Sunday, August 28, 2016

விளையாட்டு

வளர்ந்த நாடுகளுக்கும் வளரவே முடியாத அளவிற்கு தற்தடைகளை வைத்துள்ள நாடுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், குழந்தைகள் மீதான திறன் முதலீடு. இதை நீங்கள் பள்ளி/பாட சாலை செலவு என்று புரிந்து கொண்டீர்களானால் நாம் வளரவே முடியாத நாட்டில் வசிக்கப்பழகிவிட்டோம் என்றுணர்ந்து கொள்ளலாம். காரணம், பாட சாலைக் கல்வி என்பது குழந்தைகள் திறன் வளர்ப்பில் பத்து சதவீதம்தான்.
பள்ளிகளைத் தாண்டி, சிந்திக்கும் ஆற்றல், சமூக ஒத்திசைவு மனப்பாண்மையை குழந்தைகளிடம் வளர்க்கும் காரணிகளை கடந்த இருபதாண்டுகளில் அழித்துவிட்டோம், இன்னும் இருபதாண்டுகளுக்கு அதற்கான எந்த தொலை நோக்கும் நம்மிடம் இல்லை. அவை பொது விளையாட்டுத் திடல்கள், நூலங்கள், நீச்சல் குளங்கள்.
வளர்ந்த நாடுகள் ஒவ்வொரு 2000 ஆயிரத்திற்கும் கூடுதலான மக்கள் வாழும் கிராமங்கள்/ஊர்கள்/சிறு நகரங்கள்/ நகரங்களில் ஒரு சிறந்த நூலகம், பொது விளையாட்டுத் திடல், பொது நீச்சல் குளம் போன்றவற்றை உருவாக்கி குழந்தைகள் முதல் பெரியவர் வரை தத்தம் திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது. சில இடங்கள் அரசுப் பள்ளி மைதானங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முன் அனுமதியுடன் வழங்கப்படுகிறது.
சரி, இதற்கும் திறன் மேம்பாட்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? கூட்டு விளையாட்டுகளான கால்பந்து, கைப்பந்து, ஹாக்கி போன்றவை குழுக்களாக இயங்கி நோக்கத்தை அடைவதற்கான பயிற்சி, பொது நோக்கத்கிற்காக தன் நலம் விட்டுக் கொடுத்தல், இன்னும் குறிப்பாக சவால்களை விரைந்து உணர்ந்துகொண்டு அதை எதிர்கொள்ள தன்னைச் சுற்றி இருக்கும் வாய்ப்புகளை உணர்ந்து அதைப் பயன்படுத்திக் கொள்வது என்று பல சமூகத் திறன்களை வளர்க்க உதவுகிறது (பார்க்க இணைப்பை). கிரிக்கெட் மட்டுமே விளையாடுவதால் அது ஒரு அடுக்கு முறை மன இயல்பையும், குழுவில் அனைவருக்கும் ஒரே மாதிரியான வாய்ப்புகளில்லாமல் தலைவரின் கட்டளையால் அவரவருக்கு விதிக்கப்பட்டதை அவரவர் செய்து முடித்தலே அதிகபட்ச திறன் வெளிப்பாடு.
நூலகங்கள், நமது நூலகங்கள் இன்னும் தற்கால கலை, அறிவியல், வரலாற்றை முழுமையாக உள் வாங்கிக் கொள்ளவில்லை. அவை நவீன அறிவு வளர்ச்சிக்கான சாதனங்களைப் பெற்றிருக்கவில்லை. அவற்றிற்கான முதலீடுகளை அரசுகள் தேவையான அளவு செய்யவில்லை. தலை நகரில் ஒரே ஒரு அண்ணா நூலகம்!. அது போல் கடைக்கோடி மக்களுக்கும் கிடைக்கும் வண்ணம் திறன் முதலீடு அமைய வேண்டும்.
இவற்றை ஏற்படுத்த மூலதனம் அரசிற்கு சவாலன விடயம். ஆனால் இதை வளர்ந்த நாடுகளை மாதிரியாகக் கொண்டால், பிரச்சினையை சரி செய்து விடலாம். அங்கெல்லாம் பள்ளி, நூலகம், விளையாட்டு மைதானம், பூங்காக்கள் அனைத்தும் உள்ளூர் நிர்வாகத்திடம். அதாவது முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் அதிகாரம் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளிடம். நிதிச் செலவில் ஒரு பங்கு மாவட்ட, மாநில, மத்திய அரசுகளின் திட்டங்களில் இருந்து கிடைக்கும். பெரும்பாலான நிதி உள்ளூர் வரிகள் மூலமே பெறப்பட்டு தேவைகள் நிறைவேற்றப்படும். அதை எப்படிச் செய்யலாம், செய்ய வேண்டும் என்பது தனி விவாதம்.
வசதி படைத்தவர்களுக்கு ஒரு வகையாகவும், வசதி இல்லாதவர்களுக்கு ஒரு வகையாகவும் வளர்ச்சி வாய்ப்புகளைத் தருவது முதலாளித்துவம். ஆனால் அது பொதுவுடமை ஜனநாயக நாட்டில் நடைமுறையில் இருப்பதும், முதலாளித்துவத்தை கொள்கையாகக் கொண்ட வளர்ந்த நாடுகளில் பொதுவுடமை ஜனநாயகம் நடைமுறையில் இருப்பது மெய்முரண்.

No comments:

Post a Comment