக்கல் தான். காலப்போக்கில் சரியாகிவிடும். இந்த சிக்கலில் உனக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி உன் மனைவியிடம் சொன்னாயா? என்று கேட்டேன்.

இல்லைடா.. இதைப்பத்தி எப்படி அவகிட்ட சொல்லறதுன்னு...... என்றான்

இதிலென்ன இருக்கு.. அப்புறம் நீ என்ன நினைக்கிறேன்னு அவங்களுக்கு எப்படி தெரியும்? என்றேன்

எனக்கென்னமோ பிரச்சினைக்கு காரணம் உங்க ரெண்டு பேருகிட்டையும் சரியான புரிதல் இல்லைன்னு தான் நான் நினைக்கிறேன்.

"என் கணவர் என்னை நேசிப்பது போலவே என் பெற்றோரிடமும் அன்பாக இருப்பார் " என்ற எதிர்பார்ப்பு உன் மனைவியிடம் இருந்துச்சுன்னா?

அவனிடம் பதிலில்லை...

"எந்த ஒரு மனிதனையோ அல்லது அவன் செயலையோ எப்போதும் நல்லது அல்லது தீயது என்று அறுதியிட்டு கூற முடியாது. ஏனென்றால் அவை மனிதனுக்கு மனிதன், இடத்துக்கு இடம், சூழ்நிலைக்கு தகுந்தாற்ப்போல் அவற்றின் பொருள் மாறுபடும்" என்பதற்க்கு இவர்கள் சரியான உதாரணம்.

பொதுவாக காதலிக்கும் போது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பெரிதாக எதிர்பார்ப்புகள் இருக்க வாய்ப்பில்லை. மனதுக்கு பிடித்த பிறகுதான் காதல் பிறக்கிறது, அதனால் அங்கு மூளைக்கு வேலையில்லை. கல்யாணத்திற்க்கு பிறகுதான் மூளை வேலை செய்கிறது. ஆனால் மூளையின் அறிவை இதையத்தின் அன்பு வெல்லும் என்பது பொதுவாக அறியப்படாத உண்மையாகவே இருக்கிறது.

காதல் என்பது உடலைதாண்டி வளரும்போதே அதன் உன்னதம் புரியப்படுகிறது.

Tuesday, April 28, 2009

தனி ஈழம் வேண்டி வாக்கெடுப்பு

கடையடைப்பு(டாஸ்மாக் தவிர்த்து), திடீர் உண்ணாவிரதம் என்று எதையாவது செய்து மக்களை திசை திருப்புவதில் கை தேர்ந்தவர் கலைஞர். அவரின் கலைத்திரமையய் பாராட்டித்தான் அவருக்கு கலைஞர் பட்டம் கொடுக்கப்பட்டதாயின், அந்த பட்டத்திற்க்கான உச்சகட்ட நாடகத்திறமையயை கருணாநிதி வெளிப்படுத்திவிட்டார். அதையும் நம்பி ஒரு நிமிடம் நாமும் ஏமாந்து போய்விட்டோம்தான், இலங்கை விமானங்கள் குண்டு வீசும்வரை.

நேற்றுவரை இலங்கையின் இறையாணமைக்குட்பட்டுத்தான் தமிழர்களுக்கு சுயாட்ச்சி வழங்க வேண்டும் என்று கூறிவந்த செயலலிதா இன்று, தனித்தமிழீழம் அமைத்து தருவேன் என்று கூறி மக்களிடம் ஒரு சுனாமியை ஏற்படுத்திவிட்டார். இவரும் ஒரு (திரைக்)கலைஞர்தான் என்பது இவரின் கடந்த காலத்தை புரட்டுபவர்களுக்கு தெரியும்.

தீர்க்கமான சிந்தனையுள்ள தமிழர் நலனில் அக்கரை கொண்ட தலைவரை இன்னும் இந்த தமிழகம் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. அப்படியொரு தலைவன் கிடைக்கும்வரை இன்றைய சமகால அரசியலில் நம்மால் முடிந்த, அல்லது நம்முடைய சிந்தை தெளிவை இந்த தேர்தலில் நாம் தெரிவிக்க வேண்டும்.

செயலலிதாவையம் கருணாநிதியையும் தவிர இன்றைய நிலையில் மத்தியில் ஆட்சி செலுத்துவதற்க்கு வேறு யாரும் இல்லை என்பது நிதர்சனம். அதனால் இவர்களுக்கு ஓட்டுப்போடுவதால் ஏற்ப்படப்போகும் நன்மை தீமைகளை பற்றி ஒரு சிறிய ஆய்வு செய்வோம்.

கருணாநிதி கூட்டணிக்கு ஓட்டுபோடுவதால் காங்கிரஸ் ஆட்சி அமையும் பட்சத்தில்,

1. கடந்த ஐந்துவருடம் கூடி நிறைவேற்றாத சேது சமுத்திரத்திட்டம் நிறைவேறப்போவதில்லை.
2. தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு மந்திரியாகி 75 பைசாவிற்க்கு தொலைதூர அழைப்பு கட்டணம் நிர்ணயிக்கப்பார்.
3. சட்ட சபை கலைக்கப்படாது என்ற உறுதியால், மணற் கொள்ளை, மின்சார நிறுத்தம், விலைவாசி உயர்வு போன்றவற்றிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தவித தீர்வும் ஏற்படப் போவதில்லை.
4. இலங்கையில் உள்ள தமிழர்கள் மேலும் கொல்லப்பட்டு அங்கு தமிழ் இனம் இருந்ததிற்க்கு எந்த அடையாளமும் இல்லாமல் அழிக்கப் படும்.
5. தமிழ், தமிழர் உரிமை, சுயமரியாதை, சோனியா, இறையாண்மை, காவிரி, முல்லைப்பெரியார் போன்ற வார்த்தைகளை யாரவது பயன்படுத்தினால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறையில் இருக்க நேரிடும்.
6. தங்கபாலு தொல்லியல் துறை மந்திரியாகி தமிழரின் வரலாற்றை அழித்துவிட்டு அன்னை சோனியாவின் பெயரை அனைத்து கல்வெட்டிலும் இடம்பெறச்செய்வார்.
7. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கப் போவதில்லை.
8. அழகிரி கலால் மற்றும் சுங்கவரித்துறை மந்திரியாகி அவற்றை முறையாக கையாழ்வார், மேலும் கூடுதலாக உள்துறை மந்திரியாக பொறுப்பேற்று சட்டம் ஒழுங்கை நிலை குலையச் செய்வார்.

செயலலிதா கூட்டணிக்கு வாக்களித்தால்,

1. மத்தியில் காங்கிரசுக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பிருந்தால், காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்து 10 மந்திரிப்பதவிகளை வாங்கிக் கொள்வார்.
2. அடுத்த நிமிடமே தமிழ்நாடு சட்டப் பேரவை கலைக்கப்படும்.
3. முன்னாள் மந்திரிகளின் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்படும்.
4. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்ட போடா சட்டம் கொண்டுவரப்படும். அதில் விடுதலைபுலிகள், தனித் தமிழ் ஈழம் பற்றி பேசுபவர்கள் உள்ளே தள்ளப்படுவார்கள்.
5. சேது சமுத்திரத்திட்டத்திற்க்கு மூடு விழா செய்யப்படும். அந்த இடத்தில் இராமர் கோவில் ஒன்று கட்டப்படும்.

இரண்டு கெட்டதில் எந்த கெட்டதை தேர்ந்தெடுப்பதுதான் இந்த தேர்தல் என்றாலும், தனித் தமிழ் ஈழத்தை தமிழர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதற்க்கான தேர்தலாக நாம் ஏன் இந்த தேர்தலை பார்க்கக் கூடாது. கருணாநிதிக்கு ஓட்டு போடுவதை விட செயலலிதாவுக்கு ஓட்டுப் போடுவதில் இந்த நிலைப்பாட்டையாவது நாம் உலகிற்க்கு சொல்லலாம். ஏனென்றால் அந்த அம்மையார் தான் தனித் தமிழீழம் அமைத்துத் தருவேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார். நாம் ஓட்டுப் போடுவதால் அம்மையார் சொன்னதை செய்யப்போவதில்லை என்றாலும், நம்முடை நிலைப்பட்டை தெரிவிக்க இந்த ஒரு சந்தர்பத்தை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்படியொரு தீர்ப்பை நாம் சொல்லும் போது, தமிழகத் தமிழரின் துயர்கள் களையப்படாவிடிலும் நம்முடைய, ஆறு கோடி தமிழரின் விருப்பை, எண்ணத்தை வெளிப்படுத்திக்கொள்ள இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

Monday, April 27, 2009

தமிழரின் உயிரும் தலைவர்களின் நாடகங்களும்

இன்று தமிழினத்தின் வரலாற்றின் துன்பமேகம் சூழ்ந்த நாள். ஆம், ஆயிரக்கணக்கான தமிழ் உயிர்கள் உலகின் அத்தனை கண்களின் முன் எந்தவித உதவியும் இன்றி மடிந்துகொண்டிருக்கின்ற தமிழினத்தின் குருதிகொண்டு இந்தியப் பெருங்கடல் சிவப்பு நிறமாக மாறிக்கொண்டிருக்கும் நேரம். உயிரிருந்தும் பிணமாய், உணர்ச்சியிருந்தும் மரமாய் கண்ணீருடன் ஒவ்வொரு நொடியயையும் கரைத்துக் கொண்டிருக்கும் புளுவாய் நெளிந்து கொண்டிருக்கின்றோம்.

தமிழனினப் படுகொலையும் அதை தமக்கு சாதகமாக்கும் தலைவர்களின் நாடகங்களும் சார்ந்த இன்றைய நிகழ்வுகள்

நேற்று விடுதலைபுலிகள் விடுத்த போர் நிறுத்தத்தை நிராகரித்துவிட்டு இலங்கை அரசு தமிழரை அழிக்க போர் தொடரும் என்று அறிவித்துள்ளது.

காலை 3.45 : சிங்கள ராணுவம் பாதுகாப்பு வலையத்தின் மீது இறுதிகட்ட தாக்குதலை தொடங்கி விட்டது.

கடல், தரை வழியாக தன்னுடைய முழு பலத்தையும் கொண்டு அகோர எரிகணை தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது.

எண்ணற்ற அப்பாவி மக்கள் மீதே குறிவைத்து நடத்தப்படும் இனப்படுகொலையின் உச்சகட்டம்.

புலிகள் தங்களுடை முழு பலத்தையும் கொண்டு நாற்புறமும் ராணுவத்தின் தாக்குதலுகு பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

நேற்றைய ராணுவத்தின் கடல்வழி முயற்ச்சியை விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் முறியடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 5 மணி: தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி போர் நிறுத்தம் வேண்டி திடீர் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிப்பு. அண்ணா நினைவிடத்தி.

காலை 6 மணி: அனைத்து மாவட்டங்களிலும் திமுக தொண்டர்கள் அமைச்சர்கள் உண்ணாவிரதம் தொடங்கினர். மதுரையில் அழகிரி உண்ணாவிரதம்.

காலை 8 மணி : தமிழக காங்கிரள் தலைவர் தங்கபாலு முதலமைச்சரின் உண்ணாவிரதத்தை கைவிட கோரிக்கை. சோனிய மன்மோகன் சிங் போர்நிருத்த முயற்சி மேற்க் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறினார்.

சோனியா மற்றும் மன்மோகன் சிங்கின் உண்ணாவிரத கோரிக்கையயை கருணாநிதி நிராகரித்தார்.

காலை 9 மணி : சேலத்தில் தங்கபாலுவும் உண்ணாவிரதம். கலைஞருக்கு ஆதரவாக. இலங்கை தமிழர் பற்றி எதுவும் குறிப்பிட வில்லை.

நேற்றய தினம்,சிவ் சங்கர் மேனனும், எம் கே நாரயணனும் இலங்கை அதிபர் ராஜபக்ச, ராணுவ தலைவர் கோத்தபய ஆகியோரச்சந்திது ஆலோசனை நடத்தினர்.

அவர்கள் போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தியதாக திமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு அறிவித்தனர். ஆனால் அவர்கள் போர்நிறுத்தம் பற்றி எதுவும் பேசவில்லை என்று இலங்கை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

அவர்கள் போர் நிறுத்தம் பற்றி ஆலோசனை செய்தார்களா? அல்லது இன்று உச்சகட்ட போர் நடத்த ஆலோசனை நடத்தி அதை கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரிவித்து சென்றார்களா? அதன் பேரில்தான் கருணாநிதி இன்று இந்த நாடகத்தை அரங்கேற்றுகைறாறோ என்று தமிழ் உணர்வாளர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

காலை 10 மணி: ராஜபக்ச முக்கிய மந்திரிகளுடன் அவசர ஆலோசனை கூட்டம்.

காலை 11 மணி: இன்று தொடங்கிய மோதலில் இரண்டாயிரத்திற்க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் திரண்டு அந்தந்த நாடுகளை போர் நிறுத்தத்திற்க்கு இலங்கையய் வற்புறுத்த வீதியில் இறங்கி , என்று மில்லாத அளவுக்கு மிகப்பெரும் தமிழினப்படுகொலை நடக்கும் இந்த நாளில் போராட வேண்டும் என ப. நடேசன் கோரிக்கை.

காலை 11.30: சேலத்தில் புலம்பெயர் தமிழர் உண்ணாவிரதம்.

மதியம் 12.30: இலங்கை அரசு போர் நிறுத்தத்திற்க்கு இணங்கிவிட்டதாக ப. சிதம்பரத்தின் தகவலை அடுத்து கலைஞர் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட்டார்.

இலங்கை அரசு அதன் இணைய தளத்தில், கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல்களை பயன்படுத்துவதில்லை என்று அறிவித்துள்ளது.

மதியம் 12.45: வன்னியின் மீது இரண்டு விமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பழ. நெடுமாறன் விபத்தில் உயிர் தப்பினார். இலங்கையில் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்று கூறினார்.

Tuesday, April 21, 2009

காலம் சொல்லும் கணக்கு

சாவின் எண்ணிக்கையை தங்களின் தேர்தல் வாக்குச்சீட்டுக்களாக மாற்றத்துணிகின்ற மாபெரும் தலைவர்களை தன்னகத்தே கொண்ட இந்த தமிழ் சமுதாயம், விழித்துக்கொண்டு அவர்களை ஒதுக்குமா, அல்லது வழக்கம் போல் ஆயிரத்திற்க்கும் ஐநூறுக்கும் இறையாண்மையையும், போலி சன நாயகத்தையும் வாங்கி அணிந்து கொள்வார்களா என்பது காலம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகள்.

புலிகளை அழித்துவிட்டு தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை கொடுப்போம் என்ற ராசபக்சவிற்க்கும், தேர்தல் முடிந்த பிறகு யுத்த நிறுத்தத்திற்க்கு வழிசெய்வோம் என்று தேர்தல் வாக்குறுதிகள் வழங்கும் கருணாநிதி, சோனியாவிற்கும் வித்தியாசம் ஏதும் இல்லை.

இதில் புலிகளை அழித்து விட்டால், தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்பது புனைக்கதைகள் தான். புலிகள் எங்கோ வானத்திலுருந்து குதித்து வந்து துப்பாக்கியேந்தியவர்கள் போல பரப்புரை செய்யும் அரசியல் தரகர்களின் வஞ்சகம் என்றுமே வெல்லப்போவதில்லை. இருபது வருடங்களுக்கும் முன் இன அழிப்பின் பாதிப்பில் உறுவானவர்களே இன்றைய புலிகள். இன்று நடக்கும் இன அழிப்பில் பாதிக்கப் பட்டிருப்பது என்றுமே இல்லாத எண்ணிக்கையில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். இவர்கள் நளைய புலிகளாகவோ சிறுத்தைகளாகவோ நிச்சயம் பழிதீர்க்க உருவெடுப்பார்கள்.

பிரபாகரன் என்ற தலைவன் இன்று கொல்லப்பட்டால் விடுதலை போராட்டம் முடங்கிவிடும் என்பது அறிவுக் குருடர்களின் கணக்கு. தலைவன் வளர்த்த ஆயிரம் ஆயிரம் வேங்கைகள் அனைவரும் பின்நாளில் பிரபாகரனை படிக்கும் அனைவருமே பிரபாகரன் தான். ஒவ்வொரு தோல்விக்குப் பின்னும் அதன் காரணங்களை ஆராய்ந்து அடுத்த வெற்றிக்கு நாள்குறிப்பது அவர்களின் வாழ்க்கை முறை. வெறும் இலங்கைத்தீவிற்க்குள் நின்றிருந்த போராட்டம் இன்று உலகம் முழுதும் எட்ட தொடங்கி விட்டது. இன துரோகிகள் யார், நண்பர்கள் யார், உண்மையான இன உணர்வாளர்கள் யார் என்பதை இந்த இக்கட்டான தருணத்தில் தமிழன் தெரிந்து கொண்டான். துரோகிகளை புறம்தள்ளி நண்பர்களை கூட்டி விடுதலைப்போராட்டம் வலுப்பெறவேண்டிய காலம் வந்து விட்டது.

எரியும் வீட்டில் எவர் எவர் நெறுப்பு காய்கிறார் என்பதை தொலைவில் இருந்து பார்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் நெறுப்பை வென்றவர்கள். காலம் நிச்சயம் அவர்களின் கணக்கை தீர்த்துக்கொள்ளும். அதுவரை இவர்களின் ஏளனமும் இருமாப்பும் வாழட்டும்.