Thursday, June 21, 2018

மாத்தி யோசி

நிறுவனங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் பற்றிய ஒரு பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அதில் மனிதர்கள் பெரும்பான்மையான நேரங்களில் தங்களுக்கு ஆதாயம் தரும் செயல்களையே செய்கின்றனர். அதிலும் குறிப்பாக மாதச் சம்பளம் வாங்கினாலும் அவர்களுக்கு வேலையில் ஒரு விருப்பமும், உற்சாகமும் கிடைப்பது அவர்களின் உழைப்பிற்கு கிடைக்கும் மரியாதையிலேயே என பல ஆய்வுகள் மூலம் உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.

சேவை அதாவது ஊதியமில்லாமல், பலனை எதிர்பார்க்காமல் செய்பவர்கள் எப்படி அந்த வேலையை முழு மனதுடன், உற்சாகமாகச் செய்கிறார்கள்?

உண்மையில் மனிதனின் இயல்பு, பலனை எதிர்பார்த்தே எதையும் செய்கிறது. ஒரு சிலர் அப்படி எதையுமே எதிர்பார்க்காமல் சேவை செய்யலாம், ஆனாலும் அதில் அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஏதாவது ஒன்று இருந்தால்தான் அவர்களால் தொடர்ந்து அந்த வேலையைச் செய்ய முடியும்.

டிராபிக் ராமசாமி அவர்களை எடுத்துக் கொண்டால், அதிகாரிகளின் மெத்தனத்தை நீதிமன்றங்கள், சட்டங்கள் மூலம் கேள்விக்குள்ளாக்கி பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் செயல்பட வைக்கிறார். அவருக்கு உற்சாகம் சமூகத்தில் நன்மதிப்பு, அதிகாரிகளும் அவருக்கு அஞ்சும் போக்கு என்ற பொருண்மை சாராத பலன்களாக இருக்கலாம்.

ஆனால் அரசியல் வாதிகளுக்கு. அதிகாரம், பதிவி தருகின்ற பலன்கள் அவர்களைத் தொடர்ந்து தேர்தல் அரசியலில் இயங்கச் செய்கிறது. பொருன்மியப் பயன்களை எதிர்பார்க்காமல் ஒருவர் அரசியலில் இயங்க முடியுமா? என்றால் அப்படி இயங்குபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும். இது மனித இயல்பு.

சரி அரசியலில் சாதாரண மக்கள்? அவர்களும் பலனை எதிர் பார்க்கிறார்கள். அந்தப் பலன் நேரடியான பொருண்மியப் பலனோ அல்லது விரைவில் உணரக்கூடிய பலனோ இல்லாத நிலையில் அது மக்களை உற்சாகப் படுத்துவதில்லை. அதனால்தான் அரசியல் பங்கேற்பு, ஓட்டளித்தலில் கவனம் செலுத்துவதில்லை.

அவர்களை உற்சாகப் படுத்தவே தேர்தலில் ஓட்டுக்குக் காசு, கவர்ச்சியான தேர்தல் வாக்குறுதிகள்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் இப்படி இல்லையே?

வளர்ந்த நாடுகளில் தேர்தல் வாக்குறுதிகள் நேரடியான பொருண்மியப் பலன்களைக் கொண்டிருப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கான உற்சாகம், வாழ்கைத் தரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற பயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. தாங்கள் பங்கெடுக்கவில்லையென்றால் சிஸ்டம் சீர்கெட்டுப் போய்விடும் என்று தங்கள் பங்களிப்பைத் தவறாமல் செய்கின்றனர்.

இந்தியாவைப் பொறுத்த அளவில் நாம் உண்மையான மாற்றத்தை எதிர்பார்க்க வேண்டுமானால் இதைச் செய்யலாம், தேர்தலில் ஓட்டுப்போடுவதற்கு அரசே ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து ஓட்டுப் போட்டபின் அதை மக்களின் கணக்கில் வரவு வைத்து விடலாம். ஏற்கனவே மானியங்களை ரத்து செய்தபின் அவர்களுக்கு அரசியல் பங்கெடுப்பில் ஆர்வத்தை உண்டு செய்ய இது எளிதான வழி.

அரசியல் கட்சிகள் மக்களுக்கு நேரடியாகப் பணத்தைத் தருவதை தேச துரோகத்தின் கீழ் கொண்டுவரலாம். இதன் மூலம் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதோடல்லாமல், பணம் கொடுப்பவருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்யலாம்.

தேர்தலில் வெற்றி பெற்று சேவை செய்ய வருபரின் சொத்துக்களை அரசுடைமையாக்கிக்கொண்டு அவரின் குடும்பத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் ஊதியம் தரலாம்.
கடைசியாக சொத்துக்களை வழி வழியாக சென்றடைவதைத் தடுத்து, ஒருவரின் சொத்துக்கள் அவர் இறந்தபின் அரசுடைமையாக்கப் படவேண்டும். (இந்த முறைதான் அமெரிக்காவில் இருக்கிறது)

Wednesday, January 24, 2018

தமிழுக்கு இருக்கை தமிழருக்கு மகுடம்


அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை அமைப்பது தொடர்பாக சமூக ஊடகங்கள், நண்பர்களுக்கிடையில் ஒரு கலவையான விவாதம் நடக்கிறது. அந்த உரையாடல்கள், கேள்விகள், சந்தேகங்களுக்கு என்னளவிலான பதில்களைத்தரும் முயற்சிதான் இந்தப் பதிவு..

எதற்கு ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை?

ஏன் 6 மில்லியன் டாலர் செலவு செய்து இருக்கை அமைக்க வேண்டும்?

இத்தனை செலவு செய்து அமைக்கும் இருக்கையால் தமிழுக்கு என்ன பயன்?

இத்தனை செலவு செய்துதான் தமிழை வளர்க்க வேண்டுமா?

போன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது. குறிப்பாக வளர்ந்த நாடுகளில் பொருளாதரத்தில் நல்ல நிலையில் இருக்கும் தமிழர்களிடம் நிதி திரட்ட ஆர்வலர்கள் முனையும்போது இது போன்ற கேள்விகள் வைக்கப்படுகிறது.

ஏன் தமிழிருக்கை? ஏன் ஹார்வார்டு? ஏன் 6 மில்லியன் டாலர்கள்? என்பதற்கு தமிழ் இருக்கைக்கான தனியான வலைத்தளத்தில் தெளிவான பதில்களைக் கொடுத்துள்ளனர், அதனால் அவற்றை ஒற்றி இங்கே இடுவதில் எனக்கு விருப்பமில்லை. அதனால் இந்தக் கேள்விகளுக்குப் பின்னிருக்கும் நோக்கத்திற்கான பதிலைத் தர முயல்கிறேன்.

முதலில் நிதி திரட்டுவது, யாரிடமும் பிச்சை கேட்பதல்ல.

பொதுவாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவர் பிச்சை கேட்கும் போது, “கையும் காலும் நல்லாத்தானே இருக்கு எதுக்கு இப்படி பிச்சை கேட்டு பிழைக்க வேண்டும்?” என்று கேட்பது வழக்கம்.

தமிழிருக்கைக்கு நிதி கொடுப்பது அந்த வகையில் அல்ல. அப்படி ஒருவர் நினைத்தால் தாராளமாக “இல்லை” என்று சொல்லிவிட்டு விலகிக் கொள்ளலாம்.

மாறாக, வரலாற்றில் தமிழ் வளர்ச்சிக்கு நம் காலத்தில் நம்மாலான பொருளதவியைச் செய்து, வரலாற்றுக் கடமையாற்றுவதில் பங்கெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை (தமிழ் இருக்கை அமைப்பு மூலம் அங்கீகரிக்கப்பட்ட) தன்னார்வலர்கள் நிதிதிரட்டி நமக்களிக்கிறார்கள் என்பதுதான் நியாயமான எண்ணப்பாடாக இருக்கும். அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பெருமித உணர்வே நமக்குத் தேவை.

அதையும் மீறி நமக்குக் கேள்விகள் வரும்.. அதற்கான பதிலை நாம் கீழுள்ள கேள்விகளுக்குப் பதிலளிப்பதன் மூலம் தேடிக்கொள்ளலாம்.

நமக்குத் தமிழகத்தில் வருமானம் ஈட்ட பல வழிகளிருந்தும் ஏன் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வேலைதேடி வந்தோம்?

தமிழகத்தில் வீதிக்கு வீதி கோயில் இருக்கும் போது எதற்கு அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கோவில் கட்டிக் கொண்டிருக்கிறோம்?

வந்தபோது பழைய காரை வாங்கி ஓட்டிய நாம் ஏன் சாதரணக் காரை வாங்காமல் புதிய சொகுசுக் காரை வாங்கி ஓட்டுகிறோம்?

பிள்ளைகளைச் சாதாரணப் பள்ளியில் படிக்க வைக்காமல் மிகச் சிறந்த பள்ளியில் படிக்கவைக்க ஏன் முயல்கிறோம்?

இவை எல்லவற்றுக்குமான பதில்: ஆகச்சிறந்ததை அடைந்து கொள்ள வேண்டுமென்ற மனிதனின் சாதாரண வேட்கைதான். தனக்குக் கிடைக்காத வாய்ப்பை தன் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும் என்ற ஆற்றாமைதான்.

நம் முன்னோர்கள் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தார்கள். அவர்களுக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால்? தமிழ் இலக்கியங்களைத் தேடிப் பிடித்து தன் வாழ் நாள் முழுதும் செலவிட்டு அவை நயம்பட நமக்குக்கிடைக்க உழைத்த சாமிநாதருக்கு நம்மைப் போல் கேள்விகளிருந்திருந்தால்?

தன் வரலாற்றைத் தெரிந்து கொள்ளாதவனால் தன் எதிர்காலத்தை ஒரு போதும் கைக்கொள்ள முடியாது என்பது முதுமொழி.

ஆகச்சிறந்த அறவிலக்கியங்களைக் கொண்ட தமிழில் இருந்து எத்தனை மேற்கோள்களை இன்றைய உலகலவிலான படைப்புகளில் காட்டுகிறார்கள். பிளேட்டோ, அரிஸ்டாட்டில், சாக்ரடீஸ் போன்றோர்களை மேற்காட்டுபவர்களுக்கு அவர்களின் படைப்பிற்கு இணையான இன்னும் சொல்லப்போனால் மேலான படைப்புகள் தமிழில் இருப்பது, அதை அறிந்தவர்கள் சொல்லாமல் எப்படித் தெரியும்?. அதை நீங்களும் நானும் சொல்லுவதை விட சாக்ரடீசையும், அரிஸ்டாட்டிலையும் ஆராய்ந்தவர்கள் சொன்னால் அதன் வீச்சு காத்திரமாக இருக்குமல்லவா?

தமிழர்கள் கடல்கடந்து தங்கள் வணிக, அரசியல் ஆளுமையைச் செய்திருக்கிறார்கள். அதன் சுவடாக உலகமெங்கும் உள்ள மொழிகளில் தமிழ் கலந்திருக்கிறது. ஊர்ப்பெயர்கள் தமிழில் இருக்கிறது. இவற்றை சான்றுகளுடன் கண்டறிந்து, இன்னும் வரலாற்றில் மறைந்து போன பக்கங்களைத் தூசிதட்டி எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது.

இதைச் செய்ய உலகளாவிய, உலகத்தரத்திலான ஆராய்ச்சிகள் தேவை. இந்த ஆராய்ச்சி முடிவுகள் அரசுகளின் கட்டுப்பாடுகள், தடைகளைக் கடந்தவையாக இருக்க வேண்டும்.

கீழடியில் நடந்த ஆய்வின் முடிவை வெளியிடாமலே ஆய்விடத்தை புதைத்ததெல்லாம் தமிழகத்தில்தான் நடந்தது. இன்னும் எண்ணற்றை ஆய்வுகள் நடக்க வேண்டிய தேவையுள்ளது. இதைச் செய்து முடிக்க வேண்டிய கடமை தமிழர்களான நமக்குத்தான் உள்ளது.

அந்தக் கடமையில் ஒரு பங்குதான் ஹார்வார்டு தமிழிருக்கை. இன்னுமுள்ள புகழ்பெற்ற பல்கலைக் கழகங்களின் பண்பாட்டு, மொழியியல் துறைகளில் செம்மொழியாம் தமிழை அதற்குரிய உயரத்தில் தூக்கிவைப்பதிலல்லவோ தமிழ்த்தாயின் பிள்ளைகளின் கடமை. அதைச் செய்வதற்கு நமக்கு யாரும் நினைவூட்டவோ, நிர்பந்திக்கவோ தேவையில்லை. நமது கடமையாக பெருமையுடன் செய்வோம்.

நாளை நமது பிள்ளைகள் தலை நிமிர்ந்து தமிழின் புகழில் உலகெங்கும் ஆளுமை செலுத்துவார்கள். அதைக்காண நாமிருப்போமா என்று தெரியாது. ஆனால் நம் தமிழன்னை நிச்சயமாக இருப்பாள்.

அவள் அரவணைப்பில் நம் சந்ததிகள் புகழ்பெறட்டும். அதற்கு அவளை நாம் கொஞ்சம் கவனித்துக் கொள்ளலாமே..



உலகியலின் அடங்கலுக்கும் துறைதோறும் நூற்கள்

ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும் தமிழில்

சலசலென எவ்விடத்தும் பாய்ச்சிவிட வேண்டும்!

தமிழொளியை மதங்களிலே சாய்க்காமை வேண்டும்.

இலவச நூற் கழகங்கள் எவ்விடத்தும் வேண்டும்.

எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச் சொல்லித்

தலைமுறைகள் பலகழித்தோம்; குறைகளைந் தோமில்லை.

தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்!

-பாவேந்தர்

Monday, December 4, 2017

பட்டான்


பள்ளிப் பாட புத்தகங்களைத் தூக்குப் பையில் போட்டுக்கொண்டு போவது அப்போதெல்லாம் அதியசமில்லை. தூக்குப்பையின் தூக்கு தோழிலிருந்து அவ்வப்போது தலைக்குச் செல்லும். தலைக்குச் செல்லும் தூக்கினால் புத்தப்பை பின்னுக்குச் சென்று புட்டத்தைத் தட்டிக் கொண்டு வரும்.

தூக்குப்பையா... அது என்ன வித்தியாசமான பை என்று கேட்கும் நவீன நாகரீக வாசகர்களுக்கு.... அது ஒன்று வித்தியாசமானதல்ல... சாதரண துணிப்பையுடன் நீண்ட துணிப்பட்டையை பையின் இரு புறமும் வைத்துத் தைத்திருப்பார்கள். இன்னும் எளிதாகச் சொல்ல வேண்டுமானால், பழைய விசு படத்தில் அவர் அணிந்து வரும் பை, பழைய பத்திரைக்கையாளர்கள் தோழில் ஒரு "ஜோல்னா" பையைத் தொங்க விட்டு வருவார்களே, அதுதான்.

அந்தத் தூக்குப்பை அதிகபட்சம் ஒரு நாளில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்குச் சென்று வர அரை மணிநேரம் சுமக்க வேண்டியிருந்தது. அதுவே அன்றைய காலத்தில் ஆகப்பெரிய சுமையாக இருந்தது. அந்தச் சுமையின் வலியைக் கேள்வி கேட்டது, இன்னொருவரின் சுமை.

தெருக்களில் கொட்டப்பட்டிருக்கும் குப்பைகளில் உள்ள காகிதங்களைத் தேடியெடுத்து அவற்றை பத்திரப்படுத்திச் சேர்த்துச் சேர்த்து தன் தலையில் ஒரு காகிதக் குவியலைப் பையில் கட்டிச் சுமந்து கொண்டிருந்தார், பட்டான். ஆம், அவரை அப்படித்தான் அழைத்தனர். காகிதங்களை ஏன் அவர் அப்படிச் சேகரிக்கிறார் என்று அப்போது கேட்கத் தோன்றவில்லை. ஊருக்குள் சுற்றும் மனநிலை சரியில்லாதவர்களில் ஒருவர் என்று நினைத்தே ஒவ்வொருவரும் அவரைக் கடந்து சென்றிருப்பர். ஆனால் அவரின் கதை அவ்வளவு எளிதில் கடந்து விடக்கூடியதில்லை.

ஊராட்சியில் துப்புறவுப் பணியாளராகப் பணியாற்றிய அவருக்குச் சொந்தமாக ஒரு நிலம் இருந்ததாகவும், அந்த நிலத்திற்கு பட்டா அவர் பெயரில் வழங்கப் பட்டிருந்ததாகவும் அவர் கதை தொடங்கியது. அந்தப் பட்டா எப்படியோ அவரை விட்டுத் தொலைந்து போகிறது. அதைத் தொலைத்த அவர் வீட்டில் தொடங்கிய தேடல் ஊரெல்லாம் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. ஒரு வருடமா இரண்டு வருடமா என்ற கணக்கெல்லாம் இல்லை. நான் பார்த்த வரையில், எனது பள்ளிக்காலம் முடிந்து கல்லூரிக்காலம் வரை அவர் தனது பட்டாவைத் தேடிக்கொண்டே இருந்ததாக நினைவு.

அவர் தனக்குள்ளே ஒரு உரையாடலை நிகழ்த்திக்கொண்டே வீதிகளில் பறந்து கிடக்கும் காகிதங்களை தேடியெடுத்துச் சேர்த்து வைத்துக் கொண்டே இருந்தார். வழியில் தான் பேச நினைக்கும் மனிதர்கள் முன் நின்று மெல்லிய குரலில் தொடர்ச்சியாக எதையோ பேசுவார். அவரைப் பற்றித் தெரிந்தவர்கள், வெறும் "சரி சரி" என்று கேட்டு அவரின் சுமையைக் குறைக்க தன்னாலானதைச் செய்தார்கள்.

ஊராட்சியில் இருந்த மனிதநேயம் மிக்க அதிகாரிகள், அவரது வாரிசு ஒருவருக்கு அவரின் வேலையைக் கொடுத்து அவரது குடும்பத்திற்கான உணவை உறுதி செய்திருந்தனர்.

ஒரு சிலர்  அவரைக் கண்டால், "அதோ பட்டா அங்கே கிடக்கிறது, இங்கே கிடக்கிறது" என்று வீதியில் கிடக்கும் காகிதங்களைக் கைகாட்டி வேடிக்கை நிகழ்த்துவர். பட்டானும் அது தன் பட்டாவென நினைத்து ஓடி எடுத்துப் பார்த்து தனது பெட்டகத்தில் சேர்த்துக் கொள்வார். ஆனால் அவர் பட்டா கடைசி வரை அவருக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை...

ஒரு மனிதனை பித்தனாக மாற்றும் அந்தக் காகிதம் வெறும் பட்டாவா? 

ஏன் தொலைந்து போன பட்டாவிற்கு மாற்றாக நகலோ அல்லது வேறொ ஒன்றையோ அவரால் பெற முடியவில்லை? 

அரசு வேலையை விட்டுவிட்டுத் தேடுமளவிற்கு அந்தச் சொத்தின் விலை அவ்வளவு உயர்ந்ததா?

இவை எதற்கும் யாரிடமும் பதிலில்லை.

Sunday, November 5, 2017

பாலாவின் கைதுக்குப் பின் உள்ள அரசியல்

பாலாவின் கைதிற்கு திருநெல்வேலி ஆட்சியர்தான் காரணம், பாலா வரைந்த அந்த அம்மண ஓவியம்தான் காரணம் என்று நீங்கள் நினைத்தால், அது காவி கும்பலின் வெற்றியே..
பாலாவின், எழுத்துக்களையும், ஓவியங்களையும் linesmedia.in இல் போய் பாருங்கள். அவை பெரும்பாலும் காவி கும்பல் மற்றும் அதன் கைப்பாவை எடப்பாடியின் அரசை விமர்சிக்கும் ஓவியங்களும் கட்டுரைகளாகவே இருக்கும்.
பாலாவின் கைதிற்கு ஒரு அம்மண ஓவியத்தைக் காரணமாக்குவதன் மூலம், சப்ஜக்சட் (அ) பேசுபொருள் ஓவியம் மட்டுமே என்றாகிவிடுகிறது.
காவிகளின் அரசியலுக்கு எதிர் அரசியல் செய்யும் குறிப்பிடத்தக்கவர்கள் கூட இந்தக் கைதிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், கைதை வரவேற்பதைப் பார்க்க முடிகிறது. இதைத்தான் காவி கும்பல் எதிர்பார்க்கிறது. அவர்களின் எதிரிகள் எப்படி இயங்குவார்கள் அவர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டார்கள்.
நாளை ஸ்டாலின் சாலையில் அதிவேகமாக காரை ஓட்டினார் என்று கைது செய்யலாம்..
வைகோவை வருமான வரி கட்டவில்லை என்று கைது செய்யலாம்...
இவையெல்லாமே சட்டப்படி சரிதான். ஆனால் அவர்கள் தவறு செய்தார்களா, இல்லையா என்று நீதிமன்றம் தீர்ப்பெழுதும் முன்னறே இங்கு அரசியல் குழப்பங்களை தொடர்ந்து நிறைவேற்றலாம். அதன் பலனை குறிப்பிட்டவர்கள் அனுபவிக்கலாம்.
ஆட்சியையும், ஆட்சியாளர்களையும் விமர்சனம் செய்வது தண்டனைக்குறிய குற்றமாகும்போது, நீங்கள் சர்வாதிகாரத்தின் பிடியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
இதே போலத்தான் ஒரு முறை சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். என்ன காரணம் சொல்லித் தெரியுமா? வழியில் சென்ற ஒருவரைத் தாக்க முயற்சித்ததாக.
உண்மையான காரணம் அவர் அன்றைய ஆட்சியாளர்களின் அதிகார அத்துமீரல்களை வெளியிட்டார் என்ற கோபத்தில்தான்.
உங்கள் தர்க நியாயங்கள் வெறும் அரசு சொல்லும் காரணங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்குமானால், உங்கள் அரசியல் அறியாமையை நீங்கள் வெளிப்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.
கெளரி லங்கேசைக் கொன்றவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருந்தது. அதைப்போலவே இலங்கையில் லசந்த் விக்ரமசிங்கவைக் கொன்றவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருந்தது. அதைப்போலவே இப்போது பாலாவை கைது செய்தவர்களுக்கும், அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒரு "அரசியல் சரி" இருக்கிறது.
ஆனால் அந்த "அரசியல் சரி" களுக்கு எதிராக உலகமே கண்டனக்குரல் கொடுத்தது.
எது சரி எது தவறு என்பது வெறும் ஒற்றை நிகழ்வில் தீர்மானிக்கப்படுவதில்லை.
பாலா வெளியே வந்தவுடன் இந்தக் கைதிற்குப் பின் உள்ள உண்மைகள் வெளியே வரும். அப்போது பாலா கார்ட்டூனிஸ்டாக இருக்கமாட்டார். ஒரு அரசியல் காற்றாறாகவே இருப்பார்..

Tuesday, June 27, 2017

கைக்கெட்டும் தூரத்தில் வாய்ப்புகள்

கடந்த இருபதாண்டுகளில் பொருளாதார தாரளமயமாக்கல் மூலம் நமது மனிதவளத்தை கணினித்துறையில் பயன்படுத்தி வெற்றிகண்டது நமது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பெரும் சாதனை எனலாம். ஆனால் அந்த வெற்றியொன்றே நமது வருங்கால சந்ததியினருக்கும் பயணளிக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. வற்றாத மனிதவளத்தை வைத்து நம் நாடு தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பேற்படுத்தும் புதிய துறைகளைக் கண்டெடுத்து அதில் முதலீடு செய்யவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பைப் பற்றியே இங்கு பார்க்கப்போகிறோம்.

இலன் மஸ்க், அறிவியலின் மூலம் மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பெரும் கனவுகள் கொண்ட மனிதர். SpaceX என்ற வின்கலன் செலுத்தும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம், Tesla என்ற மின்னாற்றலில் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம், SolarCity என்ற சூரிய ஒளியில் மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றை உருவாக்கி நடத்தி வருபவர். பேரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழலுக்கு கேடு விளைவிக்காத ஆற்றல் சக்திகளைப் பற்றி பெரும் விவாதங்களை உருவாக்கியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த மஸ்க், டிரம்பின் பேரிஸ் ஒப்பந்தத்தைக் கைவிடும் முடிவிற்குப் பின்னர் அதை எதிர்த்து ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேரினார்.

நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன் எரிகாற்று போன்ற பூமியிலிருந்து கிடைக்கும் அத்தனை சக்தி மூலங்களும் அளவில் மட்டுப்பட்டவை. அவை எப்போதுமே கிடைப்பவையல்ல. எடுக்க எடுக்க குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் காலியாகிவிடக்கூடியவை. அவற்றை எடுப்பதால் பூமி எவ்வாறு பிற்காலத்தில் பாதிக்கப்படும் என்ற தொலை நோக்கு ஆராய்ச்சியெல்லாம் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. சூழலைப் பாதிக்கும் இது போன்ற ஆற்றல் மூலங்களை விட்டு விட்டு, எளிய மட்டற்ற ஆற்றல் மூலங்களான சூரிய ஒளி, வெப்பம், காற்று , கடலலைகள் போன்ற சக்திகளில் முற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் நாட்டம் செழுத்த ஆரம்பித்து விட்டது. சுவீடன் தனது ஆற்றல் தேவை முழுமையையும், சூரிய ஒளி மற்றும் காற்றாலையின் மூலம் உருவாக்கிக் கொள்கிறது.

பெரும்பாலான நமது எண்ணைப் பயன்பாடு வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலாகவும், பெட்ரோலாகவும இருக்கிறது. உலகின் சில நாடுகளே இந்த எண்ணை வளங்களைப் பெற்றிருக்கிறது. அந்த நாடுகள் அல்லது அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளே உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன. வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல் மூலங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியுமானானல் உலக அரசியல் இன்று போலவா இருக்கும்

இலன் மஸ்க்த், மின்னாற்றல் மூலம் இயங்கும் கார்களை(Tesla) உருவாக்கும் ஆலையை நடத்துகிறார். ஒரு முறை இவரிடம் காரை வாங்கிவிட்டால் அதன் ஆயுளுக்கும் கார் உரிமையாளர் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. நாடெங்கும் பரவியுள்ள இந்த நிறுவனத்தின் மின்னூட்டி நிலையங்கள் மூலம் இந்தக் கார்களின் சக்தியை புதுப்புத்துக்கொள்ளலாம். சரி இந்த மின்னூட்டி நிலையங்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது? அதை சூரிய ஒளியிலிருந்து தனது மற்றொரு நிறுவனமனான சோலார் சிட்டி மூலம் உருவாக்கிக் கொள்கிறார். எளிமையான திட்டம் என்றாலும் இது எதிர்காலத்தில்  வாகனப்போக்குவரத்து, சந்தைப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

அதுபோலவே தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டுவரும் தானியங்கி வாகனப்பயன்பாடு. சாலையின் சூழலுக்கேற்ப வாகனங்கள் தம்மைத் தாமே இயக்கிக்கொள்ளும் நுட்பம், போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. ஒரு புறம் இது ஓட்டுனர் போன்ற வேலை வாய்ப்புகளை இல்லாமல் செய்தாலும், இந்த வாகனங்களை உற்பத்தி செய்தல், பழுதுபார்த்தல், மேலாண்மை செய்தல் என்று புதிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.

ஊருக்கு ஊர் பொறியியல் கல்லூரிகளைத் திறந்து கணினி வல்லுனர்களை உருவாக்கிக் கணினித் துறையை இந்தியாவில் அதிகம் பயன்படுத்திக் கொண்ட தமிழகத்திற்கு, வருங்கால வாகனத் தொழில் நுட்பத்தில் மிகப் பெரும் வாய்ப்பிருக்கிறது. இயந்திரவியல் மற்றும் வாகனத் தொழில் நுட்பத்தில் கோவையை மையமாகக்கொண்ட புகழ் பெற்ற கல்வி நிலையங்களும், ஜிடி நாயுடு போன்ற அறிவியல் ஆர்வலர்களும் பல சாதனைகளைச் செய்திருப்பது இயந்திரவியலில் நமக்குள்ள அறிவுத் திறனைச் சொல்லும்.

திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலத்தில, அதாவது 1984ல் IRTT என்ற சாலை மற்றும் போக்குவரத்து தொழில் நுட்பக்கல்லூரி ஈரோ துவங்கப்பட்டது. இந்த கல்லூரியின் நோக்கம் வாகனப் போக்குவரத்துறையில் வல்லுனர்களை உருவாக்குவது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பங்களிப்பினாலும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பாகத் தொடங்கி, இன்று காலத்தின் தேவைக் கேற்ப கணினி, மின்னணுவியல் போன்ற துறைகளில் வல்லுனர்களை உருவாக்குகிறது.

தமிழக அரசு தனது கல்விக் கொள்கையில் தொழில் நுட்பக் கல்வியில் மரபுசாரா எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்பம், தானியங்கி வாகனத் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இந்த இரு பெரும் துறைகள் வருங்காலத்தில் பெரும் சந்தையை உருவாக்கப் போகிறது. அதற்கான அறிவுத்தேவையை தமிழகம் கைக்கொள்ள வேண்டும்.

அதற்கென கல்வி மையங்களை உருவாக்கி அதில் இந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்கவும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள வாகனத்தயாரிப்பு நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த முன்னெடுப்பைச் செய்யும்போது கூடுதல் பயன் கிடைக்கும்.

இதன் மூலம் புதிய தொழில்நுட்பச் சந்தையில் முதலிடத்தையும், புதிய வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்