Thursday, May 14, 2015

பொய்

கதிரேசன் கணக்கு வாத்தியாரைக் கண்டாலே டிராயரை நனைத்துவிடுவான். அவர் 'கை' படாமல் எந்த ஸ்டூடெண்டும் அந்த கொவுட்(Govt) பாய்ஸ் ஹையர் செகண்டரி ஸ்கூலில் பாசானதில்லை. கதிரேசனின் சொந்த ஊரில் ஸ்கூல் இருந்தும் இந்த கணக்கு வாத்தியாரை நம்பி அவனது தந்தை பக்கத்து ஊரில் உள்ள இந்த ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அதற்க்கு இரண்டு காரணங்கள் ஒன்று - கதிரேசனுக்கு அவர்தான் சரியான வாத்தியர் என்று நம்பியது. இரண்டு- பள்ளிக்கூடத்திற்க்கு கட் அடித்துவிட்டு பல நேரங்களில் பள்ளத்து பசங்களுடன் கிரிக்கெட் மைதானத்தில் ஆடிகளித்தது வெகு நாட்களுக்கு பழைய பள்ளிக்கூடத்திற்க்கும் அவருக்கும் தெரியாமல் இருந்தது.



"வீட்ல கட்டி மேய்க்க முடியலேன்னுதான் பள்ளிக்கூடத்துல சேத்துனது. அங்க இவன் வர்ரான இல்லையான்னு தெரியாத அளவுக்கு கட்டி மேய்க்கிறாங்க" ன்னு புலம்பிக்கொண்டு விசாரித்ததில் இந்த வாத்தியாரை பற்றி கேள்விப்பட்டு இங்கு கொண்டு வந்து சேர்த்திவிட்டுட்டார்.

கதிரேசனுக்கு அறிவியல், சமூக அறிவியல், வரலாறு ஏன் சில சமயங்களில் தமிழ் கூட புரிந்து கொள்ள முடிந்தது, அல்லது புரிந்ததுபோல் தலையாட்டிவிட்டு வகுப்பில் அமர்ந்திருக்க முடிந்தது. ஆனால் இங்கிலிசும் கணக்கும் தலையை ஆட்டினாலும், கேள்விகேட்டு நிற்கவைத்து விடுவார்கள். இன்னொன்று இந்த இரண்டு பாடத்தையும் நடத்துவது "வாத்தியார்கள்". முன்னைய மூனு பாடத்தையும் நடத்துவது "டீச்சர்கள்".

செவ்வாய்க்கிழமை முதல் பிரியட் இங்கிலிஸ். அது என்னவோ இந்த இங்கிலிஸ் கிளாஸ்ல சார் நடத்துற பாடம் பர்ஸ்ட் பெஞ்சு பசங்களுக்கு மட்டும் புரியுது. நாலவது அஞ்சாவது பெஞ்சுக்கு ஒன்னும் விளங்க மாட்டேங்குது. கிளாஸ் ஆரமிச்சு 20 வது நிமிசம் கேள்வி கேக்க ஆரம்பிச்சிருவாரு. கேள்விய கடைசி பெஞ்சிலருந்து கேக்க ஆரம்பிச்சார்னா வரிசையா ரெண்டு பெஞ்சும் தலைய குனிஞ்சிட்டே எந்திருச்சுரும். 

அவரும் "நீங்கள்ளாம் எதுக்குதான் ஸ்கூலுக்கு வர்ரீகன்னு தெரியல... கவனிக்க முடியலேன்னா வீட்ல ஆடு மாடு , மேச்சிட்டு இருக்க வேண்டியதுதானே... இடியட்ஸ்" அப்படி இப்படின்னு ஒரு பத்து நிமசம் பேசுவார். கதிரேசனக்கு இது இரண்டாவது ப்ரேயர் மாதிரி இருக்கும். 

கதிரேசனும் டிக்ஸனரியில் பார்த்து ஆங்கில வார்த்தைக்கு புத்தகத்தில் ஆங்காங்கே தமிழ் வார்த்தை மொழியாக்கம் செய்து எழுதி வைத்துக்கொண்டு மனப்பாடம் செய்து பாத்தான். என்னதான் மனப்பாடம் செய்தாலும் வாத்தியார் ஒவ்வொரு நாளும் சொல்லும் பாடத்தில் வரும் வார்த்தைகள் புதிதாகவே இருந்தது. அதனாலேயோ என்னவோ இங்கிலீஸ் பேசுற வெள்ளைக்காரர்களும் நம்ம ஊரு மாநிறத்துக்காரர்களும் அறிவாளிகள் என்று நம்பினான்.

கணக்கு வாத்தியார் மாரிமுத்து பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருப்பார். வகுப்பில் பாடம் நடத்தும்போது மெல்லிய குரலில் பேச ஆரம்பித்து கணக்குகளை போர்டில் எழுதி சொல்லிக்காட்டி விட்டு அப்படியே எதிரிலுள்ள சுவற்றை பார்த்து "இங்க யாருக்காவது சூத்திரம் புரியலேன்ன்னா இப்பவே கேளுங்க..நாளைக்க டெஸ்டு வச்சு சூதிரம் தப்பா போட்டைன்னா.. வகுந்துடுவேன்" என்று சொல்லி முடிக்கும் போது குரல் உச்சத்தில் இருக்கும். அப்படியே பார்வையை கீழே திருப்பும்போது ஒவ்வொருத்தனுக்கும் கால் நடுங்கிக் கொண்டிருக்கும் எங்கே தன்னை சூத்திரத்தை சொல்லச்சொல்லிவிடுவாரோ என்று. 

ஒரு நாநூறு பேர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் பசங்க பயப்படுறது இந்த மாரிமுத்து வாத்தியாருக்குத்தான். சில சமையங்களில் பாடத்தை வகுப்பிற்க்கு வெளியிலிருக்கும் அரச மரத்தடியில் வைத்து சொல்லிக்கொடுப்பார். அபோது கேள்விக்கு பதில் சொல்லாத கடைசி வரிசைக்காரர்களை புறட்டி புறட்டி அடிப்பது பக்கத்து கிளாசில் இருப்பவனுக்கு வியர்த்துவிடும். புதன் கிழமை எப்போதும் டெஸ்ட் வைப்பார். அன்றைக்கு எல்லோரும் பேண்ட் போட்டிக்கொண்டுதான் வருவார்கள். கடைசி பெஞ்சு பசங்களெல்லாம் இரண்டு மூன்று டிராயர்களை போட்டுக்கொண்டு வருவர். தேர்வு முடிந்ததும் பேப்பர் திருத்தி மார்க்கு கொடுப்பதற்க்ககவே அடுத்து வரும் அறிவியல் வகுப்பை கடன் வாங்கிக் கொள்வார். முப்பத்தியஞ்சு மார்க்குகு குறைவா வாங்குனவனுக்கெல்லாம் அன்னைக்கு சர்க்கஸ்தான். கதிரேசன் பல நேரங்களில் முப்பத்தியைந்து, முப்பத்தி ஏழு வாங்கி பாசகிவிடுவான். ஒருமுறை இருபத்தியேழு வாங்கி பிரம்பால் வாங்கிக்கொண்டது ஒவ்வொரு புதம் கிழமையும் அவனுக்கு வலிக்கும்.

"சர் சர் சார் சார் இனிமே நல்லா படிக்கிறேன் சார் சார்" அப்பிடின்னு பிரம்பை அடிப்பதற்க்கு ஓங்கும்புன் கைகள் இரண்டையும் பின்னால் வைத்து அடி விழுவதை தடுக்கலாம் என்று முயற்ச்சிப்பர். அடியை விட அவருக்கு வரும் கோபத்தில் நாக்கை மடக்கிக்கொண்டு வருவதை பார்த்தாலே நடுங்க ஆர்ம்பித்து விடுவார்கள் பையன்கள். சில நேரங்களில் அவர் முதலில் அடிவாங்கிய பயல்களில் சத்தத்தால் பிறகு அடிவாங்குபவனுக்கு பாதி அடிவாங்கிய அனுபவம் ஏற்ப்பட்டு உச்சா போய்விடுவார்கள். பெயிலானவர்கள் ஒவ்வொரு கணக்கையும் பத்து முறை நோட்டில் போட்டு அடுத்த நாள் அவரது வகுப்பில் ரெடியாக வைத்திருக்க வேண்டும். பாடம் முடித்தவுடன் நோட்டை புறட்டி கணக்குகளை சரி பார்ப்பதைவிட சமக்குறியை கணக்கு நோட்டின் இரண்டாவது கோட்டின் மேல் நேராக போட்டிருப்பதையே கவனிப்பர். அவரைப்பொருத்தவரை கணக்கின் விடையை விட கணக்கு போடும் நேர்த்திதான் முக்கியம்.

ஒவ்வொரு முறை பிராக்ரஸ் கார்டு கொடுக்கும்போதும் கதிரேசன் பல்வேறு திட்டங்களை போட்டுக்கொண்டிருப்பான். "இந்த முறை இங்கிலீஸ் கால வாரி விட்டது. அப்பங்கிட்ட காட்டினா அங்கொரு பூசை விழும். ரெண்டு நாள் வச்சிருந்து ஏதாவது காய்ச்சல் டிராமா போட்டு கையெழுத்து வாங்கியிரலாம்", "நேத்துதான் புதுசா ஒரு பேட் வாங்குறதுக்க பசங்க கேட்ட அஞ்சு ரூபாய்க்கு, கணக்கு நோட்டு வாங்கவேணும்னு கேட்டு வச்சிருந்தேன், இப்ப பிராக்ரஸ் ரிப்பொர்ட காட்டுனா வாங்குன மார்க்குக்கு வாத்தியார வந்து பாக்குறேன்னு கிளம்பி வந்துட்டா பேட் காசு கிடைக்காம மாட்டிக்குவேனே" என்றவாறு யோசித்து குழப்பத்தில் இருப்பது பருவம் தவறாமல் நடக்கும் நிகழ்வு.

ஒரு வழியாக பத்தாம் வகுப்பு முழு ஆண்டுத்தேர்வு வரை எப்படியோ பிராக்ரஸ் ரிப்போர்டை வீட்டுக்கு காட்டியும் காட்டாமலும் ஓட்டிவிட்டான். இந்த பாலா போன எஸ் எஸ் எல் சி பரிட்சை முடிவுகளை மாலை மலரிலும் அடுத்த நாள் தினத்தந்தியிலும் போட்டு விடுவார்கள். ரிசல்ட் ஊருக்கே தெரிந்து விடும். வந்து போகும் ஆடு மாடு முதல் மிச்ச சொச்ச சொந்தக்காரன் வரை என்ன மார்க்கு வாங்குவே, பாசாகியிருவையா, பரிச்சை நெம்பர் குடுன்னு குடுத்த வச்ச மாதிரி கேட்டுத்தொலைப்பாங்க. பரிச்சை எழுதி பாசோ, பெயிலோ ஆகித்தொலையறது என்னவோ நான், ஆனா இவிங்க காட்டுல விளஞ்ச தக்காளிக்கு வெலை பேசுரமாதிரி அத்தனை அக்கறை.

இந்த பாலாப்போன உலகத்து நினைப்புல மண்ணு விழுகிற மாதிரி மார்க்கு வாங்கி பாசாயிட்டன்னா டிப்ளமோ காலேஜ்ல போய் படிக்கலாம். இல்லைன்ன கரட்டடில் இருக்குற ஐ டி ஐ ல டீசல் மெக்கானிக் படிச்சுட்டு உள்ளூருக்குள் கடைவச்சு கிடந்து இவனுக கூட புழங்கனும். பாசாகிறது ரொம்ப கஸ்டம்தான்னு பரிட்சை எழுதி முடிச்ச பிறகு உள் மனசு சொல்லுச்சு. 



"சும்மாவே சுத்தி சுத்தி அடிப்பாரு அந்த மாரிமுத்து. அப்பனும் கூட சேந்து கொண்ணே போடுவாங்களே". எதும்கும் இருக்கட்டுமே என்று முன்னெச்சிரிக்கையாக கிளாஸ்ல நல்லா படிக்குற சரவணன் நம்பரை எல்லோருக்கும் தனது என்று கொடுத்துவைத்திருந்தான். ரிசல்டு வரும் இரண்டு மாதத்திற்க்குள் சேலஞ்சர்ஸ் கப் டோர்னமெண்ட் விளையாடி கொஞ்ச காலம் சந்தோசமாக இருந்துக்கலாம் என்று சமாதான படுத்திக்கொண்டான். பள்ளி நாட்களைவிட விடுமுறை நாட்கள் வேகமாக பறந்தது. பளீக்கூடமே மறந்து போன நிலையில் "எஸ் எஸ் எல் ஸி தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. செய்தி கேட்டதிலிருந்து வயிறு ஒரு மாதிரி பிசகிக்கொண்டே இருந்தது. அப்பனுங்கூட நம்மமேல வச்சிருக்குற நம்பிக்கையில் கோபியில இருக்குற பாலிடெக்னிக்கு அப்லிகேசன் வாங்கிட்டு வந்துட்டாரு. எப்படியும் ரிசல்ட் அவிக நெனைக்கிற மாதிரி இருக்காது. நாளைக்கு நடக்கும் கலவரத்தை நெனச்சா கண்ணுக்குள்ள கரண்டு வந்து வந்து போகுது.

பெரிய சுமையுடன் பார்ப்பவரைக் கடப்பது வெகு சிரமமாக இருந்தது அவனுக்கு. அட் நீ நல்ல பரிச்சை எழுதீருக்கிற, அப்புறம் ஏன் மூஞ்சிய தொங்கபோட்டுட்டு சுத்துரே என்று ஏதோ ரகசியம் தெரிந்தவன் போல பக்கத்து வீட்டு டிரைவர் கணேசண்ணன் கேட்டு வச்சார். ரேடியோவிலும் டிவியிலும் எஸ் எஸ் ல் சி தேர்வு முடிவுகள் இன்று வரவிருக்கிறது என்று சொல்லும்போது அவனுக்கு பெருமாள் கோவிலில் தாசர்கள் ஊதும் சங்கு சத்தம் கேட்டது. அவனுடைய வகுப்ப பசங்களுடன் பேப்பர்கடை முன் காலையிலிருந்து தூரமா வர்ர பஸ்யே பார்த்து பார்த்து அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள். மூணு மணி சாந்தா வில்தான் மாலைமலர் ஈரோட்டிலிருந்து வரும் என்று பேப்பர்கடைக்காரர் சொன்னது கூட ஒரு காரணமாக இருக்கலாம். சூரியன் மேலே நின்று சிரித்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தான். மே மாச வெயில் முடிஞ்சு ஜீலை கடைசில கொன்சம் அக்கினி வெயில் கம்மியாகும்னு பார்த்தா, ஒன்னு கொறையற மாதிரி காணோம்". கதிரேசனுக்கு தலை சுற்றுவது போல் ஆனது. யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் பெரிய கிணறு இருக்கும் மேற்கு தோட்டத்தை பார்த்து நடந்தான். 

ஒரு வழியாக பேப்பர் வந்து சேர்ந்து கூட்ட நெரிசலில் முட்டு மோதி கதிரேசனின் அப்பாவும் ஒரு பேப்பரை வாங்கிவிட்டார். அவன் கிளாஸ் பசங்கள் எல்லோரும் அவரவர் நம்மரை தேடிக்கொண்டிருந்தனர். இரண்டு மூன்று பேரைத்தவிர பெரும்பாலோனோர் முகத்தில் சிரிப்பு. ஒரு சிலர் பேப்பர் பிரிண்டிங் மிஸ்டேக், சரியா நம்பர் பிரிண்ட் ஆகலை, நாலைக்கு தினத்தந்தியில் பார்க்கனும் என்று ஒற்றைக்குறலாக கூட்டத்தை விட்டு விலகிச்சென்றனர். சில பையன்கள் அங்கே தெரிந்தவர்களுக்கு சாக்லேட் மிட்டாய் கொடுத்து தான் பாசாகிவிட்டதை தெரியப்படுத்திக்கொண்டிருந்தனர். கதிரேசனின் தந்தை தேடிப்பார்த்தும் கதிரேசன் நம்பர் இல்லாததால் பக்கத்தில் இருந்த கடைக்காரரிடம் சொல்லி பேப்பரை சளித்துக்கொண்டிருந்தனர். கடைக்காரரால் நம்பரை கண்டு பிடிக்க முடியாமல், "பையன் பாசாகிலியாட்ட இருக்குதுங்க. நம்பர காணமுங்க" என்று அவன் கடமையை முடித்துக்கொண்டான். அவருக்கு அவமானமாகவும் தன் பிள்ளையாவது படிச்சு அண்ணன் பையன் மாதிரி டிப்ளமோ முடிச்சு கோயம்புத்துர்ல வெலைக்கு போயி நாலு காசு சம்பளம் வாங்குவான் என்ற நம்பிக்கையில் இடி இறங்கியது.  "வரட்டும் அவன் வீட்டுக்கு, மட்டைய எடுத்துட்ட பள்ளத்துள போயி எப்ப பார்த்தாலும் கிரிக்கெட்டு வெளையாடி வெளியாடி இன்னைக்கு பெயிலாப்போய் இருக்கறதுக்கு சாட்ட வார்ல வாங்குனாத்தான் புத்திவரும். இவனை நம்பி ஊரு பூறா பாலிடெக்னிக்போறான்னு சொல்லீட்டு திரிஞ்சனே, இன்ன அவிய மூஞ்சில எப்படி முழிப்பேன். காரித்துப்பவானுவளே" என்றவாறு கோபத்துடன் வீட்டை நோக்கி சைக்கிளை மிதித்தார்.

கதிரேசன் நிச்சையம் பாசாகி விடுவான் என்று நம்பிய முதல் வரிசைக்காரன் பெயிலாகவிட்டான். கதிரேசனுடைய நம்பர் பேப்பரின் நடுவில் யாருடைய விரலும் படாமல் அப்படியே கிடந்து குப்பைக்கு போனது. 



No comments:

Post a Comment