Wednesday, August 3, 2016

ஜக்கியும் ஜாக்கியும்


மீடியா சொல்லுவதையெல்லாம் அப்படியே நம்பவேண்டியதில்லை என்பதற்கு பல உதராணங்கள் இருக்கிறது.
இப்போது ஜக்கி வாசிதேவ் ஈசா மையத்தைப்பற்றி. இப்போது மீடியா ஈசா மையத்தைப் போட்டு குதறிக்கொண்டிருக்கிறது. 1997 வாக்கில் நண்பர் ஒருவரின் அழைப்பின் பேரில் ஈசா யோக மையத்திற்குச் சென்றிருந்தேன். அப்போது தியான மண்டபம் மற்றும் ஓரிரு கட்டிடங்கள் இருந்ததாக நினைவு. வாசுதேவை தூரத்திலிருந்து ஒரு முறை பார்க்க நேர்ந்தது. ஒளிவட்டமேதும் தெரியவில்லை.
நகர வாழ்கையின் சக்கர சுழற்சியிலிருந்து விடுபட வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள தியானத்துடன் கூடிய ரிசார்ட் அது. வசதிக்கேற்ப பேக்கேஜ் உண்டு. ஈசா ஆரம்பித்ததிலிருந்து வன ஆர்வலர்களாலும், உள்ளூர் மக்களாலும் வனப்பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார்கள், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாகும்போது, சூழல் கேடு முதல் வன உயிர்ச்சூழல் கேடு வரை பல கேடுகள் நடக்கிறது என்று எழுப்பப்படும் புலம்பல்களைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. வெள்ளியங்கிரி மலையைச் சுற்றியுள்ள காடுகள் யானைகளின் வாழ்விடம். புலி, சிறுத்தை போன்ற அருகி வரும் மிருகங்களின் உறைவிடம். ஈசா யோகமையம் அங்கு அமைந்ததன் பின் யானைகள் அந்தப்பகுதியைப் பயன்படுத்த முடியாமல் வேறு புதிய பாதை தேடுவதில் ஊருக்குள் வருவதும், ரயிலில் அடிபட்டு இறப்பதும் அன்றாட செய்தி. யானைகள் இல்லையென்றால் அந்தக்காடுகள் அழிந்து விடும் என்பது பல்லுயிர்ச்சூழல் விஞ்ஞானிகளின் கருத்து.
இதைப்பற்றிப் பேசாத ஊடகங்கள் இப்போது மேஜராகிய இரண்டு பெண்கள் ஈசாவில் துறவரம் மேற்கொண்டிருப்பதை அவர்களின் பெற்றோரின் மனுவை வைத்து ஊதிப் பெரிதாக்குகின்றன. இதனால் யாருக்கு லாபம்?
ஊடகங்களுக்கு. எப்படி? ஊடகங்களின் சத்தத்திற்கேற்ப அவர்களின் சேனல்களின் விளம்பரர்தாரர் நிகழ்ச்சியாக காலையில் சத்குரு அருளுரை நிகழ்த்துவார். செய்தியாளர்களுக்கு பெட்டிகள் சேரும். பிறகு அமைதியாகும் ஊடகங்கள் வேறு ஏதாவது பிரச்சினையைத் தேடும்.
சட்டமீறலான வன ஆக்கிரமிப்பையே தடுக்காத அரசமைப்பு, சட்டத்திற்குட்பட்ட வயதுவந்தவர் எடுக்கும் தனிமனித முடிவுகளில் என்ன செய்ய முடியும்? சத்குரு தனிமனிதரா? இல்லை.. அவர் அரசியல் கட்சிகள் முதல் அரசு அதிகாரிகள் வரை அனைவரின் வணிகத்தின் முகம்.
சத்குரு சத்குருவே.. ஊடகங்கள் ஊடகங்களே.. நீங்களும் நானும்தான் இதைப்பற்றிப் பேசி முட்டாள்காளாகிக் கொண்டிருக்கிறோம்..

No comments:

Post a Comment