Sunday, June 21, 2015

ஊர் - 2

ஊரைப்பற்றி பேசுவது கள்ளைக்குடிப்பதுபோல் பருகப்பருக இன்பம்..

இன்றைக்கு பிள்ளைகள் பிளேஸ்டசனிலும் எக்ஸ் பாக்ஸிலும் விளையாடுவது ஏனோ அவ்வளவு உற்சாகமானதாய்த் தெரியவில்லை. சில நேரங்களில் ஏன் ஊர் கிரிக்கெட் மைதானங்களைக் கொண்டு இந்த கேம்களை செய்ய மாட்டேனென்கிறார்கள் என்று தோன்றும். எத்தனை மைதானக்கள்?... எங்கள் பகுதி பையன்களுக்கு மேல்காடு, கீழ்காடு கிரி வீட்டுக்கு பக்கதிலிருக்கும் காடு அப்புறம் பள்ளிக்கூட கிரவுண்டு....சனிக்கிழமை ஞாயிற்றுக்கிழமைகளில் காலையில் ஆறு மணிக்கெல்லாம் கிரிக்கெட் மேச் ஆரம்பித்து விடும். பள்ளிக்கூட நாட்களில் வேறு பகுதி பையன்களின் டீமுடன் மேச் பிக்ஸ்(இது அந்த மேச் பிக்ஸிங் இல்லை) செய்யப்படும். நமக்கு சேத்தி இரண்டு மூன்று வட்டங்களில் இருப்பதால் எப்பொதும் ஏதாவதொரு மைதானத்தில் ஏதாவதொரு டீமிற்க்கு பவுளிங் போட்டுக்கொண்டிருப்பேன். எங்கள் பூர்வாங்க டீம் பெயர்போனது. முதலில் பேட்டிங் செய்து முடித்துவிட்டால் பீல்டிங் செய்து கொண்டிருக்குபோது ஒவ்வொருவராக நழுவி அவரவர் வீட்டிற்க்கு போய்விடுவர். பீல்டிங் பொசிசனைக்கூட அவனவன் வீட்டருகில் பார்த்து செலக்ட் செய்து கொள்வார்கள். இது போன்ற பிரச்சினைகளைத் தவிற்க எங்கள் கேப்டன் சமயோகிதமாக யோசித்தி எல்லருக்கும் பந்து வீச வாய்ப்பேற்ப்படுத்தி விடுவார். இல்லையென்றால் கேப்டன்களுக்குள் நடக்கும் சொற்ப்போரில் பாயும் ஆயுதங்கள் பேரழிவை உண்டாக்குபவையாக இருக்கும். எப்படி ஸ்கோரிலும், அம்பயரிங்கிலும் கேப்மாரித்தனம் செய்தாலும் சில வேளைகளிள் அணி தோல்வியைத் தழுவிவிடும். அது போன்ற சமையங்களில் பக்கத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருப்பவனை டீம் கேப்டனாக்கி  எதிரணியின் ஸ்கோர் நோட்டில் "தோல்வி பெற்ற கேப்டன்" என்னும்மிடத்தில் கையெழுத்திட வைத்துவிடுவோம். இதற்க்காகவே எதிர் அணியினர் பல்வேறு நிபந்தனைகளுக்குப் பின்னரே மேட்ச் விளையாட சம்மதிப்பர்.

மேல்காடு... இன்னொரு பெரும் கிரிக்கெட் மைதானாம். இங்கு பல கார்க் பால் டோர்னமெண்ட்கள் நடக்கும். இப்போது அந்த இடம் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு மைதானம் இருந்த சுவடே இல்லாமல் இருக்கிறது. அந்த மைதானத்தின் ஓரத்தில் கிணற்றடியில் இருக்கும் பிள்ளையார் கோவில்தான் பெவிலியன். அங்குதான் ஸ்கோர் மற்றும் கமெண்டரி செய்யப்படும். எவ்வளவு பெரிய மைதானாம்...இப்போது காலியிடத்தை பார்க்க முடியாத குடியிருப்புகள். ஊர் வளர்ந்தால் பையன்கள் தங்கள் உலகத்தை சுருக்கிக்கொள்ள வேண்டுமா.. இந்த தலைமுறை பையன்கள் எங்கே கிரிக்கெட் விளையாடுவார்கள்?...

தொழில்வளர்ச்சி - மிகப்பெரிய தொழிற்ச்சாலைகளை நம்பியெல்லாம் ஊர்ப்பொருளாதாரம் இல்லை. வேண்டுமானால் சுற்றியிருக்கும் நூற்ப்பாலைகளை தொழிற்ச்சாலைகளுக்கு ஒப்பிடலாம். வி ஆர் டி  - ஓரளவு பெரிய நூற்ப்பாலைதான். தோராயமாக இரண்டாயிரம் குடும்பங்கள் அந்த நூற்ப்பாலையை நம்பி பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தன. ஊரின் இன்னொரு கடிகாரம் இந்த மில்லின் சங்கொலி. ஒவ்வொரு சிப்ட் முடியும்போதும் தவறாமல் சங்கொலிக்கும். அந்த சங்கொலி ஊர் முழுதும் கேட்கும். இப்போதெல்லாம் அந்த சங்கொலி ஒலிப்பதில்லை. மில் முதலாளிகளுக்கு நட்டம் ஏற்ப்பட்டுவிட்டதால் மில்லை மூடிவிட்டு வேறு தொழிலுக்குப்போய் விட்டனர். தொழிலாளர்களுக்கு வேறு வேலை தெரியாமல் அங்கொன்றுமாய் இங்கொன்றுமாய் இருந்த சின்ன சின்ன மில்களுக்கு போய்விட்டனர். சிலர் இடம்பெயர்ந்து ஊரைவிட்டே போய்விட்டனர்.

அடுத்து சொல்லக்கூடிய அளவுக்கு பொருளாதாரத்தை கொடுத்தது கைத்தறி, சந்தை வியாபரம் மற்றும் விவசாயம். என்ன காரணத்தாலோ பல குடும்பங்களுக்கு மூன்று வேலை சோறு போட்டுக்கொண்டிருந்த சர்வோதையபவன் நலிவடந்து பல கதர் நெசவாளர்கள் ஊரைவிட்டு வெளியேறி விட்டனர். இப்போதெல்லாம் யார் கதர் வேட்டி கட்டுகின்றனர். மேலும் விசைத்தறின்வந்த பிறக மனித உழைப்பிற்க்கு ஏது மறியாதை. வாரம் கூடி குடும்பத்தில் நான்கு பேர் உழைத்து பத்து பதினைந்து வேட்டி நெய்து அறுபது எழுபது என்று கூலி வாங்கிவந்து பிழைப்பை ஓட்டிக்கொண்டிருந்தனர். பொருளாதார தாரளமயம் பருத்தி மற்றும் பாலியெஸ்டர் இறக்குமதியினால் உள்நாட்டு பருத்தி மற்றும் கதர் ஆடைகள் வேண்டாப்பொருளாகிவிட்டது. மேலும் அரசியல் வாதிகள் மில் காட்டன் துணிகளுக்கு மாறிவிட்டதாலும், கதர் உடுத்திய காங்கிரஸ்காரர்கள் மறைந்து விட்ட காரணத்தாலும் அந்த குடும்பங்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு கூலித்தொழிலாளியாக மாறி தினந்தோறும் திருப்பூர் பஸ் ஏற ஆரம்பித்தார்கள்.

இன்னொரு கைத்தறி கோரா பட்டு நெசவு. இன்றளவும் ஓரளவு குடும்பங்களுக்கு சோறுபோடும் தொழில். இந்த தறியில் நெய்யும் சேலைகளும் அதன் பட்டு பின்னல்களை எளிதில் விசைத்தறிகளில் நெய்ய முடியாததும், பெண்கள் இன்னும் சேலைகளை விரும்புவதும் இந்தத்தொழில் அழியாமல் இருப்பதற்க்கொரு காரணம். ஆனாலும் கடை நிலைத் தொழிலாளர்கள் வாழ்வில் அப்படியொன்றும் பெரிதான பொருளாதார முன்னேற்றம் அடைந்துவிடவில்லையென்றே சொல்லலாம்.

வேட்டியை நம்பி வாழ்ந்தவர்களை விட சேலையை நம்பி வாழ்ந்தவர்கள் பிழைத்துக்கொண்டது நாம் இன்னும் பெண்கள் சார்ந்த சமூகம் என்றும் பெண்களை நம்புவோர் கைவிடப்படார் என்ற உணமையை புரிந்துகொள்ளவும் உதவும் என்றே புரிந்து கொள்ளலாம்..

(விவசாயம் மற்றும் கல்வி பற்றி அடுத்த பதிவில்..) 





No comments:

Post a Comment