Tuesday, June 27, 2017

கைக்கெட்டும் தூரத்தில் வாய்ப்புகள்

கடந்த இருபதாண்டுகளில் பொருளாதார தாரளமயமாக்கல் மூலம் நமது மனிதவளத்தை கணினித்துறையில் பயன்படுத்தி வெற்றிகண்டது நமது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆட்சியாளர்களின் பெரும் சாதனை எனலாம். ஆனால் அந்த வெற்றியொன்றே நமது வருங்கால சந்ததியினருக்கும் பயணளிக்குமா? என்றால் நிச்சயம் இல்லை. வற்றாத மனிதவளத்தை வைத்து நம் நாடு தொடர்ந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பேற்படுத்தும் புதிய துறைகளைக் கண்டெடுத்து அதில் முதலீடு செய்யவேண்டும். அப்படி ஒரு வாய்ப்பைப் பற்றியே இங்கு பார்க்கப்போகிறோம்.

இலன் மஸ்க், அறிவியலின் மூலம் மனித சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்லும் பெரும் கனவுகள் கொண்ட மனிதர். SpaceX என்ற வின்கலன் செலுத்தும் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம், Tesla என்ற மின்னாற்றலில் இயங்கும் கார்களைத் தயாரிக்கும் நிறுவனம், SolarCity என்ற சூரிய ஒளியில் மின்சாரம் உருவாக்கும் தொழில்நுட்ப நிறுவனம் போன்றவற்றை உருவாக்கி நடத்தி வருபவர். பேரிஸ் சுற்றுச் சூழல் ஒப்பந்தம் பற்றிய செய்திகள் உலக வெப்பமயமாதல் மற்றும் சூழலுக்கு கேடு விளைவிக்காத ஆற்றல் சக்திகளைப் பற்றி பெரும் விவாதங்களை உருவாக்கியது. அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்த மஸ்க், டிரம்பின் பேரிஸ் ஒப்பந்தத்தைக் கைவிடும் முடிவிற்குப் பின்னர் அதை எதிர்த்து ஆலோசனைக் குழுவில் இருந்து வெளியேரினார்.

நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன் எரிகாற்று போன்ற பூமியிலிருந்து கிடைக்கும் அத்தனை சக்தி மூலங்களும் அளவில் மட்டுப்பட்டவை. அவை எப்போதுமே கிடைப்பவையல்ல. எடுக்க எடுக்க குறைந்து ஒரு கட்டத்தில் முற்றிலும் காலியாகிவிடக்கூடியவை. அவற்றை எடுப்பதால் பூமி எவ்வாறு பிற்காலத்தில் பாதிக்கப்படும் என்ற தொலை நோக்கு ஆராய்ச்சியெல்லாம் இன்றைய சந்தைப் பொருளாதாரத்தில் கண்டுகொள்ளப்படுவதே இல்லை. சூழலைப் பாதிக்கும் இது போன்ற ஆற்றல் மூலங்களை விட்டு விட்டு, எளிய மட்டற்ற ஆற்றல் மூலங்களான சூரிய ஒளி, வெப்பம், காற்று , கடலலைகள் போன்ற சக்திகளில் முற்போக்கு சிந்தனை கொண்ட நாடுகள் நாட்டம் செழுத்த ஆரம்பித்து விட்டது. சுவீடன் தனது ஆற்றல் தேவை முழுமையையும், சூரிய ஒளி மற்றும் காற்றாலையின் மூலம் உருவாக்கிக் கொள்கிறது.

பெரும்பாலான நமது எண்ணைப் பயன்பாடு வாகனங்களில் பயன்படுத்தப்படும் டீசலாகவும், பெட்ரோலாகவும இருக்கிறது. உலகின் சில நாடுகளே இந்த எண்ணை வளங்களைப் பெற்றிருக்கிறது. அந்த நாடுகள் அல்லது அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் நாடுகளே உலக அரசியலையும் பொருளாதாரத்தையும் நிர்ணயிக்கின்றன. வளரும் நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகள் தங்கள் உற்பத்திக்குத் தேவையான ஆற்றல் மூலங்களை தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியுமானானல் உலக அரசியல் இன்று போலவா இருக்கும்

இலன் மஸ்க்த், மின்னாற்றல் மூலம் இயங்கும் கார்களை(Tesla) உருவாக்கும் ஆலையை நடத்துகிறார். ஒரு முறை இவரிடம் காரை வாங்கிவிட்டால் அதன் ஆயுளுக்கும் கார் உரிமையாளர் எரிபொருளுக்கு செலவு செய்ய வேண்டியதில்லை. நாடெங்கும் பரவியுள்ள இந்த நிறுவனத்தின் மின்னூட்டி நிலையங்கள் மூலம் இந்தக் கார்களின் சக்தியை புதுப்புத்துக்கொள்ளலாம். சரி இந்த மின்னூட்டி நிலையங்களுக்கு எப்படி மின்சாரம் கிடைக்கிறது? அதை சூரிய ஒளியிலிருந்து தனது மற்றொரு நிறுவனமனான சோலார் சிட்டி மூலம் உருவாக்கிக் கொள்கிறார். எளிமையான திட்டம் என்றாலும் இது எதிர்காலத்தில்  வாகனப்போக்குவரத்து, சந்தைப் பொருளாதாரம் மற்றும் உலக அரசியலை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும்.

அதுபோலவே தற்போது ஆராய்ச்சி செய்யப்பட்டுவரும் தானியங்கி வாகனப்பயன்பாடு. சாலையின் சூழலுக்கேற்ப வாகனங்கள் தம்மைத் தாமே இயக்கிக்கொள்ளும் நுட்பம், போக்குவரத்துத் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தப் போகிறது. ஒரு புறம் இது ஓட்டுனர் போன்ற வேலை வாய்ப்புகளை இல்லாமல் செய்தாலும், இந்த வாகனங்களை உற்பத்தி செய்தல், பழுதுபார்த்தல், மேலாண்மை செய்தல் என்று புதிய வேலை வாய்ப்புகள் காத்திருக்கிறது.

ஊருக்கு ஊர் பொறியியல் கல்லூரிகளைத் திறந்து கணினி வல்லுனர்களை உருவாக்கிக் கணினித் துறையை இந்தியாவில் அதிகம் பயன்படுத்திக் கொண்ட தமிழகத்திற்கு, வருங்கால வாகனத் தொழில் நுட்பத்தில் மிகப் பெரும் வாய்ப்பிருக்கிறது. இயந்திரவியல் மற்றும் வாகனத் தொழில் நுட்பத்தில் கோவையை மையமாகக்கொண்ட புகழ் பெற்ற கல்வி நிலையங்களும், ஜிடி நாயுடு போன்ற அறிவியல் ஆர்வலர்களும் பல சாதனைகளைச் செய்திருப்பது இயந்திரவியலில் நமக்குள்ள அறிவுத் திறனைச் சொல்லும்.

திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களின் ஆட்சிக்காலத்தில, அதாவது 1984ல் IRTT என்ற சாலை மற்றும் போக்குவரத்து தொழில் நுட்பக்கல்லூரி ஈரோ துவங்கப்பட்டது. இந்த கல்லூரியின் நோக்கம் வாகனப் போக்குவரத்துறையில் வல்லுனர்களை உருவாக்குவது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்களின் பங்களிப்பினாலும் அவர்கள் பிள்ளைகளுக்கு ஒரு வாய்ப்பாகத் தொடங்கி, இன்று காலத்தின் தேவைக் கேற்ப கணினி, மின்னணுவியல் போன்ற துறைகளில் வல்லுனர்களை உருவாக்குகிறது.

தமிழக அரசு தனது கல்விக் கொள்கையில் தொழில் நுட்பக் கல்வியில் மரபுசாரா எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில் நுட்பம், தானியங்கி வாகனத் தொழில் நுட்பம் போன்றவற்றிற்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும். இந்த இரு பெரும் துறைகள் வருங்காலத்தில் பெரும் சந்தையை உருவாக்கப் போகிறது. அதற்கான அறிவுத்தேவையை தமிழகம் கைக்கொள்ள வேண்டும்.

அதற்கென கல்வி மையங்களை உருவாக்கி அதில் இந்த தொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்கவும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளவும் முன்னெடுப்புகள் செய்ய வேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் உற்பத்தித் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள வாகனத்தயாரிப்பு நிறுவனங்களுடன் கை கோர்த்து இந்த முன்னெடுப்பைச் செய்யும்போது கூடுதல் பயன் கிடைக்கும்.

இதன் மூலம் புதிய தொழில்நுட்பச் சந்தையில் முதலிடத்தையும், புதிய வாய்ப்புகளை தமிழக இளைஞர்களுக்கு ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும்

Friday, May 26, 2017

ராஜீவும் கருணாவும்

ராஜீவ் கொலையை சரி/ தவறு என்று ஒற்றைச் சொல்லில் கடந்துவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவர் இந்தியாவிற்கு நல்ல தலைவராக இருந்திருக்கலாம், இன்றைய இந்திய அரசியலின் நிலையை மாற்றியிருக்கலாம். தனிப்பட்ட முறையில் சக மனிதனாக அவரை நினைவு கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

சரி... இப்போது காங்கிரசுக்காரர்கள் மற்றும் அவர்கள் கூட்டணிக்காரர்கள் சொல்வது போல், ராஜீவ் கொலைக்காக பிரபாகரனை சோனியாவின் வழிகாட்டலில் முடித்துக் கட்டினார்கள், அதனால் பிரபாகரனின் தவறான முடிவுகளே காரணம் என்பதை ஏற்றுக்கொள்வோமானால்,

அமைதி காக்கச் சென்ற இந்தியப் படை தமிழ் மக்களின் மீதான அடக்குமுறையையும், வன்முறையையும் ஏவிவிட்டது யார்? ராஜீவின் ஆணையால் இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் குடும்பங்களில் சோனியாவைப் போல கணவன்மார்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களுக்கு இருந்த பழிதீர்க்கும் ராஜீவின் முடிவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதில்லையா?

அமைதிப் பேச்சு வார்த்தைகாலத்தில் இந்தியாவின் அரசியல் தந்திரங்களை, பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஆண்டன் பால சிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்ற புத்தகம் விரிவாக விவரிக்கிறது. ராஜீவிற்கும், பிரபாகரனுக்குமான மோதலில் தனி மனிதர்களின் ஈகோவே முன் நிற்கிறது. ராஜீவ் இலங்கையும் இந்தியாவின் ஒரு மாநிலமாக நினைத்து பிரபாகரனை தன் அதிகாரத்தில் கட்டுப்படுத்த முயற்சித்தார். போராளிகளின் தலைவரை இந்தியாவில் வைத்து இரண்டு மூன்று நாட்கள் உணவில்லாமல் அடைத்து வைத்து, அவமானப்படுத்தப்பட்டு, மிரட்டல்கள் மூலம் அடிபணிய வைக்க முயற்சி செய்யப்பட்டது. ஒரு புறம் பிரபாகரனை அடைத்து வைத்துவிட்டு இன்னோரு புறம் எதிர் குழுக்களை வளர்த்துவிடவும், இன்னோரு இந்திய அடிமையை வட மாகாணத்தின் முதல்வராக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வந்தது. அதாவது இனச்சிக்கலை தனது அதிகாரத்தின் மூலம் உதாசினப்படுத்தி தமிழ் மக்களின் விருப்பத்திற்கு எதிராக நடந்து கொண்டது. 

இந்த நிலையில்தான் தமிழீழத் தாயக லட்சியத்திற்கு எதிராக இந்தியாவுடன் கைகோர்த்து போராளிகளுக்கும் மக்களுக்கும் எதிராக செயல்பட்ட ஆயுதக் குழுக்கள் குழுக்கள் புலிகளால் கொன்றொழிக்கப்பட்டனர். இதன் நியாய தர்மங்கள் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் இல்லை, தமிழீழ போராட்டக் களத்தில் இருந்தது.

இந்திய ராணுவத்திற்கு எதிரான போரில் புலிகளுக்கு ஆயுதம் வழங்கியது சிங்கள அரசு. இந்தியாவின் பழிவாங்களில் ஒரு நியாயம் இருக்குமானால், ஆயுதம் வழங்கிய இலங்கை அரசிற்கு என்ன செய்தது?.. ஐநாவில் ஆதரவு, பல்லாயிரங்கோடி உதவி. இன்றுவரை எந்தச் சிங்களனாவது இந்தியாவையும், கலைஞரையும் நன்றிமறவாமல் நினைத்திருகிறானானா?

அந்தகாலகட்டத்தில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டதாலோ என்னொவோ எம் ஜி ஆருக்கு புலிகளின் மீதான அனுதாபம் பெரும் ஆதரவாக இருந்தது. அவரின் புலிச் சார்பு தமிழக அரசியலைத் தாண்டியது.

அதே நேரத்தில் கலைஞரின் போராளிகளுக்கான ஆதரவு அரசியல் நெடுநோக்கு எதுவுமில்லாமல், பேட்டை ரவுடிபோல் எதிரிக்கு எதிரி தமக்கும் எதிரி என்பது போல் குழப்பமான சூழ்ச்சியான முடிவுகளையே எடுத்து வந்தார். குறிப்பாக எம் ஜி ஆருக்கு எதிரான அரசியல் நகர்வுகளையே செய்து வந்தார். அதனை மீறியும் அவ்வப்போது நடந்த ஆதரவு நடவடிக்கைகள் கலைஞரைச் சுற்றியிருந்த தலைவர்களின் அழுத்தங்களாக இருந்திருக்காலாம் என்பது பின்னாளில் நடந்த நிகழ்வுகளைப் பார்த்து உணர்ந்து கொள்ளலாம்.

போர்களத்தின் நியாய தர்மங்கள் அரசியல் களத்தின் நியாங்களிலிருந்து வேறுபட்டது. அரசியலில் தோல்வியும் வெற்றியும் இடமாறிக்கொண்டே இருப்பவை. ஆனால் போரில் ஒரு தொல்வி அடுத்த வெற்றியை இல்லாமல் செய்துவிடும். இங்கு தோட்டாவிற்கு தோட்டா, எரிகுண்டுக்கு எரிகுண்டே பதில். ஆயுதத்தை வைத்துக்கொண்டு அதிகாரத்தை நிறுவ இன்னொரு ஆயுதம் தரித்த போராளிகளுடனான மொதலில், இழப்புகள் இருபுறமும் இருக்கும் என்பது எதார்த்தம். அவரவர்க்கான நியாயங்கள் அவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் களத்தில் இல்லாமல் போராட்டக்காரர்களின் கால்களை வாரிவிட்ட துரோகிகள் எதிரிகளைவிடவும் ஆபத்தானவர்கள். எதிரிகளைக் கூட யுத்த தர்மத்தின்படி அவனின் நியாயங்களுடன் ஏற்றுக்கொண்டு மதிக்கலாம். ஆனால் துரோகிகளை ஒருபோதும் மறக்கவும் மன்னித்தலும் ஆகாது.

Thursday, April 27, 2017

கல்வியும் பாடமும்

அக்கவுண்ட்ஸ்- பெயரைக்கேட்டாலே தெரிக்க வைத்த பாடம். வேறு வழியில்லாமல் இளநிலை, முது நிலை பாடங்களில் படித்து தேர்ச்சி பெறவேண்டிய சூழலில் வேறு வழியில்லாமல் படித்தது. C, C++, Java என்று மோட்டு வளையைப் பார்த்து கனவு கண்டுகொண்டிருந்த போது, விதி Tallyஐ- வேண்டா வெறுப்பாக படித்து புலமை பெற்று பிழைப்பு நடத்த வேண்டிய சூழலை உருவாக்கியது. இப்போது வேறு ஒரு முயற்சிக்காக மீண்டும் பொருளாதாரக் கணக்கியலைப் படிக்க வேண்டிய சூழல். ஒன்றிரண்டு பாடங்கள் முடித்த பின் நிகழ்காலத்தைக் கடந்த காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நானறிந்த சில B.Com படித்த நண்பர்கள் தனியாக தொழில் தொடங்கி நடத்துகிறார்கள். ஆனால் அவர்கள் தொழிலைவிட்டு வெளியேற எண்ணிக்கொண்டு சில காரணங்களைச் சொன்னார்கள். அந்தக்காரங்களுக்கான விடை அவர்கள் கற்ற கல்வியிலேயே இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அவற்றை உணர்ந்து படித்திருப்பார்களா என்று கேள்வி எழுகிறது.


ஒருவர் தன் துறையின் எதிர்காலத்தைக் கணித்து முடிவுகளெடுக்க தவறியவர். இன்னொருவர் அடிப்படைக் கணக்குகளைக்கூடச் சரிவர செய்யாதவர்.


தொழில் செய்பவர்களுக்கு முக்கியமான தேவை, Market Sense. அதாவது சந்தை அறிவு, கூடவே தனது தொழிலை சந்தைக்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்வது. இதைச் சுட்டிக்காட்ட பயன்படுவதே கணக்குகளின் மூலம் கிடைக்கும் நிலைகாட்டிகள்(Indicators). அதாவது லாபம், நட்டம், இயங்கு செலவுகள், சந்தை செல்லும் போக்கு போன்றவை. மோசமான சூழலில் இவை ஒன்றைச் சொல்லும், அதாவது தொழிலை விட்டு வெளியேறும் தருணம். இதைக் கணிக்க முடியாமல்தான் இவர்கள் சுழலுக்குள் மாட்டிக்கொண்டு அல்லல் படுகிறார்கள்.


ஆக கல்வியில் குறையில்லை, பாடங்களைக் கற்றுக்கொள்ளாதவர்களின் குறையே தோல்விக்குக் காரணம் என்று சொல்லலாம்.

Monday, April 24, 2017

மொழிப்போராட்டமும் புளியம்பட்டியும்

இன்று மத்திய நடுவன் அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்காக பல்வேறு இயக்கங்கள் மூலம் எதிர்ப்பைத் தெரிவித்தும், தொடர்ந்து தமிழில் பேசவும், எழுதவும் முயற்சியெடுக்கும் காலத்தில், நமக்கு முந்தைய தலைமுறை, அதாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1965களின் தலைமுறையின் அனுபவத்தை, குறிப்பாக புன்செய்ப் புளியம்பட்டியில் மொழிப்போராட்டத்தின் வீச்சு, போராட்ட வடிவங்களைத் தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். சென்ற ஆண்டு(2016) இறுதியில் ஊருக்குச் சென்றிருந்தபோது சில முக்கியமான மொழி ஆர்வலர்கள் என்று அறியப்படுகிற மதிப்பிற்குரியவர்களிடம் உரையாட வாய்ப்புக் கிடைத்தது. ஒருவர் பள்ளித் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.

அந்தக் காலத்திலேயே "மறைமலை அடிகள் மன்றம்" என்ற இயக்கத்தை ஆரம்பித்து தமிழ் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதில் எனது தந்தையும் இடம்பெற்றிருந்ததால் மறைமலையடிகள் மன்றம் தொடர்பான ஏடுகள் சிலவற்றை சிறுவயதில் பார்த்திருந்தேன்.  பெரும்பான்மையான மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறையில் பணியாற்றியவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்த காலத்தில் புளியம்பட்டியிலும் எதிர்ப்பைத் தெரிவித்து போராட எண்ணம் எழுந்திருக்கிறது. அதே கால கட்டத்தில் காவல் துறை அடக்குமுறையும் பலமாக இருந்திருக்கிறது. போராட்டக்காரர்கள் என்று அறியப்படுபவர்களை உளவுத் தகவல்கள் மூலம் கைது செய்து சிறையில் அடைக்கும் நிகழ்வுகள் வெகுவாக நடந்துவந்திருக்கிறது. அன்றைய ராஜாஜியின் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது.

கைது நடவடிக்கைகள் பற்றிய செய்தி புளியம்பட்டியில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. அரசுப்பணியில் இருந்தததால் தமிழார்வலர்கள் பணிப்பாதுகாப்பைக் கருதி போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டு சிறை சென்று பணியை இழந்து குடும்பங்களை தவிக்கவிட்டுவிடுவோம் என்று சிறிது தயக்கம் காட்டியுள்ளனர். சில கருத்து வேறுபாடுகள் தமிழார்வலர்களுக்குள் எழுந்திருக்கிறது. ஒரு சிலர் போரட்டம் மூலம் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்திக் கொள்ளவும் விரும்பியிருக்கின்றனர்.

அந்த சமையத்தில், காவல் துறை மறைமலை அடிகள் மன்றத்தைப் பற்றி தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கத் தொடங்கியிருப்பதாக உறுப்பினர்களுக்கு செய்தி வருகிறது. மன்ற உறுப்பினர்கள் சிலர் தலை மறைவாகின்றனர். காவல் துறையின் நடவடிக்கைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள மறைமலை அடிகள் மன்றம் தொடர்பான ஆவணங்கள் மறைக்கப்படுகிறது. இருந்தும் காவல் துறையிலிருந்து மன்ற உறுப்பினர்கள் சிலருக்கு நேரில் விசாரணைக்கு வருமாறு அழக்கப்பட்டிருன்கின்றனர். விசாரணைக்குச் சென்றவர்களிடம் அரசுப்பணி இழப்பு, கைது நடவடிக்கைகள் என்று அச்சுறுத்தப்பட்டு போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று கடிதம் எழுதி வாங்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். மன்றத்தின் நடவடிக்கைகள் அதன்பிறகு வெகுவாக குறைந்திருக்கிறது.

அதே சமையத்தில் திராவிட முன்னேற்றகழகத்தினர் தமிழ்நாடெங்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். புளியம்பட்டியைப் பொறுத்த அளவில் பெரியவர் திரு பு.ஆ. சாமிநாதன், திரு பு.கா. ஆறுமுகம் போன்றவர்கள் போராட்ட முனைப்பில் ஈடுபட்டிருந்தனர். அந்தசமயத்தில் நடந்த போராட்டமொன்றில் கலந்து கொண்டு சிறை சென்றவர் நகர்மன்ற முன்னாள் தலைவர் திரு அக்பர் அவர்கள். போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றதால் மொழிப்போராட்ட தியாகியாக அறியப்பட்ட அவருக்கு கழகத்தில் முக்கியப்பொறுப்புகள் வழங்கப்பட்டது.

தமிழகமெங்கும் மாணவர் போராட்டம் இந்தித் திணிப்பிற்கு எதிராக வலுவடைந்து  பொள்ளாச்சியில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூடு, பலர் கொத்தாக கைது செய்ப்பட்டு தாக்கப்பட்ட சம்பவங்களின் பின்னும், சத்தியமங்கலத்தில் நடந்த போராட்டத்தில் திரு முத்து உயிர்த்தியாகம் செய்தார். பெரும் எழுச்சியடைந்த போராட்டம் மத்திய அரசை கலக்கியது. தலைவணங்காத தமிழகத்தின் தன்மானம் கண்டு மத்திய அரசு தன் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைத்தது. அதன் பின் நடந்த தேர்தலில் முதன் முதலாக திமுக பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது வரலாறு.

Tuesday, February 28, 2017

புத்தகப் பரிசு

கடந்தவாரம் என்னைப் பின் தொடருபவர்களுள் சிலருக்கு இரா. முருகவேள் அவர்களின் முகிலினி புதினம் அன்பளிபப்பாக தருவதாகச் சொல்லியிருந்தேன். என்னுடன் நட்பில் இருந்தமைக்கும், உரையாடல் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து அவர்கள் நேரத்தை செலவிட்டமைக்கும் நன்றியாக இந்தப் புத்தகங்களைப் பரிசளிக்க எண்ணினேன். மற்றவர்க்கு அளிக்கும்போது இருமடங்காகப் பெருகும் மகிழ்ச்சியைத் தரவல்லது புத்தகமும், அறிவும். அந்த வகையில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்.

சிறு ஆலோசனை. ஏன் இதை முடிந்த அனைவரும் செய்யக்கூடாது? ஒரு புத்தகத்தை உங்கள் நண்பருக்கு பரிசளிக்கக் கூடாது. புத்தகம் பெற்ற நண்பரும் தன் நண்பர் ஒருவருக்கு ஒரு புத்தகத்தை பரிசளிக்கலாம்.

அதேபோல் புத்தக விற்பனை நிலையங்கள், பதிப்பகங்கள் புத்தகங்களைப் பரிசளிக்க தங்கள் இணையப்பக்கங்களில் சில மாற்றங்களைச் செய்யலாம்,

உதாரணமாக

1. புத்தகத்தைத் தேர்வு செய்து, பரிசளி என்ற தேர்வை வழங்கலாம்.
2. பிறகு புத்தகத்தை பெறும் நபரின் முகவரியை உள்ளீடு பெற்றுக்கொள்ளலாம்.
3. பரிசளிப்பவர் விரும்பும் வாசகத்தை புத்தகத்தில் இடம்பெறச்செய்யலாம், உதாரமாக வாழ்த்துகள்
4. பெறுபவர் பரிசாக விரும்பும் புத்தகம் பெற்றுகொள்ள பரிசுக்கூப்பன்கள் இணையத்தில் அனுப்ப வசதி

கவனத்திற்கு:

Vediyappan M Munusamy
Badri Seshadri
Kannan Sundaram
Panuval BookStore
udumalai.com
பூவுலகு
Abdul Hameed Sheik Mohamed
யாவரும்.காம்

#giftabook

Monday, February 27, 2017

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

இன்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பின் சார்பில் மாதாந்திர தமிழ் இலக்கிய தொலையுரையாடலில் திரு Aazhi Senthilnathan சிறப்பு அழைப்பளராகக் கலந்து கொண்டு தமிழ் மொழியுரிமை முக்கியத்துவம் குறித்தும், அயலில் வாழும் தமிழர்கள் இணைந்து எப்படி தமிழகத்தில் தமிழ்க் கல்வி  மற்றும் மத்திய அரசின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் மாநில மொழிகளுக்கு முன்னுரிமை அல்லது சமவுரிமை பெற்றுக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் கருத்துக்களும் விவாதிக்கப்பட்டது. அதில் முக்கியமாக தமிழகத்தில் நாம் பயன்படுத்தும் சேவைகளை (அரசு மற்றும் தனியார்) சேவைகளைத் தமிழில் தரக்கோரி அழுத்தம் கொடுப்பது.

ஏற்கனவே PLE மற்றும் CLEARல் இணைந்து இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தாலும், சில நாட்களுக்கு முன் இந்தியப்பயணம் மேற்கொண்டிருந்த போது ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட அனுபவத்தை நினைவுகூறுவது பொருத்தமாக இருக்கும்.

சென்னையிலிருந்து கோவை சென்ற விமானத்தில் அறிவிப்புகள் மற்றும் சேவைகள் போஜ்புரி, இந்தி,மராத்தி மற்றும் உருதுவில் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். அருகில் ஒரு தமிழ்க் குடும்பம், சிறு குழந்தையுடன் பயணித்தைக் கவனித்தேன். பெரும்பாலான பணிகள் தமிழர்கள்தான். ஆனால் விமான நிறுவனத்தின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லையென்றாலும் 1 மணி நேரத்தில் என்னவாகிவிடும் என்று அமைதியாக இருந்தேன். ஆனால் கூடவே பயணம் செய்த தமிழ்க் குடும்பத்தினரின் குழந்தைக்கு பசியேற்பட்டிருக்கும் போல், அழுது கொண்டே இருந்தது. பெற்றோர்களுக்கும் தமிழைத் தவிர வேறு மொழியில் உரையாட பழக்கமில்லை போலும். பிறகு ஒரு வழியாக ஒரு பழச்சாற்றை வாங்கிக் கொடுத்து அமைதிப்படுத்தினார்கள். தமிழில் சேவை வழங்கியிருந்தால் இன்னும் கூட தேவையான உணவை வாங்கியிருக்கக் கூடும். 

அதைவிட முக்கியம் அவசர கால பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில். எத்தனைபேர் அவசர காலத்தில் இந்த அறிவுப்புகளைப் புரிந்து நடந்திருப்பார்கள்?

இதை நாம் கேட்காமல் எளிதாகக் கடந்துவிடலாம் அல்லது ஏன் இந்தி கற்றுக் கொள்ள வேண்டியதுதானே என்று பண்ணையார்த்தனமாக கேட்கலாம். அவர்களுக்கு என் பதில், இந்தியைவிட தமிழ் எங்கு, எதில் குறைந்தது? எனக்கான சேவையைப் பெற ஏன் நான் இன்னொரு மொழியை கட்டாயமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்? 

அப்படி இந்தியை கட்டாயமாக்குவது ஐய்யரின் வாயில் ஆட்டுக்கறியைத் திணிப்பதற்கு ஒப்பானது. 

மேலே குறிப்பிட்ட சம்பவம் குறித்து விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு கடிதமொன்று எழுதியிருந்தேன். அந்த கடிதத்திற்கு பதிலளித்த அவர்கள், தவறுக்கு வருத்தம் தெரிவித்ததுடன் தவறை சரி செய்ய ஆவன செய்வதாகக் கூறியிருந்தனர்.



நீங்கள் வேண்டினால் மட்டுமே உங்கள் உரிமை உங்களுக்கு. அப்படித்தான் இங்கு ஆட்சியாளர்கள் நம்மை வைத்திருக்கிறார்கள்.

Friday, February 24, 2017

அமெரிக்க வாழ் இந்தியர்கள் கவனத்திற்கு...

நேற்று கான்சஸின் ஓலெத் நகரத்தின் பார் ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சிரீனிவாசு மற்றும் அலோக் என்ற இரு இந்தியர் உட்பட மூன்று பேரை ஆடம் என்ற அமெரிக்கர் பார் ஒன்றில் சுட்டுவிட்டு ஓடித் தப்பியுள்ளார். பின் 6 மணி நேரத்திற்குப் பிறகு சம்பவம் நடந்த இடத்திலிருந்து 70 மைல் தொலைவில் வேறொரு பாரில் ஆடம் பிடிபட்டுள்ளார். அவர்மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெறுகிறது. விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பும் களமிறங்கியுள்ளது.

சமீபத்தில் சிரீனிவாசு உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கிறது. அலோக் மற்றும் இன்னொரு அமெரிக்கர் காயங்களுடன் உயிர் தப்பியதாகத் தெரிகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுசுமா சுவராசு தனது இரங்கலைத் தெரிவித்தது தான் சிரீனிவாசுவின் குடும்பத்தினருடன் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளதாக தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியர் இருவரும் கார்மின் என்ற ஜிபிஎஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். சம்பவத்தன்று பாரில் விளையாட்டு போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த போது சலசலப்பேற்பட்டு வாக்குவாதம் நடந்திருக்கிறது. இதில் ஆடம் தம்மைவிட நீங்கள் எந்தவகையில் உயர்ந்தவர் என்று கேட்டும் தமது நாட்டைவிட்டு வெளியேறுமாறு சிரீனிவாசிடம் கத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆடம் மெரைனில் பணியாற்றியவர் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. அதிபர் டிரம்ப் பதவியேற்றபின் வெளிநாட்டவர் மீதான வெறுப்பு அதிகரித்து வருவதுடன் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அமெரிக்க வாழ் இந்தியர்கள் இங்குள்ள அமெரிக்கர்களைவிட உயர்ந்த வாழ்க்கை வாழ்வதாக அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அதற்கு அவர்களின் வேலை வாய்ப்பு, ஊதியம், வெளியே தெரியுமாறு பயன்படுத்தும் வாகனம், வீடு, நகைகள் போன்றவை காரணமாக இருக்கிறது. அலுவலகங்களில் கூட இந்தியர்களின் முன்னேற்றம், பதவி, ஊதியம் குறித்து அமெரிக்கர்களுக்கு பொறாமையுண்டு. பதவி உயர்வு போன்ற தருணங்களில் அமெரிக்கர்களுக்கு இந்தியர் மேல் பொறாமை ஏற்படுவதைப் பார்ப்பது சாதாரணம்.

இந்த இக்கட்டான காலத்தில் இந்தியர்களோ வேறு வெளி நாட்டவரோ தமது உயிரையும் உடமையையும் பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளைத் தெரிந்து கொள்வது அவசியம்.

1. தற்போதைய காலகட்டம், அமெரிக்காவில் வெளிநாட்டவருக்கு சாதகமான சூழ்நிலை இல்லை என்பதை உணர்க. 

2. மக்கள் அதிகம் கூடுமிடங்கள், பார், பப் போன்ற கேளிக்கை விடுதிகளில் மது அருந்திய பின் மனிதர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழப்பது இயல்பு. அந்த இடங்களில் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். முடிந்தால் சிலகாலம் அந்த இடங்களைத் தவிர்க்கவும்.

3. பொது இடங்களில் அரசியல் பேசுவதைத் தவிர்க்கவும்.

4. வம்புச் சண்டைக்கு யாரேனும் வந்தால், சண்டையில் பின்வாங்கிச் செல்லுங்கள். ஒருபோதும் சண்டையில் ஈடுபடாதீர்கள்.

5. பையிலோ சட்டையிலோ நிறைய பணம், கடனட்டைகளை வைத்துக் கொள்ள வேண்டாம். ஒன்றிரண்டு போதுமானது. 

6. சுத்தமாகப் பணமில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம். ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து டாலர்கள் வைத்துக் கொள்ளவும். சில நேரங்களில் துப்பாக்கியைக் காட்டி காசு கேட்பவர்களுக்கு  கையிலிருப்பதைக் கொடுத்துவிட்டு தப்பித்துக் கொள்ள வசதியாக இருக்கும். கையில் காசே இல்லையென்னும் போது உங்களிடம் காசு கேட்டு மிரட்டுபவர் ஏமாற்றத்திற்குள்ளாகி எதுவும் செய்யலாம். இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது.

7. ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்துக்கொள்ளுங்கள். அதிக நகைகளுடன் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.

8. ஆடம்பரக் கார்களை பொருளாதார வித்தியாசம் அதிகம் உள்ள பகுதிகளில் பயன்படுத்துவதைத் தவிற்கவும்.

9. முடிந்த அளவு சமூகத்துடன் இணக்கமான உறவை வளர்த்துக் கொள்ளுங்கள். இந்திய சமூகத்துடன் உறவை வழுப்படுத்துங்கள். மாநில சங்கத்தில் பங்கேற்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ளுங்கள்.

10. குழந்தைகளுக்கும் பள்ளியில் சண்டை சச்சரவுகளைத் தவிர்க்க பழக்குங்கள்.

11. அமெரிக்கர்களிடம் போட்டியோ, சண்டையோ ஏற்படும் சூழலில், குறிப்பாக சூழல் நமக்கு சாதகமில்லாதபோது, தோல்வியை ஏற்றுக் கொண்டு அமைதியாக வெளியேறிவிடுங்கள்.

12. சமூக ஊடகங்கள், பொது வெளிகளில் இனவெறுப்பு தொடர்பான உரையாடல்களத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

13. சேமிப்புகளியும், கைக் காசைப் போட்டுச் செய்யும் பெரும் முதலீடுகளையும் சிலகாலம் தவிர்க்கவும்.

இது நாம் வாழ வந்த நாடு. இங்கு நம்மைவிட இங்கேயே வாழ்பவர்களுக்கு அதிக முன்னுரிமை உண்டு. அவர்களின் வாழ்க்கை நம்மால் பாதிக்கப்படும் என்று அவர்கள் நினைக்கும்போது இயல்பாக வெறுப்பு எழுவது சாதாரணம். மனிதனும் ஒரு சமூக விலங்குதான். தனக்கு பாதுகாப்பில்லாமல் அச்ச உணர்வை அடையும்போது பாதுகாப்பையும், தன்னிருப்பையும் உறுதி செய்துகொள்ள Wildஆக நடந்து கொள்வது எதிர்பார்க்கக் கூடியதுதான்.

இப்போதைய நிலமையில் பாதுகாப்பிற்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து இணக்கமாக வாழ வேண்டிய அவசியம் வெளிநாட்டிலிருந்து வந்து வசிப்பவர்களுக்கு எப்போதையும் விட இப்போது தேவை அதிகமாக உள்ளது.

இனவெறியர்களை எதிர்கொள்ள சிக ஆலோசனைகள்