Monday, August 22, 2016

IT யும் மண்ணாங்கட்டியும்...

இது என்னய்யா புது டிரெண்டா இருக்கு, எல்லாரும் IT துறையை திடீல்னு திட்றாங்கன்னு வெம்மை கொண்டால்... கூல்... எதை எதையோ பார்த்தாச்சு, இதைப் பார்க்கமாட்டமா...
தொடர்வதற்கு முன் இந்த குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள்...
வா மணிகண்டனின் குறிப்பு https://www.facebook.com/vaa.manika...
இளங்கோ கல்லாணையின் குறிப்பு: https://www.facebook.com/elango.kal...
இருவரின் கருத்துக்கள் சரி என்றோ, தவறு என்று ஒற்றை வரியில் எழுதிவிட முடியாது. காரணம், IT என்பது தனித்துறையே கிடையாது, என்னைப் பொறுத்தவரை. காரணம் இந்தத்துறை தனியாக இயங்க முடியாது. ஊரிலுள்ள அனைத்து, தொழில், வணிக, ஆராய்ச்சி, உற்பத்தித் துறைகளை அண்டிப் பிழைக்கும் ஒரு துறை. இதன் அடிப்படை நோக்கமே, எப்படி கோர் பிஸனஸ் எனப்படும் தொழில், வணிக, உற்பத்தி, ஆராய்ச்சி என இன்னும் பலவற்றின் இலாபத்தை அதிகப்படுத்துவதுதான்.
இலாபத்தை எப்படி அதிகப்படுத்தலாம்?.. தொழில் செய்பவரின் கணக்குகள்(இறுப்பு,வரவு, செலவு, லாபம், நட்டம்) முதல், உற்பத்தி அல்லது சேவையை வாடிக்கையாளரடம் கொண்டு சேர்த்து அவரிடம் காசை வசூல் செய்து நிறுவனத்தின் வங்கிக்கணக்கில் கொண்டுவந்து சேர்ப்பது வரை, எங்கெல்லாம் செயல் முறைகளில் அதிக செலவு, நேரம், சக்தி அதிகம் வீணடிக்கப்படுகிறதோ அவற்றைக் குறைத்து லாபத்தை அதிகரிப்பது.
இதை B.E அல்லது MBA படித்தவர்கள் மட்டும் செய்துவிட முடியாது. தொழில் அல்லது வணிகத்தின் இயங்கு முறை அல்லது சூட்சமம் தெரிந்தவர்கள் எளிதில் வரையறுத்து விடுவார்கள். கவனிக்க.. வரையறுத்து விடுவார்கள்.. ஆனால் செயல்படுத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது, பெரும்பாலான நேரங்களில். அதைச் செயல்படுத்த ஒரு கங்கானி(புராஜக்ட் மேனேஜர்), உபையதாரர்(ஸ்பான்ஸர்), சில பல கொத்தடிமைகள்(புரோக்ராமர்கள்), தரக்கட்டுப்பாட்டுக் குழு என்று 5 முதல் 500 பேர் வரை கூட குழுவாக இயங்கி குறிப்பிட்ட வரையறையை செயல்வடிவம் கொடுப்பார்கள். அத்தனை பேர் வேலைசெய்தும், பெரும்பாலான நேரங்களில் சில ஓட்டைகள் இருக்கும். அதற்கு மாற்று வழி, குறுக்கு வழி என வழி கண்டுபிடித்து வண்டிக்கு பஞ்சர் போட்டு ஓட விடுவார்கள்.
சரி.. இதில் திறமை, கல்வி எல்லாம் எங்கு வருகிறது? இந்தியாவைப் பொருத்தவரை B.E or M.C.A என்பது ஐடி துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க அடிப்படைத் தகுதி மட்டுமே. ஏன் பி ஈ? ஆரம்பத்தில், பொறியியல் படிப்பில் கற்றுக்கொள்ளும் கணிதம், அறிவியல் (அதாவது ஒரு இயந்திரம் அல்லது ஒரு கட்டுமாணம் எப்படி செயல்படுகிறது என்ற அடிப்படை ஆர்வம், அறிவு) கணினி மூலம் உருவாக்கப்படும் தொழில் தீர்வுகளுக்கு உதவும் என்ற அடிப்படையில் வைத்திருந்தனர். இன்றைய நிலையில் 12 படிப்பவர் நான்கு வருடம் கழித்து அப்படியே பி ஈ முடித்து வெளியே வருகிறார், வயது மட்டும் கூடியிருக்கும். தவறு அவர்களது அல்ல. நமது கல்வி முறை.
அடுத்து, ஐடி துறையில் செய்யப்படும் பணிகள் பல்வேறு கட்டமாக இருக்கும், உதாரணம் ஒரு தீர்விற்கு அந்த தொழில் சார்ந்த தினமும் அந்த தொழிலில் புழங்கும் நபர்களுடன் கலந்துரையாடி அவர்களின் சிக்கல்களை புரிந்து ஆவணப்படுத்துவது. அடுத்து அந்த சிக்கல்களுக்கு தொழில் நுட்ப ரீதியாக ஒரு தீர்வை வைப்பது. பின் அந்தத் தீர்வை செயல்படுத்த வரைவு திட்டம் உருவாக்கி அதற்கு ஆட்களைக் கண்டெடுத்து செயல்படுத்துவது.
இதில் இந்தியாவிற்கு அனுப்பபடும் (அவுட்சோர்சிங்) வேலைகள் கடை நிலையில் செய்யப்படும் வேலை. அதாவது தீர்வுக்கான வழிமுறை சில நேரங்களில் மிக விரிவாக செயல்படுத்தும் வழிமுறையுடன் கொடுக்கப்பட்டு அதை பின்பற்றி செய்யப்படும் வேலை.இந்த வேலைக்கு பி.ஈ படிப்பு தேவையா என்றால், தேவையாய் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் இல்லை என்பதுதான் நிதர்சனம். பெரும்பாலான சிக்கலான வேலைகள் ஆன்சைட் எனப்படும் தொழில் நடக்கும் இடத்திலேயே முடிந்து விடும். இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருக்கும். இங்கிருப்பவர்களுக்கு பி ஈ தேவையா என்றால், அங்கேயும் இல்லை என்ற பதிலே வரும். காரணம் பெரும்பாலான வெள்ளைக்காரர்கள் பள்ளிப்படிப்பு முடிந்தவுடனோ அல்லது வேதியல், இயற்பியல் என்ற ஏதாவது ஒரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை படித்து கணினியியலில் கலக்கிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கற்றுக்கொண்டது தொழில் இயங்கும் முறை, தேவையை சமாளிக்கும் நுட்பம், ஆமாம் சாமி போட்டு வாழ்கை ஓட்ட வேண்டிய அவசியமின்மை.
கல்லாணை சொல்வது போல் எக்செல்லில் வண்ணம் தீட்டுபவர்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தில் இயங்குபவர்களாக இருக்க மாட்டார்கள். மாறாக பத்தாண்டுகளுக்கு முன் ஐசிஐசி வங்கியோ அல்லது ஏதாவது ஒரு பன்னாட்டுக் கம்பெனியில் சேல்ஸ் அல்லது மேனேஜ்மெண்ட் வேலை செய்து ஐடியில் மேலாண்மை பொன்னுசாமிகளாக பெட்டிதட்டுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஐடி ஜார்கன்களைத் தெரிந்து வைத்துக் கொள்வதிலும் நிறுவனத்தின் தலைமையதிகாரிகளிடம் பூசி மெழுகிப் பேசுவதிலும் வல்லவர்களாக இருப்பர். இவர்கள் வாழ்கை ஓட்டுவதே கீழ்மட்ட புரோக்ராமர்களின் வேலையை வைத்தே. மற்றபடி சேர்கான் பார்ப்பதும், இன்ன பிற இதர வேலைகள் செய்வதும் அவ்வப்போது கிடைக்கும் பணி ஓய்வு அல்லது அதையே பணியாக செய்யக் கிடைக்கும் வாய்ய்புகள் பெற்றவரே. தினமும் 14 மணிநேரத்திற்கும் மேல் உட்கார்ந்த இடத்தை விட்டு நகராமால் பெட்டியைத் தட்டிக்கொண்டிருக்கும் பைத்தியங்களும் உண்டு.
வேலை நுணுக்கம் தெரிந்தவர் உத்தேசிக்கப்பட்ட நேரத்தில் பாதியில் வேலையை முடித்து விடுவர். மனித நுணுக்கத்தைத் தெரிந்தவர், வேலை நுணுக்கம் தெரிந்தவரை பயன்படுத்தி தன் வேலையை செய்து முடித்துக் கொள்வார். இது ஐடி மட்டுமல்ல, எல்லா துறையிலும் நடப்பதுதான். ஆனால் ஐடி துறையில் நடப்பது கண்ணாடிபோல் வெளியில் தெரிந்து விடும், காரணம் இது ஒரு தனித்துறையில்லை.
கல்வித்தகுதி என்பது ஒரு தேர்வு முறையின் அடிப்படையே. அதுவும் பல்லாயிரக்கணக்கான பட்டதாரிகள் வேலை தேடும் நிலையில் தேர்ந்தெடுக்க, வடிகட்ட ஒரு வழி, அவ்வளவே. வேலைத் திறம் என்பது பெரும்பாலான நேரங்களில் கல்வியை அடிப்படையாகக் கொண்டதில்லை, மாறாக பற்றிக்கொள்ளும்(Adoption) திறமையைப் பொறுத்தே அமைகிறது.
சரி.. பிறகு என்னதான் ஐடி துறை.?...சவால்களை விரும்புவருக்கு எப்போதும் தீணியும், சோம்பேரிகளுக்கு வேலை செய்ய வாய்ப்பை நித்தமும் உருவாக்கும் ஒரு காடு. இங்கு இல்லாதது இல்லை, இருப்பதெல்லாம் நிலைத்திருப்பதுமில்லை.

No comments:

Post a Comment